Thursday, September 8, 2011

தடுக்கி விழுந்த பெண்ணை தூக்கி விட்ட பாவம் - அமெரிக்க அனுபவம்.


சமீபத்தில் அமெரிக்காவில் நான் பார்த்த இரு (சிறு) அசம்பாவித  சம்பவங்களும் அந்த நேரத்தில் இந்தியனாக என்னுடைய எதிர்வினையும்  அந்த எதிர்வினைக்கு சற்றும் எதிர்பாராத  மறுவினையும் என்னை சிறிது சிந்திக்க வைத்தது.

சம்பவம் # 1: 
நாங்கள் SFO எனப்படும் சான் பிரான்சிஸ்கோ சுற்றுலா சென்றிருந்த சமயம்  அங்குள்ள கோல்டன் கேட் எனப்படும்   கலிபோர்னியாவின் புகழ் பெற்ற பாலத்தை தரையில் இருந்து சுற்றிப்பார்க்க அங்கிருந்த பார்கிங் ஏரியாவில் எங்கள் வண்டியை நிறுத்திவிட்டு எல்லோரும்  கிளம்பினோம். அப்போது சுமார் 10 அடி தூரத்தில் என் கண்  எதிரே ஒரு பெண் கனமான  புல்லட்  வண்டி ஒன்றை ஸ்டாண்ட் போட  முயற்சிக்க, அது எதிர்பாரத  விதமாக  அப்பெண்ணின் மீதே சாய, வண்டி தன மீது விழாமல் தவிர்க்க அப்பெண்  நகர முயற்சிக்கையில்  கீழே விழுந்து விட்டார். 

இதை கண்டவுடன் நான் ஓடிச்சென்று அப்பெண்ணை தூக்க கைகொடுக்க, அப்பெண் சிரமப்பட்டு ஒரு வழியாக எழுந்தார். ஆனால்  எதற்கு  எடுத்தாலும் நன்றி சொல்லும் அமெரிக்காவில் அப்பெண் எனக்கு "நன்றி" சொல்லாததிலிருந்தே எனக்கு ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்றியது. அதே நேரம் அப்பெண்ணின் கணவனும் தன் வண்டியை நிறுத்திவிட்டு ஓடி வந்து விழுந்து கிடந்த வண்டியை தூக்க முயல, மீண்டும் நான் வண்டியை தூக்க வண்டிக்கு கை கொடுக்க நினைத்த போது தான் எனக்கு அந்த கேள்வியை கேக்க வேண்டும் போல் இருந்தது "May I hep you "?. அவர்  சற்றே யோசித்து விட்டு "Yeah...would be great" என கூறினார்.

சம்பவம் # 2:
நேற்று என் நண்பர் ஒருவர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்புகையில், எங்கள் காருக்கு செல்லும் வழியில் உள்ள 4 way crossing இல் ஒரு முதியவர் கடக்க முயற்சிக்க தடாலென்று நடு ரோட்டில் விழுந்து விட்டார். உடனே நாற்புறமும் வந்த கார்கள் அனைத்தும் ஸ்டாப் சைன் அருகே நின்று விட்டது. அருகில் வந்த இரண்டு கார்களில் இருந்தும் ஆட்கள் வெளியில் இறங்கி வந்து விட்டார்கள். நானும் ஓடிச்சென்று அந்த முதியவரை தூக்கலாம் என நினைக்கும் போதுதான் நினைவுக்கு வந்தது மற்றவர்கள் எல்லோரும் அந்த  முதியவருக்கு அருகே சென்று பார்த்தார்கள் ஒழிய யாரும் உடனடியாக அவரை தூக்க முயற்சிக்கவில்லை.

இந்த தடவை நான் அமைதியாக என்ன நடக்கிறதென்று கவனிக்க ஆரம்பித்தேன். சில நிமிடங்கள் கழித்து ஒருவர்  முதியவர் அருகே சென்று, Are you Ok ? என  கேட்டார். முதியவரிடமிருந்து ஒரு பதிலும் இல்லை. ஆனால் அவர் நினைவுடனும் அசைந்து கொண்டும் இருந்தார். பிறகு பக்கத்தில் உள்ளவர்களை பார்த்து அருகில் இருந்தவர், ரோட்டில் விழுந்து கிடப்பதால் முதியவரை தூக்கி ஓரமாக நடை பாதையில் கிடத்தலாமா என கேக்க, அதை எல்லோரும் ஒப்புக்கொண்டனர். அதே நேரம் இன்னொருவர்  911 (அவசர உதவி) கால் பண்ண, முதியவரை  நடைபாதையில் கிடத்திய பின், ஒருவர் நீங்கள் சுகர் பேஷன்டா என  கேட்டார். அவர் இல்லை என்றதும், தண்ணீர் குடிக்கீறீர்களா என கேட்டார். அவர் வேண்டாம் என்றதும் விட்டு விட்டார். இன்னொருவர் அவர் போதையில் இல்லை என மற்றவர்களிடம் தெரிவித்தார். மற்றபடி முதியவர் கீழே விழுந்ததில் நெற்றியில் அடிபட்டு சிறிது ரத்தம் வழிந்தபடி இருந்தாலும், நடை  பாதையில் கிடத்தப்பட்டு அப்படியே கிடந்தார். நாங்கள் அனைவரும் அவரை சுற்றி நின்ற படி.

அதே நேரம், ஒரிரு நிமிடங்களில் 911 (அதாவது, பெரிய தீனைப்பு வண்டி,  சிறிய மீட்பு வண்டி , ஒரு பாரா மெடிக்கல் வண்டி என மூன்றும் ஒன்றன் பின் ஒன்றாக) வந்து நின்றது. அவர்களும் அவரை தூக்கவேயில்லை. படுத்துகிடந்தபடியே அவரிடம் கேள்விகள் கேட்டனர். நாடி மற்றும் பிரஷர்  பார்த்தனர். அவர் முகத்தில் வழிந்த ரத்தத்தை துடைத்து விட்டனர். பொதுவாக இம்மாதிரி தருணங்களில் பொது மக்கள் நின்று நடக்கும்  சம்பவங்களை வேடிக்கை பார்க்க கூடாது என்பதனாலும், முதியவருக்கு  உரிய உதவி வந்து சேர்ந்து விட்டதினாலும் நாங்கள் அவ்விடத்தை விட்டு  கிளம்பிவிட்டோம். 

இதையெல்லாம் பார்த்த பிறகு அமெரிக்க நண்பர் ஒருவரிடம் அவசர  நேரத்தில் அமெரிக்க நீதி என்னவென்று கேட்டபோது அவர் கூறியது:

# என்னதான் அவசர  கால உதவி என்றாலும், சம்பந்தப்பட்டவரை கேக்காமல்/அனுமதியில்லாமல் உதவிக்கு முனையாதீர்கள்.

# அறிமுகம் இல்லாதவர்கள் உரிமையுடன் தொடுவது என்பது  அமெரிக்கர்களுக்கு பிடிக்காத விஷயம் (அது ஆபத்து சமயம் என்றாலும்).

# பல நேரங்களில் கீழே விழுந்தால் கூட தாங்களே எழுந்து நிற்க தான் அமெரிக்கர்கள் விரும்புவார்களே ஒழிய அடுத்தவர்களின் உதவியை எதிர் பார்க்க மாட்டார்கள்.

# மற்ற படி  ஆபத்திற்கு பாவமில்லை என்பது அமெரிக்காவிலும் பொருந்தும்(Good Samaritan Law).

share on:facebook

4 comments:

CS. Mohan Kumar said...

பதிவராக இருப்பதால் நாம் இதையெல்லாம் ஒரு டைரி போல ப்ளாகில் குறித்து வைத்து கொள்ள முடிகிறது இல்லையா நண்பரே?

Philosophy Prabhakaran said...

அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு பயனுள்ள பதிவு...

அம்பலத்தார் said...

உண்மைதான் பெரும்பாலும் மெற்கத்தைய தேசத்தவர் அடுத்தவரை எதிர்பார்க்காமல் தமது காலில் நிற்பதையே விரும்புகிறார்கள்

Sharmmi Jeganmogan said...

அமெரிக்காவில் மட்டும் இல்லை. இங்கிலாந்திலும் இதே கதை தான். என் கண் முன்னே ஆக்சிடெண்ட் நடந்த ஒருவரை வேறு நபர் தூக்கி விட, அவர் முதுகு தண்டு பாதிக்கப்பட்டு விட்டதாக தூக்கி விட்டவரின் மீது வழக்கு பதிவாகியது. 

Post a Comment