Thursday, October 3, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்...தேடி பார்க்க வேண்டியது.


பாயும் புலி, முரட்டுக் காளையுடன் மஹாகவி காளிதாசையும் ஹரிச் சந்திராவையும் தேடி தேடி தஞ்சை 'ஞானம்' போன்ற தியேட்டர்களில் இரவு இரண்டாம் காட்சி பார்த்து ரசித்த சாதாரண சினிமா ரசிகன் மட்டுமே நான். சினிமா விமர்சனத்திற்கும் எனக்கும் வெகு தூரம். அதலால் இது ஒரு சினிமா விர்மசனம் இல்லை.

சமீபத்தில் பார்த்த 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' சினிமா மட்டுமே என்னை இப்பதிவை எழுத தூண்டியது. முதலில் இப்படி ஒரு படம் வெளிவந்துள்ளது என்னை போன்ற சினிமா அதிகம் பார்க்காதவர்களுக்கு தெரியவே இல்லை (தற்போதெல்லாம் ஆடிக்கு அல்லது ஆவணிக்கு ஒரு முறை தான் சினிமா பார்கிறேன். அதுவும் காமெடி படம் அல்லது நல்ல படம் என்று பலர் சொன்னால் மட்டுமே).

'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' என்ற தலைப்பை பார்த்து ஏதோ வித்தியாசமான பதிவாக தெரிகிறதே என்று எண்ணி தான் நண்பர் 'அதிசா'வின் பதிவை திறந்து பார்த்தேன். அப்போது தான் அது மிக்க்ஷின் படைப்பான புதிய படம் என்று தெரிய வந்தது. ஓரிரு பாராவை படித்தவுடன் பக்கத்தை மூடிவிட்டேன். இனி நேராக படத்தை தான் பார்க்க வேண்டும் என்று. இத்தனைக்கும் அன்று தான் வெகு மாதங்கள் கழித்து குடும்பத்துடன் வ.வா.சங்கம் பார்த்து விட்டு திரும்பி இருந்தேன்.

ஒரு சில பொக்கைவாய் சிரிப்பை தவிர அந்த படத்தில் என்ன இருக்கிறது என தெரியவில்லை. ஒரே ஆறுதல் சும்மா மேனா மினுக்கி கதா நாயகிகளோ நாயகர்களோ இல்லாமல்(அஞ்சு பைசா செலவு இல்லாமல்), பார்த்து பார்த்து புளித்து போன வெளிநாட்டு கடை வீதிகளையும் கடற்கரைகளையும் காட்டாமல் நாம ஊர் அட்மாஸ்பியரில் படம் எடுத்தது மட்டும் தான் பாராட்ட வேண்டிய விஷயம். சிவா கார்த்திகேயன் கொஞ்சம் உட்கார்ந்து யோசிக்க வேண்டும் இல்லை என்றால் சீக்கிரம் காணமல் போய் விடுவார்.

இப்படி பட்ட படங்களுக்கு நடுவே 'ஓநாயும் ஆடுக்குட்டியும்' ஏன் காணமல் போகிறது என்பது தான் புரியவில்லை. ஒருவேளை படத்திற்கு அதிகம் விளம்பரமில்லை என்று நினைக்கிறன். மிக்க்ஷினின் 'நந்தலாலா' பார்த்து பிரமித்து போனேன். ஆனால் பிறகு அது ஒரு அயல் நாட்டு காப்பி என்ற போது சற்று சலிப்பானேன். இருந்தாலும் கொஞ்சம் யோசித்து பார்த்தால் அதற்கும் ஒரு திறமை நம்பிக்கை வேண்டும். அந்த வகையில் அவரை பாராட்ட தோன்றியது. என்ன ஒன்று இம்மாதிரி காப்பி அடிக்கும் போது தைரியமாக அதை டைட்டிலில் போட்டால் நன்று.

'ஓநாயும் ஆடுக்குட்டியும்' காப்பி வகையா என எனக்கு தெரியாது. அப்படியே இருந்தாலும் அதை பாராட்டித்தான் தீர வேண்டும். முதல் காட்சியிலிருந்து அவராகவே முடிச்சை அவிழ்க்கும் யாராலும் நிச்சயம் அடுத்து என்ன நடக்கப் போகிறது என அவதானிக்க முடியாது என்றே நினைக்கிறன். அங்கேயே அவர் வெற்றி பெற்று விட்டார். அந்த முடிச்சை அவிழ்க்கும் நேரமும் இடமும் சிச்சுவேஷனும் 'ஹாட்ஸ் ஆப்' மிக்க்ஷின். சரி முடிச்சு தான் அவிந்து விட்டதே என்று நினைத்தால் அதன் பிறகும் கடைசி காட்சி வரை சஸ்பென்ஸ் சஸ்பென்ஸ் சஸ்பென்ஸ் தான்.

படத்தில் அதிகம் பேசியவர்கள் போலீஸ் மட்டுமே. மற்றபடி ஒவ்வொரு காட்சி அமைப்பும், ஒளிப்பதிவும், இசையும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அளவான நடிப்பு மட்டுமே காட்சிகளை நகர்த்துகிறது. பாதி திரையரங்கமே நிறைந்திருந்த போதிலும் அவ்வப்போது பலத்த கைதட்டல்கள் கேட்டன. காமெடி சீனுக்கோ, குலுக்கல் டான்ஸ்சுக்கோ, பறந்து பறந்து தாக்கும் சண்டைக்கோ அல்ல. படத்தின் இசைக்கும், காட்சி அமைப்புக்கும் கிடைத்த அங்கீகாரங்கள் அவை.

'முதல் மரியாதை' போன்ற படங்களில் ராஜாவின் பின்னணி இசையை வைத்தே படத்தின் கதையை காட்சி காட்சியாக சொல்லி விடலாம். அது போல் நீண்ட நாட்களுக்கு பிறகு ராஜாவுக்கென்றே அமைந்த படம். பின்னி எடுத்து விட்டார். நிசப்பதம் கூட சரியான தருணத்தில் ஒரு இசை தான் என்பதை பல இடங்களில் நிரூபித்துள்ள ராஜா, என்றுமே எங்கள் இசைஞானி இளைய ராஜாதான். அப்பப்பா. என்ன ஒரு பின்னணி இசை, படம் முழுதும். படத்தின் நாயகன்(!) மருத்துவ மாணவர் ஓரிரு காட்சிகளில் தப்பித்து ஓடும் போது ராஜாவின் இசை நம்மையே மிரட்டி  ஓட வைக்கிறது.

படம் முடிந்த பின் போடப்பட்ட டைட்டிலை கூட எழுந்து போகாமல் எழுந்தவர்கள் மீண்டும் உட்கார்ந்து பார்த்தது அப்படத்திற்கு படத்தில் பணியாற்றியவர்களுக்கு மரியாதையை செலுத்தும் விதமாக இருந்தது. Last but not the least, படம் முடிந்தவுடன் பலரும் கைதட்டினார்கள். A honor to a good movie.

அரைத்த மாவையே அரைத்துக்கொண்டு, தண்ணி, காதல், குத்துப்பாட்டு என்று ஒரே வகையான மசாலா படங்களுக்கு மத்தியில் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' வித்தியாசமான படம் மட்டுமல்ல. சினிமா ரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.  சினிமாவை நேசிப்பவர்கள் அவசியம் இந்த படத்தை ஒரு முறையேனும் பார்க்க வேண்டும். அதற்க்காகதான் இந்த பதிவு. படம் பார்த்து இரண்டு நாட்களாகியும் இன்னமும் ஓநாயில் ஆரம்பித்து கடைக்குட்டி ஆட்டுக்குட்டி வரை மனத்தில் இருந்து மறைய மாறுகிறது. பிறகு குழந்தைகளை அழைத்துக்கொண்டு போவதை தவிர்க்கவும். நான் போய் இருந்த போது பல குழந்தைகள், 'அம்மா வாம்மா வீட்டுக்கு போகலாம்' என அழ ஆரம்பித்து விட்டன. வயலன்ஸ் அதிகம் அல்லவா.

படத்தில் சின்ன சின்ன குறைகள். லாஜிக் இடித்தல்கள் உள்ளன. அவ்வளவு சீரியஸ் ஆபரேஷன் செய்து கொண்ட பின் இவ்வளவு ஆக்க்ஷன் அடிதடி ஒருவரால் செய்ய முடியுமா? சர்வ சாதரணமாக போலீஸ் ஆபீசர்களை ஆங்காங்கே சுட்டு விட்டு போய் கொண்டே இருக்கிறார்கள். ஒரு சிட்டிக்குள் இப்படி எல்லாம் நடக்குமா? அப்புறம் இந்த போலீஸ்காரர்கள் சல்யூட் அடிக்கிறார்களே, அது ரொம்ப செயற்கையாகவும் சில்லி தனமாகவும் தெரிகிறது.          



share on:facebook

1 comment:

bandhu said...

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பார்க்க ஆவலை தூண்டிவிட்டீர்கள். வ.வா.சங்கம் பார்த்து நீங்கள் நினைத்ததையே நினைத்தேன். சுத்த குப்பை. இது ஓடியது நேரம் காரணமாக மட்டுமே. இதெல்லாம் ஓடி ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஓடவில்லை என்றால் என்ன சொல்ல?

Post a Comment