Saturday, February 12, 2011

வாலண்டைன்ஸ் டே - விளங்காத பய புள்ளைங்க


வாலண்டைன்ஸ் டே - இதை காதலர் தினம் என கூறுவதையே என்னால்  ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒருவர் அடுத்தவர் மீது தாம் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டும் தினமாகவே மேலை நாடுகள் பலவற்றிலும்  கொண்டாடப்படுகிறது.

வாலண்டைன்ஸ் டே ஏன், எப்படி உருவானது என்பது ஓரளவிற்கு எல்லோருக்கும் தெரியும். இரு காதலர்களுக்காக பாதிரியார் ஒருவர் உதவப் போய் பிறகு அந்த சர்ச்சையில் பாதிரியார் கொல்லப்பட, அவரின் நினைவாகவும் காதலின் புனிதத்தை போற்றும் விதமாகவுமே இது கொண்டாடப்பட வேண்டும். அதுவும் இம்மாதிரியான கொண்டாட்டங்கள் வளர்ந்த மேலை நாடுகளில் சகஜமாக எடுத்துக் கொல்லப்பட்ட ஒன்றாகும்.

ஆனால் அதை எப்படி இந்தியாவில் எடுத்துக்கொண்டு கொண்டாடுகிறார்கள் என்பதில் தான் பிரச்சனையே.  கேரளத்தில் பாவாடை போன்ற ஒரு முண்டும் மேலே ரவிக்கையும் அதன் மேல் சில சமயம் மட்டும் துண்டு போன்ற ஒன்றை போட்டுக்கொள்வது அங்குள்ள கலாச்சாரம். அதே மாதிரி தமிழ் நாட்டு பெண்கள் உலா வந்தால் நம்மால் ஏற்று கொள்ள முடியுமா?

அது போல் தான் இந்தியாவில் நாம் வாலண்டைன்ஸ் டே கொண்டாட நினைப்பதும். மேலை நாடுகளில் வாலண்டைன்ஸ் டே வெறும் காதலர் தின கொண்டாட்டமாக மட்டுமே பார்ப்பதில்லை. உண்மையில் சொல்லப்போனால் அவர்களுக்கு காதலை சொல்ல
வாலண்டைன்ஸ் டே வரை காத்திருக்க வேண்டியதில்லை. அங்கு பள்ளி கல்லூரியில் மாணவ மாணவிகள் தங்களுக்கு
மிகவும் பிடித்த சக பள்ளி தோழர்களுக்கோ தோழிகளுக்கோ சாக்லேட்  கொடுத்தோ வாழ்த்து
அட்டைகள் கொடுத்தோ வாலண்டைன்ஸ் டேயை கொண்டாடுகிறார்கள். அது மட்டுமில்லாமல் கணவன் மணைவி தங்கள் அன்பை பிறருக்கு வெளி படுத்தவும் கொண்டாடுகிறார்கள். சிறுவர் சிறுமியர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு தங்களின் அன்பை வெளிப்படுத்த அவர்களுக்கு சாக்லேட் அல்லது வாழ்த்து அட்டைகள் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்த வாலண்டைன்ஸ் டேயை கொண்டாடுகிறார்கள். இவர்களோடு சேர்ந்து காதலர்களும் அடக்கம். என் குழந்தை கூட ஒவ்வொரு வாலண்டைன்ஸ் டே அன்றும் ஒரு சாக்லேட் அல்லது வாழ்த்து அட்டை தானே தயாரித்து எனக்கு 'Dad, you are my valentine' என எனக்கு கொடுப்பாள்.

இதை விட்டு விட்டு வாலண்டைன்ஸ் டே கொண்டாடுகிறோம் என்று நம் வீட்டு பிள்ளைகள் கடலோரத்திலும் காபி ஷாப்பிலும் தங்கள் காதலர்களுடன் கொஞ்சி மகிழ்வதை எப்படி நம்மால் ஏற்று கொள்ள முடியும்? இதெல்லாம் நம் கலாசாரத்திற்கும் நம்மை சுற்றி உள்ள சமூக பண்பாட்டுக்கும் நிச்சயம் ஏற்புடையதாக இருக்காது. பள்ளியிலேயே பாய் பிரென்ட் கேர்ள் பிரென்ட் என்பது பழகிப்போன ஒன்றாக இருக்கும் கலாச்சாரத்திற்கு வேண்டுமானால் இது ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால் நமக்கு? அதிலும் வாலண்டைன்ஸ் டே என்பதை நமக்கே உரித்தான மொழிபெயர்ப்பு வழக்கில் அதை காதலர் தினமாக ஆக்கி கேவலப்படுத்திவிட்டார்கள்.

சமீபத்தில் திருமணமான என் நண்பரின் தம்பி ஒருவர் மூன்று மாத பிசினஸ் விசாவில் அமெரிக்கா வந்து விட்டு இந்திய திரும்பியுள்ளார். அமெரிக்காவில் அவர் பார்த்த பழகிய பலதரப்பட்ட மனிதர்கள் அவரிடம் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டன. இந்தியா திரும்பிய பின்னர் எல்லோரையும் பார்த்து  அவர் ஹல்லோ சொல்வதும் சிரிப்பதும் மிக பெரிய பிரச்சனையாகி போய்விட்டது. தன் வீட்டுக்கு வரும் பால்காரரிடம்  திடீரென்று ஒரு நாள் காலை 'என்னப்பா சவுக்கியமா இருக்கியா? வீட்ல எல்லோரும் சவுக்கியமா? என கேக்க போக அவர், 'ஏன் சார் இந்த மாசம் பால் காசு கொடுக்க லேட் ஆகுமா? என கேட்டிருக்கிறார்.

அதே போல் வீட்டு வேளை செய்யும் அம்மாளிடம் நலம் விசாரிக்க அவர், 'எண்ணா சார்? அம்மா ஏதும் வெளி ஊருக்கு போயிருக்குதா? என ஒரு மாதிரியாக கேட்டிருக்கிறார். இதையெல்லாம் கேள்விப்பட்ட என் நண்பர் தன் தம்பியை கூப்பிட்டு இதெல்லாம் அமெரிக்காவில் தான் சரிப்படும். இங்கே நீ போறவன் வரவனை எல்லாம் பார்த்து சிரித்தால் உன்னை அப்புறம் பயித்தியகாரனாக ஆக்கிவிடுவார்கள் என கூயுள்ளார்.

அமெரிக்காவில் என்னுடைய மானேஜருக்கு ஒரே கவலை, அவரின் மகனுக்கு ஒரு நல்ல கேர்ள் பிரண்டு கிடைக்கவில்லை என்று. மக்களே நம்புங்கள். அவர் கூறியது இதுதான். அவன் சுத்த வேஸ்ட்டு. அவனோடு படிக்கும் எல்லா பையன்களுக்கும் கேர்ள் பிரண்டு இருக்கிறார்கள். இவனுக்கு மட்டும் ஒன்றும் அமைய மாட்டேன்கிறது' என்று புலம்பினார். காதலும் காதலர்களும் அங்கு சகஜம் என்பதைவிட அது தான் அவர்கள் தேர்ந்தெடுத்தத் பாதை. எந்த பெற்றோரும்  அங்கு தங்கள் பிள்ளைகளுக்கு வரன் பார்ப்பதில்லை நம்மைப்போல்.

ஆகவே வாலண்டைன்ஸ் டே கொண்டாடுங்கள் - இந்தியாவில். காதலர்கள் தவிர்த்து.


share on:facebook

4 comments:

Unknown said...

வெளிநாட்டுல நல்ல குளிருக்காக கொஞ்சம் குடிப்பாங்க, அதைப்பார்த்து நம்ம ஆட்கள் மொட்ட வெயிலில் சரக்கடித்துவிட்டு மண்ணை கவ்வுவதுபோல் இங்கே எல்லாம் extreme தான்.

Madhavan Srinivasagopalan said...

சரியாகச் சொன்னீர்கள் நண்பரே..

சுதர்ஷன் said...

என்ன கொடுமை !!

எஸ்.கே said...

நல்ல கருத்துக்கள்!

Post a Comment