Wednesday, June 15, 2011

அழகர் சாமியின் குதிரை - வெற்றிக்குதிரை


சமீபத்தில் வெளியான 'அழகர் சாமியின் குதிரை' பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த சில வருடங்களாக இம்மாதிரி கிராமிய மனத்துடன் குறைந்த பட்ஜெட்டில் நல்ல திரைக்கதையுடன் குடும்பத்துடன் எல்லோரும் உட்கார்ந்து பார்க்குமளவு அவ்வப்போது படங்கள் வெளிவருவது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.

குறிப்பாக அழகர் சாமியின் குதிரையில் எல்லாமே நன்றாக அமைந்திருந்தது. கிராம கோவில் திருவிழாக்களை பல படங்களில்  காண்பித்திருந்தாலும் இதில் ஒரு திருவிழாவை நடத்துவதற்கு முன்  நடைபெறும் நன்கொடை வசூலில் ஆரம்பித்து அதன் பிறகு திருவிழாவிற்கு   வந்து சேரும் உறவுகளை காண்பிப்பது வரை அனைத்திலும் இயக்குனரின் ஈடுபாடு பளிச்சென்று தெரிகிறது.

படம் முழுவதிலும் ஹிரோ ஹீரோயின் பத்து வார்த்தைகளுக்கு மேல் பேசியிருந்தால் அதுவே அதிகம். காட்சிகளும் சூழ்நிலைகளுமே திரைகதையை வழிநடத்தி செல்கிறது. சுவிசிலும் ஸ்காட்லாந்திலும்  கதைக்கு  சம்மந்தமே இல்லாமல் கதாநாயகன், நாயகி ஆடிப்படுவதை  பார்த்து பார்த்து அலுத்து போயிருந்த நமக்கு சைக்கிளில் வைத்தே ஒரு பாடல் (காதல்) காட்சியை  படமாக்கியிருந்தது புதுமை அருமை.

இரண்டு ஹிரோக்களுமே கதைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இன்ச் இன்ச்சாக மேக்கப்பை ஏத்தி திரையில் பள பலப்பாகவே ஹிரோக்களை  பார்த்த நமக்கு திரையில் வரும் கிராமத்து இளைஞன் மற்றும்  இரண்டாவது ஹிரோவின் (குதிரையின் சொந்தக்காரர்) தேர்வு கதைக்கு மிகவும் பொருந்தி இருக்கிறது. கதாநாயகிகள் தேர்வும் அசத்தல். 

சோகம், வெறுப்பு, கிராமத்து சண்டை, காதல் என்று இயல்பாக போகும்  கதையில்  ஆங்காங்கே சிறிது நகைச்சுவையும் மூட நம்பிக்கைக்கு  எதிரான கருத்துக்களும் என்று கதை சிறிது கூட தொய்வில்லாமல் நகர்ந்து செல்கின்றன. 

உள்ளூர் காவல் தெய்வம் (குதிரை) சிலை காணாமல் போன பின் திடீரென்று ஊருக்குள் வரும் ஒரு நிஜ குதிரையை ஊர்க்காரர்கள் தங்கள் காவல் தெய்வமே உயிருடன் வந்துவிட்டதாக எண்ணி கொண்டாடும் நேரத்தில் நிஜ குதிரையின் சொந்தக்காரர் வந்து தன் குதிரையை மீட்பதே கதை.  இதில் குதிரை காணாமல் போனதால் நின்று போன அவரின்  திருமணமும் குதிரையை கிராமத்து மக்களிடமிருந்து மீட்க முயற்சிக்கும் இலைஞனின் காதலும் நிறைவேறியதா என்பதே மீதிக்கதை.

படம் பார்த்த பிறகும் பளிச்சென்று நினைவில் நிற்பவை.

#சின்னஞ்சிறு  குழந்தைகளை  வேலைக்கு அனுப்பும் போது பெற்றோர்கள் படும் வேதனை.

#கோவில் நன்கொடை என வரும்போது அவரவர்களும் தங்களால் கொடுக்க முடிந்த நன்கொடையை தரும் காட்சிகள்.

#மென்மையான தங்கள் காதலை ஊருக்கு பயந்து அடுத்தவர்களுக்கு தெரியாமல் கண்களாலேயே பேசிக்கொள்ளும் காதல் பாசை.

#தன் ஒரே சொத்தான பொதி சுமக்கும் கழுதை மீது அதன் சொந்தக்காரர் வைத்திருக்கும் பாசம்.

#காவல் தெய்வ குதிரை காணாமல் போக காரணமாக இருந்த உள்ளூர் சிற்பியின் வறுமை. 

#படத்தின் முடிவில் கதைக்கு ஏற்றவாறு மக்களின் மூடநம்பிக்கைக்கு வைக்கும் வேட்டு.

இளையராஜாவின் இசை அருமை. இயக்குனர் சுசீந்திரன் பாராட்டுக்குரியவர். படத்தில் வரும் இரண்டு (பெயர் தெரியாத - பிரபலமாகாத) ஹிரோக்கள் ஹிரோயின்கள்  மற்றும் நிஜ குதிரை என்று அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பாருங்கள். நல்ல படம். 


share on:facebook

2 comments:

CS. Mohan Kumar said...

விமர்சனம் எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க !! கலக்குங்க. படம் இன்னும் பாக்கலை. பாக்கணும்

ஆதி மனிதன் said...

மோகன் குமார் said...
//விமர்சனம் எல்லாம் எழுத ஆரம்பிச்சிட்டீங்க !! கலக்குங்க..//

சும்மா டைம் பாஸ்:)

Post a Comment