Wednesday, October 7, 2009

"உ(எ)ன்னை போல் ஒருவன்"


ஏங்க... எழுந்திரிங்க. இன்னைக்கு உங்க G.M. ஆபீஸ்க்கு வராருன்னு சொன்னீங்க? மணி எட்டு ஆகுது.


எழுந்திரிக்க மனமில்லை. சற்று கழித்து ஒரு வழியா எழுந்து குளியலறை நோக்கி விரைந்தேன். குளித்து முடித்து அவசர அவசரமாக கிளம்பி ஆபிஸ் சென்றடைந்த போது மணி 9 இருக்கும்.

கிளார்க் மணி எதிரே தென்பட்டார். என்ன மணி G.M. எப்ப வரார்?

"இல்ல சார். அவரு இன்னைக்கு வரலை. அடுத்த வாரம் தான் வரார்".

நான் வேலை பார்ப்பது BSLN broadband customer service section. எப்ப பார்த்தாலும் எனக்கு ஸ்பீட் இல்ல, கனக்க்ஷன் கட்டாகுது, லிங்க் பிரேக் ஆகுதுன்னு ஒரே கம்ப்ளைன்ட் வந்த மாதிரியே இருக்கும். இதுல G.M. விசிட்டுனா கேக்கவே வேணாம்...

அப்படா. இன்னைக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கலாம் என்று எண்ணியபடி எனது கவுண்டருக்கு சென்று அப்போதுதான் அமர்ந்தேன்.

"Excuse me sir" என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன்.

"சார் எங்க வீட்டுக்கு வர இன்டர்நெட் கேபிள் அறுந்து  ரெண்டு நாள் ஆயிடுச்சு. நான் போன்ல எப்ப ரிங் பண்ணாலும் ரிங் போய்கிட்டே இருக்கு. யாரும் எடுக்க மாட்றாங்க. அதான் நேர்ல வந்தேன். எப்ப சார் வந்து சரி பண்ணுவீங்க?"

"சார். நீங்க இப்பதான் வந்து சொல்றீங்க. இனிமேதான் நாங்க யார் பிரீயா  இருக்குறாங்கன்னு பார்த்து அனுப்பனும். நாளைக்கு வேற sunday எப்படியும்  செவ்வாய் கிழமைக்குள்ள பார்த்து அனுப்புறேன்" என்றேன்.

"சார், நான் வீடுலேர்ந்துதான் வேலை செய்கிறேன். நான் செவ்வாய் கிழமை வரைக்கும் காத்திருக்க முடியாது சார். எனக்கு இன்னைக்கோ இல்ல நாளைக்கோ சரி பண்ணி கொடுங்க சார்"

"அதெல்லாம் முடியாதுங்க. ஏற்கனவே ஒரு டெக்னிசியன் லீவு. இருக்குற ஒருத்தர வச்சிக்கிட்டு நாங்க என்ன பண்ணுவோம். உங்க ஒருத்தருக்காக நான் எதுவும் செய்ய முடியாது. வேணும்னா நீங்க மேல A.E. இருக்காரு, அவர போய் பாருங்க".

வந்தவர் பதில் கேள்வி கேட்காமல் அல்லது கேட்க விரும்பாமல் ஏதோ முனுமுனுத்தபடி திரும்பி சென்றார்.
 
மணி கொண்டு வந்து வைத்திருந்த இன்றைய தினசரியை எடுத்து புரட்ட ஆரம்பித்த நேரத்தில் என் செல் போன் ஒலித்தது.


வீட்டிலிருந்து தான் அழைப்பு.

"என்னங்க நம்ம வீட்டுல இரண்டு நாளா ஒரு பேஸ் கரண்ட் வேலை செய்யல. நாலஞ்சு தடவ போன் பண்ணி சொல்லியாச்சு. ஒருத்தரும் இதுவரை வந்து பார்கலை. இன்னைக்கு E.B. ஆபிசுக்கு நேரே போய் என்னன்னு பார்த்துட்டு வந்துடுறிங்களா?

சரிம்மா, நான் இன்னைக்கு ப்ரீ தான். G.M. விசிட் கூட கான்சல். நான் இப்பவே போறேன்.

மணியை கூப்பிட்டு, நான் கொஞ்சம் வேலையா வெளிய போறேன். யாரும் கஸ்டமர் வந்தா, இன்னைக்கு G.M. விசிட். எல்லோரும் பிசியா இருக்காங்கன்னு சொல்லி சமாளி என்றபடியே வண்டி ஸ்டாண்ட் நோக்கி சென்றேன்.

அரை மணி நேரத்தில் E.B. ஆபிஸ் அடைந்து அங்கிருந்த Enquiry counter-இல் விசாரித்தேன். ஒருத்தர் தான் படித்துக்கொண்டிருந்த பேப்பரை மடக்காமலே நான் சொல்வதை மட்டும் கேட்டுகொண்டிருந்தார்.


"சார் எங்க வீட்டுல ரெண்டு நாளா ஒரு பேஸ் கரண்ட் இல்ல. நாலு அஞ்சி தடவ போன் பண்ணி சொன்னேன். ஆனால் இதுவரை ஒருத்தரும் வந்து பார்கலை...

"எல்லா விசாரிப்புகளுக்குப்பின், அங்க ரெண்டாவுது கவுண்டர் போய் பாருங்க" ... என்றபடி மீண்டும் தினசரியை எடுத்து புரட்ட ஆரம்பித்து விட்டார்.

அவருக்கு தேங்க்ஸ் சொல்ல கூட மனமில்லை. பின்ன.., என்னமோ பத்திரிகை ஆபிஸ்ல வேல பாக்குரமாதிரி பேப்பரையே பார்த்துகிட்டு பதில் சொல்றாரு. இவருக்கு பேப்பர் படிக்க காசு கொடுக்குறாங்களா இல்ல நமக்கு பதில் சொல்ல காசு கொடுக்குறாங்களா... பொலம்பிக் கொண்டே இரண்டாம் நம்பர் கவுண்டர் நோக்கி நடந்தேன்.

பேர்தான் இரண்டாவுது கவுண்டர். ஆனால் அது இருந்ததோ கடைசியில்...

Excuse me Sir. எங்க வீட்டுல ரெண்டு நாளா ஒரு பேஸ் கரண்ட் இல்ல. அதான் கம்ப்ளைன்ட் பண்ணலாமுன்னு வந்தோம்.

"இந்த complaint book-ல உங்க வீடு அட்ரஸ் போன் நம்பர் எல்லாம் எழுதி வச்சிட்டு போங்க. யாராவது வந்து பார்பாங்க"

சார் நான் நேத்தே எல்லா details சொல்லி போன்லையே கம்ப்ளைன்ட் பண்ணியாச்சு சார். ஆனா இதுவரைக்கும் யாரும் வந்து பார்கவே இல்ல. அதான் நேர்ல வந்தேன்.

இத ஏன் நீங்க முன்னாலேயே என்கிட்டே சொல்லல?

நான் இதல்லாம் enquiry-ல சொல்லித்தான் கேட்டேன். அவர் தான் உங்ககிட்ட அனுப்பினார்.

சரி சரி... பழைய கம்பளைண்ட்னா மேல முதல் மாடில அசிஸ்டன்ட் எஞ்சினியர் இருப்பாரு அவரை தான் நீங்க போய் பார்க்கணும். இந்த கவுண்டர் புது கம்பளைண்ட்க்கு மட்டும் தான்.

இக்கும்... விடிஞ்சது... மனதுக்குள் முனகிகொன்டே மேல் மாடி நோக்கி நடக்க தொடங்கினேன்.

மேலே முதல் மாடியில் அசிஸ்டன்ட் எஞ்சினியர் ரூமை தட்டினேன். உள்ளே இருந்து ஒருவர் எட்டி பார்த்து "என்னா சார் வேணும்?" என்றார்.

அசிஸ்டன்ட் எஞ்சினியர பார்க்கணும்.

அவர் வர நேரமாகும் சார். அப்படி உக்காருங்க. அவர் வந்தா நான் சொல்றேன்.

ஒரு அரை மணி நேரம் கழித்து  ஒருவர் ரூம் உள்ளே நுழைந்தார். இஞ்சினியர் ஆகத்தான் இருக்க வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் கழித்து, முதலில் என்னை விசாரித்தவர் வந்து, "சார் வந்துட்டாரு. உள்ளே போய் பாருங்க" என்றார்.

உள்ளே நுழைந்தேன். "குட்மார்னிங் சார்".

சொல்லுங்க என்ன வேண்டும்? என்றார் இஞ்சினியர்.

மீண்டும் எல்லா கதையையும் சொன்னேன்.

"சார் இங்க ரொம்ப ஆள் பற்றாகுறை. நாளைக்கு வேற sunday. உங்க ஏரியாவுல முளுக்க ப்ராப்ளம்னா ஏதாவுது ஆள் தேடி அனுப்பலாம். உங்க ஒரு வீட்டுக்காக இப்ப ஒன்னும்  பண்ண முடியாது. நீங்க monday வந்து எதுக்கும் பாருங்க" என்றார்.

"என்ன சார். ஏற்கனவே ரெண்டு நாளாச்சு. இன்னும் ரெண்டு நாள் ஆகும்றிங்கலே. நானும் கவர்மன்ட் ஸ்டாப் தான் சார். இப்படி சொன்ன எப்படி சார்". என்றேன்.

என்னால இதுக்கு மேல ஒன்னும் பண்ண முடியாது சார். வேணும்னா கீழ EC இருப்பாரு அவர் கிட்ட போய் சொல்லுங்க.

வேறொன்றும் சொல்லத் தோன்றாமல் நான் வெளியே வந்தேன்.

எல்லாரும் இப்படி பொறுப்பில்லாம பதில் சொல்றாங்களே ... இவங்கல்லாம் என்ன வேலை பார்கிறாங்க... E.C. மட்டும் என்ன செய்ய போறாரு. அவரும் ஏதாவுது சாக்கு வச்சிருப்பாரு. திங்கள்கிழமை வரை பாப்போம். அப்படி இல்லனா திரும்பி வந்து போராட வேண்டியதுதான். மனதுக்குள் எல்லோரையும் திட்டிக்கொண்டே வெளியே வந்து வண்டியை எடுத்தேன்.
 
எதிரே "உ(எ)ன்னை போல் ஒருவன்" பாணர் ஒன்று பெரிதாக தெரிந்தது.
share on:facebook

7 comments:

SUBBU said...

நோ கமெண்ட்ஸ்

கௌதமன் said...

தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று சொல்லுவார்கள்; தவிர, மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே என்றும் ஒரு பழமொழி! அவைகளை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது இந்தக் கதை - சிறந்த கற்பனை - நடைமுறையில் சாத்தியமே !
வாழ்த்துக்களுடன்
கௌதமன்
engalblog.blogspot.com

ஆதி மனிதன் said...

வருகை மற்றும் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி... கௌதமன் & சுப்பு.

ஸ்ரீராம். said...

நம்மைப் போல் பலர்!!

sriram said...

சொந்த ஆபீஸில் பல கம்ப்ளைண்ட் பற்றி எழுதிவிட்டு இவரை கரண்ட் ஆபிஸில் ஒருவரே திருப்பி அனுப்பி வைக்கிற மாதிரி எழுதியிருந்தா நல்லாருக்கும்னு நினைக்கிறேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

kannan said...

நல்ல யதார்த்தமான சிறுகதை
இது போல நானும் தாசில்தார் அலுவலகம் ,அரசு வங்கிகள் என பல மணி நேரம் காத்திருந்த அனுபவம் உண்டு ,இந்த சிறுகதையை பத்திரிக்கைகளுக்கு அனுப்புங்கள்


kannanvivega.blogspot.com

Madhavan Srinivasagopalan said...

"பேர்தான் இரண்டாவுது கவுண்டர். ஆனால் அது இருந்ததோ கடைசியில்..."

You entered the wrong door.. It(2nd counter) might have been closer to the other door.

Realistic story.. 'As u sow, u reap'.

Post a Comment