Friday, December 25, 2009

புத்தாண்டு பிறப்பது எப்போது?



இதோ அடுத்தவாரம் இந்நேரம் புது வருடம் பிறந்திருக்கும். இன்னைக்கு உலகம் பூராவும் ஜாதி இன மொழி வேறுபாடு இல்லாம கொண்டாடுற ஒரே பண்டிகைனா அது புத்தாண்டு தினமாகத்தான் இருக்கும்.

எல்லாம் சரிதான். எப்போதுமே பழசு போயி புதுசு வந்தா எல்லாருக்கும் சந்தோசம் தான். ஆனா அந்த சந்தோசம் சில சமயம் சில பேருக்கு சோகமாவும் ஆயிடுது. அதுக்கு ஒரே காரணம் நாம தேவைல்லாம அன்றைக்கு கொடுக்கற முக்கியத்துவமும் ஏதோ அன்றைக்கு மட்டும் தான் நாம சந்தோசமா இருக்க முடியும் என்பது போலவும் சிலர் நினைத்துக்கொள்வதும் தான்.

அன்னைக்கு சந்தோசமா இருந்தா அந்த வருடம் முழுசும் சந்தோசமா இருக்கலாம்னு ஒரு சிலர் அசட்டு தனமான ஒரு விளக்கத்தையும் கொடுப்பார்கள்.

"ஒவ்வொரு நாளும் புதிய நாளே", "இன்று நாம் புதிதாய் பிறந்தோம்" என சொல்லக் கேட்டிருக்கிறோம். அந்த வகையில் புத்தாண்டு தினத்தன்று நாம் ஏற்படுத்திக்கொள்ளும் உற்சாகத்தையும், அன்பு பாராட்டுதலையும் சுறுசுறுப்பையும் நாம் ஏன் எல்லா நாட்களும் ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது?

இன்னைக்கு பிப்ரவரி-4 அதனால சந்தோசமா இருக்கக் கூடாதுன்னு யாராச்சும் சொன்னாங்களா?

அதோட இந்த நியூ இயர் அன்னைக்கு நம்ம மக்கள் பண்ற ரகளை இருக்கே. அப்பப்பா... என்னமோ அன்னைக்கு மட்டும்தான் சாமி கண்ண தொறந்து பாக்கறது போல எல்லோரும் நடு சாமத்திலே எழுந்து குளிச்சு முடிச்சு கோயிலுக்கு கிளம்பிடுறாங்க.

பெருசுங்க நடுத்தர வயசுகாரங்க இப்படினா இந்த இளவட்டங்க இருக்கே, அதுங்க இந்த பீச் ரோட்ல அடிக்கிற லூட்டி தாங்க முடியாது. அன்னக்கி மட்டும் ரோட்ல போறவங்க எல்லாம் அவங்களுக்கு சொந்தகாரங்க ஆயிடுவாங்க போல. பாக்றவன் போறவன் வரவன் எல்லோர் கையையும் பிடிச்சு பிடிச்சு ஹாப்பி நியூ இயர் சொல்வாங்க.

அதை விட கொடுமை அன்னைக்கு குடித்து விட்டு கண்ணு மண்ணு தெரியாம வண்டி ஒட்டி கடைசியில ஆஸ்பத்திரியில அட்மிட் ஆவுற சில கேசுங்களும் இருக்கு. இது இங்க மட்டும் இல்ல உலகம் பூராவும் அன்னைக்கு நடக்கிற விஷயம் தான்.

ஏன் சில வருடங்களுக்கு முன் சென்னையில் ஒரு ஹோட்டலில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஸ்விம்மிங் பூல் மீது கட்டப்பட்ட மேடை இடிந்து ஒருவர் இறந்து கூட போனார்.

இதை எல்லாம் நான் உங்களை பயமுறுத்துவதற்காக சொல்லவில்லை. மாறாக எல்லா நாளுமே நமக்கு புதிய நாளாக எண்ணி அதை வரவேற்போம். புத்தாண்டு தினத்தை போலவே ஒவ்வொரு நாளும் நாம் சுறுசுறுப்புடனும் புதிய உற்சாகத்துடனும் இருப்போம் என்று தான் கேட்டுக்கொள்கிறேன்.

எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இனி வரும் எல்லா நாளும் உங்களுக்கு இனிய நாளாகவும் என் வாழ்த்துக்கள்.
share on:facebook

Wednesday, December 23, 2009

பக்கத்து வீட்டு செல்லம்...



அமெரிக்கா சென்ற சில மாதங்களிலேயே எனக்கு அந்த ஆசை வந்து விட்டது. இந்தியாவில் இருந்தவரை அந்த மாதிரி ஆசை எனக்குள் எழுந்ததேயில்லை எனலாம். எவ்வளவு அழகா இருந்தாலும் ஜஸ்ட் பார்த்து விட்டு சென்று கொண்டேயிருப்பேன். இங்கு வந்த பிறகு தான் இவர்கள் கொஞ்சுவதையும், கட்டிப்பிடிப்பதையும் பார்த்து பார்த்து எனக்கும் அந்த ஆசை வந்தது. நமக்கும் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்று.


அப்படி நான் ஏங்கி கொண்டிருந்த ஒரு நாளில் தான் பக்கத்து பிளாட்டிற்கு புதிதாக ஒரு குடும்பம் வந்தது. டிக்ஸி என்ற அழகு தேவதையும் கூடவே.

வந்த புதிதில் என்னை பார்த்தாலே அவள் சற்று ஒதுங்கியே தான் சென்றாள். ஆனாலும் நான் விடாமல் அவளிடம் பழகும் பொருட்டு அவள் வெளியே வரும் நேரம் பார்த்து நானும் அவள் கண்ணில் படுமாறு வெளியில் வந்து நிற்பேன். சில நாட்களில் நான் எதிர்பார்த்ததை போல் அவளும் என்னை சினேகமாக பார்க்க தொடங்கி விட்டால். இருந்தும் எனக்கு அவளிடம் நெருங்கிப் பழக பயமாக இருந்தது.

என் ரூம்மேட் சந்துரு நல்ல தைரியமான ஆளு. வாட்ட சாட்டமாக இருப்பான். அவனிடம் நான் டிக்ஸி பற்றியும், எனக்கு அவள் மேல் உள்ள ஆசை பற்றியும் கூறினேன். அவளும் என்னை சிநேகமாக பார்க்க தொடங்கி இருப்பதை பற்றியும் கூறினேன்.

என்ன நினைத்தானோ அவன், "டே கண்ணா, ஒனக்கு ஏண்டா இந்த ஆசையெல்லாம். வந்தோமா வேலைய பாத்தோமானு போகாம, அது சிநேகமா பார்க்குது, மொறைச்சி பார்க்குது அது இதுன்னு ஏதாவது செஞ்சி வம்புல மாட்டிக்காத. அப்புறம் கஷ்டப்பட போறது நீதான். அவ்வளவுதான் சொல்வேன்" என்று பெரிதாக உபதேசம் செய்ய ஆரம்பித்துவிட்டான்.

ஓரிரு வாரங்கள் சென்றிருக்கும். அன்று ஞாயிற்றுகிழமை. சந்துரு வெளியில் சென்று விட்டான். நான் மட்டும் வீட்டில் தனியாக இருந்தேன் கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்தேன். திறந்து பார்த்தால், பக்கத்து பிளாட்காரர். கூடவே டிக்சியும்.

"ஒரு அவசர வேலை. என் மனைவி இன்னும் ஊரிலிருந்து வரவில்லை. இரவு நேரம் டிக்சி வீட்ல தனியாக இருக்க பயப்படுவா. கொஞ்ச நேரம் உங்க வீட்ல விட்டுட்டு போகட்டுமா? பாத்துக்க முடியுமான்னு" கேட்டவுடன் எனக்கு ஒன்னுமே புரியல. நான் எதிர்பார்க்கவே இல்லை அப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கும் என்று. ஆஹா பழம் நழுவி பாலில் விழுது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே...

Why don't? its my pleasure. please drop her என நான் கூறிக்கொண்டு இருக்கும் போதே டிக்சி பின்னாலிலிருந்து என்னை எட்டி பார்த்தாள். எப்போதும் பார்க்கும் அந்த சிநேகப் பார்வை அவளிடம் இல்லை. சிறிது மிரட்சி அவள் பார்வையில் கலந்திருந்ததை என்னால் காண முடிந்தது.

Ok. thank you very much. bye dixie. will come back soon என்று அவர் கிளம்பவும் டிக்சி உள்ளே நுழையவும், மறக்காமல் நான் கதவை சாத்தி தாழிட்டேன். என் பின்னே தயங்கி தயங்கி வந்தவள் திடீரென நின்று விட்டால். நான் அருகே போய் பேரை சொல்லி, டிக்சி "கம் ஆன்", பயப்படாதே, நான் உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன் என அவளின் முதுகை அப்படியே என் கைகளால் வருடியபடி உள்ளே அழைத்து வந்தேன். அவளும் அதை எதிர்பார்த்தது போல் அப்படியே அமைதியா என் கூடவே வந்தாள்.

உள்ளே வந்ததும் அவளை வாஞ்சையுடன் தழுவினேன். நான் எதிர்பார்க்கவே இல்லை. அவளுக்கும் என் மீது அவ்வளவு ஆசை இருக்குமென்று. அவளும் என்னை ஆசை தீர கொஞ்சினாள்.

அப்பா எவ்வளவு நாள் ஆசை. இந்தியாவில் இப்படி ஒரு நாயை கொஞ்ச முடியுமா? அது அப்புறம் கடிச்சு கிடிச்சு வச்சா பின்ன தொப்புள சுத்தி 16 ஊசி போட வேண்டியதுதான். இங்க உள்ள நாய்ங்க எல்லாம் பக்காவா தடுப்பூசி போட்டு வளர்கிறாங்க. அதனால எனக்கு பயமே இல்ல. எனக்குள் இருந்த நீண்ட நாள் அசை நிறைவேறிய சந்தோசத்தில் மீண்டும் ஒரு முறை டிக்சியை ஆசை தீர கொஞ்சினேன்.

ஐயோ! யாரது நாய விட்டு என்ன கடிக்க விடறது? சும்மா தமாசுக்கு தான். டிக்சிய எனக்கு புடிச்சது. உங்களுக்கு கத புடிச்சிருந்தா அப்படியே ஒரு வோட்ட போட்டுட்டு போங்க. நன்றி.
share on:facebook

Saturday, December 19, 2009

தெலுங் - ஆனா?



ஆந்திரா மீல்ஸ் மிகவும் காரசாரமானது. அதுபோலவே தனி தெலுங்கானா பிரச்சனையும் இப்போது காரசாரமான விவாதத்துக்குள்ளாகி வருகிறது. தமிழ் நாட்டில் ஆந்திரா மீல்ஸ் என்று சில இடங்களில் போர்டு பார்க்கலாம். ஆனால் நீங்கள் ஹைதராபாத் சென்றால் அங்கும் பல ஹோட்டல்களில் Andhra meals available என்று போர்டு பார்க்கலாம். ஒரே மொழி பேசுபவர்களாக இருந்தாலும் கூட அந்த அளவிற்கு ஆந்திராவின் தெலுங்கானா, கடற்கரை ஆந்திரா மற்றும் ராய சீமா என மூன்று பகுதிகளும் தனித்தன்மை வாய்ந்ததாகவே அறியப்படுகின்றன.

தனி தெலுங்கானா என்பது ஒன்றும் புதிய கோரிக்கை அல்ல. தெலுங்கானா பகுதி முன்பு Hyderabad state உடன் இணைந்த தனி மாநிலமாக இருந்ததும் பிறகு ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட பின்பு தான் (சுதந்திரத்திற்கு பிறகு) அது அதனுடன் இன்னைக்கப்பட்டு இப்போதுள்ள ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக உருபெற்றது என்பதெல்லாம் நம்மில் சிலருக்கு தெரியுமா என்பது சந்தேகமே.

எனக்கு தெரிந்த, நான் அறிந்தவற்றை இங்கு பதிகிறேன். தவறுகள் இருப்பின் அதை தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் திருத்தவும்.

அதற்கு முன் சுருக்கமாக சில வரலாற்று நிகழ்வுகளை பார்ப்போம். இந்தியாவில் முதல் மொழிவாரி மாநிலமாக உருவாக்கப்பட்டது ஆந்திர மாநிலம் தான். சுதந்திரத்துக்கு முன்னதாக இருந்த மெட்ராஸ் மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் மக்கள் உடைய மாவட்டங்கள் மற்றும் ராயலசீமா, கடலோர ஆந்திரா பகுதிகளை  ஒன்றிணைத்து தனி மாநிலம் வேண்டும் என்று பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து இறந்தார்.

இதை தொடர்ந்து உடனடியாக மதராஸ் பிரசிடென்சியில் இருந்து தெலுங்கு பேசும் மக்கள் கொண்ட பகுதிகளை பிரித்து புதிய மாநிலமாக ஆந்திரா மாநிலத்தை உருவாக்க அப்போதைய பிரதமர் நேரு உத்தரவிட்டார்.

தனி தெலுங்கான வேண்டும் என்று இப்போது போராடுகிறார்களே, அந்த தெலுங்கானா பகுதி முன்பு Hyderabad state-இல் தான் இருந்து வந்தது. 1956 இல் தான் அது ஆந்திர மாநிலத்துடன் இணைக்கப்பட்டு தற்போதுள்ள ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக உருவெடுத்தது. ஹைதராபாத் எங்களுக்கு தான் என இப்போது எல்லோரும் கேட்கிறார்களே, அந்த நகரம் தான் பழைய Hyderabad State-ன் தலை நகரமாக இருந்து வந்தது.

உண்மையை கூறப்போனால் ஒருங்கிணைந்த ஆந்திராவிற்கு அன்றே பல எதிர்ப்புகள் இருந்தது. குறிப்பாக தெலுங்கானா மக்கள் தாங்கள் ஆந்திராவுடன் இணைந்தால் தங்களுக்கு வாய்ப்புகளும் வருமானமும் குறைந்து போய்விடுமென அஞ்சினார்கள். இதன் காரணமாக, அவர்களை சமாதான படுத்துவதற்க்காக ஒரு சில சலுகைகளை தெலுங்கனா மக்களுக்கு வழங்குவதாக அறிவித்து அதற்காக அப்போது ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தினார்கள். அனால் அது எதுவுமே பிற்காலத்தில் நிறைவேற்ற படவில்லை என்பதற்கு ஒரே ஒரு உதாரணமே போதும்.

அதாவது ஆந்திராவின் முதல்வர் ஆந்திரா பகுதியை சேர்ந்தவராக இருந்தால் துணை முதல்வர் பதவி தெலுங்கான பகுதியை சேர்ந்தவருக்கு அளிக்க வேண்டும் (vice versa). ஆனால் அதனால்  இன்று வரை துணை முதல்வர் என்ற பதவியே ஆந்திராவில் எற்படுத்தபடவில்லை.

இதெல்லாம் இருக்கட்டும், சாப்பாட்டு மற்றும் கலாச்சாரங்களில் கூட இரு பகுதி மக்கள்ளுக்குள் சில வேறுபாடுகள் உண்டு. தெலுங்கான பகுதியில் நாம் வட இந்திய கலாசாரத்தை அதிகமாக காணலாம். தெலுங்கான பல காலமாக நிஜாம் ஆட்சியில் இருந்ததும் அதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

அனால் ஒன்று. முன்பு எந்த காரணத்திற்காக தெலுங்கானாவை ஆந்திராவுடன் இனைக்க கூடாது என கூறினார்களோ நிச்சயமாக அதே காரணங்கள் இப்போதுள்ள அரசியல் தலைவர்களுக்கு இருக்க முடியாது. இல்லையென்றால் தனி தெலுங்கானாவை ஆதரித்த எல்லோரும் இப்போது திடீரென்று அந்தர் பல்டி அடிப்பதற்கு நிச்சயமாக அவர்களின் அரசியல் நோக்கங்களே காரணம் என்பது பாமரர்க்கு கூட புரியும்.

தெலுங்கான பிரிந்தாலும் ஆந்திராவுடன் இனைந்திருந்தாலும் அரசியலும் அரசியல்வாதிகளும் திருந்தாத வரை முன்னேற்றம் என்பது அவர்களுக்கு பகல் கனவுதான்.
share on:facebook

Wednesday, December 16, 2009

கோவா கொடுமை


ஒரு காலத்தில் உலகின் மிக அழகான கடற்கரைகளில் ஒன்று என பெயரெடுத்த கோவா பீச் இன்று கொலை மற்றும் கற்பழிப்புகளின் கூடாரமாக மாறிவிட்டது.

இதை தடுக்க வேண்டிய காவல்துறை செயல் இழந்து விட்டதாக அம் மாநில சுற்றுலா துறை அமைச்சரே குற்றம் சாட்டுகிறார்.

அதே நேரத்தில் மாநில முதலமைச்சரோ, இரவில் பெண்கள் வெளியே செல்வதால் தான் இம்மாதிரி குற்றங்கள் நடக்கிறது. அவர்கள் இரவு நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் எல்லோருக்கும் காவல்துறை பாதுகாப்பு அளிக்க முடியாது என அருள் பாவித்துள்ளார். நான் கேட்கிறேன், மக்களை காக்க தான் காவல் துறையும், அரசாங்கமும். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத உங்களுக்கு மட்டும் ஏன் 24 மணி நேர z, z+, black cat  பாதுகாப்பு  எல்லாம்?

உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ளத் தானே மக்கள் வரிப்பணத்தில் எல்லா வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். மக்கள் மட்டும் என்ன இளிச்சவாயர்களா?

மக்களையே பார்த்து பயப்படும் நீங்கள் எல்லாம் ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? அப்படி பயமாக இருந்தால் இனி தலைமை செயலகத்திலோ அல்லது உங்கள் வீட்டில் மட்டும் அரசாங்க பணிகளை ஆற்றுங்கள். நீங்கள் தெரு  தெருவாக  சுற்றுவதால் தானே  உங்களுக்கு  பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் பாதுகாப்பு குறைக்கபடுகிறது. இனி நீங்களும் வெளியே  செல்வதை  தவிருங்கள். ஏனென்றால் எல்லோருக்கும் காவல்துறை  பாதுகாப்பு  அளிக்க  முடியாது.

ஒரு காங்கிரஸ் எம்.பியோ பாராளுமன்றத்தில், "கற்பழிக்கப்பட்ட பெண்கள் எல்லோரும் பல ஆண்களுடன் சுற்றியவர்கள். ஆகவே இம் மாதிரி கற்பழிப்பு வழக்குகளை ஒரே மாதிரியான கண்ணோட்டத்துடன் காவல் துறையும் அரசும் அணுகக்கூடாது" என பேசியுள்ளார்.

அட கடவுளே, இவர்களையெல்லாம் என்ன செய்வது. மனைவியாகவே இருந்தாலும் அவளுக்கு விருப்பமில்லை என்றால் அவளை கட்டாயப்படுத்தவோ வற்புறுத்தவோ கூடாது என்கிறது சட்டம். ஆனால் இவர்கள் ஆண் நண்பர்கள் இருந்தால் அப் பெண் கற்பழிக்கப்பட்டதை  நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது என உபதேசிக்கிறார்கள்.

இதில் முக்கியமான விஷயம் இந்த மாதிரி குற்றங்களில் சம்மந்தப்பட்டவர்களாக  கை காட்டப்பட்டவர்கள் பெரும்பாலும் அரசியலிலோ அல்லது அரசின் உயர் பதவி வகிப்பவர்களின் வாரிசுகள் தான்.

கோவாவிற்கு  வரும் வெளிநாட்டினர் ஒண்ணும் சன்யாசிகள் அல்ல. அவர்கள் இங்கு வருவதே கடற்கரையில் சன் பாத் எடுப்பதற்கும் தங்கள் விடுமுறையை அனுபவிக்கவும் தான்.

அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை அங்குள்ள அரசு ஏற்படுத்தவில்லை என்றால் சுற்றுலாவையே பெரிதும் நம்பி இருக்கும் கோவாவின் வருவாய் குறைவது மட்டுமில்லாமல் நம் நாட்டின் மானமும் கப்பலேரிவிடும்.

இது கோவா சம்மந்தப்பட்ட பிரச்சனை மட்டுமில்லை. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடையே  கோவா பாதுகாப்பற்றது என தெரிய வந்தால் அது  இந்தியாவின்  சுற்றுலாதுறையையே பெரிதும் பாதிக்கும்.

ஒரு பெண் தன் உடல் முழுவதும் நகைகளை அணிந்து கொண்டு என்று நடு இரவில் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் தனியே நடக்க முடியுமோ அன்று தான் நம் நாடு உண்மையான சுதந்திரம் பெற்றதற்கு சமம் என்றார் காந்தி.

ஆனால் இன்று ஒரு நல்ல புடவையை அணிந்து கொண்டு கூட பகல் நேரத்திலேயே தனியாக நடக்க முடியாத நிலைமை. குற்றவாளிகளும், கொலைகாரர்களும் தேர்தலில் ஜெயிக்கும் வரை நம் நாட்டில் இம்மாதிரி குற்றங்கள்  நடப்பதை யாராலும் தடுக்க முடியாது.

கடைசியாக வந்த தகவல்: சமீபத்தில் ரஷிய சுற்றுலா பெண் மானபங்கப்படுத்த பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பெயிலில் வந்த குற்றவாளி தலைமறைவாகிவிட்டார்.
share on:facebook

Saturday, December 12, 2009

மும்பை திரையுலகமே திரண்டு வந்து...



இன்று மாலை 4 மணிக்கு….காணத் தவறாதீர்கள். மும்பை திரையுலகமே திரண்டு வந்து...கிரிகெட் நாயகன் சச்சின் டெண்டுல்கர் அவர்களுக்கு நடத்தும் பாராட்டு விழா... இணைந்து வழங்குவோர்...

இப்படியெலாம் நான் சொல்வேன் என்று நீங்கள் நினைத்தால் சந்தேகமே இல்லை. நீங்கள் நிச்சயம் பச்சை தமிழன் தான்.

ஆம் இந்தி திரையுலக நட்சத்திரங்கள் சார்பில் சில நாட்களுக்கு முன் சச்சினுக்கு மும்பையில் பாராட்டு விழா நடந்தது. அவர் விளையாட வந்து 20 வருடங்கள் ஆனதை கொண்டாடும் வகையில் இந்த பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தது இந்திய தொழில் ஜாம்பாவான் முகேஷ் அம்பானி தம்பதியினர். அதுவும் அவர்கள் வீட்டிலேயே.

ஆனால் நீங்கள் நினைப்பது போல் ஞாயிறு மாலை 4 மணிக்கு ….காணத் தவறாதீர்கள். தமிழ் திரையுலகமே திரண்டு வந்து ….இப்படி ஓயாமல் வரும் அறிவிப்புகளும் அதை தொடர்ந்து சின்னத் திரையில் நாம் பார்த்து பார்த்து சலித்து போன ஆட்டம் பாட்டங்களுக்கு இடையே நடந்த பாராட்டு விழா அல்ல அது.

எந்த ஒரு பந்தாவோ பகட்டோ இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்தது அந்த விழா.

இத்தனைக்கும் மும்பை திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரங்களும், கிரிகெட் உலகின் முன்னாள் இந்நாள் முண்ணனி வீரர்களும் பங்குகொண்டு சிறப்பித்து இருந்தார்கள் .

நடிக்க வந்து 25 வருடங்கள் … நடிக்க ஆரம்பித்து 10 வருடங்கள் என எல்லாத்துக்கும் விருது கொடுக்கும், பாராட்டு விழா நடத்தும் காலமிது.

அனால் சச்சினுக்கு நடந்த இந்த பாராட்டு விழா நிச்சயம் வித்தியாசமானது. விழாவில் கலந்து கொண்ட அனைவரும் சச்சினின் ஆட்டத்திறைமை பற்றியும் அவரின் சாதனைகள் பற்றியும் அளவோடு பாராட்டியதை நாம் மட்டுமல்ல சச்சினும் அதை ரசிக்ககூடிய அளவுதான் இருந்ததே தவிர அவரை நெளிய வைக்கவில்லை.

திரையுலக நட்சத்திரங்கள் கூடி இருந்தாலும் அங்கு குத்து பாட்டோ ஆட்டமோ இல்லை. மிகவும் ப்ரோபஷனலாக விழா நடை பெற்றது . நிகழ்ச்சியை ஒளிபரப்பிய CNN-IBN தொலைக்காட்சியும் நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு இடையிடையே நிகழ்ச்சியை வழங்குவோர், இணைந்து வழங்குவோர், துணிந்து வழங்குவோர் என்று மூன்று நான்கு மணி நேரம் இழுத்து வெறுப்பு ஏற்றாமல் தொடர்ந்து ரசிக்கும்படி செய்தார்கள்.

அதேபோல் இந்தியோ ஆங்கிலமோ அதை கொலை செய்வதற்கென்றே உள்ள தொகுப்பாளரோ/தொகுப்பாளினியோ இல்லாமல் அவரவர் மைக் பிடித்து தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.

சச்சின் செஞ்சுரி அடிப்பதற்கு காரணம் பந்தா அல்லது அவரின் மட்டையா என்று பட்டி மன்றமும் அவர்கள் நடத்தவில்லை.

நம்ம ஊரில் பாராட்டு பெரும் நாயகனை விட அவரை பாராட்ட நடக்கும் விழாவின் முன்னிலை, பின்னிலை, தலைமை, சிறப்புரை ஆற்றுபவர்களின் பேச்சிலேயே நமக்கு தூக்கம் வந்து விடும். ஆனால், அன்றைய விழாவை நடத்தியது முகேஷ் அம்பானி என்றாலும் கூட  அவரை புகழ்ந்து ஒருவர் கூட ஒரு வார்த்தை பேசவில்லை. எல்லோரும் சச்சினை பற்றி மட்டுமே பேசினார்கள்.

முகேஷ் அம்பானி பேசும்போது, "இது உங்கள் பிறந்தநாள் இல்லை ஆகவே நான் நீங்கள் நூறு வருடம் இருநூறு வருடம் வாழவேண்டும் என்று நான் தற்போது வாழ்த்த வரவில்லை. நீங்கள் 100 செஞ்சூரி 200 செஞ்சூரி எடுத்து எங்கள் எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும்" என வாழ்த்தினார்.

ஏற்புரை ஆற்றிய சச்சின் கூட மிகவும் சுருக்கமாக அதே நேரத்தில் அடக்கமாக தந்து நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

சச்சின் பேசும்போது தனது தந்தை அவரிடம் கூறிய அறிவுரை ஒன்றை எடுத்துக்கூறினார். "நீ சிறந்த வீரனாக இருந்தால் உனக்கு எல்லா புகழும் கிடைக்கும். அனால் அது நீ சிறப்பாக விளையாண்டு கொண்டிருக்கும் வரை மட்டுமே. ஆனால் நீ ஒரு சிறந்த மனிதனாக வாழ்ந்தால் உனது புகழ் எப்போதும் இருக்கும்" என்று. கடைசியில் நிச்சயமாக கண்ணை பொத்திக் கொண்டு அவர் அழவில்லை.

என்னது? ஹலோ... ஒரு நிமிஷம்... சன் டிவியில் FEFSI திரைப்பட விழா போடா போறாங்களாம். நா அப்புறமா உங்கள பார்க்கிறேன்.
share on:facebook

Friday, November 27, 2009

பன்றிகள், சாக்கடை சூழ ஒரு குடியரசுத் தலைவர் வீடு!

இன்று Envazhi.com-இல் வந்த ஒரு செய்தி. படித்தபோது மனதுக்கு மிகவும் கஷ்டமாகவும் அதே சமயம் இப்படியும் சிலர் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என நினைக்கும் போது மனதுக்கு மிகவும் சந்தோசமாகவும் இருந்தது.

செய்தியை படிக்க மேலே உள்ள தலைப்பை click செய்யவும்.
 
கட்டுரையில் கூறியிருந்ததை போல் எட்டு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கும் அரசியல் வா(வியா)திகளுக்கிடையே நாட்டின் முதல் குடிமகனாக இருந்த ஒருவரின் வீட்டின் எளிமையும், அவரது குடும்பத்தின் எளிமையும் கண்கள் பணிக்க வைக்கின்றன.

நன்றி: envazhi.com
share on:facebook

Monday, November 9, 2009

என்னை மறந்து விடாதீர்கள் ...

தற்காலிக பணி இடமாற்றத்தின் காரணமாக தொடர்ந்து என்னால் எழுத இயலவில்லை(எழுதுவதற்கு நிறைய இருந்தும் கூட). விரைவில் மீண்டும் சந்திப்போம். அதற்குள் என்னை மறந்து விட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் ...

-ஆதி மனிதன்.
share on:facebook

Wednesday, October 21, 2009

பிதாமகன் - இந்திப் பட ரசிகர்கள் எதிர்ப்பு

என்னுடன் பணியாற்றும் சீயான் விக்ரமின் (வட இந்திய) ரசிகர்கள் சிலரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த link-ஐ உங்களுடன் ஷேர் செய்ய விரும்புகிறேன்.


ஒரு தமிழ் நடிகர்/இயக்குனரின் மேல் இவர்கள் வைத்திருக்கும் மதிப்பையும், நம்பிக்கையையும் பார்த்து உண்மையில் எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது.

அப்படியே உள்ளே சென்று, கருத்து கணிப்பில் உங்கள் வாக்குகளை இட்டீர்களானால் மிகவும் சந்தோசப்படுவார்கள்


 http://savepithamagan.blogspot.com/
share on:facebook

70 Vs 90



ஹி ஹி ...தலைப்பை பாத்து தப்பா கற்பனை பண்ணிக்காதிங்க.

70 களில் நான் சிறுவனாக இருந்த போதும் இப்போது அதே வயதில் உள்ள சிறுவர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் சூழல் எப்படி எல்லாம் மாறி இருக்கிறது என்பதையும் பதிவு செய்ய விரும்பினேன்.

இதை படித்துவிட்டு 60 களில் பெரியவர்களாக இருந்தவர்கள் தங்களுடைய வாழ்க்கைமுறையை பின்னூட்டமிட்டால் இன்னும் சுவாரசியம் கூடும் என்றும் நம்புகிறேன்.

இனி 70-களின்...

* நடுவில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கை வைத்துக் கொண்டு அம்மா எங்கள் எல்லோருக்கும் பாடம் சொல்லிக் கொடுப்பார்.

* ரேடியோவில் கவாஸ்கர் எப்பொழுதாவது அடிக்கும் செஞ்சுரிக்கு எல்லோரும் கை தட்டுவோம்.

* மன்மத லீலை சினிமா போஸ்டர்களை பார்த்தால் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்வோம்.

* கோலி, கிரிக்கெட், பட்டம், ஹாக்கி என அனைத்து விளையாட்டுகளையும் சீசன் வாரியாக விளையாடுவோம்.

* பொங்கல் விழாக் காலங்களில் அடுத்தவர் மீது மஞ்சள் தண்ணி தெளித்து விளையாடுவோம்.

* எங்கள் தெருவில் ஒரே ஒருவர் வீட்டில் மட்டும் இருந்த கருப்பு வெள்ளை டி.வி-இல் கொசு மொய்த்தது போல் தெரியும் சினிமா படங்களை பார்த்து ரசித்தது.

* ஊரில் இருந்து தாத்தா பாட்டி வரும் போது கொண்டு வரும் முறுக்கு, அதிரசம் பலகாரங்களுக்காக சண்டை போட்டுக் கொண்டது.

* "தந்தி" என்ற குரல் கேட்கும் போதெல்லாம் அம்மா ஏன் பதற்றமாகிறார்கள் என தெரியாமல் விழிப்போம்.

* மின்சாரம் போகும் போது, தெரு விளக்குகள் மற்றும் பெரிய வீட்டு விளக்குகள் அணையும் போது, "ஹே எங்க வீட்டுல மட்டும் கரண்ட் இருக்கே" என மண்ணெண்ணெய் விளக்கை கைகளால் அரவணைத்துக் கொள்வோம்.

* வீட்டில் விளையும் வெண்டைகாய், கத்திரிக்கா காய்களை தினம் காலை எழுந்தவுடன் பார்த்து மகிழ்வோம்.


இனி 90-களின்...

* காலையில் எழுந்தவுடன் சுட்டி டி. வி./போகோ டி. வி. பார்கிறார்கள்.

* தினமும் பள்ளிக்கு அவசர அவசரமாக கிளம்பி அட்டோவுக்காக அரைமணி நேரமாக வீட்டுக்கு வெளியே காத்திருக்கிறார்கள்.

* வேகாத வெயிலில் டையும் ஷூவும் அணிந்து பள்ளியில் வெந்து போகிறார்கள்.

* வீட்டுக்கு வந்தபின் நூடுல்சும், பிஸ்கட்டும் சாப்பிட்டு ஊதி போகிறார்கள்.

* இடைப்பட்ட நேரங்களில் வாக்மேன் எம்.பி,த்ரி கேட்டு காதை புண்ணாக்கி கொள்கிறார்கள்.

* சித்திரையில் ஏ.சி போட்டுக்கொண்டு மார்கழியில் வெளியே குளிர்கிறது என்று மப்ளர் கட்டிக்கொள்கிறார்கள்.

* சுப்ரபாதமும், கந்த சஸ்டி கவசமும் போய், நாக்க மூக்க ஒலிக்கும் தேநீர் கடைகள்.

* ஓடி ஆடும் விளையாட்டுக்களை மறந்து விட்டு ஜிம்முக்கு செல்லும் சிறுவர்கள்.

* நிலா சோறின் இன்பம் தெரியாமல் இருட்டில் உக்கார்ந்து பீட்சா சாப்பிடுகிறார்கள்.

* நுரை ததும்பும் சூடான பசும் பாலை அருந்த வழியில்லாமல் ஆடை நீக்கிய ஆவின் பாலை பிரீசரில் வைத்து பின் சூடாக்கி குடிக்கிறார்கள்.

நினைவுகள் தொடரும் ...

share on:facebook

Monday, October 12, 2009

தாத்தா பாட்டி



நாளை தீபாவளி. வீடே கலகலப்பாக இருந்தது. எனது மூத்த மகளும், மாப்பிளையும் குழந்தை பரிவதனியை தூக்கிக்கொண்டு இன்று காலை வந்தார்கள். மாப்பிளை இங்கு பக்கத்தில் கும்பகோணத்தில் தான் இருக்கிறார். அவருக்கு அப்பா, அம்மா இல்லை. ஆதலால் தீபாவளியை எங்களுடன் வந்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.


எனது பையன் திருமணமாகி என்னுடனேயே வசிக்கிறான். அவனுடைய மகன் நகுலனுக்கும் பேத்தி பரிவதனிக்கும் எப்போதும் ஆகாது. நகுலன் பரிவதனியை விட மூத்தவன். பரிவதனி இன்னும் விளையாட்டு வயது. பேரனை காட்டிலும் பேத்திக்கு என் மீது அப்படி ஒரு பிரியம். எப்போதும் தாத்தா, தாத்தா என்று என்னையே சுற்றி சுற்றி வருவாள்.

பேரன் பேத்தி இருவரும் வீட்டில் இருந்தால் அவர்களின் சின்ன சின்ன சண்டைகளை சமாதான படுத்துவதே எனது முழு நேர வேலையாகிவிடும்.

இளைய மகளுக்கு வரன் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஒன்றும் அமையவில்லை. அவளுக்கு ஒரு குழந்தை பிறந்து அதையும் தூக்கி கொஞ்சி விட்டால் என் எல்லா ஆசைகளும் நிறைவேறிவிடும்.

வாசலில் அழைப்பு மணி கேட்டது.

"அட டே... நம்ம கல்யாண ப்ரோக்கர்".

வாங்க சாமி, வாங்க ... இப்பதான் உங்கள பத்தி நினைச்சேன்.

"எல்லாம் நல்ல சேதி தான். நீங்க தானே நல்ல வரனா இருந்தா சின்ன பாப்பாவுக்கு பாக்க சொன்னிங்க. ஒரு நல்ல வரன் வந்தது. அதான் உங்கள உடனடியா பார்த்து பேசிட்டு போகலாம்னு வந்தேன்" என்றார் ப்ரோக்கர்.

"ரொம்ப நல்லது. கொஞ்சம் வெவரமா சொல்லுங்க", என்னனு பார்ப்போம் என்றேன்.

ரொம்ப நல்ல பையன். அப்பா, அம்மா கூடத்தான் இருக்கிறார். எஞ்சினியரிங் படிப்பு. கை நிறைய சம்பளம். ஒரு கூட பொறந்த தங்கச்சி. அதுக்கும் கல்யாணம் முடிச்சாச்சு. வேற எதாவது விவரம் வேணும்னா கேளுங்க சொல்றேன்.

பார்த்தா நல்ல வரனாதான் தெரியுது. ஆனா ...

வரதச்சனை பத்தி யோசிக்கிறிங்களா? மாப்பிள்ளை வீடு அப்படி ஒன்னும் கறார் பேர்வழிகள் கிடையாது. நாம பேசி தெரிஞ்சிக்கலாம்...

"அதுக்கு இல்ல சாமி..." என்ன சொல்வது என்று எனக்கு புரியவில்லை. என்னுடைய மாப்பிள்ளைக்கு அப்பா அம்மா கிடையாது. அதனால என் மூத்த பொண்ணுக்கு எந்த பிரச்சினையும் இதுவரை இல்லை. அதே போல் என் சின்ன பொன்னுக்கும் ஒரு வரன் அமைஞ்சா நல்ல இருக்கும். இதை எப்படி ப்ரோக்கர் கிட்ட சொல்றதுனு தெரியல ...

"இன்னும் ரெண்டு மூணு வரன் பார்த்துட்டு அப்புறம் முடிவு பண்ணலாமுன்னு எனக்கு தோனுது". ப்ரோக்கரை பார்த்து கூறினேன்.

"சரி அப்புறம் உங்க விருப்பம். நா அடுத்து நல்ல வரன் ஏதும் வந்தா அதையும் எடுத்துகிட்டு வரேன்".

ப்ரோக்கரை வழி அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன். எதிரே பேத்தி மதிவதனி தாத்தா என அழுதபடியே ஓடி வந்து என்னை கட்டி அணைத்தால்.

"என்னடா தங்கம்? நகுலன் அடிச்சனா"?

இல்ல தாத்தா... அவன் சைக்கிள நான் கேட்டேன். தர மாட்டேங்கிறான். எனக்கும் சைக்கிள் வேனும்ம்ம்... என்று அழுகையை தொடர்ந்தாள்.

சரிம்மா நா உனக்கும் சைக்கிள் வாங்கி தரேன். சரியா... இப்ப அழுகையை நிப்பாட்டு.

"போ தாத்தா... அவனுக்கு மட்டும் ரெண்டு தாத்தா இருக்காங்க. அவன் எப்பவும் உன்கூடயே இருக்கான். அதான் அவன் கேட்டதலாம் அவனுக்கு கிடைக்குது. எனக்கு எங்க வீட்டுல தாத்தாவே இல்ல. எனக்கும் என் கூடயே ஒரு தாத்தா வேனும்ம்ம்... என்று அழுகையை இன்னும் கூட்டினால்.

அவளை எப்படி சமாதான படுத்துவது என்றே தெரியவில்லை. ஒரு வழியாக பேரனிடம் இருந்து சைகிளை அவளுக்கு வாங்கி கொடுத்ததும் ஓரளவு சமாதனம் ஆனாள்.

ஆனால் எனக்கு தான் ஏதோ ஒன்று சமாதானமாகாமல் மனதிற்குள் உறுத்திக்கொண்டே இருந்தது.

அலைபேசியை எடுத்து கல்யாண ப்ரோகரை அழைத்தேன்.

"ஹலோ... சாமியா? நான் தான் பேசுரேன். சின்ன பொண்ணுக்கு ஒரு வரன் காமிச்சிங்கலே காலைல... அந்த வரனையே பார்த்துருவோம். சாயங்காலம் வாங்க".

மனதிற்குள் சற்று பாரம் குறைந்தது போல் இருந்தது. என் பேர குழந்தைகளுக்கு இனி "ரெண்டு தாத்தா" வேண்டும்.
share on:facebook

Thursday, October 8, 2009

அதற்கு பெயர் என்ன?


தமிழ் சினிமா உலகில் ஓரிரு நாட்களாக நடந்து வரும் சம்பவங்களும், கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருக்கும் இன்னமொரு சம்பவமும் ஏனோ என்னை ஒன்றுக்கொன்று முடிச்சு போட தோன்றுகிறது.

சமீபத்தில் ....... வழக்கு ஒன்றில் ஒரு நடிகை கைது செய்யப்பட, அதுவும், அதன் ஒட்டி வெளியான தகவல்களும் தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும், அவமானத்தையும் ஏற்படுத்திவிட்டதாக மிகப்பெரிய இரைச்சல் தாங்கமுடியாத வண்ணம் நம் கதை செவிடாக்கிக் கொண்டிருக்கிறது.

ஒருவர் தன் உடம்பை பலருக்கு பணத்திற்காகவோ, வேறு பல அனுகூலங்களுக்காகவோ விருந்தாக்கினால் மட்டுமே அது தவறு என்ற கண்ணோட்டம் நிலவுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இன்னும் சொல்லப்போனால் அந்த மாதிரியான ஒரு தொழில் சில/பல நாடுகளில் அங்கிகரிக்கப்பட்ட தொழிலாகவே நடக்கிறது.

அதே நேரத்தில் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, அவர் இன்னொருவரின் வாழ்வில் அதாவது இன்னொருவரின் குடும்பத்தில் புகுந்து அடுத்தவரின் மனைவியை/கணவனை அபகரிப்பது தான் மிகப்பெரிய விளைவுகளை பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ஏற்படுத்துகிறது.

சமீப காலமாக ஒரு மிக பெரிய நடிகரை ஒரு முன்னணி நடிகை அவருடைய மனைவியிடமிருந்து பிரிக்க முயற்சிப்பதாகவும், அவரை அவர் குடும்பத்துடன் சேர விடாமல் தன்னிடமே வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருப்பதாகவும், கிட்டத்தட்ட அனைத்து முன்னணி வார ஏடுகளிலும் அட்டை படம் போட்டு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

தன் கணவனை தன்னிடமிருந்து பிரிக்க நினைக்கும் நடிகையை நேரில் கண்டால் கண்டிப்பேன்/உதைப்பேன் என ஒரு ஆத்திரத்தில் கூறியதற்கு, அவ்வாறு சொல்ல அவருக்கு எந்த உரிமையும் இல்லை என்று ஒரு குடும்பத் தலைவியை, இரண்டு குழந்தைகளுக்கு தாயை பார்த்து "உனக்கு அந்த அருகதை இல்லை" என அந்த நடிகை கூறிஉள்ளார். மேலும், அப்படி ஏதாவுது நடந்தால் நானும் திரும்பி அடிப்பேன் என்று பகிரங்கமாக பத்திரிகையில் பேட்டி அளித்துள்ளார்.


பத்திரிக்கைகளில் ஊகங்களின் பேரில் வெளியான தகவல்களுக்கே "பெண்களுக்கு எதிரான வன்கொடுமைச் சட்டப்படி" நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, அமாம் நான் இன்னொருவரின் கணவருடன் சுற்றுவேன், அவருடன் குடும்பம் நடத்துவேன், என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என கூறும் நடிகை மீது பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவி புகார் கொடுத்தால் அந்த நடிகை மீதும் இதே நடவடிக்கையை காவல்துறை எடுக்குமா?

அப்படி எடுத்தால் நடிகர் சங்கம் இதே மாதிரி அந்த நடிகைக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்குமா?

கடைசியாக ஒரு கேள்வி.
 
இவ்வாறு இன்னொருவரின் கணவரை அவரின் குடும்பத்திலிருந்து பிரித்து அவருடன் தனியாக குடும்பம் நடத்த துடிக்கும் இந்த செயலுக்கு என்ன பெயர்?
share on:facebook

Wednesday, October 7, 2009

"உ(எ)ன்னை போல் ஒருவன்"


ஏங்க... எழுந்திரிங்க. இன்னைக்கு உங்க G.M. ஆபீஸ்க்கு வராருன்னு சொன்னீங்க? மணி எட்டு ஆகுது.


எழுந்திரிக்க மனமில்லை. சற்று கழித்து ஒரு வழியா எழுந்து குளியலறை நோக்கி விரைந்தேன். குளித்து முடித்து அவசர அவசரமாக கிளம்பி ஆபிஸ் சென்றடைந்த போது மணி 9 இருக்கும்.

கிளார்க் மணி எதிரே தென்பட்டார். என்ன மணி G.M. எப்ப வரார்?

"இல்ல சார். அவரு இன்னைக்கு வரலை. அடுத்த வாரம் தான் வரார்".

நான் வேலை பார்ப்பது BSLN broadband customer service section. எப்ப பார்த்தாலும் எனக்கு ஸ்பீட் இல்ல, கனக்க்ஷன் கட்டாகுது, லிங்க் பிரேக் ஆகுதுன்னு ஒரே கம்ப்ளைன்ட் வந்த மாதிரியே இருக்கும். இதுல G.M. விசிட்டுனா கேக்கவே வேணாம்...

அப்படா. இன்னைக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கலாம் என்று எண்ணியபடி எனது கவுண்டருக்கு சென்று அப்போதுதான் அமர்ந்தேன்.

"Excuse me sir" என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன்.

"சார் எங்க வீட்டுக்கு வர இன்டர்நெட் கேபிள் அறுந்து  ரெண்டு நாள் ஆயிடுச்சு. நான் போன்ல எப்ப ரிங் பண்ணாலும் ரிங் போய்கிட்டே இருக்கு. யாரும் எடுக்க மாட்றாங்க. அதான் நேர்ல வந்தேன். எப்ப சார் வந்து சரி பண்ணுவீங்க?"

"சார். நீங்க இப்பதான் வந்து சொல்றீங்க. இனிமேதான் நாங்க யார் பிரீயா  இருக்குறாங்கன்னு பார்த்து அனுப்பனும். நாளைக்கு வேற sunday எப்படியும்  செவ்வாய் கிழமைக்குள்ள பார்த்து அனுப்புறேன்" என்றேன்.

"சார், நான் வீடுலேர்ந்துதான் வேலை செய்கிறேன். நான் செவ்வாய் கிழமை வரைக்கும் காத்திருக்க முடியாது சார். எனக்கு இன்னைக்கோ இல்ல நாளைக்கோ சரி பண்ணி கொடுங்க சார்"

"அதெல்லாம் முடியாதுங்க. ஏற்கனவே ஒரு டெக்னிசியன் லீவு. இருக்குற ஒருத்தர வச்சிக்கிட்டு நாங்க என்ன பண்ணுவோம். உங்க ஒருத்தருக்காக நான் எதுவும் செய்ய முடியாது. வேணும்னா நீங்க மேல A.E. இருக்காரு, அவர போய் பாருங்க".

வந்தவர் பதில் கேள்வி கேட்காமல் அல்லது கேட்க விரும்பாமல் ஏதோ முனுமுனுத்தபடி திரும்பி சென்றார்.
 
மணி கொண்டு வந்து வைத்திருந்த இன்றைய தினசரியை எடுத்து புரட்ட ஆரம்பித்த நேரத்தில் என் செல் போன் ஒலித்தது.


வீட்டிலிருந்து தான் அழைப்பு.

"என்னங்க நம்ம வீட்டுல இரண்டு நாளா ஒரு பேஸ் கரண்ட் வேலை செய்யல. நாலஞ்சு தடவ போன் பண்ணி சொல்லியாச்சு. ஒருத்தரும் இதுவரை வந்து பார்கலை. இன்னைக்கு E.B. ஆபிசுக்கு நேரே போய் என்னன்னு பார்த்துட்டு வந்துடுறிங்களா?

சரிம்மா, நான் இன்னைக்கு ப்ரீ தான். G.M. விசிட் கூட கான்சல். நான் இப்பவே போறேன்.

மணியை கூப்பிட்டு, நான் கொஞ்சம் வேலையா வெளிய போறேன். யாரும் கஸ்டமர் வந்தா, இன்னைக்கு G.M. விசிட். எல்லோரும் பிசியா இருக்காங்கன்னு சொல்லி சமாளி என்றபடியே வண்டி ஸ்டாண்ட் நோக்கி சென்றேன்.

அரை மணி நேரத்தில் E.B. ஆபிஸ் அடைந்து அங்கிருந்த Enquiry counter-இல் விசாரித்தேன். ஒருத்தர் தான் படித்துக்கொண்டிருந்த பேப்பரை மடக்காமலே நான் சொல்வதை மட்டும் கேட்டுகொண்டிருந்தார்.


"சார் எங்க வீட்டுல ரெண்டு நாளா ஒரு பேஸ் கரண்ட் இல்ல. நாலு அஞ்சி தடவ போன் பண்ணி சொன்னேன். ஆனால் இதுவரை ஒருத்தரும் வந்து பார்கலை...

"எல்லா விசாரிப்புகளுக்குப்பின், அங்க ரெண்டாவுது கவுண்டர் போய் பாருங்க" ... என்றபடி மீண்டும் தினசரியை எடுத்து புரட்ட ஆரம்பித்து விட்டார்.

அவருக்கு தேங்க்ஸ் சொல்ல கூட மனமில்லை. பின்ன.., என்னமோ பத்திரிகை ஆபிஸ்ல வேல பாக்குரமாதிரி பேப்பரையே பார்த்துகிட்டு பதில் சொல்றாரு. இவருக்கு பேப்பர் படிக்க காசு கொடுக்குறாங்களா இல்ல நமக்கு பதில் சொல்ல காசு கொடுக்குறாங்களா... பொலம்பிக் கொண்டே இரண்டாம் நம்பர் கவுண்டர் நோக்கி நடந்தேன்.

பேர்தான் இரண்டாவுது கவுண்டர். ஆனால் அது இருந்ததோ கடைசியில்...

Excuse me Sir. எங்க வீட்டுல ரெண்டு நாளா ஒரு பேஸ் கரண்ட் இல்ல. அதான் கம்ப்ளைன்ட் பண்ணலாமுன்னு வந்தோம்.

"இந்த complaint book-ல உங்க வீடு அட்ரஸ் போன் நம்பர் எல்லாம் எழுதி வச்சிட்டு போங்க. யாராவது வந்து பார்பாங்க"

சார் நான் நேத்தே எல்லா details சொல்லி போன்லையே கம்ப்ளைன்ட் பண்ணியாச்சு சார். ஆனா இதுவரைக்கும் யாரும் வந்து பார்கவே இல்ல. அதான் நேர்ல வந்தேன்.

இத ஏன் நீங்க முன்னாலேயே என்கிட்டே சொல்லல?

நான் இதல்லாம் enquiry-ல சொல்லித்தான் கேட்டேன். அவர் தான் உங்ககிட்ட அனுப்பினார்.

சரி சரி... பழைய கம்பளைண்ட்னா மேல முதல் மாடில அசிஸ்டன்ட் எஞ்சினியர் இருப்பாரு அவரை தான் நீங்க போய் பார்க்கணும். இந்த கவுண்டர் புது கம்பளைண்ட்க்கு மட்டும் தான்.

இக்கும்... விடிஞ்சது... மனதுக்குள் முனகிகொன்டே மேல் மாடி நோக்கி நடக்க தொடங்கினேன்.

மேலே முதல் மாடியில் அசிஸ்டன்ட் எஞ்சினியர் ரூமை தட்டினேன். உள்ளே இருந்து ஒருவர் எட்டி பார்த்து "என்னா சார் வேணும்?" என்றார்.

அசிஸ்டன்ட் எஞ்சினியர பார்க்கணும்.

அவர் வர நேரமாகும் சார். அப்படி உக்காருங்க. அவர் வந்தா நான் சொல்றேன்.

ஒரு அரை மணி நேரம் கழித்து  ஒருவர் ரூம் உள்ளே நுழைந்தார். இஞ்சினியர் ஆகத்தான் இருக்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் கழித்து, முதலில் என்னை விசாரித்தவர் வந்து, "சார் வந்துட்டாரு. உள்ளே போய் பாருங்க" என்றார்.

உள்ளே நுழைந்தேன். "குட்மார்னிங் சார்".

சொல்லுங்க என்ன வேண்டும்? என்றார் இஞ்சினியர்.

மீண்டும் எல்லா கதையையும் சொன்னேன்.

"சார் இங்க ரொம்ப ஆள் பற்றாகுறை. நாளைக்கு வேற sunday. உங்க ஏரியாவுல முளுக்க ப்ராப்ளம்னா ஏதாவுது ஆள் தேடி அனுப்பலாம். உங்க ஒரு வீட்டுக்காக இப்ப ஒன்னும்  பண்ண முடியாது. நீங்க monday வந்து எதுக்கும் பாருங்க" என்றார்.

"என்ன சார். ஏற்கனவே ரெண்டு நாளாச்சு. இன்னும் ரெண்டு நாள் ஆகும்றிங்கலே. நானும் கவர்மன்ட் ஸ்டாப் தான் சார். இப்படி சொன்ன எப்படி சார்". என்றேன்.

என்னால இதுக்கு மேல ஒன்னும் பண்ண முடியாது சார். வேணும்னா கீழ EC இருப்பாரு அவர் கிட்ட போய் சொல்லுங்க.

வேறொன்றும் சொல்லத் தோன்றாமல் நான் வெளியே வந்தேன்.

எல்லாரும் இப்படி பொறுப்பில்லாம பதில் சொல்றாங்களே ... இவங்கல்லாம் என்ன வேலை பார்கிறாங்க... E.C. மட்டும் என்ன செய்ய போறாரு. அவரும் ஏதாவுது சாக்கு வச்சிருப்பாரு. திங்கள்கிழமை வரை பாப்போம். அப்படி இல்லனா திரும்பி வந்து போராட வேண்டியதுதான். மனதுக்குள் எல்லோரையும் திட்டிக்கொண்டே வெளியே வந்து வண்டியை எடுத்தேன்.
 
எதிரே "உ(எ)ன்னை போல் ஒருவன்" பாணர் ஒன்று பெரிதாக தெரிந்தது.
share on:facebook

Thursday, September 24, 2009

ஓர் இனிய துவக்கம் ...


அன்பிற்கினிய வலைஉலக நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் எனது பணிவான முதற் வணக்கம்.

நானும் ஒரு பிளாக் ஆரம்பித்து அதில் என்னுடைய எண்ணங்களையும் கருத்துகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற என் கனவு இன்று நிஜமாகியது என்றால் அதற்கு முழு முதற் காரணம் உங்களை போன்ற சக பதிவர்களும், சுதந்திரமான சுய கட்டுப்பாட்டுடன் வளைய வரும் இந்த வலை உலகமும் தான் என்றால் அது மிகை அல்ல.

எப்படி ஒரு டாக்டர் சுயமாக ப்ராக்டிஸ் செய்வதற்கு முன் ஒரு ஹவுஸ் சர்ஜனாக தொழில் கற்றுக்கொள்கிராரோ, எப்படி ஒரு தமிழ் சினிமா டைரக்டர் பல ஆங்கில படங்களை பார்த்து தமிழில் ஒரு ஆக்க்ஷன் படம் பண்ண ஆரம்பிக்கிறாரோ (ஆரம்பிச்சிட்டான்டா), எப்படி ....வேணாம் இத்தோட உதாரணம் சொல்றத நிறுத்திக்கிறேன்... அதுபோல்தான் நானும் கடந்த 4-5 வருடங்களாக பல பிளாக்குகளை மேய்ந்து இன்று முதல் நாமும் சொந்த படம் எடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

என் படங்கள் நிச்சயமாக ஒரு கமர்ஷியலான, கருத்துள்ள, ஜனரஞ்சனமானதாக (அப்பா இப்பவே கண்ண கட்டுதே ) இருக்கும் என்பதில் எனக்கு ஐயம்மில்லை. படத்தை அவ் அப்போது   பார்த்து நல்லா இருக்கு, இல்லைன்னு சொன்னீங்கனா அதுக்கு தகுந்த மாதிரி எண்ணை மாத்திக்கிறேன். 

Last but not the least -  என்னை எழுத தூண்டிய இட்லிவடை, பாமரன், டுபுக்கு, வால்பையன், bostonsriram, அவீங்க மற்றும் அனைத்து வலைஉலக நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


வாழ்த்துங்கள் வளர்கிறேன்... வசவுங்கள் திருத்திக்கொள்கிறேன்...

- ஆதிமனிதன்


share on:facebook


Economy class = மாட்டு வண்டி



அமெரிக்காவுல உள்ளவனெல்லாம் பணக்காரனும் இல்ல... ஆப்ரிகாவுல இருக்கிறவெனல்லாம் ஏழையும் இல்லை...

இது நிறைய பேருக்கு தெரிவது இல்லை. இல்லைனா நம்ம மத்திய இணை அமைச்சர் சசி தாரூரின் "மாட்டு வண்டி" பேச்சிக்கு இவ்வளவு விமர்சனகள் வந்திருக்காதுனு என் தனிப்பட்ட அபிப்பிராயம்.

நானெலாம் ஒரு காலத்தில் மாட்டுவண்டியில் போனவன்தாங்க. ஏதோ அப்படி இப்படின்னு படிச்துனால பின்னால டிரைன்ல போற அளவுக்கு முன்னேறி, பல நாள் உக்காந்துகிட்டே (துண்டு போட்டு புடிச்சு இடத்துலதான்) மெட்ராஸ் மும்பைனு போன அனுபவமும் இருக்குங்க.

இப்படி வானத்துல மட்டுமே ப்லைடையும் ஹெலிகாப்டரையும் அண்ணாந்து பார்த்துகிட்டு இருந்தவனுக்கும் அடிச்துங்க ஒரு யோகம். அதாங்க IT கம்பனியில வேலை.

அதுக்கப்புறம் நிறைய தடவ நானும் பிளைடுல பறந்துருக்கங்க (economy class-ல தான்). எத்தனவாட்டி எத பண்ணாலும் அந்த மொத அனுபவம் இருக்கே .. அப்பப்பா.. (நீங்க எதையாவுது நினைச்சுகிட்டா நான் பொறுப்பில்லைங்கோ...)

அப்படிதாங்க என் மொதல் பிளைட் அனுபவம். அம்மா, அப்பா, மாமான்னு ஒரு பெரிய கூட்டமே நம்மள வழி அனுப்ப வந்திருந்தாங்க. நானும் ஏதோ சாதிக்கவே பிறந்தவன் மாதிரி எல்லாருக்கும் TATA, BYE, BYE சொல்லிட்டு உள்ள போனேங்க. எல்லா சோதனைகளையும் முடித்து சற்று காத்திருப்புக்குப்பின் ஒரு வழியா பிளைட்ல வலது கால எடுத்து வச்சப்போ என்னைய நானே எண்ணி பெருமைபட்டுக்கொண்டேன். ஆகா நம்மளும் ஏரோப்பிலேன் ஏறிட்டம்லனு.




எல்லாம் நல்லாதாங்க இருந்துச்சு ப்ளைட் உள்ளார போற வரைக்கும்.


அம்மணிகள் சொன்ன வணக்கத்துக்கு எல்லாம் பதில் வணக்கம் சொல்லிவிட்டு உள்ள பார்த்தா! அட அட இதுவல்லவோ ஏரோப்ளேன், இப்படி சோபா மாதிரி சீட்டுல உக்காந்து போன அமெரிக்க என்ன அன்டார்டிகாவுகே போகலாம்முனு என்னோட சீட்ட தேடினா அந்த வரிசை வரவேயில்ல. திடீர்னு ஸ்க்ரீன் ஒன்னு நம்ம மறச்சது.

திரு.. திருன்னு... முழிச்சிக்கிட்டு நின்னத பார்த்து Excuse me ... அப்படின்னு ஒரு airhostess கூப்பிட்டு May I help you அப்படின்னுச்சு. அப்பாடான்னு என்னுடைய டிக்கெட்டை காண்பித்து எங்க இருக்குனு கேட்டேன். திரையை விலகிவிட்டு உள்ளே போகும்படி கூறினார். என்னடாது train-ல மாதிரி உள்ளே கூபே ஏதும் இருக்குதோன்னு ஆசையா உள்ளே நுழைஞ்சா... என்னமோ கவுண்டர் கட்டி வுட்ட மாதிரி வரிசையா சீட்டுங்க தெரிஞ்சது. அட நம்ம பல்லவன்ல கூட ரெண்டு வரிசைக்கு நடுவுல நல்ல இடைவெளி இருக்கும்க. ஆனா இங்க என்னடானா ஒரு ஆளு கொஞ்சம் கணமா இருந்தா நேரா நடக்க முடியாதுங்க. அவ்வளவு சின்ன பாதை.

சரின்னு ஒருவழியா என்னோட சீட்ட கண்டுபுடிச்சு உக்கார போனா அது மூணு சீட்டுக்கு நடுவுலையா இருக்கணும். சன்னல் பக்கம் உட்கார்ந்து இருந்தவரு எப்படி உள்ள போயிருப்பாருனு (அவ்வளவு குண்டு) நினைச்சுகிட்டு இருக்கும் போதே முதல் சீட்ல இருந்த பொண்ணு (ஹிஹி...பொண்ணு) எழுந்து எனக்கு வழி விட்டது. தேங்க்ஸ் சொல்லிவிட்டு ஒரு வழியா என்னை சரிபடித்திக்கிட்டு உக்கார்ந்தேன்.

அப்பாடி... இந்த ticketing, immigiration, customs எல்லாம் முடித்து வருவதற்குள் தாவு தீர்ந்துடிச்சு. இந்த எகனாமி கிளாஸ் அவ்ளோ கேவலமா என்ன? நாமல்லாம் கால்கடுக்க கியூல நின்னா இந்த first class மக்கள் மட்டும் ஜம்முனு நிக்காம போய்டே இருக்கானுக...

கொஞ்சம் தண்ணி குடிக்கணும் போல இருந்தது. எதிர்பட்ட airhostess-கிட்ட கொஞ்சம் தண்ணி கேட்டேன். சிறிது (10 நிமிஷம்...) கழித்து தம்மாதுண்டு கப்ல கொண்டு வந்து கொடுத்துச்சு. அது தொண்டைய கூட நனைக்கல. மடக்கு மடகுன்னு ரெண்டு வாய்ல குடிச்சுட்டு One more cup please-னு திரும்பவும் கேட்டா அது என்னமோ என்னைய வித்யாசமா பாத்துச்சு (பாரின்ல ஒரு கப் ட்ரிங்க்ஸ்ச ஒரு மணி நேரம் குடிபானுகனு என் நண்பன் சொன்னது இப்பதான் ஞாபகத்துக்கு வந்துச்சு).

ஒரு வழியா flight கிளம்புவதாக அறிவிப்பு வர ஊர்ல உள்ள எல்லா சாமியையும் வேண்டிக்குட்டு கண்ணை மூடினேன். அப்பா! என்ன ஒரு வேகம். அது கிளம்பின வேகத்துல எனக்கு அடிவயிறு கலங்கிடுச்சு. மேலேர்ந்து பார்த்தால் அட நம்ம சென்னை கூட ரொம்ப அழகா தெரியுதுங்க! அதுவும் நம்ம கடற்கரை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. Flight இப்போ மேக மூட்டத்தினூடே செல்வதை என்னால் காண முடிந்தது.

அப்போதானா எனக்கு ...ச்சா வர வேண்டும். பக்கத்தில் உள்ள பெண்ணிடம் excuse me சொல்லிவிட்டு எழ எத்தனித்தேன். எங்கிருந்தோ வந்த பணிப்பெண் மேலே உள்ள பெல்ட் sign-ஐ கண்பித்து என்னை எழ கூடாது என சைகையாலேயே கூற எனக்கு எப்படி சொல்வதென்றே தெயரியவில்லை. என்னடாது நமக்கு வந்த சோதனை காலம்... ஓடுற டிரைன்லையே ..னுக்கு அடிச்ச நம்மை இப்ப இப்படி கொடுமை படுத்துராங்களேனு நொந்துகிட்டே மீண்டும் உக்கார்ந்தேன்.

ஒரு வழியா சிறிது நேரம் கழித்து பெல்ட் sign அணைய எழுந்திருச்சி அவசரமா toilet நோக்கி போனா அங்கன எனக்கு முன்ன ஒரு அஞ்சு பேர் லைன்ல நிக்குரானுங்க.


ஆத்திரத்த அடக்கினாலும் ..... அடக்க முடியுங்களா? ஒரு வழியா காத்திருந்து உள்ள போயி வெளியே வரத்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு எனக்கு. இனி ஊர் போய் சேரும்வரை பாத்ரூம் பக்கமே வரக்கூடாது ஒரு முடிவோட என் சீட்டுக்கு சென்று அமர்ந்தேன்.

சிறுது நேரத்தில் உணவு பரிமாறப்பட்டது. யப்பா சாமி ... அந்த துக்குநோண்டு எடத்துல முன்னாடி சாப்பாடு பிளேட்ட வச்சிக்குட்டு ஒன்னு ஒண்ணா எடுத்து எப்படித்தான் சாபிடறதோ... இதுல cheese-எ வெண்ணைன்னு எடுத்து சாதத்தில் கலந்ததும், bun-ஐ சாம்பாரில் நனைத்து சாப்பிட்டதும் தனி கதை. எப்படியோ ஒன்பது மணி நேர பயணம் முடிஞ்சு மீண்டும் ஏர்போர்ட் போய் சேர்ந்தபோது எனக்கு இந்த கேள்விகள் தான் எழுந்தது.

1. சசி தாரூர் economy class-அ cattle class-னு சொன்னது சரிதானோ?***
2. Economy கிளாஸ்-இல் வசதியா பயணம் செய்ய வாய்ப்பே இல்லையா?
3. First class இட வசதியை கொஞ்சம் குறைத்து economy class-இல் கொஞ்சம் கூடுதல் இட வசதியை ஏற்படுத்த கூடாதா?
4. இந்த பதிவ பார்த்தா சசி தாரூர் எனக்கு நன்றி சொல்வாரா?

***நான் வண்டிய தாங்க சொல்றேன் பயணிகள அல்ல.

என்னை பொறுத்தவரை நீண்ட தூர விமான பயணம் அதிலும் economy கிளாஸ்-இல் பயணம் செய்வது ரொம்ப கொடுமை. அதை மாட்டு வண்டியோடு ஒப்பிடுவது கூடவே கூடாது. மாட்டு வண்டி பயணம் என்பது ஒரு த்ரிலான சுகமான அனுபவம். அதை அனுபவித்தவர்களுக்கு தான் தெரியும்.

ரொம்ப படுத்திட்டேனோ? மொதோ பதிவு. நல்லா இருந்தா வாழ்த்துங்கள் வளர்கிறேன். குற்றம் குறை இருந்தால் எடுத்து சொல்லுங்கள் திருத்திக்கிறேன்.  நன்றி. 

- ஆதிமனிதன்

share on:facebook