Tuesday, March 29, 2011

பேர் ராசி: அம்மாவாசை அம்பானி ஆக முடியுமா?



தஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்திற்க்கு அருகில் உள்ள சிறிய கிராமம் எங்களுடையது. நான் சிறு வயதில் அங்கு செல்லும் போதெல்லாம் கிராமத்தில் உள்ள சிலரின் பெயரைக்கேட்டு ஆச்சர்யப்படுவேன்.  இருக்காதா பின்னே? அம்மாவசை, லைட்டு, பஞ்சாயத்து, தஞ்சாவூரான், பட்டாளத்தார் என்று விதவிதமாக பெயர்கள் அங்கு உண்டு. சில அவர்களின் உண்மையான பெயர். சில காரணப்பெயர்கள்.

அம்மாவாசை: நீங்கள் நினைப்பது போல் அவர் கறுப்பானவர் இல்லை. ஆனால் அவர் அம்மாவாசையன்று பிறந்ததினால் அப்பெயர்.

லைட்டு: இவர் எப்போதுமே கையில் (லாந்தர்) விளக்குடன் தான் இருப்பார்.

பஞ்சாயத்து: யாருக்கு என்ன பிரச்னை என்றாலும் தானாக ஆஜராகி சமாதானம் பேசுபவர்.

தஞ்சாவூரான்: இவர் தஞ்சை பெரிய ஆஸ்பத்திரியில் வந்து பிறந்ததால் இப்பெயர். 

பட்டாளத்தார்: இவர் பட்டாளத்தில் (ராணுவத்தில்) இருந்து ரிடையர் ஆனவர்.

இவர்கள் யாரும் எந்த காரனத்திற்க்காகவும் தங்கள் பெயர்களை  மாற்றிக்கொள்ளவில்லை. ஏனென்றால் ஒன்று அவர்களின் பெற்றோர்கள்  வைத்த பெயர். இல்லை மற்றவர்கள் பாசத்துடன் வைத்த பட்டப்பெயர்.  கிராமங்களில் இன்றும் யாரும் பாஷனுக்காகவோ ராசி பார்த்தோ பெயர் வைப்பதில்லை. பெரும்பாலும் குழந்தைகளின் தாத்தா பாட்டி பெயரை அல்லது குலதெய்வத்தின் பெயரை வைத்துவிட்டு பின்பு செல்லப்பெயராக ஒரு பெயரை கூப்பிடுவதற்கு வைத்துக்கொள்வார்கள். பின்னே மாமனார்  மாமியார் பெயரை சொல்லி கூப்பிட முடியாதல்லவா. சிலர் இதற்க்கென்றே  திட்டும்  போது மட்டும் உண்மையான பெயரை சொல்லி திட்டுவார்கள்.

அதேபோல் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் எங்கு பார்த்தாலும் 'நீலகன்டர்கள்' நீக்க மற நிறைந்து இருப்பார்கள். காரணம் அங்குள்ள பிரசித்தி பெற்ற நீலகண்ட சுவாமி கோவிலும் அங்குள்ள கடவுளும்.  பள்ளிகளில் ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் இருந்தால் அவர்களில்  15 பேரின் பெயர்கள் நீலகண்டன். இனிஷியலும் "N" ஆகத்தான் இருக்கும்.  நினைத்து பாருங்களேன் வாத்தியாரின் கஷ்டத்தை! 

ஆனால் இன்று நல்ல நிலையில் உள்ளவர்கள் கூட தங்கள் பெற்றோர் வைத்த பெயரை பெயர் ராசி, நூமரலாஜி என பல காரணங்களுக்காக மாற்றிக்கொள்கிறார்கள். T. ராஜேந்தர் விஜய T ராஜேந்தராகவும்,  வை. கோபால்சாமி வைகோவாகவும் மாறிவிட்டார்கள். என்னை பொறுத்த   வரையில் பெற்றோர் வைத்த பெயரை  மாற்றிக்கொள்வதில் எனக்கு ஏற்புடையதல்ல. நம்மை இந்த  உலகத்திற்கு  அடையாளப்படுத்தியதே  அவர்கள் தான். அந்த அடையாளத்தை மாற்றிக்கொள்ள நமக்கு உரிமை எது?

இந்த பெயர் ராசி, நூமராலாஜி போன்றவைகளால் இன்னதுதான் பெயர் வைக்கவேண்டும் என்ற வரைமுறையே இல்லாமல் போய்விட்டது. என்னுடைய நண்பர் ஒருவரின் பெயர் ஆங்கிலத்தில் 'Subramoney'.  நம்ப முடிகிறதா? அதே போல் அர்த்தம் தெரியாத பெயர்களும் நிறைய உண்டு.

பெயரில் என்னங்க இருக்கு? போன தலைமுறை வரை டாடா பிர்லா என  கூறிக்கொன்டிருந்தவர்கள் இப்போது இவர் என்ன 'பெரிய அம்பானியா'  என கூற ஆரம்பிக்கவில்லையா?  இத்தனைக்கும் மூத்த அம்பானி ஒரு கூலியாகத்தானே தன் வாழ்க்கையை  ஆரம்பித்தார்? அம்பானி என பெயர்  வைத்ததால் அம்பானியாகவில்லையே?       

எங்கள் வீட்டை பொறுத்தவரையில் எல்லா பெயர் தேர்வுகளும் எங்கள்  அம்மாவோ அப்பாவோ அல்லது மூத்தவர்கள் செய்த தேர்வுதான். சில நேரங்களில் எங்கள் குடும்பத்தில் மருமகள்களாக வந்தவர்களின்   பெயர்களுக்குள்ளும்  ஒரு ஒற்றுமை ஏற்பட்டது. சில பெயர்கள் இதோ...(என்னுடைய பெயர் மிகவும் அரிதானது. 'Facebook' ல் மொத்தம் 7  பேர்தான் என்னுடைய  பெயரில் உள்ளார்கள். சென்னை தொலைபேசி  டைரக்டரியில் மொத்தம் 2  பேர்தான். அதனால் சஸ்பென்ஸ்). 

சுதந்திரா தேவி (சுதந்திர தினத்தன்று பிறந்தவர்)
மிர்னாலினி தேவி
யாழினி தேவி
மணி வண்ணன்
முகில் வண்ணன்
எழில் வண்ணன்
விஜய லக்ஷ்மி
வீர லக்ஷ்மி
விஜய நிலா
விஜய பாரதி

அம்மாவாசை ஒரு நாள் அம்பானி ஆகிவிட முடியும். ஆனால் சச்சின் என்று பெயர் வைப்பதினால் மட்டும் ஒருவன் சச்சின் ஆகிவிட முடியாது (கலக்குற மச்சி).

     

share on:facebook

4 comments:

CS. Mohan Kumar said...

எங்க ஊர் பெயரை எழுத்தில் படிக்கும் போது சொல்ல முடியாத உணர்வு.

ம்ம் ஆக மொத்தம் உங்க பேரை சொல்ல மாட்டீங்க

ஆதி மனிதன் said...

@மோகன் குமார்
//எங்க ஊர் பெயரை எழுத்தில் படிக்கும் போது சொல்ல முடியாத உணர்வு.//

எனக்கும் தான்!

அமுதா கிருஷ்ணா said...

விஜய என்று ஆரம்பித்து வண்ணன், பாரதி என்று முடியுமோ..

ஆதி மனிதன் said...

@அமுதா கிருஷ்ணா
//விஜய என்று ஆரம்பித்து வண்ணன், பாரதி என்று முடியுமோ.. //


பிற்பகுதியில் இரண்டில் ஒன்று சரி. இருந்தாலும் அதில் சரியானதையும் முதல் பாதியையும் கணிப்பது மிகவும் சிரமம்.

Post a Comment