Wednesday, June 8, 2011

குறுக்கு சந்தில் இருந்து அமெரிக்க குடியுரிமை


இது முற்றிலும் உண்மையான என்னுடைய நெருங்கிய உறவினரின் வெற்றிப்பாதையை விவரிக்கும் ஒரு சிறிய தொகுப்பு.

இன்று பெருமளவில் அமெரிக்காவில் நல்ல சம்பளத்துடன் கவுரவமான வேலை பார்ப்பவர்களில் இந்தியர்களும் அடக்கம். இது எல்லாவற்றுக்கும் காரணம் நம்முடைய கடுமையான உழைப்பும் நமக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் லட்சியமே ஆகும்.

அப்படித்தான் என் அத்தை பையனும் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தன் சொந்த உழைப்பினாலும் முயற்சியினாலும் ஒரு குறுக்கு சந்தில்  குடிசை வீட்டில் தன்னுடைய பள்ளிப்படிப்பை தமிழ் வழி வழிக்கல்வியில்  பயின்றவர் இன்று அமெரிக்காவில் குடியுரிமை பெற்று தனக்கென்று  ஒரு இரண்டு மாடி சொந்த பங்களாவில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவருக்கு அவரின் மனைவிக்கு என்று தனித்தனி உயர் ரக கார்களுடன்  அனைத்து வசதிகளுடன் வாழ்ந்து  வருகிறார். 

இதற்கு எல்லாம் காரணம், அவருடைய திட்டமிடலும் லட்சியத்தை அடைய  அவர் எடுத்துக்கொண்ட முயற்சியும் தன்னம்பிக்கையும் தான். அரசு பள்ளியில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் பிறகு அரசு  I.T.I. யில்  டிப்ளமோ முடித்தார். தன்னுடைய திறமையால் சென்னையில் ஒரு பிரபலமான தொழிற்சாலையில் சாதாரண வேலையில் முதலில் அமர்ந்தார். அப்போதே தொலைதூர கல்வியில் நேரடியாக ஒரு முதுநிலை பட்டடத்தை பெற்று தன்னுடைய தகுதியை வளர்த்துக்கொண்டார்.

நன்கு தொழில் கற்றுக்கொண்ட நிலையில் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்து விட்டு தன் சொந்த செலவில் மலேசியா சென்றவர்  ஓரிரு வருடங்களில் அந்த வேலையையும் விட்டுவிட்டு  அன்றைய  தினத்தில் தனது அனுபவத்தை வைத்து தானே அடுத்த நல்ல  கம்பெனியில்  கூடுதல் சம்பளத்தில் வேலையில் சேர்ந்தார். 

அவரிடம், "சரி, அங்கிருந்து நீங்கள் எப்படி அமெரிக்க வந்தீர்கள் என்று  கதையை கேட்டால்", சரி, வெளிநாட்டிற்கு வந்து ஒரு நல்ல வேலையிலும்   இருந்தாகிவிட்டது. இனி உலகத்தில் இதை விட எது நல்ல நாடு  இருக்கிறது என ஆய்வு செய்தேன். எனக்கு ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும்  கண் முன் தெரிந்தது. உடனே ஆஸ்திரேலியாவிற்கு வேலை தேட முடிவு செய்தேன். அதே போல் என்னுடைய தகுதிக்கும் அனுபவத்திற்கும் தகுந்த வேலை கிடைத்தது. உடனே மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியா குடி  பெயர்ந்தேன். அந்த நேரத்தில் எனக்கு மலேசிய   PR ம் இருந்தது என தொடர்ந்தவர், ஆஸ்திரேலியா வந்த பிறகு எனக்கு திருமண  ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தன. எனக்கு மனைவியாக வருபவரும் என்னை  போல் நல்ல உழைப்பாளியாகவும்    லட்சியம் உடையவராகவும் இருக்க  வேண்டும் என நினைத்தேன்.

அதே போல் நான் பார்த்த ஒரு பெண் நர்சிங் படித்து விட்டு அமெரிக்கா போய் வேலை பார்க்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு அதற்காக நான்கு  வருடங்களாக தொடர்ந்து முயற்சி செய்து கொண்டுள்ளது என்னை  கவர்ந்தது. உடனே அந்த பெண்ணிடம் நான் ஆஸ்திரேலியா குடியுரிமை வாங்கிவிட்டேன்.  திருமணமான பின் உன்னை ஆஸ்திரேலியா அழைத்து  செல்கிறேன்.  உனக்கு சம்மதமா என கேட்டேன். ஆனால் அவர் அதற்கு  ஒத்துக்கொள்ளவில்லை.  என்னுடைய கனவு நான் அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும் என்பதே.  அதனால் நான் ஆஸ்திரேலியா வரமாட்டேன் என்று நான் சிறிதும்  எதிர்பார்க்காததை பதிலாக தந்தார். ஆகா,  இதுதான் நமக்கு ஏத்த  பெண் என்று, சரி இப்போது என்னுடன் ஆஸ்திரேலியா வா. அங்கிருந்து  மீண்டும்  அமெரிகாவிற்கு நீ முயற்சி செய். கிடைத்தால்  இருவரும்  செல்வோம் என சமாதானப்படுத்தி ஒரு வழியாக என் திருமணம் நடந்தது.       

திருமணமான சில வருடங்களிலேயே ஆஸ்திரேலியா குடியுரிமை இருந்ததால் சுலபமாக அமெரிக்கா விசாவும் விரைவில் கிரீன் கார்டும் கிடைத்தது. நாங்கள் விரும்பின வாழ்க்கை கிடைத்து நன்றாக வாழ்கிறோம். இவ்வளவு வசதிகள் இங்கு அனுபவித்தாலும் என் குழந்தைக்கு பத்து/பதினைந்து வயதாகும் போது நங்கள் இந்தியா சென்று விட தீர்மானித்துள்ளோம் என முடித்தார்.

என்னுடைய பல வருட அமெரிக்கா இங்கிலாந்து வாசத்தின் போது என்னுடன் வேலை பார்த்த அமெரிக்கரோ ஆங்கிலேயரோ, அவர்களின்  வீடு கூட அவ்வளவு வசதிகளுடன் நான் பார்த்ததில்லை. ஆனால் சாதாரண  குடிசை வீட்டில் வாழ்க்கையை ஆரம்பித்த என் உறவினர் இன்று கழுத்தை  சுளுக்க வைக்கும் உயர்ந்த பங்களா, பின்பக்கம் தோட்டம் மற்றும் லான்,  சினிமாவில் காண்பிப்பது போல் ஒரு மாஸ்டர் பெட்ரூம்,   விருந்தினர்களுக்கு என்று இரண்டுக்கும் மேற்ப்பட்ட தனி தனி பெட்ரூம் என சகல வசதிகளுடன் அமெரிக்காவில் வாழ்கிறார் என்றால். அப்பப்பா, என்ன  ஒரு வளர்ச்சி. ஒரு கிராமம் போன்ற நகரத்திலிருந்து எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் தன சொந்த திறமையும் நம்பிக்கையையும் வைத்து இந்த அளவிற்கு வளர்ந்த என் அத்தை மகனை என்னால் மனமார பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

கணவு காணுங்கள். காலம் வசப்படும்.


share on:facebook

2 comments:

அமுதா கிருஷ்ணா said...

அருமையான முன்னேற்றம்.

CS. Mohan Kumar said...

அடிக்கடி இது போல் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முன்னேற்ற நிகழ்வை சொல்லலாம்,பிறருக்கு உந்துதலாய் இருக்கும்

நிற்க இதே கம்மேன்ட்டை நேற்று அலுவலகத்தில் இருந்து போட முயன்றேன் ஏனோ கமென்ட் வெளியாகவே இல்லை. இன்னொரு பதிவிலும் இதே நிலை. எனவே உங்கள் ப்ளாகில் மட்டும் இந்த பிரச்சனை இல்லை

Post a Comment