Monday, October 10, 2011

குருட்டு மந்திரி, செவிட்டு அதிகாரி, ஊமை பிரதமர்

அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு நாள் மும்பைக்கு வருகை தந்ததிற்காக சாலையோரம் இருந்த ஐநூறுக்கும் மேற்ப்பட்ட தென்னை மரங்களை மொட்டை அடித்தார்கள். பத்துக்கும் மேற்ப்பட்ட போர் விமானங்களும்,  இருநூறுக்கும் மேற்பட்ட கடற்படை காவல் படகுகளும், கப்பல்களும் அவரின் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட்டன.

இங்கே தமிழக மீனவர்கள் தினந்தோறும் பிழைப்புக்காக  கூப்பிடும் தூரத்தில் உள்ள கச்சத்தீவிற்கு மீன் பிடிக்க செல்லும் போது இலங்கை இராணுவத்தாலும், இலங்கை மீனவர்களாலும் தாக்கப்பட்டும், அவர்களின் பொருட்கள் சூறையாடப்பட்டும் வருகின்றன. இது பற்றி தமிழக அரசோ, மத்திய அரசோ கண்டு கொள்வதே இல்லை.

விடுதலை புலிகள் ஆதிக்கம் இருந்தவரை எல்லா பழியையும் அவர்கள் மேல் போட்டார்கள். தமிழக மீனவர்களையும் விடுதலை புலிகளையும் இனம் காண முடியவில்லை. தமிழக மீனவர்கள் விடுதலை புலிகளுக்கு பொருட்கள் கடத்துகிறார்கள் என கூறிக்கொண்டு சுட்டுத்தள்ளினார்கள்.  இப்போது அவர்களுக்கு காரணம் சொல்ல ஏதுமில்லை. இருந்தும் சுடுகிறார்கள். கேள்வி கேக்க யாரும் இல்லை என்ற காரணத்தால்.  நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் ஒன்றாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் போதே இப்படி தாக்கப்படுகிறார்களே. இலங்கையில் யாரும் இல்லாத அனாதைகளாக வாழும் தமிழர்கள் நிலை என்னவாக இருக்கும்? 

நக்சலைட்டுகள் ஆபத்து நிறைந்த பகுதிகளில் பொது மக்களுக்கு ஆயுதம்  வழங்குகிறது அரசே. அது போல் தமிழக மீனவர்களுக்கும் ஆயுதம் வழங்கினால் ஒரு வேலை இம்மாதிரி மீனவர்கள் தாக்கப்படுவது நிற்குமோ?  இல்லை, கட்சத்தீவும் அதை சுற்றி உள்ள பகுதிகளும் ஒரு சில கிலோ  மீட்டர்கள்  சுற்றளவு தான். அப்படி இருக்கையில் அதன் அருகே இந்திய கடலோர காவல்  படை  படகுகள் ஒன்றிரண்டை அங்கு சுற்றி வர செய்தாலே  போதும். இந்த பிரச்சனைக்கு எளிதில் தீர்வு கண்டு விடலாம். இந்தியாவை பொறுத்தவரை இலங்கை ஒரு சுண்டைக்காய் தான். எல்லா விசயத்திலும். இருந்தும் என்ன காரணத்தால் யாரும் ஏதும் செய்ய மாட்டேன் என்கிறார்கள் என்பது ஒரு புதிராகவே உள்ளது.

இதே குஜராத்தை சேர்ந்த மீனவர்கள் இவ்வாறு தாக்கப்பட்டால் சும்மா இருந்து விடுமா மத்திய மாநில அரசுகள்? சண் டி.வி. மற்ற தமிழக  சானல்கள் தவிர எந்த ஒரு வட நாட்டு செய்தி சானல்களும் இது பற்றி வாய்  திறப்பதே இல்லை. இது இன்னொரு கொடுமை. 

இன்றைய  காலத்தில் தமிழக மீனவர்கள் ஒரு வீடியோ கேமராவில் இலங்கை ராணுவம் தாக்குதல் நடக்கும் போது அதை பதிவு செய்து பத்திரிக்கைகளுக்கு கொடுத்தால் அது நல்லதொரு பயனை தரும். இல்லை எது எதற்கோ ஸ்டிங் ஆப்பரேஷன் செய்து எல்லாவற்றையும்  அம்பலப்படுத்தும் பத்திரிக்கையாளர்கள் ஒரு முறை இம்மாதிரி ஒரு ஆப்பரேஷன் செய்து மக்களுக்கு உண்மைகளை வெளி கொண்டு  வந்தால் நன்றாக இருக்கும். நடக்குமா என் ஆசை?

இது எதுவுமே தேவை இல்லை. ஆமாம், தலைப்பு என்ன? 

குருட்டு  மந்திரி, செவிட்டு அதிகாரிகள், ஊமை பிரதமர். இவர்கள் தங்கள்  கண்கள், காதுகள் மற்றும் வாயை திறந்தால் போதும். செய்வார்களா?

கடைசியாக கேட்ட செய்தி: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடப்பதை  பற்றி பேச்சு வார்த்தை நடத்த இந்திய வெளியுறவு அதிகாரிகள் இலங்கையில் இருக்கும் போதே மீண்டும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டார்கள்.

share on:facebook

2 comments:

CS. Mohan Kumar said...

அமெரிக்காவிலும் இப்படியெல்லாம் நடக்குதா


ஆட்சிகள் மாறினாலும் மீனவர்கள் மீது தாக்குதல் குறையாதது வருத்தம் தருகிறது

Madhavan Srinivasagopalan said...

// கடைசியாக கேட்ட செய்தி //
மீட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் பாருங்க.. என்ன நடக்கப் போகுதுன்னு..

Post a Comment