Friday, February 26, 2010

அஜீத் ஒரு தும்பை மலர் - கருணாநிதி புகழாரம்.

திரைத்துறையினருக்கு கருணாநிதி வேண்டுகோள் -   கட்டுப்பாடு காக்க வேண்டும்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை.

..............அழகான குழந்தையை மேலும் அலங்கரித்து பள்ளிக்கு அனுப்பும் தாய், அதன் கன்னத்தில் ஒரு சிறிய கறுப்பு பொட்டு வைத்து அனுப்புவதைப் பார்க்கிறோமே, அதைப் போன்றதொரு பொட்டு, அந்த விழாவில் வைக்கப்பட்டதைப் பெரிதுபடுத்தி, அந்தப் பொட்டின் வண்ணத்தை முகம் முழுவதும் பூசிக்கொள்ளும், புரியாத குழந்தையைப் போல ஒரு நிகழ்ச்சி அமைந்துவிட்டது உண்மை தான்.


எல்லாரும் வாழ்த்துரைத்து அள்ளித் தெளித்த அன்பு மலர்களுக்கிடையே, அஜித் எனும் தும்பை மலரும் என் மேல் விழுந்து, அது மாசற்ற மலர் எனினும், எனக்கு நடந்த விழாவுக்கு எதிராக விழுந்த மலரோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. "இது தான் சமயம்' என சிலர், எனக்கு நடந்த விழாவை திசை திருப்ப முயன்றனர். இருக்கவே இருக்கின்றனவே சில பத்திரிகைகள், அவை அதைப் பூதாகரமாக உருவாக்க முனைந்தபோது, அதை மேடையேற விடாமல், ஒத்திகையிலேயே ஒரு வழி செய்து, முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியாக, தம்பி அஜித் என் னைச் சந்தித்து விளக்கமளித்தார். கடைசியில், பெரிதாக வெடிக்கப் போகிறது என எதிர்பார்த்தவர்களுக்கு புஸ்வாணமாகி விட்ட கதையாயிற்று. தாம் கண்ட கனவு கலைந்ததே என கைபிசைந்து நிற்கின்றனர். இனி எவர் ஒருவரும் கலையுலகில் சிறு கலகம் விளைவிக்கவும் முடியாது என, கட்டுப்பாடு காப்பார்களேயானால், அது, அவர்கள் நடத்திய விழா தந்த மகிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சியாக அமையும். இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இவர்  என்னதான்  சொல்ல  வருகிறார்? வஞ்ச புகழ்ச்சி அணி கேள்வி பட்டிருக்கிறேன். இது எந்த அணியை சாரும் என யாரும் கூறினால் அவர்களுக்கு என் நன்றி.
share on:facebook

Monday, February 22, 2010

Be Happy - "இதயம் காக்க" மகிழ்ச்சியாக இருங்கள்.

சமீபத்தில் சென்னை பள்ளி ஒன்றில் நடந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பு உரை ஆற்றிய இருதய மருத்துவ நிபுணர் Dr. V. சொக்கலிங்கம் அவர்களின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. மருத்துவராக பனி புரியும் ஒருவர் சுமார் ஒரு மணி நேரம் அங்கு கூடி இருந்த அணைத்து தரப்பினரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அளவு பேசியது எனக்கு பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது. இனி அவர் பேசியதிலிருந்து...


எப்போதும் நாம் கவலை இன்றி இருக்க வேண்டும். கவலைபடுவதால் ஒன்றும் நடந்து விட போவதில்லை. நீங்கள் ஈஸ் (ease) ஆகா இருந்தால் உங்களுக்கு disease வராது. 

என்னைப் பொறுத்தவரை நான் ஜாதி, மதம், மொழி ஆகியவற்றை மனிதர்களிடம் பார்ப்பதில்லை. நான் மனிதர்களை பிரித்துப் பார்ப்பது அவர்களின் ரத்த  வகையை வைத்துதான். எல்லோரும் விரும்பும் ரத்த வகை O+.  அப்போதுதான் நீங்கள் எல்லோருக்கும் உங்கள் ரத்தத்தை தானம் செய்யலாம். நான் உங்களுக்கு எல்லாம் சொல்ல விரும்புவது என்னவென்றால் நீங்கள் எந்த ரத்த வகையை சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் பீ பாசிடிவ் (B+) ஆக மாறுங்கள்.

இதை நான் சொல்லக்கேட்டு நீங்கள் எல்லோரும் கை தட்டுகிறீர்கள். எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. நீங்கள் கைதட்டுவதால் உங்களை சந்தோசமாக மட்டுமில்லாமல் நல்ல ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்கிறீர்கள். ஆம், நீங்கள் கைதட்டும் போது அதுவும் வேகமாக நல்ல சத்தம் வருமளவிற்கு கை தட்டும் போது அக்குபங்க்ச்சர் வேலை செய்கிறது. அதனால் உங்கள் இரு கைகள் வேகமாக அடித்துக் கொள்ளும் போது ஏற்படும் அதிர்வுகள் உங்கள் உடலில் சென்று உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது. (மீண்டும் கூடத்தில் பலத்த கரவொலி) இப்ப நீங்க கை தட்டுவது எனக்காகவா அல்லது உங்க ஆரோக்கியத்துக்காகவா? (மீண்டும் கூடத்தில் பலத்த கரவொலி) . 

ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பார்கள். உண்மையான பழமொழி அதுவல்ல. கல்லாமை, இல்லாமை, பொல்லாமை போன்றவைகளை நமக்குள் புக விட கூடாது என்பதைத்தான் அந்த காலத்தில் கூறி இருக்கின்றார்கள். அதை தான் நாம் தவறாக எடுத்துக்கொண்டோம். ஆமைக்கு நான்கு கால்கள் ஒரு தலை உள்ளது. அதற்கு ஆபத்து வரும்போது இவைகளை தன் ஓட்டினுள் இழுத்துக்கொள்ளும். அப்படி இழுத்துக் கொண்டபின் அதன் மேல் இந்த உலகமே விழுந்தாலும் அதற்கு ஒண்ணும் ஆகாது. அதே போல் நீங்களும் மேலே கூறிய தீமைகளையும் நீங்கள் இல்லாமல் ஆக்கிக்கொண்டால் உங்களை இந்த உலகில் யாரும் எதுவும் செய்ய முடியாது.

மனம், உணவு, உடற்பயிற்சி. இந்த மூன்றும் மிகவும் முக்கியம். இதை நீங்கள் சரியாக பழகிக்கொண்டால் நீங்கள் குறைந்தது 125 வருடங்கள் இந்த உலகில் வாழலாம். உங்கள் உயிர் குறைந்தது 100 வருடங்கள் வாழ தகுதி கொண்டது. என்னுடைய அலுவலகம் 8 வது மாடியில் இருக்கிறது. நான் எப்போதும் மாடிப்படிகளை தான் உபயோகிப்பேன். லிப்ட்டை உபயோகப்படுத்த மாட்டேன். ஒரு முறை புதிதாக வேலைக்கு சேர்ந்த லிப்ட் ஆபரேடர் என்னை பார்த்து, "சார், ஏன் சார் நீங்க லிப்ட்ல வரமாட்டீங்கிறீங்க? இதுல வந்தா சீக்கிரம் நீங்க மேல (மாடிக்கு) போகலாம் சார்" என்றார். நானும் சரி என்று கூறினேன். ஆமாம் லிப்ட்ல போனா சீக்கிரம் மேல (இறந்து) போகலாம் என்று (பலத்த சிரிப்பு). 

நான் 41 வருடங்களாக டாக்டராக தொழில் செய்து வருகிறேன். இன்னும் எவ்வளவு காலம் நீங்கள் இந்த தொழில் புரிவீர்கள் என சிலர் கேட்டார்கள். என்னைப் பொறுத்தவரையில் நான் கடைசி வரை மருத்துவம் பார்ப்பேன். யாரும் வயதாகிவிட்டதே என்று சும்மா இருக்காதீர்கள். உங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டே இருங்கள். நான் வேலை செய்துகொண்டிருக்கும்போதே இறக்க வேண்டும் என்பதே என் ஆசை.

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் நடங்கள். வேகமாக நடங்கள். காய்கறிகளை தோல் உரிக்காமல் சாப்பிடுங்கள். அதில்தான் எல்லா சத்துக்களும் இருக்கிறது. நம் வீட்டில் தாய்மார்கள் காய்கறிகளில் உள்ள எல்லா தோலையும் எடுத்துவிட்டு தான் சமைக்கிறார்கள். அந்த தோல்களை  எல்லாம் மாடுகளுக்கு போடுகிறார்கள். அதை சாப்பிட்டுவிட்டுத்தான் மாடுகள் புஷ்டியாக இருக்கிறது. இதை நான் ஒரு முறை சொன்னபோது ஒருவர் எழுந்து சார் பலா பழத்தை  எப்படி தோலுடன் சாப்பிட முடியும் என கேட்டார். சாப்பிடமுடிந்த  காயையையோ பலத்தையோ தோலுடன் சாப்பிடுங்கள் என கூறினேன். 

எல்லோரும் சந்தோசமாக இருங்கள். நேற்று என்பது உடைந்த மண் பானை போன்றது. அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. நாளை என்பது மதில் மேல் பூனை போன்றது. அடுத்து என்ன நடக்கும் என்றே தெரியாது. ஆதலால் இன்றைய பொழுதை நல்ல விதமாக செலவழித்து நிம்மதியாக வாழுங்கள்.
நீங்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் வாழ வேண்டுமானால் மூன்று பேரிடம் செல்லக்கூடாது. போலீஸ்காரர், வக்கீல் மூன்றாவதாக டாக்டர். இவர்களிடம் போவதால் உங்கள் உடல் நலமும் கெடும் (அலைந்து அலைந்து) கையில் இருக்கும் காசும் கரையும்.

என்னடா இவரே ஒரு டாக்டரா இருந்து கொண்டு டாக்டரிடம் போகாதேன்னு சொல்றாரேன்னு நினைக்காதீங்க. என்னுடைய அனுபவத்தை வைத்து ஆங்கிலத்தில் "MIND YOUR HEART" என்றும் தமிழில் "இதயம் காக்க"   என்றும் ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். அதை வாங்கி படியுங்கள். படித்து முடித்தபின் என்னிடம் வர மாட்டீர்கள்.

டிஸ்கி: Dr. V. சொக்கலிங்கம் அவர்களின் முழு பேச்சின் ஒலி நாடா என்னிடம் இல்லை. என் மனதில் பதிந்ததை அப்படியே இங்கு பதிந்துள்ளேன். தவறுகள் இருப்பின் அனைவரும் மன்னிக்கவும். நன்றி டாக்டர் சார்.
share on:facebook

Thursday, February 18, 2010

"எங்க வாத்தியார்"

"முகத்துல மட்டும் காயம் படாம பாத்துக்குங்க. மத்தபடி உசுரு ஒன்ன மட்டும் விட்டுட்டு என்ன வேணாலும் பண்ணிக்குங்க சார் இவன", இப்படி சொன்னது வேறு யாரும் இல்ல. சாட்சாத் எங்க அப்பாதான். சொன்னது என்னோட பள்ளி வகுப்பாசிரியர் கிட்ட. அதுக்காக எங்க அப்பாவ பத்தி உடன நீங்க தப்பா நினைச்சிடாதீங்க. இன்னிக்கு நான் நல்லா இருக்கிறேனா அதுக்கு அவர்தான் காரணம்.

இப்ப காலம் ரொம்ப மாறிடுச்சு. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்குமான இடைவெளி ரொம்ப கொறஞ்சிடுச்சு. என் பொண்ணோட டீச்சர் கேள்வி கேட்டுட்டு பசங்க பதில் சொல்லும் முன் டீலா நோ டீலானு கேக்குறாங்களாம். LKG படிக்கிற புள்ளையோட வீட்டு பாட விபரத்தை பெற்றோருக்கு SMS பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. மதிய இடைவேளையில் மாணவர்களின் சாப்பாட்டை பகிர்ந்து கொள்ளும் ஆசிரியர்கள், "உங்க அம்மா இத எப்படி பண்றாங்கன்னு கேட்டுட்டு வரியான்னு" ங்கற அளவிற்கு அவர்களிடையே நெருக்கம் உள்ளது.

அப்பலாம் குறிப்பிட்ட சில வாத்தியார் கிளாசுக்கு வறாருணா சில பசங்களுக்கு ஜன்னியே வந்துடும். ஒவ்வொரு வாத்தியாரும் ஒரு டிபரன்ட் ஸ்டைல் ஆப் பணிஷ்மன்ட் வச்சிருப்பாங்க. கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் மாதிரி அடி வாங்கி வாங்கி எங்கள் கரங்கள் சிவந்து போயிருக்கும்.

எங்களுக்கு வரலாறு எடுத்த ஆசிரியர்  அந்த மாதிரியெல்லாம் அடித்து அவர் கையை புண்ணாக்கி கொள்ள மாட்டார். யாராவது தப்பு பண்ணினால் அவனுக்கு பக்கத்தில் உள்ளவனை அவனுக்கு ஓங்கி ஒரு குட்டு வைக்க சொல்லுவார். அவன் பக்கத்தில் உள்ளவன்  நண்பனாச்சேனு பஸ்ட்டு மொதுவாதான் குட்டுவான். இதை கவனிக்கும்  ஆசிரியர் "ஏய், எண்ணா குட்டுற? இன்னும் பலமா வைன்னு" கத்துவார். அடுத்த தடவை சற்று வேகமாகவே குட்டு வைப்பான் அவன். அதிலும் சமாதனமாகாத ஆசிரியர் இப்போ தவறு செய்த மாணவனை அழைத்து உனக்கு எப்படி குட்டுநானோ அதே மாதிரி அவன குட்டுனு  சொல்வார். இவன் குட்டியதுதான் தாமதம். தவறு செய்யாத மாணவனுக்கு சும்மா B.P. எகிறிடும். இவன் தப்பு செய்யாததற்கு   நாம ஏன் குட்டு வாங்கனும்னு செம கடுப்புல இருப்பான். இப்போ மீண்டும் தவறு செய்த மாணவனுக்கு பலமா குட்ட வைக்க சொல்லுவார். இவன் எல்லா கடுப்பையும் சேர்த்து சும்மா "நங்குன்னு" குட்டுவான் பாருங்க. அப்பா, குட்டு வாங்கியவன் அலறும் அலறரில் பில்டிங்கே சும்மா அதிரும்.

இன்னொரு தமிழ் புலவருக்கு சட்டையின் மேல் பட்டன் போடாவிட்டால் அவன் உடம்புல துணியே போடாத மாதிரி டென்சன் ஆகிடுவாரு. அவருக்கு 9 பெண் பிள்ளைகள்(நம்புங்கள்). அதனால் எல்லோரையும் வாடி போடின்னு தான் பேசுவார். கூடவே எங்கள் ஊரின் அனுமதிக்கப்பட்ட கெட்ட  வார்த்தை "கம் ...ட்டி" ஒன்றையும் சேர்த்துக் கொள்வார். மணிமேகலை பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போதே "பட்டன போட்றி  கம்...ட்டி" ஒரு சவுண்டு உடுவாரு.

நான் ரொம்ப நாள் வாட்ச் கட்டாததிற்கு ஒரு காரணம் எங்களின் 9 வகுப்பாசிரியர். அவருக்கு கோவம் வந்தால் முதலில் அவர் வாட்சை கழட்டி மேஜை மீது வைத்து விட்டு தான் கச்சேரியே ஆரம்பிப்பார். அவரின் ஸ்டைல் அடித்து ஓய்ந்து விட்டு மீண்டும் ஒரு இடைவெளி விட்டு திரும்பவும் வந்து அடிப்பது (இப்பவும் வாட்ச் கழட்டப்படும்). இவர் வகுப்பாசிரியரா வரகூடாதுன்னு மொதோ வருசமே எல்லோரும் மாரியாத்தாளுக்கும், மேரிக்கும் வேண்டிக்குவாங்க(எங்கள் பள்ளி ஒரு கிருஸ்தவ பள்ளி).

ஆனா இவ்ளோ அடி வாங்கியும் நாங்க திருந்துவோம்றீங்க. ஹூ ஹூம். மீண்டும் அதே சண்டித்தனம். மீண்டும் அடிவாங்குதல். அதல்லாம் ஒரு காலம். அப்படியெல்லாம் கண்டிப்பான ஆசிரியர்கள் இருந்து அவர்களிடத்தில் படித்ததினால் தானோ என்னவோ இப்ப நாங்க எல்லோரும் நல்ல நிலமையில இருக்கோம். இப்பவும் மேலே கூறிய ஒரு சில ஆசிரியர்களை சந்தித்து அவர்களிடம் நான் ஆசி வாங்கும்  பழக்கம் உண்டு.

"அடித்து வளக்காத புள்ளையும் முறுக்கி வளக்காத மீசையும் நல்லா வராது" எங்கேயோ கேட்ட பழமொழி.

நீங்க யாரும் இப்படி அடி வாங்கி இருக்கீங்களா? வாங்கலனாலும் பறவையில்லை. பதிவு புடிச்சிருந்தா வோட்ட போட்டுடுங்க. நன்றி.

படம் உதவி: srimgr.com
share on:facebook

Saturday, February 13, 2010

My name is Khan - ஒரு சிறப்பு பார்வை


My name is Khan - சுருக்கமாக "MNIK". இந்த "பெயர்" தான் கடந்த சில நாட்களாக வட இந்திய அரசியல் மற்றும் பாலிவுட் திரையுலகில் அதிகமாக அடிபடும் செய்தி. MNIK - இசுலாமியராகவும், இசுலாமிய பெயரை கொண்டிருப்பதாலும் ஒருவர் படும் கஷ்டங்களையும் வேதனைகளையும் வெளி உலகுக்கு எடுத்துக்காட்டும் ஒரு திரைப்படம் என்பது அனைவரும் அறிந்ததே. 

இதில் ஓரளவு உண்மையும் கூட. குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இசுலாமிய அடையாளங்கள் இருந்தால் அவர்கள் மற்றவர்களை விட சற்று கூடுதல் சோதனைகளுக்கு உட்படுத்தப் படுகிறார்கள். இதை என் இசுலாமிய நண்பர் ஒருவர் என்னிடம் மிகவும் வருத்தப்பட்டு கூறியுள்ளார்.

இதை பற்றி நிறைய பேர் பேசி, எழுதி ஆகிவிட்டது. நான் இங்கு கூற வருவது இதையெல்லாம் விட அதிக கொடுமைகளை உள்நாட்டிலும் (இந்தியாவிலும்) வெளிநாட்டிலும் ஒரு இனத்தில் பிறந்த காரனத்திற்காகவே  எங்கு சென்றாலும் இரண்டாம் தர குடிமகனாகவும் அடித்தும் விரட்டப்படும் "தமிழ்" இன மக்களை பற்றி.

இன்று MNIK திரைப்படத்திற்கும் அதில் நடித்துள்ள  நடிகருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. திரைப்படம் வெளியாகியுள்ள திரை அரங்குகளுக்கு Z+ பாதுகாப்பு போடப் பட்டிருப்பதாக செய்திகள் வருகிறது. "நான் ஷாருக்கான் ரசிகன்" என முதல் காட்சி டிக்கட்டை காண்பித்தவாறு ஒரு மாநிலத்தின் உள் துறை அமைச்சர் போடோவுக்கு போஸ் கொடுக்கிறார். அதெல்லாம் சரிதான். ஆனால் சுமார் எட்டு மாதங்களுக்கு முன் பக்கத்தில் உள்ள தேசத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக ஈவு இரக்கமில்லாமல் தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் படு கொலை செய்யப்பட்டர்களே. அப்போது MNIK என்ற ஒரு திரைப்படத்திற்கு தற்போது கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு பாதியாவது கொடுத்திருப்பார்களா?

கொலைக்கு நிகராக கொலை முயற்சியும் சட்டத்தில் கருதப்படுகிறது. ஏனெனில் கொலை நடந்திருக்காவிடினும் அப்படி ஒரு முயற்சி கொலையில் முடிந்திருந்தால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்  என்ற காரணத்தினால். நம் முன்னாள் பிரதமரை ஒரு இனத்தை சேர்ந்த குழு ஒன்று கொன்றுவிட்டது என்ற ஒரே காரணத்திற்க்காக ஒரு இனத்தையே முழுவதுமாக அழிக்க நினைத்த இனவெறி அரசுக்கு துணை போனபோது இப்போது ஒரு திரைப்படத்திற்கு கொடுக்கும் பாதுகாப்பை, முக்கியவத்துவத்தை  ஒரு இனப் பிரச்சனையில்  நம் நாட்டு அரசியல்வாதிகளோ பத்திரிகை உலகமோ சிறிதளவாவது கொடுத்திருக்குமா?

அதே இலங்கையில் நம் பிரதமரை எங்கும் நிகழாத நிகழ்வாக ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்கும்போது துப்பாக்கி கட்டையால் அந்நாட்டு ராணுவ வீரன் ஒருவன் தாக்கினானே. அது ஒரு கொலை முயற்சிதானே? ஒரு நாட்டு ராணுவ வீரன் ராணுவ அனுவகுப்பின் போது கொலை செய்ய முயற்சிக்கிறான் என்றால் அதுவும் ஒரு நாட்டின் இளைய பிரதமரை, அந்நாட்டு ராணுவத்திற்கு அதில் தொடர்பு இல்லாமல் இருக்குமா? அந்நாட்டு ராணுவத்திற்கு தொடர்பு இருப்பின் அந்நாட்டு அரசுக்கு தொடர்பு இல்லாமல் இருக்குமா? அப்படியானால் அதற்கு என்ன தண்டனை கொடுத்தார்கள்? அந்நாடு ஒரு இனவாத அரசால் பல காலமாக ஆளப்பட்டு வருகிறது. அப்படியானால் அந்த இனத்திற்கு என்ன தண்டனை?

இலங்கை ஒரு இறையாண்மை நாடு. அந்நாட்டு பிரச்சனையில் நாம் தலையிடமுடியாது என மிகவும் வசதியா ஒரு காரணத்தை கூறினார்கள். ஏன் பக்கத்தில் உள்ள மாநிலத்தில் பல வருடங்களாக தமிழர்கள் தாக்கப்படுகிறார்களே. தமிழர்களின் உயிரும் உடமைகளும் கலவரங்களின் போது சூரையாடப்படுகின்றனவே. அவற்றை தடுக்க எந்த இறையாண்மை உங்களை தடுக்கிறது? தமிழ் நாட்டிலிருந்து எந்த தீவிரவாதி அங்கு சென்று யாரை கொலை செய்தான் அம்மாநில தமிழர்களை பழி தீர்க்க?

தங்கள் மாநிலத்தை இரண்டாக பிரிக்கும் பிரச்சனையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் மதகுகளை உடைத்து சேதப்படுத்தினார்களே அங்கு யார் இனவெறியை தூண்டியது? இதற்கெல்லாம் ஒரே காரணம் தமிழன் என்றால், தமிழர் பிரச்னை என்றால் கேள்வி கேட்க ஆளில்லை என்ற நிலை தான். 

"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" - தமிழகத்தை தாண்டி இதை சொல்ல முடியுமா நம்மால் இப்போது?

வழக்கம் போல் உங்கள் பதிலுரையையும், வாக்கையும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் - My name is Aathimanithan.
share on:facebook

Tuesday, February 9, 2010

சென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.



சென்னை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும். இப்படி யாராவது சொல்லிருப்பாங்கன்னு நீங்க நினைச்சிங்கனா சாரி.

மும்பையில் ஆட்டோ ஓட்ட கண்டிப்பாக மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என ஒரு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சென்னையில் ஆட்டோ ஓட்டும் நண்பர்களுக்கு தமிழ் தெரியவில்லை என்றாலும் எங்களுக்கு கவலையில்லை. மீட்டருக்கு மேல் கேட்காமலும், சூடு வைக்காமலும் நீங்கள் ஒரிய மொழி என்ன? உலகத்தில் யாருக்குமே புரியாத மொழி பேசினாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். ஆனா ஆட்டோ மீட்டர் போட்டு அத சூடு வைக்காம நீங்க ஒட்டுனாலே உங்களுக்கு "சிறந்த தமிழன்" பட்டம் தரவே நாங்க காத்துக்கிட்டு இருக்கோம்.

நீங்க தயாரா ஆட்டோ அன்னாச்சிகளே! இனி...


சென்னை என்றாலே இந்தியாவின் பிற மாநிலத்தவர்களுக்கு அலறல் ஏற்படுத்தும் ஒரே விஷயம் நம்மூர் ஆட்டோ கட்டணம் தான். கூவம் கூடுதல் பாயிண்ட். ஆனா இப்பல்லாம் அதுக்கு அதிக எபக்ட் இல்ல. எல்லாதான் அப்பாட்மன்ட்டா  மாறிடுச்சே. நம்ம சென்ட்ரல் ஸ்டேசனிலிருந்து எக்மோருக்கு போக ஒரு மணிநேரம் சுற்றி 300 ரூபாய் வசூலித்ததாக என் ஹைதரபாத் நண்பர் ஒருவர் என் கையில் சத்தியம் அடிக்காத குறையாக கூறியபோது எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

சமீபத்தில் வேலை நிமித்தமாக இரு முறை குறுகிய இடைவெளியில் மும்பை செல்ல நேர்ந்தது. தற்போது விமான பயணம் என்பது எப்படியெல்லாம் மாறி இருக்கிறது என்பதை பிறகு பார்போம். அதற்கு முன் நான் இங்கே குறிப்பிட விரும்புவது மும்பையில் எனக்கு பிடித்த சில பொது கலாசாரம் மட்டும் ஆட்டோ ஒடுனர்களை பற்றி.

கடந்த மாத துவக்கத்தில் நான் மும்பை சென்று இறங்கிய போது நான் செல்ல வேண்டிய இடத்தின் முகவரி மட்டுமே என்னிடம் இருந்தது. தமிழனாய் பிறந்ததினால் இந்தியும் தெரியாது. விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தவுடன் Auto Bay (ஆட்டோக்கள் வரிசையாக வந்து நிற்கும் இடம்) நோக்கி சென்றேன். வரிசையாக ஆட்டோக்கள் வந்து கொண்டிருக்க பயணிகள் போலீசோ செக்கூரிடியோ யாரும் இல்லாமல் தாங்களாகவே ஒரு வரிசை அமைத்து அதில் நிற்க ஆரம்பித்தார்கள்.

மும்பையில் எனக்கு பிடித்த ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் பொதுவாக மக்கள் ஒரு கட்டுக்கோப்புடன் இருப்பார்கள். பேருந்து நிறுத்தங்களில் சிறுது கூட்டம் கூடி விட்டால் போதும் உடனே ஒரு வரிசையை தாங்களே ஏற்படுத்தி கொள்வார்கள். நம்ம ஊர் மாதிரி உடலில் பலம் உள்ளவன் முண்டி அடித்து முன்னே செல்ல முடியாது.

அதே போல் பொதுமக்களை பார்த்து ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் பயப்படுகிறார்கள். ஒரு பிரச்னை என்றால் மக்கள் உடனே கூடி விடுகிறார்கள். ஒரு பயணிக்கும் ஆட்டோ ஒட்டுனர்க்கும் தகராறு என்றால் உடனே மற்ற பயணிகளும் நமக்காக நியாயம் கேட்க வருகிறார்கள். நம் ஊரில் ஆட்டோ ஓட்டுனர்கள் என்றால் ஒரு ரவுடி போல் தோற்றத்தை உருவாக்கி விட்டார்கள். இதற்கு யார் முழு பொறுப்பு என தெரியவில்லை. ஆனால் சினிமாவுக்கும் சில தவறான ஆட்டோ ஓட்டுநர்களுக்கும்  நிச்சயம் அதில் பங்கு உண்டு.

இதையெல்லாம் நினைத்து நான் ஆச்சிரியாப்பட்டுக் கொண்டிருக்கும்போதே  வரிசையில் எனது முறை வந்தது. எங்கு செல்ல வேண்டும் என்று கூட என்னிடம் ஆட்டோ டிரைவர் கேட்கவில்லை. ஏறி உக்கார்ந்தவுடன் மீட்டர்  போட்ட பின்தான் எங்கு செல்ல வேண்டும் என கேட்டார், அந்த ஆட்டோ டிரைவர். இடத்தின் பெயரை மட்டும் கூறினேன். வண்டி சல்லென பறந்தது.

பொதுவாக மும்பையில் ஆட்டோ ஓட்டுனர்கள் பயணிகளை ஏமாற்றுவதில்லை. 99% சதவிகிதம் மீட்டர் போட்டு தான் ஓட்டுகிறார்கள். அதேபோல் மீட்டரை சூடு வைப்பது என்றால் என்னவென்றே அவர்களுக்கு தெரிவதில்லை.

அதேபோல் உள்ளூர் ஆளா, வெளியூர் ஆளா என்று என்று தெரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் பேரம் பேசுவதில்லை. ஏறி உட்கார்ந்தவுடன் மீட்டர் போட்டு விடுகிறார்கள். அதே போல் மினிமம் சார்ஜே மட்டுமே ஆகியிருந்தாலும் கூட மறு பேச்சு பேசாமல் அதையே வாங்கிக்கொள்கிறார்கள். "போட்டு கொடுங்க சார்" சமாசாரத்தை அங்கு காண்பது அரிது.  சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் நான் மும்பை சென்றிந்தபோது  இன்னுமொரு ஆச்சிரியத்தை கண்டேன். மீட்டர் இருபது ரூபா காண்பித்தது என்றால் நாம் இருபது ரூபாயை எடுத்து நீட்டினால் ஆட்டோ டிரைவர் தன சட்டை பையை துளாவுவார். அதாவது நாம் மீட்டர் சார்ஜாக எவ்வளவு கொடுத்தாலும் நமக்கு அவர்கள் ஒரு ரூபாயை திருப்பி கொடுத்து விடுவார்கள். ஆனால் தற்பொழுது அப்பழக்கத்தை பார்க்க முடியவில்லை.

இத்தனைக்கும் மும்பையில் எப்பொழுதும் ஆட்டோவிற்கு கிராக்கிதான். சென்னையில் நீங்கள் பேருந்து நிலையத்திலிருந்தோ புகைவண்டி நிலையத்திலிருந்தோ இறங்கினால் உடனே உங்களை ஒரு நாலைந்து ஆட்டோ ஓட்டுனர்கள் சூழ்ந்து கொண்டு எங்க சார் போவனும்,  எங்க சார் போவனும் என்று மொய்த்து விடுவார்கள். ஆனால் மும்பையில் பெரும்பாலும் ஆட்டோக்களுக்கு கிராக்கிதான். அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை(குறிப்பாக வேலைக்கு செல்லும்/திரும்பும் நேரங்களில்). 

சென்னையில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல ஒவ்வொரு ஆட்டோ டிரைவரும் நேரத்திற்கு தகுந்தாற்போல் ஒரு ரேட் சொல்லுவார்கள். காலை என்றால் கால நேரம் சார், மதியம் என்றால் மதியான வெயிலு சார், மாலை நேரத்தில், என்ன ட்ராபிக் பாரு சார், இரவு நேரத்தில் ராத்திரி நேரம் சார்னு வகை வகையா காரணம் கூறுவார்கள்.

ஆனால் மும்பையில் இரவு நேரமானாலும் அவர்கள் இஷ்டத்துக்கு கட்டணம் கேட்பதில்லை. எல்லோரும் ஒரே மாதிரியாக ஒரு அட்டவணை வைத்து இருக்கிறார்கள். அதில் உள்ளபடிதான் கட்டணம் வசூலிக்கிறார்கள். உள்ளூர் வெளியூர் ஆட்கள் பார்த்து ஏமாற்றுவதில்லை.

இதல்லாம் பார்த்தாவது திருந்துங்கப்பா. மீண்டும் ஒருமுறை...

சென்னையில் ஆட்டோ ஓட்டும் நண்பர்களுக்கு தமிழ் தெரியவில்லை என்றாலும் எங்களுக்கு கவலையில்லை. மீட்டருக்கு மேல் கேட்காமலும், சூடு வைக்காமலும் நீங்கள் ஒரிய மொழி என்ன உலகத்தில் யாருக்குமே புரியாத மொழி பேசினாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். ஆனா ஆட்டோ மீட்டர் போட்டு அத சூடு வைக்காம நீங்க ஒட்டுனாலே உங்களுக்கு "சிறந்த தமிழன்" பட்டம் தரவே நாங்க காத்துக்கிட்டு இருக்கோம்.

கைவிட்டுடாதிங்க ஆட்டோ அன்னாச்சிகளே!

நம்மூர்ல ஆட்டோ அவஸ்தையை அனுபவிக்காதவர்கள் இருக்க முடியாது. நீங்களும் அனுபவிச்சதா நினைசீங்கனா  அதுக்கு பரிகாரமா ஒரு வோட்ட போட்டுடுங்க. நன்றி.
share on:facebook