Tuesday, May 10, 2011

உயர் கல்வி கற்க உதவிக்கரம் கேட்கும் ஏழை மாணவி - முடிந்தால் உதவுங்களேன்.

திருப்பூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வில், 1,200க்கு 1,136 மதிப்பெண் பெற்றிருந்தாலும், படிக்க வசதி இல்லாததால் பனியன் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார், மாணவி ரேமகாவதி. இவரது கல்விக்குஉதவினால், கம்ப்யூட்டர் இன்ஜியராவேன் என கூறினார்.


பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்ற மாணவியர் பெற்றோருடனும், பள்ளிகளில் சக தோழிகளுடனும் சந்தோஷத்தை உற்சா கமாக பகிர்ந்து கொண்டனர். ஆனால், அதிக மதிப்பெண் பெற்றும், 10 நாட்களுக்கு முன் தந்தை இறந்த சோகத்தில், சம்பாதித்தால் தான் குடும்பத்தையே காப்பாற்ற முடியும் என்ற நிலையில்; பள்ளியை மறந்து, பனியன் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே, தேர்வு முடிவை அறிந்து, சக தொழிலாளர்களிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்ட மாணவியும், திருப்பூரில் உள்ளார் என்பதை அறிந்து, எம்.எஸ்., நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ரேமகாவதியை சந்தித்தோம்.

சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள, தந்தை இல்லையே என அழுதபடி, அவர் கூறியதாவது: திருப்பூர் பாப்பநாயக்கன் பாளையம் பவானி நகர் முதலாவது வீதி 3/1 விஜயா இல்லத்தில் வசித்து வருகிறோம். அப்பா மனோகர்; அம்மா ரோஜா; பனியன் நிறுவனத் தில் தொழிலாளி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், மேட்டாங்காடு நகராட்சி பள்ளியில் ஆரம்ப கல்வி முதல் 10ம் வகுப்பு வரை படித்தேன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 455 மதிப்பெண் பெற்றேன். அடுத்து படிக்க வசதியில்லாமல் இருந்த நிலையில், கோபி கம்பன் மெட்ரிக் பள்ளி நிர்வாகத்தினர் சொந்த செலவில் படிக்க வைப்பதாக கூறி அழைத்துச் சென்றனர்.சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படித்தேன். பெரிய கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேண்டும் என்பதே எனது லட்சியமாக இருந்தது. எனது தந்தை மனோகர், இருதய நோயால் பாதிக்கப் பட்டு, மருத்துவத்துக்கு வழியில்லாமல் கடந்த 10 நாட்களுக்கு முன் இறந்து விட்டார்.

பிளஸ் 1 படிக்கும் தம்பி மோகன், குறைந்த சம்பாத்தியம் உள்ள தாய் என இருந்த எங்கள் குடும்பத்துக்கு ஆதரவாக எனது தாயின் சகோதரர் ஜோதிராமன் உள்ளார். அவர் வீட்டில் தற்போது வசிக்கிறோம். அப்பாவும் இறந்த நிலையில், குடும்பத்தை காப்பாற்ற சம்பாதித்தாக வேண்டும் என்ற நிலையில் பனியன் கம்பெனியில் வேலை பார்க்கிறேன்.தமிழ் பாடத்தில் 189, ஆங்கிலத்தில் 179, இயற்பியல் 199, வேதியியல் 196, கம்ப்யூட்டர் சயின்ஸ் 192, கணித பாடத்தில் 181 என 1,136 மதிப்பெண் பெற்றுள்ளது தெரியவந்தது. ஆனால், சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள தந்தை இல்லை; தொடர்ந்து படிக்க வசதியும் இல்லை. கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேண்டும் என்பதே எனது விருப்பம், என்றார்.

இவர் வேலை செய்யும் பனியன் கம்பெனி உரிமையாளர் பிரைம் மோகன்குமார், தன்னால் இயன்ற உதவி அளிப்பதாக கூறியுள்ளார். உதவும் எண்ணம் உள்ள இதயங்கள், தொடர்பு கொள்ள 93442 - 00281.

நன்றி: Dinamalar.com
//என்னால் முடிந்த உதவியை செய்து விட்டு உங்களுடன் மீண்டும் பகிர்கிறேன் - ஆதிமனிதன்//

share on:facebook

2 comments:

Unknown said...

அவசியம் உதவுவோம்..

சாய்ராம் கோபாலன் said...

அவசியம் ஆதி

Post a Comment