Wednesday, June 13, 2012

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு...


ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு...

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு...இதற்கு பல அர்த்தங்கள் உண்டு. என்னடா ரொம்ப நாளா காணோம்னு சில பேர் நினைத்திருக்கலாம். கவனிக்கவும், சில பேர் தான். ஒன்னும் இல்லீங்க. கொஞ்ச வருடங்கள் கழித்து மீண்டும் தாய் தமிழகத்திற்கு பயணம் ஆக கடந்த ஒரு மாதமாக அதற்க்கான வேளைகளில் மூழ்கியதால் பதிவுகள் எழுத முடியவில்லை. ஆனால், சரக்கு நிறைய இருக்கு.

என்னதான் சொல்லுங்க, இந்தியா திரும்புறோம் என்ற எண்ணம் வந்தாலே மனதிற்குள் ஆயிரம் பட்டாசுகள் வெடிக்கின்றன. சிம்பிளா சொல்லனும்னா என்னதான் மிக பெரிய வசதியான வீட்டிற்கு கல்யாணம் ஆகி போனாலும் பெண்களுக்கு ஓலை குடிசை வீடானாலும் தங்கள் தாய் வீட்டிற்கு போக போகிறோம்னு ஒரு எண்ணம் வந்தாலே எப்படி ஒரு சந்தோசம் பொங்கும். அது போல் தான் எனக்கும்.

சில நாட்களுக்கு முன், எகிப்த்து நாட்டிலிருந்து இங்கு வந்து செட்டில் ஆகி இருக்கும் நண்பர் ஒருவர் நான் இந்தியா திரும்பும் செய்தி அறிந்து என்னிடம் இப்படி கேட்டார். நீங்கள் ஏன் இந்தியா திரும்புகிறீர்கள். அங்கு என்ன இருக்கிறது? எங்கள் நாட்டை போல் அங்கும் ஊழல், லஞ்சம் என்று தானே மக்கள் கஷ்டப் படுகிறார்கள், நீங்கள் ஏன் மீண்டும் அங்கே செல்ல வேண்டும் என நினைக்கிறீர்கள் என்று? அதற்க்கு நான் சொன்ன பதில். அட போடா, நீ எப்படி இங்கு வந்தாய்? ஒன்று உங்கள் நாட்டிலிருந்து உன்னை விரட்டி அடித்திருப்பார்கள், அல்லது நீயாக உன் நாட்டை பிடிக்காமல் இங்கு ஓடி வந்திருப்பாய். எனக்கு அப்படியில்லை. நாங்களாக இங்கு விருப்பப்பட்டு வருகிறோம். அதே போல், மீண்டும் நாங்களாக அங்கே விருப்பப்பட்டு போகிறோம். உங்கள் நாட்டிற்கும் எங்கள் நாட்டிற்கும் நிறைய வேறு பாடு உண்டு. முதலில் அதை தெரிந்து கொள் என்று.

ஆனா, சும்மா இல்லீங்க. அமெரிக்கா போன்ற நாடுகளில் சில காலம் வாழ்ந்து விட்டு மீண்டும் இந்தியா வருவதென்று. அதை பல முறை நான் செய்திருக்கிறேனாக்கும். நம்ம ஊர் மாதிரி இல்ல ஒரு வீட்டை காலி செய்து விட்டு அமெரிக்காவிலிருந்து திரும்புவது என்பது. அதை பற்றி நிறைய பதிவுகள் காத்திருக்கின்றன.

முதல் பாராவில் சொல்லி இருந்தது போல், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு...இதற்கு பல அர்த்தங்கள் உண்டு. அந்த வகையில், அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தபின் உள்ள தற்போதைய ஒரே கவலை, டி வியில் நிகழ்சிகள் பார்க்கும் போது அதுவும் நல்ல நிகழ்சிகள் என்றால், ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு...என்று போட்டு கொல்வார்களே அதை எப்படி பொறுத்துக் கொள்வது என்று தான். இங்கும் அப்படிதான். இருந்தாலும் தமிழ் தொலை காட்சி நிகழ்சிகளை பெரும்பாலும் நெட்டில் பார்க்கும் போது அதை அப் லோட் செய்யும் புண்ணியவான்கள் நடுவில் ஓடும் அனைத்து விளம்பரங்களையும் நீக்கி தொடர்ச்சியாக நிகழ்சிகளை பார்க்கும் அளவு செய்து விடுவார்கள். இம்ம், இனி உலக தொலைகாட்சிகளில் முதல் முறையாக என்று அவ்வப்போது கேட்டு தான் ஆக வேண்டும்.

share on:facebook