Tuesday, January 31, 2012

இசைஞானியும் புகழ் பாடும் ஞானிகளும்

இளையராஜாவை பற்றி நான் சொல்லி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. இந்த நூற்றாண்டிலும் கட்சி தலைவர்கள், நடிகர்களுக்கு அடுத்தபடியாக தானாக கூடும் கூட்டம் என்றால் அது இளையராஜாவின்  இசை  நிகழ்ச்சிக்கு தான்.

அன்னக்கிளியில் ஆரம்பித்து 80, 90 களில் அவருக்கு இருந்த மவுசு வேறு எந்த இசை அமைப்பாளருக்கும் இருந்ததில்லை. அதே போல் இன்றும் அவரது  இசை கச்சேரிகளில் மகுடிக்கு கட்டுண்ட பாம்பாக ரசிகர்கள் அவருக்கு மரியாதையை தந்து கை தட்ட வேண்டிய நேரங்களில் மட்டும்  கைதட்டி மற்ற நேரங்களில் பள்ளி கூட பிள்ளைகள் போல் அமைதி காப்பது எனக்கு ஆச்சர்யத்தை கொடுக்கும். அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, அவரது மேடையில் பாட வரும் சீனியர் பாடகர்கள் கூட இளையராஜா முன் பள்ளி கூட பிள்ளைகள் போல் தான் அடக்கம் காட்டுவார்கள்.

இசையை இளையராஜா போல் காதலிப்பவர் யாரும் இல்லை. ஒரு படத்தில் ஒரு பாடலுக்கு இசை அமைத்தால் கூட அதில் இளைய ராஜாவின் முத்திரை கண்டிப்பாக எங்கோ ஒரு இடத்தில் இருக்கும். காசுக்காகவோ, விரும்பாமலோ அவர் ஒரு படத்திற்கு  இசை  அமைத் திருப்பார் என நான் நம்பவில்லை.

இவர் இப்படி என்றால், தமிழ் திரை உலகில் கோடி கட்டி பறக்கும் இன்னொரு இசை அமைப்பாளர் கடந்த  இரு  வருடங்களாக நான் தமிழ் படங்களே பார்க்கவில்லை என  (பெருமையாக!) கூறுகிறார். அப்படி என்றால் எப்படி அவரால் திரைக்கதைக்கு  ஏற்ற  இசையை தர முடியும் என எனக்கு தெரியவில்லை.

சமீபத்தில் ஜெயா டி.வியில் ஒலிபரப்பப் பட்ட இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை பார்த்தேன். எப்போதும் போல் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு பாடல் இசை அமைக்கப் பட்ட விதமும் அதற்க்கான காரணங்களும் சுவை பட கூறினார். பெரும் நட்சத்திரங்களும், ரசிகர்களும் ஒரு சில பாடல்கள்  இசைக்கப் பட்ட போது உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கியதும், தங்களை  அறியாமல் இசைக்கு தலை ஆட்டியபடி ரசித்ததும் ரசிக்க வைத்தது.

"மா" படத்திலிருந்து, ஒரு ஐந்து நிமிடம் இசை இன்றி ஒரு கட்சியை ஒளி  பரப்பி பின் அதே கட்சியை இளையராஜாவின் இசையுடன் மீண்டும் ஒளி  பரப்பியபோது தான் தெரிந்தது ஒவ்வொரு காட்சிக்கும் பின்னணி இசை  எவ்வளவு முக்கியமானது என்று. அந்த வகையில் இன்று இந்தியாவிலே  பின்னணி இசையில் இளையராஜாவை பின்னுக்கு தள்ள ஒருவர் இனி பிறந்து வந்தால் தான் உண்டு.

ஜெயா டி.வியில் நான் பார்க்கும்/பார்த்த ஒரே சமீபத்திய நிகழ்ச்சி இளைய ராஜாவின் இந்த இசை நிகழ்ச்சியை தான். நிகழ்ச்சி பற்றி இன்னும் சொல்ல  நிறைய இருக்கிறது. அதை பற்றி பார்க்கும் முன், ஒன்றே ஒன்று தான் நிகழ்ச்சி முழுதும் நெருடலாக இருந்தது. இளையராஜாவின் தீவிர ரசிகன்  என்ற முறையில் அதை இங்கே சொல்வதற்கு எனக்கு நானே உரிமை  எடுத்துக் கொள்கிறேன். அது, எல்லோரும் இளைய ராஜாவை  அளவுக்கு மீறி  புகழ்ந்தது தான். 

அவரது இசையை பற்றியும், அந்தந்த பாடல் இசை அமைக்கப் பட்ட விதம்/சிறப்பை பற்றியும்  விரிவாக எடுத்துக் கூறினாலே  போதும், அவரின் சிறப்பை அறிந்து கொள்ள. அதை விடுத்து, அடிக்கடி  அவரை புகழ் பாடியது அவருக்கே பிடித்ததா என்று எனக்கு தெரியவில்லை.

இன்னும் வரும்...

இசை பற்றிய மற்றொரு பதிவு மயக்க வைக்கும் இசை - பேத்தோவன் ஓர் ஆச்சர்யம்
    

share on:facebook

Monday, January 30, 2012

கொள்ளை கொள்ளும் அமெரிக்க போலீஸ்.


அமெரிக்காவில் உங்களை மிகவும் கவர்ந்த மூன்று விஷயங்கள் எது என்று என்னிடம் கேட்டால் அதில் அங்குள்ள சுத்தம், கண்ணியம், கட்டுமான வசதி இவற்றை விட அமெரிக்க போலீஸ் துறையும் அமெரிக்க போலீசாருமே என்னை மிகவும் கவர்ந்தது என்று சொல்வேன்.அமெரிக்க போலீசாருக்கு பன்முக பயிற்சி அளிக்கப் படுவதுடன், அவர்களின் உடல் மற்றும் மன தகுதிகள் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு அதற்கு தங்குந்தவாறு அவர்களுக்கு பணி ஒதுக்கப் படுகிறது. 

பொதுவாக பணியில் இருக்கும் போது அவர்கள் ஷாப்பிங் போன்றவற்றில்  ஈடு பட மாட்டார்கள். அப்படியே ஓட்டல் மற்றும் கன்வீனியன்ஸ் ஸ்டோருக்கு  வந்தால் கூட வரிசையில் தான் வருவார்கள். இந்த ஐயா வறாரு, ஐயாவுக்கு  மொதல கொடுத்து அனுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அது மட்டுமின்றி  பொது இடங்களில் அவர்களை பார்த்தால் பள்ளி கூட குழந்தைகள் கடைக்கு சென்றால் தயங்கி நிற்பதை போல் தயங்கி வெட்கத்துடன் தான் நிற்பார்கள். தாங்கள் போலீஸ் என்பதால் பொது மக்கள் தங்களுக்கு முக்கியவத்துவம் கொடுத்து விடுவார்களோ அல்லது அவர்களுக்கு தங்களால் ஏதும் தர்மசங்கடம் ஏற்பட்டு விடுமோ என்பதுதான் அவர்களின் தயக்கத்திற்கு காரணம் என்பது  நான் புரிந்து வைத்துள்ளது.

அதே போல் எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப் படுகிறது. குழந்தை வதை  புகாருக்கும், போதை பொருள் பற்றிய புகாருக்கும் அவர்கள் எவ்வாறு  வித்தியாசமாக அணுக வேண்டும் என்று சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. எப்படி பட்ட குற்றசாட்டாக இருந்தாலும் குற்றம் சட்டப்பட்டவர்  போலீசாருடன் ஒத்துழைத்தால் அவர்கள் மேல் விரலை கூட வைக்க  மாட்டார்கள். டிராபிக் வயலேஷன் போன்ற குற்ற சாட்டுகளுக்கு அபராதம்  போட்டு விட்டு "டிக்கெட்" கொடுக்கும் போது "Have a nice day" என்று கூற மறக்க மாட்டார்கள்.

இன்னும் சொல்லப் போனால், விசாரணையின் போது, குற்றம்  சாட்டப் பட்டவர் போலீசிடம் சிகரட்டோ அல்லது காபியோ கேட்டு வாங்கி  குடிப்பார்கள். அதே போல் இங்கு போலீசாரிடம் பொது மக்கள் தாங்களே  வழிய போய் தான் சம்பவத்தை நேரில் பார்த்ததாகவும் கோர்டில் வந்து சாட்சி  சொல்ல தயார் என்றும் கூறுவதை பார்த்திருக்கிறேன்.     

லஞ்சம். அப்படி என்றால் என்னவென்று இவர்களுக்கு தெரியாது. அப்படியே நீங்கள் தர முயன்றால் உங்களுக்கு உடனே "காப்பு" தான். ஒருவரை விசாரிக்க செல்லும் முன் எப்போதும் அவர்களிடம் உள்ள "ரெக்கார்டரை"  ஆன் செய்து விட்டு தான் பேச ஆரம்பிப்பார்கள். அது  மட்டுமில்லாமல், இங்கு போலீசாரிடம் பொய் சொல்வது மிக பெரிய குற்றம். அதே போல் இங்கு போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தையும் நீங்கள் நீதி மன்றத்தில்  மாற்றவோ மறுக்கவோ முடியாது. 

உடலில் குண்டு துளைக்காத உடை அணியாமல் பணிக்கு இவர்கள் செல்லுவது கிடையாது. அதே போல் நடந்து செல்லும் போதும், விசாரித்துக் கொண்டிருக்கும் போதும் அடிக்கடி தாங்கள் ரிவால்வரை தொட்டுக் கொண்டே இருப்பார்கள். அந்த அளவிற்கு எப்போதும் முன்ஜாக்கிரதையுடன் செயல்படுவார்கள். போலீசாரின் உயிர் அமெரிக்க அரசாங்கத்திற்கு மிக முக்கியமானது. அவர்களின் உயிருக்கு ஆபத்து என்றால் யாரையும் முன்  அனுமதி கேட்க வேண்டியதில்லை. டப் டப் டப் தான். அதே போல் ஒரு  போலீசாருக்கு காயம் ஏற்படுத்துவது என்பது, இமாலய குற்றம்.   

இப்போது சொல்லுங்கள். அமெரிக்க போலீஸ் நம் மனதை கொள்ளை கொள்கிறார்களா இல்லையா?

இன்னும் வரும்...

அமெரிக்க போலீஸ் பற்றிய மற்ற பதிவுகள்: 

911 - அமெரிக்காவின் மூன்றெழுத்து மந்திரம்.

இதுதாண்டா போலீஸ்...

share on:facebook

Thursday, January 26, 2012

இணைய வசதி இன்றி இயங்கும் உலகின் முதல் வலைத்தளம். ஆல் அபவுட் ரஜினி.காம்


சூப்பர் ஸ்டார் ரஜினியின் வலைதளத்தை வளைய வர (பிரவுஸ்) இணைய வசதி தேவை இல்லை என நான் கூறியபோது, என்ன இது இன்னொரு ரஜினி  ஜோக்கா? என்று தான் அனைவரும் கேட்டார்கள். கொஞ்சம் கூட அது சத்தியமா இல்லையா என்று யாரும் யோசிக்க கூட இல்லை.

ஆனால், அது முற்றிலும் உண்மை. ஆம், ரஜினியின் இணைய தளத்தை வளைய வர இணைய தள வசதி தேவை இல்லை. அது மட்டுமில்லை, இணையத்தில் நீங்கள் இணைத்திருந்தால் வலைதளத்தை வளைய வர முடியாது. இணைய இணைப்பை துண்டித்தால் மட்டும் உங்களால் அவரின் வலைதளத்தை சுற்றி பார்க்க முடியும்.

கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால் இந்நேரம் நீங்கள் ஊகித்திருக்கலாம். ஆம், ரஜினியின் வலைதளத்திற்கு செல்ல மட்டும் கண்டிப்பாக உங்களுக்கு இணைய வசதி தேவை. ஆனால், அதன் பிறகு இணையத்திலிருந்து நீங்கள் வெளி வந்தால் தான் உங்களால் மேற் கொண்டு தளத்தை சுற்றி வர முடியும். 

www.allaboutrajini.com என்ற வலைதளத்திற்கு சென்றால் உடனே "It runs on Rajini Power” என்ற வாசகத்துடன், உடனே உங்களை இணைய தளத்திலிருந்து வெளியே வருமாறு அறிவுரை காத்திருக்கும். அதுவரை உங்களால் மற்ற பக்கங்களை சென்று காண முடியாது. இணைய இணைப்பை துண்டித்து விட்டு உள்ளே சென்றால் "story of the legend" , "inside scoops" , "behind-the-scenes action" என்று பல சுவாரசியமான விஷயங்கள் நமக்காக காத்திருக்கின்றன.

இந்த வலைதளத்தை உருவாக்கியுள்ள  வெப்சட்னியின் இயக்குனர் குர்பாக்ஸ் சிங், ரஜினி என்னும் மாபெரும் நடிகருக்காக இதை அர்ப்பணிப்பதாக தெரிவித்து உள்ளார். 

ஆயிரக் கணக்கில்  ஹிட்டுகளை அள்ளி வரும் இந்த தளம் மற்ற சமூக வலை தளங்களிலும் (Facebook, Twitter) அதிக அளவில் பகிரப் பட்டுள்ளது. பின்னணியில் வேலை செய்யும் கடினமான அல்காரிதம் மூலம் இது சாத்தியப்பட்டதாகவும், பல முறை முயன்று கடைசியில் இதற்க்கான பிரோக்ராம்மை எழுதியதாக தெரிவிக்கிறார் சிங். மேலும் இது தான் உலகில் முதன் முதலில் இணைய வசதி இல்லாமல் இயங்கும் முதல் வலை தளம் என்றும் பெருமை கொள்கிறார்.

நீங்களும் பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று கூறுங்கள். அப்புறம் மறந்து விடாதீர்கள். இணையத்தை விட்டு வெளியே வந்தால் தான் நீங்கள் தளத்தை சுற்றி பார்க்க முடியும்.


share on:facebook

Tuesday, January 24, 2012

போலீஸ் சோதனையில் IT மக்களுக்கு விதி விலக்கு.- ஹைதராபாத் போலீஸ் அதிரடி.

என்ன மக்களே. எல்லாரும் நல்லா இருக்கீங்களா? ஒரு சந்தோசமான விஷயம் சொல்ல போறேன். நம்ம ஊரு விஷயம் இல்லனாலும் பக்கத்து மாநிலத்து விஷயம். நம்ம ஊருக்கும் வரதுக்கு ரொம்ப நாள் ஆகாது. சேதி இது தான்.

ஏதோ ஒரு சினிமாவுல விவேக் கோயில் குருக்களா இருப்பாரு. டூ வீலர்ல போகும் போது ட்ராபிக் போலீஸ் ஒருத்தர் அவர நிறுத்தி லைசன்ஸ் இருக்கா, இன்சூரன்ஸ் இருக்கா என ஒவ்வொன்றாக கேட்க அவரும் ஒவ்வொன்றாக எடுத்து காட்டுவார். எல்லாம் இருந்தும் போலீஸ் அவரை  விடாமல், உனக்கு எட்டு போட தெரியுமா? என கேட்டு எட்டு போட  சொல்லுவார். நகைச்சுவைக்கா இதை காட்டினாலும் பல இடங்களில் போலீஸ் அந்த அளவிற்கு டூ வீலர் டிரைவர்களுக்கு தொடர்ந்து இம்சை கொடுத்து தான் வருகிறார்கள்.

இந்த கொடுமைக்கெல்லாம் விடிவாக ஹைதிராபாத் காவல் துறை ஒரு புதிய முறையை கொண்டு வந்து உள்ளது. அதாவது "நோ அப்ஜக்சன்  சர்டிபிகடே" போல் டூ வீலர்களில் ஒட்டிக்கொள்ளும் மாதிரி ஒரு சிறப்பு ஸ்டிக்கரை  அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்டிக்கரை வண்டியில் கண்ணில் படும் படி ஒட்டிவிட்டால் போதும். அனாவசியமாக லைசன்ஸ் இருக்கா, இன்சூரன்ஸ் இருக்கா என டிராபிக் போலீஸ் உங்களை தடுத்து  நிறுத்தாது. 

அதே நேரம், ஸ்டிக்கர் இருக்கும் காரணத்தால் அதிக வேகம், குடித்து விட்டு வண்டி ஓட்டுவது போன்ற மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டால் கண்டிப்பாக அவைகளுக்கு இந்த சலுகைகள் பொருந்தாது எனவும் காவல் துறை தெரிவித்துள்ளது. ஸ்டிக்கர்கள்  வழங்கும் முன் சம்பந்தப்பட்ட டூ வீலர்காரர்களிடம் எல்லா ஆவணங்களையும்  பெற்று சரி பார்த்த பிறகு தான் காவல் துறை இச் ஸ்டிக்கர்களை வழங்க உள்ளது. மேலும் டூ வீலர்காரர்களுக்கு வாகன பாதுகாப்பு பற்றி சிறப்பு  பயிற்சியும் வழங்க போவதாக தெரிவித்துள்ளார்கள்.  

இதெல்லாம் சந்தோசமான விஷயம் தான். ஆனால், முக்கியமான ஒன்றை  நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இந்த ஸ்டிக்கர் முறையை முதன்  முதலாக  அமுல் படுத்த போவது ஹைதராபத்தில் உள்ள மிக பெரிய IT  பார்க்குகள்  நிறைந்துள்ள ஹய் டெக் சிட்டியில் தான். தினமும் IT   கம்பனிகளுக்கு செல்லும் டூ வீலர் காரர்கள் வாகன  சோதனையில்  சிக்குவதால் அவர்கள் வேலைக்கு செல்வது தாமதமாவதால் அதை  தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்ம், ஏழை சொல் அம்பலத்தில் ஏறுமா? IT காரர்கள் சொன்னால் எல்லாம் நடக்கிறது.

share on:facebook

Thursday, January 19, 2012

இட்லிவடையும் நானும்

ஐந்து ஆண்டுகளுக்கு முன் என் நண்பர் ஒருவர் இட்லிவடை ப்ளாக் பற்றி சொல்லி படிக்க சொன்னார். அப்போது தான் முதன் முதலில் ப்ளாக் என்று ஒன்று இருப்பதே எனக்கு தெரியும். அதுவரை செய்தித் தாள்களையும் வார  ஏடுகளை மட்டுமே படித்து படித்து போரடித்த வேளையில் முழு சுதந்திரத்தோடு ப்ளாகில் எழுதப்படும் பதிவுகளை படிக்க ஆரம்பித்தது  சுவாரசியமாக இருந்தது. அதிலும் இட்லிவடையில் அப்போது வந்த பதிவுகள் நக்கலும் கேலியும் நிறைந்ததாக இருக்கும்.

பிறகு ஒன்றிரண்டு ஆண்டுகள் கண்ணில் பட்ட எல்லா பிளாகுகளையும் படித்து வந்தேன். பிளாகுகள் அனைத்திலும் பல்வேறு சுவாரசியங்கள்  உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு வகை. பிறகு நாமும் பிளாக் எழுதினால் என்னவென்று தோன்றியது. ஆரம்பத்தில் ஒரு பதிவை எழுதி அதை பத்து  தடவை படித்து பார்த்து மீண்டும் மீண்டும் திருத்தி கடைசியில் வெளியிட  அரை நாள் ஆகிப்போகும். இப்போதெல்லாம் அப்படி இல்லை. விஷயம்  இருந்தால் கட கடவென்று எழுதி தள்ளி விட முடிகிறது.

ரொம்ப நாள் இந்த ஹிட் கவுன்ட், ராங்கிங் பற்றியெல்லாம் கவலைப்  பட்டதில்லை(இப்பவும் ஓரளவு அப்படிதான்). இருந்தாலும் எப்படி தலைப்பு வைத்தால் அதிக பேர் படிப்பார்கள் (அல்லது அட்லீஸ்ட் க்ளிக் செய்வார்கள் - அது போதுமே கவுன்ட் எகிற!) என்று ஓரளவு கணிக்க முடிகிறது. என்  பிளாக்கை பொறுத்தவரையில் அமெரிக்க செய்திகள், IT சம்பத்தப் பட்ட செய்திகள் நல்ல வரவேற்ப்பை பெறுகின்றன.

எனக்கு இன்னும் ஆச்சர்யமான விஷயம் சில பிளாகர்களுக்கு கிடைக்கும்  ஹிட்டும், அவர்கள் பதிவுக்கு போடப்படும் பின்னூட்டங்களும் தான். நமக்கு  ஒரு வாரத்தில்/மாதத்தில் கிடைக்கும் ஹிட்டுகளும், பின்னூட்டங்களும் ஒரு சிலரின் பதிவுகளுக்கு ஒரே நாளில் கிடைத்து விடும். இதற்க்கெல்லாம்  காரணம் ஒன்றும் பெரிசில்லை. கல்யாணத்தில் மொய் வைப்பது போல்தான்.  நாம எவ்வளவு அடுத்த கல்யாணத்திற்கு வைக்கிறமோ அதை வைத்து தான் நமக்கு திரும்ப கிடைக்கும். நான் படிக்கும் பிளாக்குகளை விரல் வைத்து  எண்ணி விடலாம். அப்படியே படித்தாலும் நேரமின்மை காரணமாக தொடர்ந்து  அடுத்தவர் பதிவுகளுக்கு பின்னோட்டம் போட முடியவில்லை.    

இருப்பினும், இப்போது பிளாக் படிப்பதற்கும், பதிவு போடுவதற்கும் தொடர்ந்து நேரம் ஒதுக்குகிறேன். காரணம், நமக்கு மகிழ்ச்சி தரும் சில விசயங்களை நம்மால் பல காரணங்களால் செய்ய முடிவதில்லை. ஆனால் பிளாக் எழுதுவதற்கு நமக்கு தேவை அரை மணியோ ஒரு மணி நேரமோ. அதில் நமக்கு ஒரு திருப்தி கிடைகிறது. இதில் யாருக்கும் எந்த  கஷ்டமும்  இல்லை(ஒரு வேலை நம் பதிவை பற்றி தெரியாமல் படிப்பவர்களுக்கு இருக்கலாம்). அந்த வகையில் பிளாகர்களுக்கு இந்த வசதியை இலவசமாக தரும் கூகுல் ஆண்டவரையும் இன்ன பிற இலவச வலைதளங்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க வேண்டும்.

மேலும் ஆதிமனிதன், அடுத்த வீட்டுக்காரன் என எப்படி பெயர் வைத்து எழுதினாலும், பிடிக்குதோ சில  சமயம் பிடிக்கலையோ நம் பதிவுகளை படிக்கும் எண்ணற்ற பதிவர்களுக்கும்  இப்பதிவின் மூலம் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

    

share on:facebook

Tuesday, January 17, 2012

கேப்டனுக்கு ஆப்பு. அரசு நடவடிக்கை. விரைவில் சிறை?

சமீபத்தில் இத்தாலி அருகே கடலில் மூழ்கிய சொகுசு கப்பலின் காப்டன் பிரான்செஸ்கோ வீட்டு காவலில் வைக்கப் பட்டுள்ளார். அவர் மீது கப்பல் பயணிகளை காப்பாற்றாமல் கப்பலை விட்டு வெளியேறியது, பலர் இறக்க  காரணமானது என கடுமையான குற்றச் சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளது.

கடந்த வாரம் விபத்துக்கு உள்ளான சொகுசு கப்பலின் காப்டன் கப்பலில் பயணித்த அனைத்து பயணிகளும் பத்திரமாக கப்பலிலிருந்து வெளியேற்ற படுவதற்கு முன் கப்பலின் காப்டன் என்ற முறையில் கப்பலை விட்டு வெளியேறி விட்டார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இத்தாலிய சட்டப்படி இக்குற்றத்திற்கு 11 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

விபத்து பற்றி முதலில் செய்தி அறிந்த இத்தாலிய காவல் துறை கடலோர பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்ததும், கடலோர காவல் படை கப்பலின் காப்டனை தொடர்பு கொண்டு பயணிகளின் பாத்து காப்பு பற்றி கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால், காப்டன் பிரான்செஸ்கோ அவர்களுக்கு முறையான பதில் அளிக்காமல் எல்லா பயணிகளும் பத்திரமாக வெளியேறும் வரை கப்பலை விட்டு வெளியேறக் கூடாது என்ற காவல் படையின் உத்தரவையும் மீறி பயணிகள் அனைவரையும் தண்ணீரில் தத்தளிக்க விட்டு அவர் மட்டும் கப்பலை விட்டு வெளியேறி உள்ளதாக சொல்லப்படுகிறது.

காப்டன் பிரான்செஸ்கோவுக்கும் காவல் படைக்கும் இடையே நடந்த  உரையாடல்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் காப்டன் பிரான்செஸ்கோவை உடனடியாக கப்பலுக்குள் சென்று அங்கு மொத்தம் எத்தனை பேர் இருக்கிறார்கள், சிறியவர்கள் வயதானவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் தெரிவிக்குமாறு கேட்டதற்கு அவர், இங்கு ஒரே இருட்டாக இருக்கிறது. ஆதலால் நான் ஒன்றும் செய்ய முடியாது. நான் வெளியே போகிறேன் என்று கூறி இருக்கிறார். அதற்க்கு காவல் படை அதிகாரி, நீங்கள் இப்போ வெளியே போய் உங்கள் வீட்டுக்கா போக போகிறீர்கள்?  உடனடியாக நீங்கள் கப்பலுக்குள் சென்று அங்குள்ள பயணிகளை பாதுகாக்க  நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீங்கள் வெளியே வந்தாலும் நாங்கள்  உங்களை உள்ள தள்ள வேண்டி இருக்கும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.  

இக்கப்பலில் பயணித்த 4200 பேரில் பெரும்பாலானோர் சிறு படகுகள் மூலமும், மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் காப்பாற்ற பட்டு உள்ளனர். இருப்பினும் இன்னும் 50 பேருக்கு மேல் காணவில்லை. 11 பேரின் உடல்கள் இதுவரை கடலில் இருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளது. டைடானிக்  கப்பல் விபத்துக்குள்ளானது போலவே இச் சோகச் சம்பவமும் நடை பெற்று உள்ளது. 

பொதுவாக இவ்வாறு சொகுசு பயணம் போகும் பல மேலை நாட்டவர்களை  இவ்விபத்து பெரிதும் கிலியை கிளப்பி உள்ளது. இம்ம், இவ்விபத்தையும் அதில் பலியானோர் எண்ணிக்கையையும் நம்மூரில் ஏற்பட்ட விபத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் இங்கு இழப்பு மிகவும் குறைவே. இருந்தும் விபத்துக்கு பொறுப்பானவர்களுக்கு அளிக்கப் படும் தண்டனையை பொறுத்தே மீண்டும் அம்மாதிரி விபத்து எதிர் காலத்தில் நேராவண்ணம் தடுக்க இயலும் என்பதை இத்தாலி போன்ற அரசுகள்  நன்றாக அறிந்து வைத்துள்ளன என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.

share on:facebook

Monday, January 16, 2012

பொங்கல் வாழ்த்து கூற மறுத்த நடிகர் திரு. நாசர்.

முதலில் என்னமோ 'என்ன இவரு பெரிசா பேச வந்துட்டாரு' என்பது மாதிரி தான் தோன்றியது. ஆனால் போக போக அவர் கூறியதை கேட்டு சற்றே நிமிர்ந்து உட்கார வைத்தது. சுத்திர தினம் நாம் கொண்டாடுவதை பற்றி அவர் எழுப்பிய கேள்விகளில் தான் எத்தனை உண்மைகள் புதைந்து கிடக்கின்றன? இனி எதற்கேனும் வாழ்த்துக்கள் கூறும் முன் எனக்குள் ஒரு கேள்வி எழுவது நிச்சயம்.




நன்றி: Indiaglitz

share on:facebook

Sunday, January 15, 2012

பாலோஸ் வெர்டேஸ் (Palos Verdes) - கலிபோர்னியாவின் கோடம்பாக்கம்


பாலோஸ் வெர்டேஸ் தீப கற்பம் - நான்கு நகரங்களை உள்ளடக்கிய இத் தீப கற்பம் கலிபோர்னியாவின் (Oasis) பாலைவன சோலை என சொல்லலாம். மலை உச்சியில் அமைந்துள்ள இந்நகரம் முழுவதும் வெறும் நிலமாக 1910 ல் நியூயார்க்கை சேர்ந்த ஒரு வங்கியாளருக்கு  வெறும் 1.5 மில்லியன் டாலருக்கு  விற்கப் பட்டது. இன்று அங்குள்ள ஒவ்வொரு வீட்டின் மதிப்பே மூன்று முதல் ஆறு மில்லியன் டாலர்கள் ஆகும்.


கடந்த டிசம்பர் 31 அன்று பெரும்பாலானவர்கள் லாஸ் வேகாஸ் சென்றிருக்க நாங்கள் இங்கு சென்றோம். மலை பாங்கான ரோடுகள். மக்கள் தொகை மிக குறைவு. ஆங்காங்கே நடை பயிற்சி செல்லும் ஓரிருவரை தவிர வேறு யாரையும் சாலைகளில் பார்க்க முடியவில்லை. ஆங்காங்கே மேகங்கள் எங்கள் கார்களை இடைமறித்தான. அதிக பட்ச வேக அளவும் 35 மைல்கள் தான். அதனால் நிதானமாக காரை ஒட்டிக் கொண்டு அதே நேரத்தில் இயற்கையை ரசித்துக் கொண்டு பயணித்தோம்.



நான் பல பதிவுகளில் குறிப்பிட்டுள்ளது போல் இங்குள்ள சுத்தமும் நேர்த்தியுடன் வடிவைக்கப்பட்ட நகரங்களும் எல்லோரையும் கவரும். பெரும்பாலான ஹாலிவுட் நடிக நடிகைகள் இங்கு தான் வசிக்கிறார்கள். அதனால் தான் கலிபோர்னியாவின் கோடம்பாக்கம் என தலைப்பில் குறிப்பிட்டு இருந்தேன். பாலோஸ் வெர்டேஸ் டிரைவ் சவுத்தில் ஒரு ஐந்து மைல்கள் பயணித்தால் ஒரு புறம் மலை சரிவில் அழகான வீடுகளும் மறு புறம் மேக மூட்டங்களுடன் அழகான நீல வானத்தை காணலாம்.


ஆங்காங்கு வீவிங் பாய்ன்ட்டுகள் உண்டு. அங்கு காரை நிறுத்தி விட்டு மலையின் விளிம்புக்கு சென்று கீழே பார்த்தால் அங்கு ஆர்பரிக்கும் கடல் அலைகளை காணலாம். சவுத் டிரைவ் அருகே கடலில் இரு இடங்களில் சிறு பாறை குன்றுகள் உள்ளது. அவ்வப்போது அதன் மீது கடல் அலைகள் வந்து மோதி பாறை முழுவதும் நனைவது பார்பதற்கு அழகாக இருக்கும்.

இது தவிர ஒரு லைட் ஹவுசும் அருகே உள்ளது. நாங்கள் மதிய உணவை கையோடு எடுத்து சென்று இருந்ததால் சாலையோரம் அமைக்கப் பட்டிருந்த ஒரு ஓய்விடத்தில் அமர்ந்து மதிய உணவை முடித்துக் கொண்டோம். அங்கேயே ஓர் இரண்டு மைல் தூரத்திற்கு அழகாக ஒரு 'வாக்கிங் ட்ரெயில்' அமைத்து இருந்தார்கள். ட்ரெயில் மலை ஓரத்தின் ஊடே அழகாக வளைந்து வளைந்து செல்லுவதால் கீழே கடற்கரையை பல கோணத்தில் பார்க்க வசைதியாக இருந்தது.

திரும்பும் வழியில் சூரியன் அஸ்தமனத்தை பார்க்க வசதியாக ஒரு இடத்தில் ஒரு 'சன் செட் பாய்ன்ட்' டில் நிறுத்தி கேமரா எல்லாம் எடுத்துக் கொண்டு இறங்கும் நேரம் வரை சூரியன் நல்ல பெரிய சைசில் ஜெக ஜோதியாக ஜொலித்துக் கொண்டிருந்தது. பார்த்து ரசித்து விட்டு புகைப்படம் எடுப்பதற்கு தயாராவதற்குள் ஒன்றிரண்டு நிமிடங்களில் சூரியன் சர்ரென்று கடலுக்குள் சென்று மறைந்து விட்டது. ஆதலால், முழுமையாக கேமராவுக்குள் அடக்க முடியவில்லை.


வருட இறுதியில் இந்த ஒரு நாள் பயணம் மனதுக்கு இதமாகவும் உடலுக்கு சற்று புத்துணர்ச்சியும் கொடுத்தது என்று சொன்னால் மிகை ஆகாது.  

share on:facebook

Saturday, January 14, 2012

வணக்கம் சென்னை பாடல் - தமிழ் சினிமாவின் மாற்றம்.


சமீபத்தில் ரசித்த எதார்த்தமான ரசிக்க வைத்த ஒரு தமிழ் பாடல். முதலில் ஏதோ ஒரு 'ஆல்பம்' என்று நினைத்து தான் பார்த்தேன். பிறகு தான் தெரிந்தது இது வரப்போகும் ஒரு தமிழ் (மெரினா) திரைப் படத்தின் பாடல் என்று.

சும்மா ஹீரோ ஹீரோயினை சுவிஸ்சிலும், ஆசியிலும் ஆடி ஓட விட்டு காதல் செய்வதை காட்டுவதை விட இது ரொம்ப நல்லாவே இருக்கு. இம்மாதிரி மாற்றங்கள் நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு வேண்டும். பாடல் கீழே...



share on:facebook

Thursday, January 12, 2012

பொங்கல் - ஒரு பிளாஷ் பேக்


பொங்கல். தமிழர்களை பொறுத்தவரை ஜாதி மத பேதமின்றி அனைவரும் கொண்டாடும் ஒரு முழுமையான பண்டிகை. ஆம், எங்கள் ஊரில் கிறிஸ்தவர்கள் கூட அந்தோனியார் பொங்கல் என்ற பெயரில் பொங்கலிட்டு கொண்டாடுவார்கள்.

அது மட்டுமில்லாமல் பொங்கலை பொறுத்தவரை எந்த ஒரு குறிப்பிட்ட தெய்வத்தையும் மையமாக வைத்து நாம் கொண்டாடுவதில்லை. இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் நமக்கு வாழ்வளிக்கும் தெய்வங்களான ஆடு மாடு கோழி என அனைத்து ஜீவ ராசிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு சடங்காகவே பொங்கல் இது நாள் வரையில் கொண்டாடப்பட்டு வருகிறது. நல்ல விஷயம் என்னவென்றால் இது வரை பொங்கலை ஜாதி மத வளையத்துக்குள் இழுத்து வராமல் இருப்பது தான்.

இருப்பினும் பொங்கல் கொண்டாட்டங்கள் தற்போது சிறிது மாறி இருக்கின்றன. நான் சிறுவனாக இருந்தபோது தஞ்சை நகரில் வாழ்ந்து வந்தாலும் பொங்கலுக்கு எங்கள் கிராமத்திற்கு சென்று விடுவோம். அதற்க்கு முன்பாக ஊரிலிருந்து இரட்டை மாட்டு வண்டி ஒன்று வரும். எங்கள் தந்தை எல்லோரையும் அழைத்துக் கொண்டு பெரிய மார்க்கெட் செல்வார். அங்கு அரிசி தவிர எல்லாவற்றையும் வாங்கி சாக்கு மூட்டைகளில் அடுக்குவோம். பிறகு வண்டி அங்கிருந்து இரவு கிளம்பினால் அடுத்த நாள் காலை எங்கள் கிராமத்தை சென்றடையும்.

மற்ற பொங்கலை விட எனக்கு பிடித்த பொங்கல் கன்னிப் பொங்கல் தான். அன்று ஒருவரும் புது சட்டையை அணிய மாட்டார்கள். ஏன் சட்டையை கூட சில பேர் அணிய மாட்டார்கள். காரணம், தெருவில் நீங்கள் நட மாட முடியாது. எந்தப் பக்கத்திலிருந்து மஞ்சள் தண்ணீர் வந்து உங்கள் மீது கொட்டும் என்றே சொல்ல முடியாது. ஆனால். மஞ்சள் தண்ணீரில் நனையாமல் நீங்கள் வீடு திரும்ப முடியாது. சிலர் மஞ்சளோடு இன்ன பிற சமாச்சாரங்களை கலந்து உங்கள் மீது தெளித்தால் அவ்வளவு தான். காலத்திற்கும் கறை போகாது.

பெரும்பாலும் பெண்கள் தான் மஞ்சள் தண்ணீரை ரோட்டிற்கு ஓடி வந்து உங்கள் மீது ஊற்றிவிட்டு ஓடுவார்கள். இதில் சில முறைகளும் உண்டு. ஆம். முறை பார்த்து தான் மஞ்சள் தண்ணீரை ஊற்றலாம். பொதுவாக அத்தை/மாமன் மகன் முறைமார்கள் மீது தான் மஞ்சள் தண்ணீர் ஊற்றுவார்கள்.

அதே போல், மாட்டுப் பொங்கலும், மஞ்சு விரட்டும் எனக்கு மிக பிடிக்கும். நோஞ்சான் மாடுகள் கூட அன்று ஒரு மாதிரியாக தான் விரைச்சுக்கிட்டு நிற்கும். ஒரு வேலை அதுகளுக்கு தெரிந்து விடுமோ என்னமோ. இன்று நாம் தான் ராஜா என்று. மாட்டு பொங்கலன்று சீட்டு குலுக்கிப் போட்டு சீட்டு விழுந்தவர் வீட்டின் முன் ஊரில் உள்ள எல்லா மாடுகளையும் கொண்டு வந்து விடுவார்கள். அவர் வீட்டில் பொதுவாக சாமி கும்பிட்டு விட்டு அவர் வீட்டின் மாட்டை அவிழ்த்த பின் தான் மற்ற மாடுகளை அவிழ்த்து விடுவார்கள்.

மாடுகள் அவிழ்த்து விட்ட பின் அது அது ஒவ்வொரு பக்கமாக மிரண்டு ஓடும். எங்கள் வேலையெல்லாம் எங்கள் வீட்டு மாடு எங்கு ஓடுகிறது அதன் பின்னாடியே ஓடி யாரும் மாட்டை காயப் படுத்தாமல் பார்த்துக் கொள்வதுதான். மாட்டின் மீது கட்டி இருக்கும் மஞ்சள் துணியில் சிறிது காசு, அரிசி கரும்பு துண்டு என எல்லாம் கட்டப் பட்டிருக்கும். அதை அவிழ்க்கிறேன் பேர்வழி என்று இரும்பு கம்பியால் இழுக்க முயன்று மாடுகளை காயப் படுத்தி விடுவார்கள். அதை தடுக்கத்தான் நாங்கள் எல்லாம் பின்னாலேயே ஓடுவோம்.

பிறகு பெரியவர்கள் ஆன பிறகு கிராமத்திற்கு சென்று பொங்கல் கொண்டாடுவது நின்று போய் விட்டது. தஞ்சையில் உள்ள இல்லத்திலேயே வீட்டின் போர்டிகோவில் பொங்கல் வைப்போம். ரோட்டில் போவோர் வருவோர் எல்லாம் சில நேரங்களில் வித்தியாசமாக பார்ப்பார்கள். நாங்கள் அதை பற்றி கவலை படுவதில்லை. இன்றும் கேசில் நாங்கள் பொங்கல் வைப்பதில்லை. அதே போல் என் தந்தை இருந்தவரை, பொங்கல் பொங்கும் நேரம் அவருக்கு தெரிந்த பொங்கல் பாடலை உரக்கமாக பாடுவார். நாங்கள் எல்லோரும் சேர்ந்து பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் என்று கூவுவோம்.

அதே போல் மாட்டு பொங்கலன்று (ரொம்ப நாட்கள் வீட்டில் கறவை மாடுகள் வளர்த்தோம்) கிராமத்தை போலவே மாடுகளுக்கு அலங்காரம் செய்து பொங்கல் ஊட்டி கொண்டாடுவோம். எல்லோரும் ஒரு தட்டையோ தாம்பாளத்தையோ எடுத்துக் கொண்டு அதை குச்சியால் தட்டி சத்தம் எழுப்பி பொங்கலோ பொங்கல் மாட்டுப் பொங்கல் என கூவிக் கொண்டே மாடுகளை வலம் வருவோம்.

பொங்கல் ஒரு நிறைவான திருநாள். அதே போல் வந்தது போய்விட்டது என்றில்லாமல் குறைந்தது மூன்று நாட்கள் பொறுமையாக ஆர்பாட்டம் அவசரம் இல்லாமல் குடும்பத்துடன் அமைதியாக கொண்டாடப் படும் திருநாள். எனக்கு மிகவும் பிடித்தமானது. அடுத்த வருடமாவது நம்மூரில் கொண்டாட வேண்டும் என்று ஆசை. பார்ப்போம். எப்படி இருந்தாலும் இந்த முறை கேசில் தான் பொங்கல் இங்கு.

எல்லோருக்கும் என் மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்.  ஹி ஹி ஹி ...

share on:facebook

Tuesday, January 10, 2012

IT அவஸ்தையா ஆனந்தமா ?

கீழே உள்ள காணொளியை ரசித்து விட்டு!? சொல்லுங்கள். IT துறையில் வேலை பார்ப்பது அவஸ்தையா அல்லது ஆனந்தமா என்று? அப்படியே முடிந்தால் பக்கத்தில் உள்ள ஓட்டுப் பெட்டியில் உங்கள் ஓட்டுக்களை போடுங்கள். இலவசமெல்லாம்  ஒன்றும் கிடையாது.     



நன்றி: youtube  

share on:facebook

Monday, January 9, 2012

"ஜெயிப்பது சுகம்" சுய சரிதை-1: காமர்ஸ் படித்தால் வெற்றி அடைய முடியாதா?


இந்த பதிவை அடுத்தவர்களுக்கு ஒரு நம்பிக்கை தொடராக நினைத்து எல்லாம் நான் எழுதவில்லை. நம்பிக்கை தொடர்கள்/புத்தகங்கள் படித்து மட்டும் ஒருவர் முன்னேறி விட முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. அதற்க்கு காரணம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் சந்திக்கும்  சவால்களும் வெற்றி பாதைகளும் வெவ்வேறாக இருப்பது தான். அதே நேரம் நம்பிக்கை பற்றியும், நம்மை தேடி வரும் சந்தர்ப்பங்களை எப்படி நமக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் என்னுடைய அனுபவங்கள் மற்றும் என் நண்பர்கள், சுற்றத்தாரின் அனுபவங்களை இந்த தொடரின் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன்.

பத்தாவது வகுப்பு பொது தேர்வு அட்டவணை அறிவித்துள்ள இந்த நேரத்தில், பத்தாவது வெற்றிகரமாக முடித்து பிளஸ் 1 செல்லும் நேரத்தில் மாணவர்களிடையே எழும் மிக பெரிய குழப்பமும் தடுமாற்றமும் எந்த குரூப் தேர்வு செய்ய வேண்டும் என்பதே. இப்போது மாணவர்கள் எல்லாம் மிகவும் தெளிவாக உள்ளார்கள். எந்த குரூப் எடுத்தால் என்ன ஆகலாம் வேலைவாய்ப்பு எப்படி என்று நம்மை விட அவர்களுக்கு நன்றாகவே தெரிகிறது. இருந்தாலும் இந்த குரூப் தேர்வு செய்வதில் பெற்றோர்கள் பங்கும் நிறையவே உள்ளது.

நான் பத்தாவது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். இருந்தாலும் எனக்கு காமர்ஸ் குரூப் தான் படிக்க வேண்டும் என்று விருப்பம். காமர்ஸ் க்ரூப் எடுத்து அக்கவுன்ட்டன்சி படித்து பின்னாளில் CA ஆடிட்டர் ஆக வேண்டும் என்பது என் ஆசை. இதை நான் என் பெற்றோர்களிடம் தெரிவித்த போது, என்னுடைய நியாயமான ஆசைக்கு அவர்கள் குறுக்கே நிற்கவில்லை.

சின்ன வயதில் இருந்தே என் தந்தை எனக்கு நிறைய சுதந்திரமும், எனக்கு நானே செய்துகொள்ள முடியும் காரியங்களை என்னிடமே விட்டு விடுவார். அப்போது தஞ்சை மாவட்டத்திலேயே ஒரே ஒரு பள்ளியில் மட்டும் தான் காமர்ஸ் க்ரூப் இங்கிலீஷ் மீடியம் இருந்தது. நான் ஆங்கில மீடியத்தில் படித்திருந்ததால் அப்பள்ளியை விட்டால் எனக்கு வேறு வழி இல்லை. அது ஒரு அரசு பள்ளி போன்றது. பத்தாவது வரை தமிழ் மீடியமும் பிறகு பிளஸ் ஒன், பிளஸ் டூ மட்டும் ஆங்கில மீடியத்தில் சொல்லிக் கொடுப்பார்கள். அப்பள்ளிக்கு முதன் முதல் சென்ற போது, அரசு பள்ளிக்கு உரிய எல்லா தோற்றங்களையும் பார்த்து எனக்கு சற்று பயம் தான். இங்கு படித்தால் நான் படித்து தேறி விடுவேனா என்று? அந்த பயம்  பள்ளி சேர்ந்த சில நாட்களிலேயே மறைந்து விட்டது என்பது வேறு கதை.

ஒரு வழியாக என்னுடைய விண்ணப்பத்தை ஏற்று பள்ளியில் இருந்து  முதல்வருடன் நேர் காணலுக்கு அழைப்பு வந்தது. அங்கு சென்ற என்னிடம்  அப்போதிருந்த பள்ளி முதல்வர், இவ்வளவு மதிப்பெண் வாங்கியிருக்கும் நீ, ஏன் பர்ஸ்ட் க்ரூப் எடுக்காமல் காமர்ஸ் க்ரூப் எடுக்கிறாய் என கேட்டு, நான் சொன்ன பதிலில் சமாதானம் அடையாமல் என் பெற்றோரை அழைத்து வந்தால் தான் காமர்ஸ் க்ரூப் குடுப்பேன் என கூறிவிட்டார். அது மட்டும் இல்லை. இப்பள்ளி அரசு பள்ளி போன்றதால், மிக குறைவாக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு தான் முதல் முன்னுரிமை கொடுப்போம். உங்களை போன்றவர்கள் எங்கு வேண்டும் ஆனாலும் சேர்ந்து கொள்ளலாம். ஆனால், எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வேறு எங்கும் பணம் கொடுத்து சேர முடியாது. அதலால், உன் அப்ளிகேஷன் வெய்ட்டிங் லிஸ்டில் தான் இருக்கும். எல்லோருக்கும் இடம் கொடுத்த பிறகு தான் உன்னை கன்சிடர் பண்ணுவோம் என்றும் கூறிவிட்டார்.

சார், நீங்க ரொம்ம்ம்ப நல்லவங்க (வடிவேலு பாணியில் படிக்கவும்) என மனதில் நினைத்துக் கொண்டு அதே நேரம் இந்தப் பள்ளியை விட்டால் நமக்கு காமர்ஸ் க்ரூப் படிக்க வேறு பள்ளி இல்லை. ஆதலால் எப்படியாவது இப்பள்ளியில் சேர்ந்து விட வேண்டும் என காத்திருந்து ஒரு வழியாக சேர்ந்து விட்டேன். இவ்வாறு நான் காமர்ஸ் க்ரூப்பில் சேர்வதற்கு  பல தடங்கல்கள் வந்த போதும் நான் எடுத்த  முடிவின் படி, என் ஆசை படி வைராக்கியத்துடனும் அதே பள்ளியில் கடைசியில் எப்படியோ சேர்ந்து விட்டேன்.

அன்று எனக்கு தெரியாது, நான் படிக்கப் போகும் காமர்ஸ் க்ரூப்பினால் நான் விரும்பிய ஆடிட்டர் ஆக போவதில்லை என்று.

தொடரும்...
   

share on:facebook

Sunday, January 8, 2012

அமெரிக்காவில் இந்தியர்களை குறி வைக்கும் திருடர்கள் - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.


பத்து வருடங்களுக்கு முன் முதல் தடவை அமெரிக்கா சென்றிருந்த போது பென்சில்வேனியாவில் உள்ள மிக பெரிய பூங்கா ஒன்றுக்கு எனது அமெரிக்க நண்பருடன் சுற்றி பார்க்க சென்றிருந்தேன். அப்போது புகைப்படம் எடுப்பதற்காக எனது கை பையை அங்கே போட்டிருந்த மேஜை மீது வைத்து விட்டு சற்று எட்டி சென்றேன். அப்போது எனது அமெரிக்க நண்பர் என்னை அழைத்து, என்ன பையை இப்படி வைத்து விட்டு சென்று விட்டாய். யாராவது எடுத்து சென்றால் என்ன செய்வாய் என? அதற்க்கு நான், இது அமெரிக்கா யார் திருட போகிறார்கள் என பதில் அளித்தேன். அதற்க்கு அவர், கெட்டவர்கள் எங்கும் இருக்கிறார்கள். அமெரிக்காவிலும் கூட. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்று.

அதன் பிறகும் ஓரளவு தான் நான் அலர்ட் ஆக இருப்பேனே தவிர அமெரிக்கா என்றால் சற்றும் பாதுகாப்பு உணர்வு அதிகம் தான் எங்களுக்கு. ஆனால், தற்போது நடந்து வரும் சம்பவங்கள் உண்மையிலேயே எங்களுக்கு பயத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன், என் மகளின் ஸ்கூட்டர் (ஸ்கூட்டர் என்றால் நம்மூர் ஸ்கூட்டர் இல்லை. சிறிய ஹான்ட் பாருடன் கூடிய இரண்டு சக்கரங்கள் உடைய காலால் உந்தி செல்லும் சைக்கிள் போன்ற ஒரு வாகனம்) காணாமல் போய் விட்டது. எங்கள் அப்பார்ட்மென்ட் உள்ளேயே முதல் தளத்தில் உள்ள அவளின் தோழியின் வீட்டுக்கு செல்லும் முன் தரை தளத்தில் வைத்து விட்டு சென்றவள் திரும்பி ஒன்றிரண்டு நிமிடங்களில் திரும்பி வந்து பார்த்த போது ஸ்கூட்டர் காணாமல் போய் விட்டது. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.

அதன் பின் கடந்த சில மாதங்களாக பகல் வேலைகளிலேயே ஓரிரண்டு வீடுகளில் உள்ளே புகுந்து (பக்க வாட்டு ஜன்னல் கதவுகளை திறந்து கொண்டு) லாப் டாப், நகை மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களையும் திருடி சென்று இருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு தமிழ் பெண் ஒருவருக்கு வளைகாப்பு நடத்தினார்கள். அப்போது நம் மக்கள் நகை எல்லாம் போட்டுக் கொண்டு அபார்ட்மெண்டை வளைய வந்ததை பார்த்து விட்டோ என்னவோ அப்பெண்ணின் வீட்டிலும் புகுந்து சுமார் 10,000 டாலர் மதிப்புள்ள நகைகளை அபேஸ் செய்து விட்டார்கள்.

போலீசில் புகார் கொடுத்தும் ஒன்றும் பலனில்லை. இங்குதான் சந்தேகப்பட்டால் கூட நம்மூர் பாணியில் ஒருவரை அடித்து உதைத்து உண்மையை வரவழைக்க முடியாதே. அதனால் சந்தேகம் என்று கை காட்டிய நபர்களை கூட சற்று விசாரித்து விட்டு எவிடன்ஸ் இல்லை என்று விட்டு விட்டார்கள்.

இவ்வாறு திருட்டு நடை பெற்ற அனைத்து வீடுகளும் இந்தியர்களுடையது. அதற்க்கு ஒரே காரணம், இந்தியர்கள் என்றால் நகைகள் அதிகம் வைத்திருப்பார்கள் என்றும் அதுவும் 22 காரட் நகைகளாக இருக்கும் (அமெரிக்கர்கள் போடுவதெல்லாம் 12 காரட் 16 காரட் என்று நம்மூர் கவரிங் நகைகள் போல் தான்) என்று திருடர்களுக்கு நன்கு தெரியும். இதில் சுலபமாக திருடிக் கொண்டு போக ஏதுவாக கை அடக்கம் உள்ள மெட்டல் டிடக்டர் கருவி ஒன்றையும் கையிலேயே கொண்டு வந்து விடுகிறார்கள். நாம் எங்கு தான் ஒழித்து வைத்தாலும் ஒன்றும் பிரோஜனமில்லை.

ஆதலால் அமெரிக்கா தானே என இனி அசால்ட்டாக இருந்து விடாதீர்கள் நண்பர்களே. உலகம் மாறிவிட்டது...அமெரிக்காவிலும் ஆட்டையை போட கிளம்பி விட்டார்கள். நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


share on:facebook

Saturday, January 7, 2012

அரசு மருத்துவமனைகள் லஞ்சம் அற்ற பகுதிகள் - அறிவிக்க தயாரா?


சமீபத்தில் தூத்துக்குடியில் ஒரு பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டது எல்லோருக்கும் தெரிந்ததே. அதை யாரும் நியாயப்படுத்தி விட முடியாது. இழப்பு எல்லோருக்கும் ஒன்று தான். அதே சமயம் அதை கண்டித்து மாநிலம் முழுதும் மருத்துவர்கள் நடத்திய போராட்டமும் பேச்சுக்களும் தான் கண்டிக்கதக்கது ஆகும்.

நாட்டில் கொலை கொள்ளைகளே  நடப்பதில்லையா? இதே ஒரு போலீஸ்காரர் பணியில் கொலை செய்யப்பட்டால் எல்லா போலீசாரும் போராட்டத்தில் இறங்க முடியுமா. டாக்டர் தொழில் ஒன்றும் அப்படி உயிருக்கு பாத்துகாப்பு அற்ற தொழில் அல்லவே?

அப்படியே தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் அடையாள வேலை நிறுத்தமோ மாநிலம் முழுதும் ஒரு அமைதி பேரணியோ நடத்தி இருக்கலாம். அதற்காக ஒரு நாள் முழுக்க நாங்கள் வேலை பார்க்க மாட்டோம் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்ய மாட்டோம் என சொல்வது எந்த விதத்தில் நியாயம் என தெரியவில்லை. இதில் இவர்கள் எல்லாம் மெத்த படித்தவர்கள் என நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

கோயம்பேடு காய் கறி மார்க்கெட் வியாபாரிகள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தால் அதிக பட்சம் அங்கு உள்ள காய்கறிகள் அழுகி போகும். அல்லது தமிழக மக்கள் ஒரு நாள் சாம்பார் ரசம் செய்ய முடியாமல் வெறும் தயிறு ஊற்றி சாப்பிடும் நிலைமை வரலாம். ஆனால் மருத்துவர்கள் தொழில் அப்படி இல்லையே. நகரத்தை விடுங்கள். கிராம புறங்களில் பத்து கிலோ மீட்டர் இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு மருத்துவ மனைகளை நம்பி வந்து எத்தனை நோயாளிகள் அன்று ஒரு நாள் மருத்துவர்கள் இன்றி சிரமத்துக்கு ஆளானார்கள்.

இதில் மருத்துவர்கள் நல அமைப்பின் மாநில தலைவர் ஒருவர் "நாங்களும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த முடியும்" என வீராப்பு பேச்சு வேறு. கொலைகாரனுக்கும் சிகிர்ச்சை அளிக்க வேண்டிய உன்னத கடமை உள்ள மருத்துவர்களின் பேச்சை பாருங்கள்.

கடைசியாக ஒன்று. மருத்துவ மனைகள் அனைத்தும் பாத்து காக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறீர்களே? அதே போல் அரசு மருத்துவ மனைகள் அனைத்தும் லஞ்சம் அற்ற பகுதிகளாக அறிவிக்க முடியுமா உங்களால்? குழந்தை ஆனா பெண்ணா என சொல்வதிலிருந்து, பெற்றெடுத்த தாயிடம் குழந்தையை காண்பிப்பதில் தொடங்கி பிரேத பரிசோதனை வரை எல்லாவற்றுக்கும் காசை காண்பிக்காமல் அரசு மருத்துவ மனைகளில் ஒன்றும் நடக்காது. இந்த லட்சணத்தில் வீராப்பு பேச்சு வேறு.

காஷ்மீரிலும், பாக்கிஸ்தான் எல்லையிலும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் நாட்டை காக்க எல்லையில் தினமும் ராணுவ பணியில் நம் வீரர்கள் உள்ளார்களே. அவர்களுக்கு தான் அரசு உத்திரவாதம் தர வேண்டும். அவர்கள் அணிந்திருக்கும் புல்லட் புரூப் ஜாக்கெட் முதல் தரமானவை என்று. அவர்களை எல்லாம் வந்து உங்களுக்கு காவல் வைக்க முடியாது.

திருந்துங்கள் மருத்துவர்களே.



    

share on:facebook

Wednesday, January 4, 2012

ஆன்லைனில் குப்பை கொட்ட : குப்பதொட்டி.காம் - இது சென்னை ஸ்டைலு


தலைப்பை பார்த்து இது ஏதோ புது பிளாக் நேம்னு நினைச்சீங்கனா அது உங்க தப்பு. குப்பைதொட்டி.காம் - சென்னை கார்பரேசன் செய்ய வேண்டிய குப்பை அள்ளும்/பிரிக்கும் வேலையை ஒரு தனியார் நிறுவனம் ஹை டெக்காக செய்து வருகிறது. அதுவும் ஆன்லைனில். குறிப்பாக மக்காத குப்பையான பிளாஸ்டிக் மற்றும் பாட்டில்கள் சரியானபடி ரீசைக்ளிங்  அல்லது உபயோகப் படுத்த படவில்லை என்றால் அதனால் சுற்றுப்புற  சூழலுக்கு கேடு.

சுற்று புற சூழலை பாதுகாக்கும் நோக்கோடும் அதே சமயம் மக்காத குப்பைகளை வீடுகளில் இருந்து சேகரித்து அதற்குரிய விலையை  கொடுப்பதின்  மூலம் வாடிக்கையாளர்களையும் சந்தோசப் படுத்தி  வருகிறார் சென்னையை  சேர்ந்த திரு ஜோசப் ஜெகன்  என்பவர்.  இவர்தான் சிலரோடு சேர்ந்து குப்பை தொட்டி.காம் என்ற  ஆன்லைன் சேவையை  ஆரம்பித்து நடத்தி வருகிறார்.

சென்னை வாழ் மக்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்.  முதலில் குப்பைத்தொட்டி.காமில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்  வீட்டில் உள்ள குப்பைகளை  தரம் பிரித்து வைத்துக் கொண்டால் மாதத்திற்கு ஒரு முறை குப்பைதொட்டி.காமில் இருந்து உங்களிடம் முன் கூட்டியே அனுமதி வாங்கிக்கொண்டு உங்கள் வீட்டிற்க்கே வந்து உங்கள் குப்பைகளை பெற்றுக் கொள்வார்கள். அதே நேரம் உங்களுக்கு குப்பைக்கான சன்மானமும் கிடைக்கும். குப்பையை பெற்றுக்  கொண்டதற்கான ரசீதும் உங்களுக்கு ஈமெயிலிலும் அனுப்புகிறார்கள்.

எல்லோருக்கும் சுற்று புற சூழ்நிலை மேல் அக்கறை இருந்தாலும் இந்த அவசர உலகில் குப்பைகளை தரம் பிரித்து அதை சரியான இடத்தில் கொண்டு போய் சேர்க்க எல்லோருக்கும் நேரம் இருப்பதில்லை. ஆதலால் தான் இத்திட்டத்தை நாங்கள் தொடங்கினோம் என்கிறார். ஜெகன். ஒரு மாதத்திற்கு முன் துவங்கப்பட்ட இந்த ஆன்லைன் சேவையில் இது வரை 
500 பேருக்கு மேல் தங்களை பதிவு செய்துள்ளதவும் தெரிவித்துள்ள ஜெகன்  அவர்கள்,  கூடிய விரைவில் பல வன்னங்களினால் ஆன மூடியுடன் கூடிய குப்பை பெட்டிகளை வாடிக்கையாளர்களுக்கு தரப் போவதாகவும் இது மக்காத  குப்பைகளை தரம் பிரிக்க மேலும் உதவும் எனவும் தெரிவிக்கிறார்.

சென்னை மாநகராட்சியின் குப்பை தொட்டிகளில் மறு மதிப்புள்ள மக்காத குப்பை வகைகள் டன் கணக்கில் கொட்டப் பட்டு வீணாவதை பார்த்ததின்  விளைவே இப்படி ஒரு சேவையை ஆரம்பிக்க வேண்டும் என தனக்கு  தோன்றியதாக கூறும் திரு. ஜெகன், கூடிய விரைவில் பல மேற்கத்திய  நாடுகளை போல் நம் நாடும்  குப்பை பராமரிப்பில் சிறந்து விளங்கும்  நாள் வெகு தொலைவில் இல்லை என்கிறார்.

நீங்களும் பதிவு செய்து கொள்ள வேண்டுமா? அப்ப இங்க சொடுக்குங்க.

  

share on:facebook

Tuesday, January 3, 2012

திருவள்ளுவரும் டெரரிஸ்ட்டும் ...

தலைப்பை பார்த்துட்டு யாரும் திட்டாதீங்க. சும்மா வேணும்னே பரபரப்புக்காக நான் இத வைக்கல. இன்னும் சொல்லப்போனால் "திருவள்ளுவர் டெரரிஸ்ட்டா" என்று தான் நான் தலைப்பாக வைத்திருக்க  வேண்டும். ஆனால், அப்படி வைக்க என் மனம் இடம் தர வில்லை. சரி விசயத்திற்கு வருவோம்.

கடந்த சில பல ஆண்டுகளாக இந்தியா, அமெரிக்கா என மாறி மாறி வாசம் செய்யும் எங்களுக்கு குழந்தைகள் எக் காரணம் கொண்டும் தமிழை மறந்து விட கூடாது என்பதில் மிகுந்த கவனம் காரணமாக தமிழ் பாடங்களையும், மற்ற பிற தமிழ் சார்ந்த விசயங்களையும் தொடர்ந்து சொல்லி வருகிறோம்.

அப்படித்தான் சில நாட்களுக்கு முன், அய்யன் திருவள்ளுவரை பற்றி என் இளைய மகளிடம் என் மனைவி எடுத்து சொல்லி இருக்கிறார். திருவள்ளுவர் மிக சிறந்த புலவர், ரொம்ப நல்லவர், நல்ல விஷயங்கள் பல சொல்லி இருக்கிறார் என.  உடனே என்ன நினைத்தாலோ என் மகள், He could be a terrorist also என சொல்லி உள்ளார். எங்களுக்கெல்லாம் இதை  கேட்டவுடன் ஒரே ஷாக். ஏன் இப்படி சொல்கிறாய் என திரும்பி அவளிடமே கேட்டோம். அதற்கு அவள், நீங்கள் தானே அவர் ரொம்ப நல்லவர் என கூறினீர்கள். அதான் அவர் ஏன் நல்லவராக pretend செய்திருக்க கூடாது என நினைத்தேன் என்றாள்.

ஒரு வேளை திருவள்ளுவரின் தாடி மீசை மற்றும் அவரின் தலை முடி ஸ்டைலை பார்த்த பாதிப்பா என தெரியவில்லை. இல்லை இங்கு எப்பொழுதும் "Fight against terrorism" என்று எல்லா டி.வீ. க்களிலும்  நாள் தோறும் போடும் கூப்பாட்டை கேட்டுக் கொண்டிருப்பதால் அவளுக்கு இந்த எண்ணம் வந்ததா என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் அவள் இப்படி கூறியது எங்களுக்கு ஆச்சர்யம் மட்டும் இல்லை. சற்று அதிர்ச்சியாகவும் தான் இருந்தது. ஹ்ம்ம்...எல்லாம் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளும் நாம் காணும் செய்திகளும் தான் காரணம் என எண்ணிக் கொண்டு திருவள்ளுவரை பற்றி இன்னும் பல கதைகளை அவளிடம் சொல்லி அவளுக்கு புரியவைத்தோம்.

அட்லீஸ்ட் என் பொண்ணாவது திருவள்ளுவரை டெரரிஸ்ட்டா என கேட்டாள். எங்களுக்கு தெரிந்த ஒரு தமிழ் குடும்பத்தை சேர்ந்த பெண்ணுக்கு (எட்டாவது படிக்கும் பெண்) திருவள்ளுவர் என்றால் யார் என்றே தெரியவில்லை. வெளி நாடுகளில் வாழும் எல்லா குழந்தைகளும் இப்படி தான் என நான் கூற வரவில்லை. சில குழந்தைகள் மிக அழகாக தமிழ் பேசவும் செய்வார்கள்.

வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள்/இந்தியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நம் மொழி கலாச்சாரம் பற்றி அவர்களுக்கு கஷ்டமில்லாத வகையில் அவ்வப்போது சொல்லிக் கொடுப்பது இம்மாதிரியான சங்கடமான கேள்விகள்/பதில்களை தவிர்க்கும்.


எப்படி இருந்தாலும் வெளிநாடு வாழ் தமிழர்களின் குழந்தைகள் தமிழ்  பேசவும்,  தமிழ் கலாச்சாரத்தை பற்றி தெரிந்து கொள்வதும் அவர்களின் பெற்றோர்கள் கையில் தான் உள்ளது. சிலர் வெளி நாட்டில் இருப்பதால் தங்களின் குழந்தைகள் ஆங்கிலம் நன்றாக தெரிந்து கொள்வது தான் முக்கியம் என வீட்டில் கூட குழந்தைகளிடம் தமிழ் பேசுவதை  தவிர்க்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள்.  வெளிநாட்டில் வளரும் குழந்தைகளுக்கு ஆங்கில புலமை தானாக வரும்.  தாய் மொழிதான் நாம் சொல்லி கொடுத்து வளர்க்காவிட்டால் அவர்களுக்கு   மறந்து போய் விடும் அபாயம் இருக்கிறது. சொல்றத சொல்லிப்புட்டேன்க.  அப்புறம் உங்க விருப்பம்.   

share on:facebook

Sunday, January 1, 2012

2012 Top 10


முல்லை பெரியாறு பிரச்சனையையோ, கூடங்குளம் அணு உலை சிக்கலையோ தீர்த்து வைக்கும் இடத்தில் நாம் இல்லை. ஆனால், நிச்சயம் கீழ் கண்டவற்றில் சிலவற்றை நம்மால் நிச்சயம் நிறை வேற்ற முடியும். 2012 இல் அதை முயற்சிப்போமே...

# பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை குறைத்துக் கொள்ளலாம்.

# ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டுவதை தவிர்க்கலாம்.

# இரவு நேரங்களில் காரில் வெகு தூர பயணங்களை (self driving) தவிர்க்கலாம்.

# மாதம் ஒரு நல்ல புத்தகத்தை வாங்கலாம்/வாசிக்கலாம்.


# ரோட்டில் போகும் போதும், வரும் போதும் குப்பைகளை எறிவதை தவிர்க்கலாம்.


# வருடத்திற்கு ஒரு முறையாவது ஒரு ஏழை குழந்தையின் படிப்பிற்கு முடிந்ததை உதவலாம்.


# பெற்றோர்களை விட்டு வெளி ஊர்களில் வாழ்பவர்கள் அவர்களுக்கு பணம் அனுப்புவதை மட்டும் கடமை என எண்ணி விடாமல் அவ்வப்போது சென்று அவர்களுடன் ஓரிரு நாட்கள் தங்கி இருந்து கவனித்துக் கொள்ளலாம்.


# குழந்தைகளுக்கு உடற் பயிற்சியாக அமையக்கூடிய பழைய விளையாட்டுக்களை சொல்லிக் கொடுக்கலாம்.


# நாமும் தினமும் ஒரு முறையாவது ஒரு மணி நேரத்திற்கும் குறையாமல் உடற் பயிற்சி/நடை பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ளலாம்.


# சேமிப்பு. இதுவும் அவசியம். அதே நேரத்தில், வாய்ப்பும் வசதியும் இருந்தால் நாலு இடங்களுக்கு சென்று வருவது மனதையும் அறிவையும் விசாலமாக்கும். முயற்சிக்கலாமே.


share on:facebook