Tuesday, August 9, 2011

முதிர் கண்ணன்கள்: திருமணம் ஆகாமல் தவிக்கும் IT ஆண்கள்.


நடக்கவேண்டிய காலத்தில அது அது தானா நடக்கனும்னு எங்க ஊர்ல  பெரியவங்க சொல்லுவாங்க. முக்கியமா கல்யாணம், குழந்தை பெத்துக்கறத  குறித்துதான் இந்த வாக்கியம் இருக்கும். இத்தனைக்கும் பத்து இருபது வருடங்களுக்கு முன் இருந்த வேலைவாய்ப்பு, பொருளாதார சூழ்நிலை இன்று பெரிதும் மாறுபட்டு இருக்கிறது. பெரும்பாலும் எல்லோருக்கும் (நன்கு படித்தவர்களுக்கு) ஒரு வேலை கிடைத்து விடுகிறது. வாழ்க்கை தரமும் சற்று உயர்ந்தே உள்ளது. இருந்தும் நான் மேலே கூறியது போல் அது அது நடக்க வேண்டிய நேரத்தில் நடக்க மாட்டேன்கிறது பலருக்கும்.

என் நண்பன் ஒருவன். ஆடிட்டர் ஆகி பல வருடங்களாகியும் திருமணமே செய்துகொள்ளவில்லை. கேட்டால், இன்னும் செட்டில் ஆகவில்லை மாம்ஸ். லைப்ல முதல்ல செட்டில் ஆகணும் என கூறுவார். தங்கை, தம்பியை கரை சேர்க்க வேண்டும், பெற்றோருக்கு செலவு செய்ய வேண்டும்  என்ற எந்த கட்டாயமும் இல்லாத  நினலையிலும் இதையே தான் கூறி  வந்தார். இத்தனைக்கும் ஆடிட்டர் என்றால்  அவருக்கு எவ்வளவு வருமானம்  வரும் என நினைத்துப்பாருங்கள். வேண்டிய பணம், சொத்து என எல்லாம் இருந்தும் அதற்கும் மேலே  எதிர்பார்ப்புகள், எண்ணங்கள். இவை எல்லாம் தான் என் நண்பனை  35 வயதை  கடந்து திருமணம் செய்து கொள்ள வைத்துள்ளது. இனி அவரின் பிள்ளை வளர்ந்து பெரியவனாகி/வளாகி ஒரு நல்ல நிலைக்கு வருவதற்குள் நிச்சயம் இவர் குடு குடு கிழவனாகி விடுவார்.

இந்தியாவில் நிலை இப்படி என்றால், இங்கு அமெரிக்கா வரும் சில இளைஞர்களின் நிலையோ இன்னும்  பரிதாபம். அமெரிக்கா வந்து விட்டதினாலோ என்னவோ, எல்லோருக்கும் பெண் சிகப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடுகிறது போலும். எனக்கு தெரிந்து பார்க்க சுமாராக இருக்கும் இரு இளைஞர்கள் இரண்டு  வருடங்களுக்கும்  மேலாக பெண்   தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்களும் நண்பர்களும் எவ்வளவோ எடுத்துக்கூறியும் சிகப்பு பெண் தான் வேண்டும் என்று தங்கள் திருமண வயதை தாண்டி போய்/தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

இது இப்படி என்றால், அமெரிக்க மாப்பிள்ளை என்று சொன்னால் இன்று நம் பெண்கள் கேட்கும் கேள்விகள், வைக்கும் கண்டிசன்கள் தலை சுத்தற வைக்கிறது. எனக்கு தெரிந்த நண்பர் அமெரிக்காவில் நல்ல சம்பளத்தில் இருந்தாலும் அவர் பார்த்த பெண், இதில் பாதி நான் இந்தியாவிலே சம்பாதிக்கிறேன். ஒன்று நீங்கள் கம்பெனி மாறுங்கள். அல்லது உங்களுடைய பேங்க்  பாலன்சை காட்டுங்கள் என  அதிரடியாக கூறி இருக்கிறார். அதே போல் பெண் வீட்டாரிடம் சீதனம் கேட்ட காலம் போய் இப்போது மாப்பிளையிடம்  உங்களிடம் என்ன கார் இருக்கிறது , US ல் சொந்த வீடு இருக்கிறதா? GC  இருக்கிறதா என    பல கேள்விகள். இங்குள்ள பெரும்பாலானோருக்கு இதற்கு பதில் தெரியவில்லை. பாவம். நம்மை கல்யாணம் செய்துக்க  போகிறதா  இல்லை  வைத்து வியாபாரம் செய்யப்போகிறார்களா என தெரியவில்லை என  முனு முணுக்கிறார்கள்.

இந்தியாவில் கேக்கவே வேண்டாம். மாப்பிளையின் ஜாதகத்தை கேக்கிறார்களோ இல்லையா முதலில் பே ஸ்லிப் காப்பி கேக்கிறார்கள் பெண் வீட்டார்கள். அடுத்து IT ல் மாப்பிளை வேலை பார்த்தால் அமெரிக்க  சென்று வந்துள்ளாரா, H1 இருக்கிறதா  இவை எல்லாம் தான் முதல் பொருத்தங்கள். மாப்பிள்ளைகளுக்கும் பெண் நல்ல கம்பெனியில்  வேலையில் இருக்கிறாரா, அவளின் அலுவலகமும் நம் அலுவலகமும் பக்கத்தில் அமைந்திருக்கிறதா, பக்கத்தில்  டே கேர் இருக்கிறதா என பல  விஷயங்கள் திருமண பொருத்தம் பார்ப்பதற்கு முன்னே பார்த்து விடுகிறார்கள்.

கை நிறைய சம்பாதிப்பவர்கள் பலரும் இன்று காலம் தாழ்த்தியே   திருமணம்  செய்து  கொள்கிறார்கள். இதனால் ஒன்றும் பெரிதாக பயன் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. "அப்பா" என குழந்தை கூப்பிடுவதற்கு பதிலாக "தாத்தா" என கூப்பிட்டு உடனடி ப்ரோமோசன் கொடுப்பதை தவிர.  

ஹ்ம்ம். எல்லாம் காலம் மாற்றிய கோலம். எப்படி பார்த்தாலும் இவை எல்லாம் அளவுக்கு மீறிய ஆசையினால் வரும் வினை.


share on:facebook

6 comments:

Anonymous said...

boss manasu otthu santhosama valrathu thaan vazhkai ,

Madhavan Srinivasagopalan said...

//"அப்பா" என குழந்தை கூப்பிடுவதற்கு பதிலாக "தாத்தா" என கூப்பிட்டு உடனடி ப்ரோமோசன் கொடுப்பதை தவிர. //

Good point..

CS. Mohan Kumar said...

ஆச்சரியமா இருக்கு நீங்க சொல்வது. எனக்கு தெரிந்து IT-யால் பல இளைஞர்களுக்கு 23/24 வயதிலேயே கல்யாணம் ஆகிடுது

ஆதி மனிதன் said...

நன்றி மாதவன்.

நன்றி மோகன்: நீங்கள் சொல்வதும் உண்மைதான். அதே நேரத்தில் நல்ல வசதி இருந்தும் சிலர் இம்மாதிரியான காரணங்களால் திருமணத்தை தள்ளிப்போடுவதை தான் நான் குறிப்பிடுகிறேன்.

அமுதா கிருஷ்ணா said...

எதிர்பார்ப்புகள் நிறைய ஆக ஆக திருமண வயது தள்ளி போகிறது.குழந்தை பிறப்பு ஆணோ, பெண்ணோ 30 வயதிற்குள் என்றால் ஆரோக்கியம்.அதை மறந்து விடுகிறோம் எல்லோரும்.30 தாண்டினாலே நிறைய பிரச்சனைகள் வர சான்ஸ் உள்ளது.

அம்பாளடியாள் said...

வணக்கம் நான் இன்றுதான் உங்கள் தளத்துக்கு முதன்முறையாக வந்துள்ளேன் .தரமான ஆக்கங்களை வெளியிட்டுவரும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .
நன்றி பகிர்வுக்கு.....

Post a Comment