Thursday, April 19, 2012

இலங்கை சரக்கும், இந்திய எம்.பி க்களும் - ஒன்னுமே புரியல


இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களின் மறு புனரமைப்பு வசதிகளை பார்வையிட சென்ற இந்திய எம்.பி க்கள் நேற்று  காங்கேசன் துறைமுகம் சென்றனர். இதில் என்ன என்று கேட்கிறீர்களா? 

அங்கு சென்று போரினால் பாதிக்கப் பட்ட மக்களை பற்றி யாரும்  பேசவில்லை. அதற்க்கு பதிலாக காங்கேசன் துறை முகத்திலிருந்து  இந்தியாவிற்கு  சரக்குகளை எவ்வாறு மிக சிறந்த முறையில் ஏற்றி  அனுப்புவது இந்தியாவிலிருந்து கப்பல்கள் மூலம் வரும் சரக்குககளை எவ்வாறு சிறப்பாக பரிமாற்றம் செய்வது என்பதை விவாதித்ததாக செய்திகள்  வெளியாகி  உள்ளன.

அட பாவிகளா? நீங்கள் தமிழர்களின் மறு புனரப்பை பற்றி பார்வையிட இலங்கை சென்றீர்களா? இல்லை வியாபாரம் பேச சென்றீர்களா? ஒரு குறிப்பிட்ட இனமே அழிந்து போய் அல்லது அழியும் நிலையில் உள்ள போது, இழவு வீட்டில் எதையோ பிடுங்கியது போல், அங்கு சென்று  அவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்க அந் நாட்டு அரசுடன் பேசுவதற்கு  பதிலாக அங்கு சென்று இந்திய கடையை விரித்துள்ளார்கள்.

எப்படியோ, நம்மூர் கோமாளி கட்சிகள் வழக்கம் போல் இலங்கை செல்லும்  எம்.பி க்கள் குழுவை புறக்கணித்து தங்கள் சுய ரூபத்தை மேலும் ஒரு முறை  பறை சாற்றி உள்ளன.  சரி, தேசபக்தி பேசும் பி.ஜே.பியும், கம்யூனிசம் பேசும்   காம்ரேட்களும் அங்கு சென்று வீராவேசமாக ஏதாவது பேசுவார்கள் என்றால், ஏதோ சுற்றுலா வந்த பயணிகள் போல் கும்பல் கும்பலாக எல்லா  இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு ஒன்றுமே பெரிதாக வாய்  திறக்கவில்லை. ` 

தொலைக்காட்சிகளில் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே இந்திய குழுவை  காண்பித்தார்கள். அதிலும் அங்குள்ள தமிழர்களை அவர்கள் சந்தித்த முழு  விபரத்தையோ அல்லது குழுவின் பேட்டியையோ ஒன்றை கூட காட்டவில்லை.  அப்படியென்றால் போர் முடிந்து மூன்று வருடங்கள் ஆன பிறகும் கூட அங்குள்ள நிலைமையை தெரிந்து கொள்ளுங்கள்.     

கடைசியாக என்ன நடக்கும் என எல்லோருக்கும் அறிந்ததே. ஊருக்கு கிளம்பும் முன் ராஜபக்சே கொடுக்கும் விருந்தை வயிறு புடைக்க தின்று விட்டு, பிறகு சிரித்துக் கொண்டு எல்லோரும் அவரிடம் கை குழுக்குவதை   போல் ஒரு போஸ் கொடுத்து விட்டு வந்து விடுவார்கள். நல்ல வேலை  தமிழகத்திலிருந்து  கழக எம்.பி க்கள் யாரும் இலங்கை செல்லவில்லை. இல்லை என்றால், அவர்கள் இங்கு வந்து இறங்கும் முன், ராஜபக்சேவை  நேரில் சந்தித்து  உயிருடன் திரும்பும் அஞ்சா நெஞ்சனே வருக வருக என போஸ்டர் அடித்து ஒட்டி விடுவார்கள்.   

கடந்த முறை திருவாளர் திருமா அவர்கள், ராஜபக்சேவை நேரில்  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவன் கழுத்தை கடித்து ரத்தத்தை உறிஞ்சி  விடுவேன் என்று கொக்கரித்தார்.  கடைசியில் அத்தனை பற்களும் தெரியும் படி போடோவுக்கு போஸ் கொடுத்தார். என்னமோ போங்க. இலங்கை செல்லும் யாருமே அங்குள்ள சூழ்நிலையை உணர்ந்ததாக தெரியவில்லை.  ஏதோ சுற்றுலா  செல்வது போல் தான் சென்று வருகிறார்கள். இலங்கையில் தமிழன் இருக்கும் வரை அவனுக்கு அங்கு பிரச்சனைதான்.

share on:facebook

4 comments:

'பசி'பரமசிவம் said...

கோடைக்கு ஜாலியா ஒரு சுற்றுலா போய்ட்டு, வயிறு முட்ட ருசி ருசியா விருந்து சாப்பிட்டுட்டு வர்றதுக்குத்தான் இந்தியக் குழு அங்கே போயிருக்குன்னு உங்களுக்குப் புரியுதில்ல?
அப்புறம் ஏன் ஏதேதோ புலம்புறீங்க?
காலம் ஒரு நாள் மாறுமா? காத்திருப்போமா?

...αηαη∂.... said...

சாவு வீட்ல கூட வியாபாரம் பண்ரவங்க கிட்ட போய் கருனையெல்லாம் எதிர்ப்பார்க்கலாமா..

Anonymous said...

இலங்கை செல்லும் யாருமே அங்குள்ள சூழ்நிலையை உணர்ந்ததாக தெரியவில்லை.

இலங்கை சென்றதால் தான் அவர்கள் உண்மை நிலையை உணர்ந்து கொண்டார்கள் தமிழகத்தில் இருந்து கொண்டு கற்பனை பிராசாரங்களை நம்புபவர்களால் உண்மையை காண முடியாது.

HOTLINKSIN.COM said...

எல்லாம் அரசியல் படுத்தும்பாடு... மக்கள் நலனில் அக்கறை கொண்ட தலைவர்கள் உருவானால்தான் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி பிறக்கும்...

Post a Comment