Tuesday, January 31, 2012

இசைஞானியும் புகழ் பாடும் ஞானிகளும்

இளையராஜாவை பற்றி நான் சொல்லி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இந்த நூற்றாண்டிலும் கட்சி தலைவர்கள், நடிகர்களுக்கு அடுத்தபடியாக தானாக கூடும் கூட்டம் என்றால் அது இளையராஜாவின்  இசை  நிகழ்ச்சிக்கு தான்.

அன்னக்கிளியில் ஆரம்பித்து 80, 90 களில் அவருக்கு இருந்த மவுசு வேறு எந்த இசை அமைப்பாளருக்கும் இருந்ததில்லை. அதே போல் இன்றும் அவரது  இசை கச்சேரிகளில் மகுடிக்கு கட்டுண்ட பாம்பாக ரசிகர்கள் அவருக்கு மரியாதையை தந்து கை தட்ட வேண்டிய நேரங்களில் மட்டும்  கைதட்டி மற்ற நேரங்களில் பள்ளி கூட பிள்ளைகள் போல் அமைதி காப்பது எனக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும். அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, அவரது மேடையில் பாட வரும் சீனியர் பாடகர்கள் கூட இளையராஜா முன் பள்ளி கூட பிள்ளைகள் போல் தான் அடக்கம் காட்டுவார்கள்.

இசையை இளையராஜா போல் காதலிப்பவர் யாரும் இல்லை. ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு இசை அமைத்தால் கூட அதில் இளைய ராஜாவின் முத்திரை கண்டிப்பாக எங்கோ ஒரு இடத்தில் இருக்கும். காசுக்காகவோ, விரும்பாமலோ அவர் ஒரு படத்திற்கு  இசை  அமைத் திருப்பார் என நான் நம்பவில்லை.

இவர் இப்படி என்றால், தமிழ் திரை உலகில் கோடி கட்டி பறக்கும் இன்னொரு இசை அமைப்பாளர் கடந்த  இரு  வருடங்களாக நான் தமிழ் படங்களே பார்க்கவில்லை என  (பெருமையாக!) கூறுகிறார். அப்படி என்றால் எப்படி அவரால் திரைக்கதைக்கு  ஏற்ற  இசையை தர முடியும் என எனக்கு தெரியவில்லை.

சமீபத்தில் ஜெயா டி.வியில் ஒலிபரப்பப் பட்ட இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை பார்த்தேன். எப்போதும் போல் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு பாடல் இசை அமைக்கப் பட்ட விதமும் அதற்க்கான காரணங்களும் சுவை பட கூறினார். பெரும் நட்சத்திரங்களும், ரசிகர்களும் ஒரு சில பாடல்கள்  இசைக்கப் பட்ட போது உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கியதும், தங்களை  அறியாமல் இசைக்கு தலை ஆட்டியபடி ரசித்ததும் ரசிக்க வைத்தது.

"மா" படத்திலிருந்து, ஒரு ஐந்து நிமிடம் இசை இன்றி ஒரு கட்சியை ஒளி  பரப்பி பின் அதே கட்சியை இளையராஜாவின் இசையுடன் மீண்டும் ஒளி  பரப்பியபோது தான் தெரிந்தது ஒவ்வொரு காட்சிக்கும் பின்னணி இசை  எவ்வளவு முக்கியமானது என்று. அந்த வகையில் இன்று இந்தியாவிலே  பின்னணி இசையில் இளையராஜாவை பின்னுக்கு தள்ள ஒருவர் இனி பிறந்து வந்தால் தான் உண்டு.

ஜெயா டி.வியில் நான் பார்க்கும்/பார்த்த ஒரே சமீபத்திய நிகழ்ச்சி இளைய ராஜாவின் இந்த இசை நிகழ்ச்சியை தான். நிகழ்ச்சி பற்றி இன்னும் சொல்ல  நிறைய இருக்கிறது. அதை பற்றி பார்க்கும் முன், ஒன்றே ஒன்று தான் நிகழ்ச்சி முழுதும் நெருடலாக இருந்தது. இளையராஜாவின் தீவிர ரசிகன்  என்ற முறையில் அதை இங்கே சொல்வதற்கு எனக்கு நானே உரிமை  எடுத்துக் கொள்கிறேன். அது, எல்லோரும் இளைய ராஜாவை  அளவுக்கு மீறி  புகழ்ந்தது தான். 

அவரது இசையை பற்றியும், அந்தந்த பாடல் இசை அமைக்கப் பட்ட விதம்/சிறப்பை பற்றியும்  விரிவாக எடுத்துக் கூறினாலே  போதும், அவரின் சிறப்பை அறிந்து கொள்ள. அதை விடுத்து, அடிக்கடி  அவரை புகழ் பாடியது அவருக்கே பிடித்ததா என்று எனக்கு தெரியவில்லை.

இன்னும் வரும்...

இசை பற்றிய மற்றொரு பதிவு மயக்க வைக்கும் இசை - பேத்தோவன் ஓர் ஆச்சர்யம்
    

share on:facebook

1 comment:

கூடல் பாலா said...

ராஜாவைப் போல இன்னொருவர் கிடைப்பது மிகக் கடினம் ...அவர் பாடல்கள் பல மன ஆறுதலைத் தருகின்றன ...எனவே அவர் இசையமைப்பாளர் மட்டுமல்ல மருத்துவரும் கூட !

Post a Comment