Showing posts with label 'ஆ'மெரிக்கா. Show all posts
Showing posts with label 'ஆ'மெரிக்கா. Show all posts

Thursday, October 24, 2013

அமெரிக்காவிலிருந்து TV கொண்டு வரீங்களா? அப்ப இத படிங்க மொதல.



பல லேட்டஸ்ட் மாடல் மின்னணு பொருட்கள் தற்போது இந்தியாவிலேயே குறைந்த விலைக்கு கிடைத்தாலும் ஒரு சில பொருட்கள் அமெரிக்காவில் இன்னமும் சீப் தான். அந்த வகையில் LED மற்றும் Smart டிவிக்கள் அமெரிக்காவில் விலை மிக குறைவு. அத்துடன் அங்கு நாம் பயன்படுத்தி இருப்போம். அதை இங்கு கொண்டுவருவதால் நமக்கு இரட்டை லாபம்.

அதிலும் 40 இன்ச் வரை எடுத்து வரப்படும் டிவிக்களுக்கு கஸ்டம்ஸ் ஒன்றும் டியூட்டி கட்ட சொல்லுவதில்லை (சமீபத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததால் டியூட்டி போடுவதாக கேள்வி. இருந்தும் கூட இந்திய விலையை ஒப்பிட்டால் லாபம் தான்). ஆனால் இங்கு வந்த பிறகு அதற்க்கு சில வேலைகளை செய்தால் தான் படம் பார்க்க முடியும்.

முதல் வேலையாக 110 டு 220 வோல்டேஜ் கன்வெர்டர் வாங்கி விடுங்கள். அதோடு சேர்த்து நீங்கள் எத்தனை இன்ச் டிவி கொண்டு வருகிறீர்களோ அதற்கென உள்ள ஸ்டெபிலைசர் வாங்கி விடுங்கள். இது எல்லாம் இருந்தால் கூட அமெரிக்க டிவி இங்கு வேலை செய்யாது. காரணம் அமெரிக்க டிவிக்கள் NTSC சிஸ்டத்திலும் இந்திய டிவிக்கள் PAL என்ற வேறொரு தொழில் நுட்பத்தில் வேலை செய்யக்கூடியவை. அமெரிக்க டிவியை இங்கு வெறுமனே கனெக்க்ஷன் கொடுத்தால் இருபது வருடத்திற்கு முன் கருப்பு வெள்ளை டிவியில் புள்ளி புள்ளியாக படம் தெரியுமே, அது போல் தான் பார்க்க முடியும்.

அப்ப என்ன செய்யறதுன்னு கேக்குறீங்களா? இரண்டு வழிகள் உண்டு. ஒன்று நீங்கள் இன்னும் ஒரு கன்வெர்டர் வாங்க வேண்டும். அதாவது NTSC டு PAL கன்வெர்டர். அல்லது HD வசதியுடன் உள்ள டிஷ் கனெக்க்ஷன் எடுக்க வேண்டும். இங்கு தான் மீண்டும் ஒரு பிரச்சனை. அதாவது அமெரிக்க டிவிக்கள் 60 Hz இல் வடிவமைக்கப் பட்டது. இந்திய டிவிக்களோ 50 Hz கொண்டவை. சோ, நீங்கள் HD கனெக்க்ஷன் வாங்கும் போது உங்களது HD பாக்ஸில் இந்த செட்டிங்கை மாற்ற வேண்டும். அது என்ன அவ்ளோ பெரிய மேட்டரான்னு கேட்டீங்கனா. இல்லீங்க, அது உங்கள் HD பாக்ஸை செட்டப் செய்ய வரும் டெக்னீஷியனை பொறுத்து தான்.

இதில் வீடியோகானின் D2H கனெக்க்ஷன் எடுத்தால் மட்டும் தானாக Hz செட் ஆகி விடுமாம். ஆனால் நான் TATASKY HD எடுத்து விட்டு படாத பாடு பட்டுவிட்டேன். முதலில் TATASKY யில் 60 Hz வசதியே இல்லை. சமீபத்தில் தான் இந்த வசதியை கொண்டு வந்துள்ளார்கள். 60 Hz செட்டப் எப்படி செய்வது என்பது அவர்களின் technician எவருக்கும் தெரியவில்லை. கனெக்க்ஷன் கொடுத்த பிறகு 'mode not supported' என்று மட்டும் தான் டிவியில் தெரிகிறது. வேறு ஒன்றும் தெரியவில்லை. பின் technician ஐ அனுப்பி விட்டு google முழுதும் மேய்ந்து மேலும் நண்பர்களிடம் அவர்களின் அனுபவங்களை கேட்ட பிறகு தான் 60 Hz எப்படி செட்டப் செய்வது என தெரிந்தது.

மறு நாள் மீண்டும் அதே technician ஐ வரவழைத்து நான் ஒவ்வொன்றாக சொல்ல சொல்ல அவர் செய்து முடித்தார். TATASKY போன்ற பெரிய நிறுவனங்கள் ஒரு வசதியை கொண்டு வந்த பின் அதை எப்படி install செய்வது என்று கூட அவர்களின் technician களுக்கு சொல்லி கொடுக்கவில்லை. இவர்களுக்காக நான் இரண்டு மூன்று மணி நேரம் இணையத்தில் தேடி எப்படி செய்வது என சொல்ல வேண்டி உள்ளது.

சரி அப்ப நீங்க எப்ப அமெரிக்காவிலிருந்து டிவி எடுத்து வர போறீங்க?


 




share on:facebook

Tuesday, September 10, 2013

வெள்ளைக்கார புள்ளைத்தாச்சி


நடைமுறையில் அமெரிக்கவிற்கும் இந்தியாவிற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு. புதிதாக அமெரிக்கா செல்வோர் ஆரம்ப நாட்களில் பல சங்கடங்களுக்கு ஆளாவர். உதாரணமாக லைட் போட வேண்டும் என்றால் சுவிட்சை மேலே அமுக்கினால் தான் அங்கு 'ஆன்'. (பெரும்பாலான) பூட்டுக்கள் கிளாக் வைஸ் திருப்பினால் அது லாக் ஆகும். நம்மூரில் அது ஓபன் ஆகும். இப்படி பல சொல்லிக்கொண்டே போகலாம். என்னடா தலைப்பிற்கும் சப்ஜட்டுக்கும் சம்மந்தம் இல்லை என பாக்குறீங்களா? மேலே படியுங்கள்.

மேற்சொன்ன பல விஷயங்கள் நான் அங்கு போவதற்கு முன்பே எனக்கு தெரியும். காரணம் அங்கு சென்று வந்த நண்பர்கள் கூறி கேட்டது. பலருக்கும் கூட தெரிந்திருக்கும். ஆனால் அமெரிக்காவில் என்னை மிகவும் கவர்ந்தது இரண்டு விஷயங்கள். 1. குழந்தை வளர்ப்பு. 2. மாசமாக இருக்கும் பெண்கள்.

முதலில் குழந்தை வளர்ப்பை பார்ப்போம். கை குழந்தைகளை அவர்கள் கையாளும் முறை சற்றே வித்தியாசமானது. நம்மூரில் குழந்தை பிறந்து ஒரு 3-5 மாதங்கள் நம்மிடம் கொடுக்க கூட மாட்டார்கள். கேட்டால், உர விழுந்துடும், கழுத்து நிக்கல பார்த்து புடி அப்படி இப்படின்னு, ஆனால் அங்கு பிறந்து ஒன்றிரண்டு நாள் குழந்தைகளை நெஞ்சில் தொட்டி மாதிரி (முண்டா பனியன் மாதிரி) ஒரு பையை மாட்டிக்கொண்டு அதற்குள் குழந்தையை உட்கார்ந்த வாக்கில் வைத்துக்கொண்டு வேக வேகமாக நடப்பார்கள். அந்த குழந்தையின் கழுத்து பெரும்பாலும் கீழே தொங்கியபடி தான் இருக்கும்.

அதே போல் கைகுழந்தையை கூட குழந்தையின் ஒரு கையை பிடித்து தூக்கி பார்த்திருக்கிறேன். அப்போதும் குழந்தையின் கழுத்து கீழே தொங்கியபடி தான் இருக்கும். ஏன் அந்த ஊர் குழந்தைகளுக்கு மட்டும் கழுத்தில் உரம் விழ வில்லை?

அதே போல் நான் கவனித்த இன்னோர் விஷயம் குழந்தைகளுக்கு ஊசி போடுவது. கைகுழந்தைகளை கூட அங்கு உட்கார வைக்கிறார்கள். உட்கார வைத்து ஏதோ மாட்டுக்கு குத்துவது போல் ஊசி குத்துகிறார்கள் சாரி போடுகிறார்கள். 


இரண்டாவது, மாசமாக இருக்கும் பெண்கள். மூன்று மாதங்கள் என்று தெரிந்தாலே இங்கு அப்படி நடமா, இப்படி உட்காரும்மா என்று மாசமாக இருக்கும் பெண்களுக்கு பயங்கர அட்வைஸ் செய்து கேட்டிருக்கிறேன். ஆனால் அங்கு ஒருவர் மாசமாக இருப்பது அவரின் வயிற்றை வைத்து தான் தெரிந்து கொள்ள முடியும். மற்றபடி மற்றவர்களை விட அவர்கள் மிகவும் வேகமாக நடப்பதும், எப்போதும் போல் வண்டி ஓட்டுவதும் அவர்களின் செயல்களை பார்த்தால் நமக்கு பயமாக இருக்கும்.

அதே போல் பிரசவத்திற்கு முதல் நாள் அல்லது அந்த நிமிஷம் வரை வேலைக்கு செல்வார்கள் (ஆனால் எந்த நிமிடமும் அவசர உதவி 911 அவர்களுக்கு கிடைக்கும் என்பது வேறு). இதற்க்கு வேறு ஒரு காரணமும் உண்டு. நம்மூர் போல் மருத்துவமனையில் போய் தேவை இன்றி நாமும் படுத்துக்கொள்ள முடியாது. மருத்துவமனைகளும் அதற்க்கு  அனுமதிக்காது. பெரும்பாலும் மருத்துவ காப்பீடு மூலமே அங்கு சிகிற்சைகள் மேற்கொள்ள படுவதுதான் அதற்க்கு காரணம். இல்லை என்றால் பிறகு இன்சூரன்ஸ் கம்பெனிக்கு பதில் சொல்ல நேரிடும்.

பிரசவத்தின் போது கணவர் உடன் இருப்பதும், குழந்தை பிறந்தவுடன் அதை புகைப்படம் எடுத்து வெளியிடுவதும் அங்கு வழக்கம். இன்னொரு விசித்திரமான நடைமுறை/சட்டம் அங்கு உண்டு. பிரசவத்திற்கு பிறகு மனைவி குழந்தையை வீட்டுக்கு அழைத்து செல்லும் முன் உங்கள் காரில் குழந்தையை வைத்து எடுத்து செல்வதற்கான பேபி சீட் பொருத்தப்பட்டுள்ளதா அது குழந்தையின் எடையை தாங்குமா என பரிசோதித்த பின்னே அவர்களை டிஸ்சார்ஜ் செய்வார்கள்.

'ஆ'மெரிக்க கதைகள் தொடரும்....


share on:facebook

Thursday, February 7, 2013

அமெரிக்க வாழ்க்கை: அதிகம் விரும்புவது ஆண்களா அல்லது பெண்களா?


இந்த பதிவு பெண்களை தவறாகவோ தரம் தாழ்த்தியோ எழுதும் எண்ணத்தில் எழுதப்படவில்லை. நான் கண்ட/கேட்டவற்றை வைத்து தான் இதை பகிர்கிறேன்.

அமெரிக்க வாழ்க்கை அனுபவம் என்பது இரண்டு வகை. ஒன்று தனியாகவோ/அல்லது கணவன் மனைவியாக அங்கு வாழ்வது. இரண்டாவது குழந்தைகளுடன் ஒரு முழு குடும்பமாக அங்கு இருப்பது. என்னை பொறுத்த வரையில் தனியாகவும் குடும்பமாகவும் அங்கு இருக்கும் வாய்ப்புகள்  கிடைத்தது. இதில் அதிக சுவாரசியம்/அனுபவங்கள் குடும்பத்துடன் இருந்த போது தான்(நம்பிட்டேன்...என்று வீட்டு அம்மணி சொல்வது கேட்கிறது).

சரி அதற்குள் போகும் முன் இந்திய பெண்களுக்கு அமெரிக்கா அதிகம் பிடிப்பதற்கான காரணங்களை இப்போது பார்ப்போம். மேலோட்டமாக சொல்லப்போனால் அங்கு அவர்களுக்கு வீட்டில்/மற்றும் வெளியிலும் கிடைக்கும் சுதந்திரம் தான் அமெரிக்க வாழ்க்கை பிடித்து போக முக்கிய காரணம். அதை தவிர எனக்கு தெரிந்து சில குறிப்பிட்ட காரணங்களை தான் கீழே குறிப்பிட்டுளேன்.

# உடைகள்: சென்னையை தாண்டி ஒரு பெண் ஜீன்ஸ் அணிந்து வெளியில் நடந்தால் அதை பொதுஜனம் எப்படி பார்ப்பார்கள் என நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால் அங்கு அவர்களுக்கு பிடித்தமான உடைகளை (இந்திய பெண்களை பொறுத்த வரையில் பெரும்பாலானோர் கவுரவமான உடைகளை தான் அணிவர்) அணிந்து கொள்ளலாம். யாரும் கேள்வி கேட்க போவதில்லை. சில ஊர்களில் அங்கிருக்கும் குளிருக்கும் வெயிலுக்கும் ஜீன்ஸ் மற்றும் ஸ்கர்ட்ஸ் அவசியமும் கூட. அதே போல் அவர்களுக்கான உடைகளும் சற்று சல்லிசு தான். இங்கு ஒரு பட்டுபுடவை வாங்கும் காசுக்கு அங்கு ஒரு டசன் உடைகளை வாங்கி விடலாம். நமக்கும் காசு மிச்சம் தானே!

# பெர்சனல் டைம்: பெண்களுக்கு அங்கு நல்ல பெர்சனல் டைம் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் எந்திரங்கள் இருப்பதாலும், வீட்டை பெருக்க, சுத்தம் செய்ய என்று பெரிதாக ஒன்றும் இல்லாததால் (அமெரிக்காவில் பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் தான் வீட்டை  (vacuum cleaning) சுத்தம் செய்வார்கள் ஹி..  ஹி... ஹி...) அவர்களுக்கென்று நிறைய நேரம் கிடைக்கும். இதற்க்கு இன்னமொரு முக்கிய காரணம், பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால் பெரும்பாலும் அவர்களுக்கு வீட்டு பாடங்கள் குறைவாகவே இருக்கும் அல்லது இருக்கவே இருக்காது. அப்படியே இருந்தாலும் அதை அவர்களே தான் செய்து கொள்ள வேண்டும். அம்மாக்கள் துணை தேவை படாது.

#குக்கிங்: அடுத்ததாக சமையல். இது ஒரு பொருட்டே இல்லை அமெரிக்காவில். இதை விட வேறு என்ன வேண்டும் அவர்களுக்கு? ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள்/பழங்களை ஒரு தடவை வாங்கி வந்தால் போதும். தண்ணீரில் கழுவ கூட தேவை இல்லை. அப்படியே நறுக்கி போட்டு சமைத்து விடலாம். பத்திரங்கள் கழுவுவது போன்ற வேலைகளும் அதிக கஷ்டமில்லை. டிஷ் வாஷர் இருக்கையிலே. ஒரு கட்டத்தில் சாண்ட் விச், பீட்சா, நூடுல்ஸ், பாஸ்டா என அவ்வப்போது சாப்பிட பழக்கி கொள்வதால் தினமும் மூன்று வேளையும் சமைக்க வேண்டும் என்ற கொடுமை அங்கு அவர்களுக்கு கிடையாது.   

#நட்பு: நம்மூரிலேயே அவர்களது நட்பு வட்டாரம் பெரிதாக தான் இருக்கும். அங்கு கேட்க வேண்டுமா? எங்கள் கம்பெனியில் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட பணியாளர்கள் என்னுடன் பணியாற்றினாலும் எல்லோரையும் எனக்கு தெரியாது. ஆனால் அவர்களுக்கு துணைவியார் இருந்தால் அவர்கள் அனைவரும் நண்பி(பர்)களாக எல்லோரையும் தெரிந்து வைத்து இருப்பார்கள். நாம் வீட்டுக்கு வந்து அலுவலகத்தில் நடந்த கதையை சொல்லி முடிக்கும் முன்பே இது தான் எங்களுக்கு தெரியுமே. ரேஷ்மா சொன்னாள், ரேகா சொன்னாள் என்று சொல்லி நமக்கு பல்பு கொடுத்து விடுவார்கள்.

#டிரைவிங் த்ரில்: அடுத்ததாக டிரைவிங் சான்ஸ். நம்மூரில் சைக்கிள் ஓட்ட திண்டாடுவான் கூட அமெரிக்காவில் ஒரே வாரத்தில் கார் ஒட்டி விடுவான். அந்த அளவுக்கு டிரைவிங் அங்கு பழகுவதற்கும் ஓட்டுவதற்கும் ஈசி. அந்த வகையில் கார் ஓட்ட கற்றுக் கொண்டால் போதும். பெண்களுக்கு அங்கு டிரைவிங் செய்வது ரொம்ப பிடிக்கும். இந்தியா போனால் மீண்டும் கார் ஓட்ட முடியுமோ முடியாதோ என்ற எண்ணத்தில் எப்போதும், நான் தான் காரை ஓட்டுவேன் என்று விடாபிடியாக நம்மிடம் காரை பிடுங்கி ஓட்டும் போது  அவர்களுக்கு கிடைக்கும் சந்தோசம் ஒரு பட்டு புடவை வாங்கி கொடுத்தால் கூட கிடைக்காது என்றே எண்ணத் தோன்றும்.

#தனி குடித்தனம்(No offensive!): இது எல்லாவற்றுக்கும் மேலாக, அவர்கள் பொதுவாக விரும்பும் தனி குடித்தனம். அதாவது மாமனார், மாமியார், நாத்தனார் என்ற எந்த பிச்சு பிடுங்கல் இல்லாமல் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று எந்த பிரச்னையும் இல்லாமல்(!) வாழலாம் என்ற சூழ்நிலை.

#தன்னம்பிக்கை: எனக்கு தெரிந்து நண்பர்கள் வீட்டிலும் சரி, என் வீட்டிலும் சரி, முதல் தடவை அமெரிக்கா சென்ற போது அவர்களிடம் இருந்த பயம், தன்னம்பிக்கை இன்மை, கூச்ச சுபாவம் எல்லாம் அடுத்த முறை காணமல் போய் விட்டது. இது அவர்களே ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம்.

இப்போ சொல்லுங்கள் அமெரிக்க வாழ்க்கை பெண்களுக்கு அதிகம் பிடிக்குமா பிடிக்காதா என்று? ஆமாம், ஆண்களை பற்றி கூறவேயில்லை என்பவர்கள் அடுத்த பதிவு வரை காத்திருக்க வேண்டுகிறேன்...

இதை கூட நீங்கள் விரும்பி படிக்கலாம்...

இந்தியா: ஒரு வெள்ளைக்கார இந்திய மனைவியின் பார்வையில்...

ஊர் உலகமெல்லாம் சண்டை போடும் அமெரிக்காவில் வீட்டில் சண்டை போட முடியாது.







share on:facebook

Tuesday, December 4, 2012

அதிரடி அயல்நாட்டு சட்டங்கள். அதிர்ச்சியில் இந்திய பெற்றோர்கள்.

//நான் ஒரு முறை இம்மாதிரி பிரச்சனையில் மாட்ட வேண்டியது. நல்ல வேலை தப்பித்தேன்//

நேற்று நார்வே நீதிமன்றம் ஒன்று தங்கள் குழந்தையை கொடுமை படுத்தினார்கள் என்பதற்காக அக்குழந்தையின் இந்திய பெற்றோருக்கு தந்தைக்கு 18 மாதமும் தாய்க்கு 15 மாதமும் சிறை தண்டனை வழங்கி உள்ளது. இது பெரும்பாலானோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அயல் நாடுகளில் பல வருடங்கள் குடும்பத்துடன் வாழ்ந்த எனக்கே இது சற்று பயத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலே போவதற்கு முன், இந்தியாவிலிருந்து வெளி நாடு செல்லும் நண்பர்கள் யாராக இருந்தாலும் அந் நாட்டிற்கு செல்லும் முன், அந்நாட்டின்  முக்கியமான சட்ட திட்டங்களை, வரைமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இன்று எல்லா இடங்களிலும் இந்தியர்கள் தமிழர்கள் இருக்கிறார்கள். அதனால் அது ஒன்றும் பெரிய காரியமில்லை.

உதாரணத்திற்கு சிங்கப்பூர் மலேசியாவில் சுத்தம் மிக முக்கியம். நம்மூர் மாதிரி ரோட்டில் பேப்பர் அது இது என்று எதை போட்டாலும் 500 டாலர் 1000 டாலர் என்று பைன் போடுவார்கள் என்று தெரியும். சவூதி போன்ற நாடுகளில் மற்ற மதங்களின் வழிபாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்காக கடுமையான சட்டங்கள் உண்டு.

ஏன் நாம் மட்டும் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தருவதில்லையா? நாம் பெற்ற குழந்தைகளை நமக்கு கண்டிக்க, அடிக்க உரிமை இல்லையா என சிலர் கேட்கலாம். எந்த நாடாக இருந்தாலும் அங்குள்ள சட்டங்கள் அங்குள்ள பிரச்சனைகளின் அடிப்படையில் தான் உருவாக்கி இருப்பார்கள். அப்படி பார்க்கும் போது, மேலை நாடுகளில் பரவலாக குழந்தை கொடுமைகள் உண்டு. அதற்க்கு காரணம் அவர்களுக்கு குழந்தைகள் மேல் பாசம் இல்லை என்றில்லை. இன்னும் சொல்லப்போனால் நம்மை விட அவர்கள் அதிக நேரம் குழந்தைகளுடன் செலவிடுவார்கள். ஆனால், தனி மனித சுதந்திரம், விருப்பு வெறுப்பு என வரும்போது குழந்தை பாசம் அங்கே குறுக்கே வராது.

விவாகரத்து என்பது அங்கு சர்வ சாதாரணம். கணவன் மனைவியிடையே பிரச்னை உருவாகும் போது நம்மை போல் என் குழந்தைக்காக, குடும்பத்திற்காக தான் நான் பொறுத்து போகிறேன் அப்படி இப்படி எல்லாம் வசனம் பேசிக்கொண்டு இருக்க மாட்டார்கள் அவர்கள். அப்போது இந்த குழந்தை பாசமும் குறுக்கே வராது. கோர்ட் உத்தரவு படி யாராவது ஒருவர் பராமரிப்பில் குழந்தை வளரும். பெற்றோர் மட்டுமல்ல, குழந்தைகளும் இதை சாதரணமாக எடுத்துக்கொள்ளுங்கள்.

அவ்வாறு பெற்றோர் பிரியும் போது நம்மூர் போலவே அப்பவோ அம்மாவோ மறுமணம் செய்து கொள்ளும் போது 'சித்தி/சித்தப்பா' கொடுமைகளை சில குழந்தைகள் சந்திக்க நேரிடும். அது மட்டுமின்றி 'சைல்ட் அப்யூசர்ஸ்' நிறைய பேர் அங்கு இருப்பார்கள். அம்மாதிரி கொடுமைகளை தண்டிக்க மேலை நாட்டு அரசுகள் கடுமையான சட்ட திட்டங்களை பின்பற்றுகின்றன. இதில் தான் நம் இந்திய பெற்றோர்கள் விட்டில் பூச்சி போல் மாட்டிக்கொள்கிறார்கள்.

மேலை நாட்டில் உள்ள சட்டங்களை நாம் குறை கூறவும் முடியாது. அதே சமயம் அவர்களை போல் திட்டாமல், அடிக்காமல் நாம் குழந்தைகளை வளர்க்க முடியாது வளர்க்கவும் தெரியாது. நமக்கு ஒழுக்கம் அதிலும் நம் குழந்தைகள் ஒழுக்கமாக வளருவதற்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்வோம். ஆனால், அங்கோ, ஐந்து வயது குழந்தைக்கே தனி பெட் ரூம். அந்த ரூமிற்குள் செல்ல பெற்றோரே பெர்மிஷன் கேட்க வேண்டும்/தட்டிவிட்டு செல்ல வேண்டும். அப்படி பட்ட தனிமனித சுதந்திரம் உள்ள நாடுகள் அவைகள்.

ஆனால் இந்த குறிப்பிட்ட கைது/தண்டனை சம்பவம் பல சந்தேங்கங்களை கிளப்புகிறது. குழந்தை தன்னை பெற்றோர்கள் திட்டினார்கள், ஒழுங்காக நடக்கவிட்டால் இந்தியா திருப்பி அனுப்பி விடுவோம் என மிரட்டினார்கள் என்பதையெல்லாம் எப்படி குழந்தை கொடுமை என்று எடுத்துக்கொண்டார்கள் என தெரியவில்லை. எந்த நாட்டிலும் குழந்தைகளை சாதரணமாக (அதாவது பொது இடத்தில் அல்லாமல்) திட்டுவது ஒன்றும் பெரிய குற்றமில்லை. அதே போல் கண்டிப்பதும். பிசிகல் அப்யூஸ் தான் குற்றமாக கருதப்படும்.

அதே போல் சம்பவம் நடந்து ஆறு மதங்களுக்கு மேல் அதுவும் குழந்தைகள் தற்போது இந்தியாவில் உள்ள போது இம்மாதிரி பெற்றோர்களை சிறையில் அடைப்பது அநியாயம். இரண்டும் விபரம் அறியா குழந்தைகள். அவைகள்  அம்மா அப்பாவை பார்க்காமல் தவித்து விடாதா? அதிபட்சம் அவர்கள் வெர்பல் அப்யூஸ் செய்தததாக புகார் வந்திருந்தால் அவர்களை கூப்பிட்டு முதலில் ஒரு வார்னிங் செய்திருக்கலாம்.

முதலில் பெற்றோர்கள் திட்டினார்கள் என கூறிய அந்நாட்டு போலீஸ் தற்போது குழந்தை மீது காயங்களும் தழும்புகளும் இருந்தது என கூறுகிறது. குழந்தைகள் ஆறு மாதமாக இந்தியாவில் இருக்கும் போது இவ்வாறு குற்றச்சாட்டு வைப்பது பல சந்தேகங்களை கிளப்புகிறது. எது எப்படியோ, மக்களுக்காக தான் சட்டங்கள். அது எந்த நாடாக இருந்தாலும். இந்த பிரச்சனயை பொறுத்த வரை குழந்தையை திட்டினார்கள் என்பதற்கு சிறை தண்டனை என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அக் குழந்தைகளுக்காவது பெற்றோர் இருவரையும் உடனடியாக நார்வே அரசு விடுதலை செய்ய வேண்டும். அது தான் என் வேண்டுதலும் விருப்பமும்.

அதை விட முக்கியம். வெளி நாடு செல்லும் பெற்றோர்கள் அந்நாட்டு சட்ட திட்டங்களை தெரிந்து கொண்டு அதன் படி நடப்பது. நான் ஒரு முறை இம்மாதிரி பிரச்சனையில் மாட்ட வேண்டியது. நல்ல வேலை தப்பித்தேன். முடிந்தால் தனி பதிவாக போடுகிறேன். 

share on:facebook

Thursday, September 20, 2012

'ஆன்சைட்டா' அந்தப்புரமா?. IT படுத்தும் பாடு பார்ட் - 2



கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆயிட்டா எல்லா பெண்களையும் மற்ற பெண்கள் துளைத்து எடுக்கும் கேள்வி, என்ன 'விஷேசம் ஏதும் இல்லையா' என்பது. அது போல் IT யில் வேலைக்கு சேர்ந்த சில வருடங்களில் எல்லோரும் கேக்கும் கேள்வி. 'எப்போ ஆன்சைட்'? அருள் இல்லார்க்கு அவ்வுலகில்லை. அது போல் ஆன்சைட் போகதவருக்கு IT யில் மதிப்பில்லை.

சென்ற பதிவில் IT கம்பெனிகளில் வேலையில் சேர்வது அவ்வளவு ஒன்றும் சுலபமான காரியமில்லை என்பதை கூறி இருந்தேன். இந்த பதிவில் அப்படியே ஒரு வழியாக வேலையில் சேர்ந்து விட்டாலும் அதோடு வாழ்க்கையில் செட்டில் ஆகி விட முடியுமா என்பதை பார்ப்போம்.

முதல் பாராவில் கூறி இருந்தது போல், எப்படி ஒரு நடிகன் தன் வாழ் நாள் கனவாக 'ஆஸ்கார்' விருதை பெற்றிட வேண்டும் என நினைப்பானோ, எப்படி ஒரு அரசியல் கட்சியின் தலைவருக்கு மாநில முதல்வர் பதவியோ அது போல் தான் பெரும்பாலான IT ஊழியர்களுக்கு 'ஆன்சைட்' கனவு.

'ஆன்சைட்' என்பது பெரும்பாலும் IT யில் வேலை பார்ப்பவர்கள் உபயோகப்படுத்தும் சொல். அது வேறொன்றும் இல்லை. அமெரிக்கவோ அல்லது பிற ஊர்களுக்கோ வேலை நிமித்தம் செல்வதை தான் 'ஆன்சைட்' போவதாக சொல்வார்கள். இதற்கு காரணம். நாம் வேலை பார்ப்பதே அவர்களுக்காக தான். அவர்கள் இடத்திற்கே சென்று வேலை பார்ப்பதை. On site என்று கூறுவார்கள்.

ஆன்சைட் வாய்ப்பு என்பது பெரும்பாலும் அவரவரின் அதிர்ஷ்டம் மற்றும் திறைமையை பொறுத்து. சில நேரங்களில் ஒன்னும் தெரியாதவன் ஒரே மாதத்தில் ஆன்சைட் செல்வான் சிலருக்கோ அதற்க்கு பல வருடங்கள் ஆகும். சரி அப்படி என்னதான் இருக்கு அந்த ஆன்சைட்டில் என கேப்பவர்களுக்கு...

# நல்ல சம்பளம் (இந்தியாவை ஒப்பிடும் போது)
# தான் பார்க்கும் வேலைக்கு ஒரு அங்கீகாரமாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.
# தன் வேலையில் மேலும் முன்னேற இதுவும் ஒரு வாய்ப்பு.
# மனைவி குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு அமெரிக்கா/இங்கிலாந்து  போன்ற வளர்ந்த நாடுகளில் போய் சுற்றி பார்க்கும்/வசிக்கும் வாய்ப்பை தரும்.
# இவை எல்லாவற்றுக்கும் மேலாக குண்டு சட்டிக்குள்ளேயே குதிரை ஒட்டிக் கொண்டிராமல் உலகம் சுற்றும் வாய்ப்பு கிடைக்கும் போது அதனால் கிடைக்கும் அனுபவங்கள் ஏராளம் ஏராளம்.

அப்படி பட்ட ஆன்சைட் வாய்ப்புகள் இப்போது நிறைய இருந்தாலும் ஆன்சைட் பயணம் என்பது முன்பு போல் இப்போது இல்லை. முன்பு யார் வேண்டுமானாலும் (கம்பெனி நினைத்தால்) ஆன்சைட் போகலாம். இப்போது அமெரிக்கா மற்ற நாடுகளில் வீசா வழங்குவதில் நிறைய கெடுபிடிகள் கொண்டு வந்து விட்டார்கள். ஒரு முறை போய் விட்டு வரவே சிலருக்கு மூச்சு முட்டுகிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை தற்போது நினைத்தாலும் பெருமையாகவும், திருப்தியாகவும் இருக்கிறது.

'ஆன்சைட்' பயணம் பொதுவாக இரு வகை படும். 1. ஷார்ட் டெர்ம் என சொல்லப்படுகிற குறுகிய கால பயணம். 2. லாங் டெர்ம் என சொல்லப்படுகிற நீண்ட கால பயணம். இரண்டு வகையிலும் வசதிகளும் உள்ளன. சிரமங்களும் உள்ளன. அவைகளை பார்க்கும் முன், அந்த காலத்தில் ராஜாக்கள், ஊரில் உள்ள மிக சிறந்த அழகியையோ அல்லது பணக்கார நாட்டு ராஜாவின் இளவரசியையோ பெரும் பணம், பொருள் நாடு என்று திருமணம் செய்திருந்தாலும் அரண்மனைக்கு அப்பால் ஒரு அந்தபுரம் கட்டாயம் இருக்கும்.

அதற்கு காரணம், அந்தபுரத்தில் கிடைக்கும் உல்லாசமும், கவலை, பொறுப்புகள் இல்லாத வாழ்க்கையும், அந்தபுரத்தில் இருக்கும் தருணம் வரை நாடு, வீடு என அனைத்துப் பொறுப்பையும் யாராவது ஒருவர் பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்திருப்பார். அந்த மாதிரி தான் ஆன்சைட் பயணங்களும் எங்களுக்கு (யாராவது இப்படி சொன்னதுக்கு சண்டைக்கு வரதா இருந்தா, நீங்க ஆன்சைட்ல எங்க எப்படி இருக்கீங்கன்னு விலா வாரியா சொல்லுங்க. அதுக்கப்புறம் பார்ப்போம் உங்க பக்கம் நியாயம் இருக்கானு).

ஐயா, தலைப்புக்கு சரியான விளக்கம் கொடுத்தாச்சு...இப்போ ஜூட்....அடுத்த பதிவில் மேலும் படுத்தலாம்...

தொடர்புடைய பதிவுகள்...

IT (வேலை) படுத்தும் பாடு...


share on:facebook

Tuesday, May 15, 2012

பழைய பேப்பர், பாத்திரங்களுக்கு அமெரிக்க டாலர்...


பழைய பேப்பர், பாத்திரங்களுக்கு பேரிச்சம்பழம்... பள்ளி பொது தேர்வு முடிந்தவுடன் நம்மூரில் இப்படி கத்தியபடி அடிக்கடி சைக்கிளில் தெரு தெருவாக சுற்றி வருவார்கள். சிறுவனாக இருக்கும் போது இதற்க்காகவென்றே ஒரு நோட்டு விடாமல் எழுதிய பக்கங்களை கிழித்து அதை சேமித்து பழைய பேப்பருக்கு போட்டு அந்த பணத்தை அம்மாவிடம் வாங்கிக்கொண்டு சினிமாவுக்கு சென்று விடுவேன்.

வழக்கம் போல் இதற்கும் ஒரு அமெரிக்க கதை இருக்குமே என்கிறீர்களா?... ஆம். குறிப்பிட்ட பழக்கவழக்கங்களில் நாம் ஊறிப் போகும்போது அதற்க்கு நேர் மாறாக ஏதாவது ஒன்றை பார்த்தால் சில நேரங்களில் ஆச்சர்யமாகவும் சில சமயம் அருவருப்பாகவும் கூட இருக்கும். பன்றி கறியை சாப்பிடுவர்களை பார்த்து நமக்கு குமட்டினால், கோழி கறி சாப்பிடும் நம்மை பார்த்து சைவர்களுக்கு குமட்டும். அது போல் தான் இதுவும்.

அமெரிக்காவில் மிகவும் பிரபலமானது 'கராஜ் சேல்ஸ்'. அதாவது, உங்கள் வீட்டில் உங்களுக்கு உபயோகம் இல்லாமல் அல்லது பழசாகிப் போய் அதை நீங்கள் உபயோக படுத்தாமல் இருந்தால் அம்மாதிரி வீட்டில் உள்ள எல்லாவற்றையும் திரட்டி அதை அவர்கள் வீட்டின் முன் விற்பனைக்காக கடை பரப்பி விடுவார்கள். கராஜ் என்பது பொதுவாக கார் நிறுத்தும் இடத்தை குறிக்கும். அங்கு தான் அமெரிக்கர்கள் பலரும் அனைத்து தட்டு முட்டு சாமான்களையும் போட்டு வைத்திருப்பார்கள். அதனால் தானோ என்னவோ இப்பெயர். சில சமயங்களில் நமக்கு வேறு எங்கும் கிடைக்காத பொருட்கள் இம்மாதிரி கராஜ் சேல்சில் கிடைக்கும். வீட்டில் உள்ள பெரியவர் குழந்தைகள் என அனைவரும் இதை ஒவ்வொரு வருடமும் குளிர்காலம் முடிந்து வெயில் காலம் ஆரம்பிக்கும் போது மிகுந்த சந்தோசத்துடன் செய்வார்கள்.

சில வீடுகளில் வீதிக்கு வந்திருக்கும் பொருட்களை ஒரு லாரியில்  ஏற்றலாம். அவ்வளவு இருக்கும். சிலர் இதற்கென்று ஒரிஜினல் கல்லா பெட்டி வைத்து வியாபாரம் செய்வார்கள். தெருவை சுற்றி கராஜ் சேல் பற்றி விளம்பர பதாதைகள் ஒட்டி விடுவார்கள். இம்மாதிரி இடத்தில் பொருள் வாங்குகிறோமே என யாரும் வெட்க பட மாட்டார்கள். அமெரிக்கர்கள் எதற்கு தான் வெட்கப் பட்டார்கள் என கேட்கிறீர்களா?

ஆம், உபயோகித்த உடைகள், செருப்புகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என ஆரம்பித்து பெண்கள் உபயோகப் படுத்திய (நன்கு இண்டஸ்டரியல் வாஷ் செய்யப்பட பின்) உள்ளாடைகள் கூட அங்கு கிடைக்கும்.

அதே போல் அமெரிக்காவில் பழைய கார்களுக்கும் ஒரு மார்க்கெட் உண்டு. பழைய கார்களை வாங்க விற்க என்றே பல வலை தளங்கள் உண்டு. உங்கள் பழைய கரை நீங்கள் விற்க வேண்டும் என்றால் kbb.com போன்ற வலை தளங்களில் உங்கள் காரை பற்றிய எல்லா விபரங்களையும் அளித்தால் போதும். உங்கள் காரின் தற்போதைய சந்தை மதிப்பு என்ன வென்று காட்டி விடும். வாங்குபவர்களும் பெரும்பாலும் kbb.com மதிப்பு பார்த்து தான் வாங்குவார்கள். குறிப்பாக உங்கள் காரின் பிராண்ட், தயாரித்த வருடம், அதுவரை ஓடியுள்ள மைல்கள், காரில் உள்ள வசதிகளை பொறுத்து காரின் விலையை நிர்னைப்பார்கள்.

அமெரிக்காவில் ஸ்பீடா மீட்டரை யாரும் மாற்றிவைக்க முடியாது. அப்படி செய்தால் அது கடுமையான குற்றம். அது மட்டுமன்றி ஒவ்வொரு வண்டிக்கும் இங்கு ஹிஸ்டரி பராமரிக்கப் படும். வண்டி வாங்கும் நாள் முதல் ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் இங்கு தானாக பதிவு செய்யப் படுகிறது. அதாவது ஸ்பீடா மீட்டரில் அவ்வப்போது தெரியும் வண்டி ஓடிய அளவும் சேர்த்து. அந்த வகையில் பெரிதாக நாம் ஏமாந்து விட  முடியாது.

அமெரிக்க வாழ் இந்தியர்களை பொறுத்தவரையில் பெரும்பாலானோர் இரண்டு/மூன்று வருடம் முதல் ஆறு வருடங்கள் வரை அமெரிக்காவில் தொடர்ந்து வேலை செய்யும் வைப்பு கிடைக்கும் (கிரீன் கார்ட் நபர்கள் கணக்கில் இல்லை). இவர்களில் பெரும்பாலானோர் வீட்டிற்கு தேவையான சோபா, டைனிங் டேபிள், கார் என பலவற்றை செகண்ட் சேல்சில் தான் எடுப்பார்கள். ஒன்று இவர்கள் வேலை பார்க்கும் கம்பெனியில் உள்ளவர்கள் மூலம் இவர்களுக்கு தேவையான பொருட்கள் பற்றிய விபரம் கிடைக்கும் அல்லது இதற்கென்று உள்ள வலைத்தளங்கள் மூலம் பார்த்துக் கொள்ளலாம்.

இவை எல்லாவற்றையும் விட அமெரிக்காவில் வீட்டை காலி செய்யும் போது ஒரு பொருளையும் அங்கு விட்டு வர முடியாது. அதாவது சில பொருட்களை நாம் குப்பை தொட்டி அருகே கூட வைத்து விட்டு வர முடியாது. எல்லாவற்றையும் பொருளுக்கு தகுந்த மாதிரி முறையாக 'டிஸ்போஸ்' செய்ய வேண்டும். உதாரணமாக நம்மூர் போல் பாட்டரி, ஆயில் வேஸ்ட், மின்சார பல்புகளை போன்றவற்றை குப்பை தொட்டியில்  தூக்கி போட்டு விட முடியாது. அவைகளை அந்தந்த மாகாண சட்டப்படி  முறையாக 'டிஸ்போ' செய்ய வேண்டும். இல்லை என்றால் அதற்கும் அபராதம் தான்.
ஆக மொத்தம், புதிதாக அமெரிக்கா செல்லும் போதும் கஷ்டம். பின் அமெரிக்காவை விட்டு செல்லும் போதும் கஷ்டம் தான். அங்கு இருக்கும் வரைதான் எல்லா வாழ்வும், வசதியும்.

share on:facebook

Wednesday, May 2, 2012

ஊர் உலகமெல்லாம் சண்டை போடும் அமெரிக்காவில் வீட்டில் சண்டை போட முடியாது.



ஊர் உலகமெல்லாம் வழிய போய் சண்டை போடும் அமெரிக்காவில் நாம் வீட்டிற்க்குள் சண்டை போட முடியாது. ஆம், நாலு சுவத்துக்குள்ள நம்ம சண்டை நடந்தாலும் அதை பக்கத்து வீட்டுகாரன் பார்த்தால் உடனே 911 கால் செய்து விடுவார்கள். டொமஸ்டிக் வயலன்ஸ் என்று ரிப்போர்ட் ஆனால் பெரும்பாலும் உடனடியாக காப்பு தான். 

அதே போல் அலுவலகத்திலோ அல்லது வேறு எங்குமோ ஒருவர் செய்கை நமக்கு பிடிக்க வில்லையென்றால் கூட அல்லது ஒருவருடன் பிரச்னை என்றால் அவருடன் நீங்கள் சண்டை போடலாம். ஆனால், முகத்தில் நாம் கோவத்தை காண்பிக்க கூடாது. சிரித்துக் கொண்டே தான் அவருடன் சண்டை போட வேண்டும்(அதாவது அட்லீஸ்ட் உணர்சிகளை காட்டாமல் இருக்க வேண்டும்). இல்லையென்றால் அப்யூஸ் என்று குற்றம் சாட்டி விடுவார்கள்.

நாம் பெற்ற குழந்தை என்றால் கூட அவர்கள் மீது நமக்கு ஓரளவு தான் உரிமை. அதாவது நம் குழந்தை தப்பு செய்தாலோ, சரியாக படிக்கவில்லை என்றாலோ அவர்களை அடிக்க கூட முடியாது. அப்படியே அடித்தாலும் அதை அவர்கள் வெளியில் சொல்லாத வரை ஒன்றும் பிரச்னை இல்லை. பள்ளி ஆசிரியரிடமோ வேறு யாரிடமோ சொல்லிவிட்டால் அங்கிருந்தே 911 கால் போய் விடும். இம்மாதிரியான சிக்கல்கல்களில் பெரும்பாலும் இந்தியர்கள் மாட்டிக் கொள்வதுண்டு. அதாவது இந்நாட்டு சட்ட திட்டங்கள் தெரியாததாலும் நம் குழந்தை மீது நமக்கு இல்லாத உரிமையா என்ற நினைப்பிலும் கொஞ்சம் அதிகப் படியாக நடந்து கொண்டால் பின்னர் சிக்கல் தான்.

அதே போல் முகம் தெரியாத சிறுவர் சிறிமியரிடம் இங்கு ஓரளவு தான் நட்பாக பழகலாம். நம்மூர் போல் தெரியாத குழந்தையை ஒரு பொது இடத்திலோ/பார்க்கிலோ மிக அழகாக இருக்கிறது என்று பார்த்து சிரித்தாலோ கொஞ்சினாலோ அதன் பெற்றோர்களுக்கு சந்தேகம் வந்து விடும். அதற்க்கு காரணம் இங்கு குழந்தைகளை கெட்ட செயலுக்காக ஒரு சில கயவர்கள் கடத்துவதும் அல்லது கட்டாயப் படுத்துவதுமே காரணம். அம்மாதிரி செய்து தண்டனை பெற்றவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் தண்டனை முடிந்து வெளியே வந்தால் கூட அவர்களுக்கு எலக்டிரானிக் கருவிகளை காலில் கட்டி விட்டு விடுவார்கள். அவர்களின் நடமாட்டம்/நடவடிக்கைகளை கண்காணிக்க. 

எனக்கு பெர்சனாலாக நடந்த ஒரு சம்பவம். அப்போது மினசோட்டாவில் நாங்கள் இருந்த போது என் குழந்தை ஒரு பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் வயதுடைய (சுமார் 3 -4 வயது) ஒரு குழந்தையும் எங்களுடன் சேர்ந்து விளையாட ஒரு கட்டத்தில் நாங்கள் மூவரும் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ வந்த அக்குழந்தையின் தாய் என்னை பார்த்து சத்தம் போட ஆரம்பித்து விட்டார். யார் நீ? நீ ஏன் என் குழந்தையுடன் விளையாடுகிறாய்? உன் வீடு எங்கே என்று அநேகமாக கம்பிளைன்ட் செய்யும் அளவுக்கு போய் விட்டார். நான் என் குழந்தை அங்கு விளையாடுவதை காண்பித்து இது எங்கள் அபார்ட்மென்ட் பார்க் எனவும் வேண்டு மென்றால் அபார்ட்மென்ட் மானேஜரை கேளு என்று கூறிய பின் தான் அவருக்கு என் மேல் இருந்த சந்தேகம் தீர்ந்தது.

இம்ம்...நல்ல விசயங்களை பகிரும் போது இது மாதிரி சம்பவங்களையும் பகிர தானே வேண்டும்.   

share on:facebook

Monday, April 30, 2012

பள்ளிகளை இழுத்து மூடும் உரிமை பெற்ற பெற்றோர்கள் - அமெரிக்காவின் அசத்தல் சட்டம்.


"Parent Trigger Law" - அமெரிக்காவில் சில மாகாணங்களில் மட்டும் இச் சட்டம் நடை முறையில் உள்ளது. இதனால் என்ன பயன் என்கிறீர்களா? இச் சட்டத்தின் மூலம் ஒரு பள்ளி சரிவர இயங்கவில்லை என அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் நினைத்தால் அப் பள்ளியையே இழுத்து மூடி விட முடியும். அது மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட ஆசிரியர், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் என யாரை வேண்டுமானாலும் பெற்றோர்கள் முடிவு செய்தால் வோட்டெடுப்பின் மூலம் அவர்களை மாற்றலாம். அது மட்டுமில்லை. அப்பள்ளி எப்படி இயங்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் நினைத்தால் அதையும் அவர்கள் அவர்கள் மாற்றலாம்.


அமெரிக்காவை பொறுத்தவரை பெரும்பாலானோர் அரசு (பப்ளிக்) பள்ளிகளில் தான் படிப்பார்கள். தனியார் பள்ளிகள் மிகவும் குறைவு. அது தவிர தனியார் பள்ளியில் படிக்க வைக்க வேண்டுமானால் பெருமளவு பணம் செலவு செய்ய வேண்டும். ஆனால் அரசு பள்ளிகள் அப்படி இல்லை. கிண்டர் கார்டன் முதல் உயர்நிலை பள்ளி வரை, அதாவது கல்லூரி செல்லும் வரை ஒரு பைசா (சென்ட்) கட்டனமாகவோ, புத்தகம், ஸ்பெஷல் பீஸ் அந்த பீஸ் இந்த பீஸ் என எந்த ஒரு கட்டணமும் கிடையாது. புத்தகங்கள் கூட பள்ளியிலேயே கொடுத்து விடுவார்கள். இது எல்லாம் எப்படி சத்தியம் என நீங்கள் கேட்கலாம்.

அதற்க்கு காரணம், நம்மூர்ரில் ஒரு நகராட்சி பள்ளி இருந்தால் அதில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் ஏதோ அவர்கள் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக சொல்லி கொடுப்பதாகவே நினைப்பு. அரசாங்கம் தானே நமக்கு சம்பளம் கொடுக்கிறது? மாணவர்களா கொடுகிறார்கள் என்ற அவர்களின் எண்ணம். அதே போல், பொது மக்களும் அது ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளி. அங்கு தரமான கல்வி கிடைக்காது என்று பல காரணங்கள்.

இவை எல்லாவற்றையும் விட முக்கிய காரணம், நம் வரி காசில் தான் ஒரு நகராட்சி நடக்கிறது என்பதை நாம் மறந்து விடுகிறோம். அதே போல் நகராட்சி உறுபினர்கள் அதன் தலைவர் என எல்லோரும் அவரவர் சார்ந்த கட்சியின் பலத்தாலேயே பதவிக்கு வருகிறார்கள். இதற்க்கு ஒரே தீர்வு குறைந்த பட்சம் உள்ளாட்சியிலாவது மக்கள் சுயேச்சையாக போட்டி இடும் நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அது மட்டுமில்லாமல், இங்கு எல்லோரும் பப்ளிக் பள்ளியிலேயே படித்து வருவதால் ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் இது நான் படித்த பள்ளி. இங்கு என் குழந்தையும் நன்றாக படித்து முன்னேறும் என்ற நம்பிக்கை வைத்துள்ளார்கள். சமீபத்தில் தமிழகத்தில் (மதுரையில் என நினைக்கிறேன்) ஒரு மாவட்ட கலெக்டர் தன குழந்தையை நகராட்சி பள்ளியில் சேர்த்ததாக படித்தேன். என்ன ஒரு ஆழமான, பரந்த நோக்கம். தன குழந்தை ஒரு அரசு பள்ளியில் படித்தால் அப்பள்ளியில் பணியாற்றும் அனைவரும் ஒழுங்காக வேலை பார்ப்பார்கள். மற்ற பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை அங்கு சேர்ப்பார்கள் என நினைத்து தான் அந்த முடிவிற்கு வந்திருப்பார் என நினைக்கிறேன்.

அந்த மாதிரியான ஒரு சூழல் தான் அமெரிக்காவில் பெரும்பாலான பள்ளிகளில் உள்ளது. அதனால் தான் அனைத்து அரசு பள்ளிகளும் இங்கு நன்கு இயங்குகின்றன.

அதே போல் ஒரு நிலைமை நம் நாட்டிலும் ஏற்படுமா? நிச்சயம் ஏற்படும். எப்போது? அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர்கள் எல்லாம் அவர்கள் வாங்கும் சம்பளம் மக்கள் கொடுக்கும் வரிப் பணம் என்பதை உணரும்போது. நல்லவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கும் போது. நல்லவர்கள் அரசியலுக்கு வரும் போது. வந்தபின்பும், வெற்றி பெற்ற பின்பும் நல்லவர்களாகவே இருக்கும் போது.

share on:facebook

Thursday, April 26, 2012

அமெரிக்க குப்பைகள்


இன்று உலகத்திலேயே அதிக குப்பைகளை உருவாக்குபவர்கள் அமெரிக்கர்கள் தான். நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு அமெரிக்கரும் சராசரியாக 3-4 கிலோ குப்பைகளை உருவாக்குகிறார்கள். ஆண்டொன்றுக்கு ஒவ்வொருவரும் 100 டன் குப்பைகளை உருவாக்குவதாக கணித்துள்ளார்கள். இது மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட அளவு. 

இவ்வாறு பெருகிக் கொண்டிருக்கும் குப்பைகள் அனைத்தும் பெரிய பெரிய மலைகளுக்கு இடையே உள்ள பள்ளத்தாக்கில் குவிக்கப் பட்டு மக்கி வைக்கப் படுகிறது. இன்னும் சொல்லப் போனால், பல குடியிருப்புகள், நகரங்கள் இந்த குப்பை மேட்டின் மீதுதான் எழுப்பப் பட்டுள்ளது. அமெரிக்கர்களின் குப்பைகளில் அதிகம் இடம் பிடிப்பது உணவு/கோக் போன்ற கேன்கள் தான். அதற்க்கு அடுத்த படியாக உணவு பொட்டலங்களின் மிச்சங்கள். அதே போல் ஒவ்வொரு பொருளும் இங்கு பாக் செய்யப்பட்டே விற்கப் படுகின்றன. ஒரு சாதாரண கேமரா வாங்கினால் அதனுடன் வரும் பாக்கிங் மட்டும் பல டப்பாக்கள் சேரும். இது எல்லாமே குப்பைகள் தான். இம்மாதிரி பாகிங்களுக்கே அதன் தயாரிப்பாளர்கள் அதிகமாக செலவு செய்கிறார்கள். 

குப்பைகளை பற்றிய ஆராய்ச்சியை Garbology என சொல்கிறார்கள். Edward Humes என்பவர் தன்னுடைய Our dirty love affair with trash என்கிற தன் நூலில், அமெரிக்காவில் குப்பைகள் எப்படி உருவாக்கப் படுகிறது, அவை பிறகு எவ்வாறு கையாளப் படுகிறது என்பதை அழகாக எடுத்துக் கூறியுள்ளார். அவரின் கணக்குப் படி லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் அமைந்துள்ள மலை அடிவாரங்களில் மட்டும் நூற்றுக்க் கணக்கான மில்லியன் டன் குப்பைகள் புதைக்கப்பட்டுள்ளன. இதனால் உருவாகும் மீதேன் வாய்வினால் பல கெடுதல்கள் ஏற்படும் என எச்சரித்துள்ளார். அது மட்டுமில்லாமல், மில்லியன் கணக்கான பிளாஸ்டிக் பொருட்கள் இங்குள்ள பசிபிக் கடலில் கலந்து போய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பொதுவாக முப்பது சதவிகிதத்திற்கும் மேலான குப்பைகள் முறையாக அழிக்கப் படுவதில்லை. இவை பெரும்பாலும் பிளாஸ்டிக் குப்பைகளே. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தான் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு வந்தது. முதன் முதலில் பிளாஸ்டிக்கை வைத்து லாண்டரி பைகள் தான் உருவாக்கப் பட்டது. நாளடைவில் எல்லாவற்றுக்கும் பிளாஸ்டிக் பை உபயோகத்திற்கு வந்து தற்போது உலக சுற்று புற சூழலையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.


சரி, இந்த அமெரிக்க குப்பைகளால் யாருக்கு லாபம் என்கிறீர்களா? சைனாவுக்கு தான். சைனாவின் முதல் பெண் மில்லியனர் 49 வயதான Zhang Yin  அவர்களின் தொழிலே அமெரிக்காவிலிருந்து குப்பைகளை வாங்கி சீனாவில் அதை ரீ சைக்ளிங் செய்து அதையே மீண்டும் கார்ட் போர்ட், பாக்கிங் பேப்பர் என்று தயாரித்து அதை மீண்டும் அமெரிக்கவிற்கே விற்பது தான் அவரின் Nine Dragons Paper கம்பெனியின் பிசினஸே. 

கடைசியாக அமெரிக்காவில் குப்பைகள் குறைந்து போனால் அப்போதே அங்கு பொருளாதார வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது என்பதற்கான அறிகுறி. ஆம், மக்கள் பொருட்களை வாங்கினால் தானே குப்பைகள் பெருகும். வாங்கும் திறன் குறைந்து போனால் குப்பைகளும் குறைந்து தானே போகும்.

நம்ம ஊர் செய்தி: எனக்கு தெரிந்து சென்னையில் நான் பார்த்த பல குளங்கள் சில காலங்களில் குப்பைகள் கொட்டப் பட்டு குப்பை மேடான பிறகு அவை ஒன்று பார்க்காகவோ, அப்பார்ட்மென்ட்டாகவோ மாறி போனதை பார்த்திருக்கிறேன்.      

share on:facebook

Wednesday, April 25, 2012

யூனிவர்சல் ஸ்டுடியோஸ் ஒரு ஜாலி டூர் - நீங்களும் வாங்க...


கலிபோர்னியா எப்படி IT கம்பெனிகளுக்கு பிரபலமானதோ அதே போல் பொழுது போக்கு அம்சங்களுக்கும் பிரபலம். குறிப்பாக லாஸ் ஏஞ்சலஸில் அமைந்துள்ள டிஸ்னி லான்ட் மற்றும் யூனிவர்சல் ஸ்டுடியோஸ் போன்றவைகள் வாழ்க்கையில் அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்.

யூனிவர்சல் ஸ்டுடியோஸ் - பெரும்பாலானோர் தெரிந்துவைத்திருப்பார்கள். இந்தியாவில் பாலிவுட், கோலிவுட் எல்லாம் அமெரிக்காவில் உள்ள ஹாலிவுட்டை குறிக்கும் விதமாகவே பெயர் வைத்து அழைக்கப் படுகிறது. அப்படிப்பட்ட ஹாலிவுட்டில் தான் யூனிவர்சல் ஸ்டுடியோவும் அமைந்துள்ளது. இந்த ஸ்டுடியோவை முழுதும் சுற்றி பார்க்க குறைந்தது ஒரு வாரம் ஆகும். 

ஸ்டுடியோவில் உள்ள முக்கியமான பகுதிகளை மட்டும் இப்போது  பார்க்கலாம். ஸ்டுடியோ முழுதையும் ஓரளவு சுற்றி பார்க்க வசதியாக 'யூனிவர்சல் டூர்' என்று ஒரு பெரிய ட்ராமில் உட்கார வைத்து சுற்றி காண்பிக்கிறார்கள். இந்த பாதையில் ஸ்டுடியோவில் நிரந்தரமாக செட்-அப் செய்யப்பட்ட குடியிருப்பு பகுதிகள், மற்ற வகையான கட்டடங்கள் போன்ற எல்லாம் முகப்பு மட்டும் வடிவமைத்து இருப்பார்கள். பின் பக்கம் பார்த்தால் ஒன்றுமே இருக்காது. தேவைக்கு ஏற்றாற்போல் வண்ணம் மற்றும் அமைப்பை மாற்றிக் கொள்வார்கள் போலும். அது தவிர பிரபலாமான ஆங்கிலப் படங்கள் தயாரித்த போது போட்ட செட்களும் அங்கு பார்க்கலாம். இதை தவிர ரெக்கார்டிங் தியேட்டர் மற்ற திரைப்பட தயாரிப்பு சம்பந்தப் பட்ட கட்டிடங்களை வரிசையாக வெளியில் இருந்து பார்க்கலாம்.  

இதே 'டூரில்', ஹை-டெக் கார் நடனம் ஒன்றை பார்க்கலாம். பார்க் செய்யப்பட்டது போல் முதலில் தெரியும் இரண்டு கார்கள் திடீரென்று உயரே எழும்பி இடையிடையே கொழுந்து விட்டு எழும்பும் தீ சுவாளைகளுக்கு மத்தியில் நடனமாடும். அடுத்த சிறிது தூரத்தில், டிராம் நிறுத்தப் படும். திடீரென்று ஏற்பட்ட வானிலை மாற்றத்தின் காரணமாக மழை வந்தாலும் வரலாம். அதலால், பயணிகள் சற்று நனைய வாய்ப்புண்டு என்ற அறிவிப்பை தொடர்ந்து, வானில் மின்னலும், இடியோசையும் கேட்கும். ஒ..மழைதான் வந்துவிட்டதோ என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே திடீரென்று சுற்றிலும் உள்ள பழைய கால கட்டடங்களிலிருந்து வெள்ளம் கதவுகளை பிளந்து கொண்டு பெருக்கெடுத்து ஓடி வரும். அதே போல் வானத்திலிருந்து மழை பொத்துக் கொண்டு ஊற்றும். எல்லாமே அர்டிபிசியல். அடுத்த சில நிமிடங்களில் நம் வண்டி நகரும் முன் அந்த இடமே மழை பொழிந்தது போல் தெரியாத அளவிற்கு பழைய நிலைமைக்கு காட்சி அளிக்கும். அந்த அளவிற்கு பார்த்து பார்த்து செட் அப் செய்திருப்பார்கள்.

அடுத்து ஒரு சிறிய ஓடையை நம் வண்டி கடந்து செல்லும். அப்போது 'ஜாவ்ஸ்' திரைப் படத்தில் வந்த 'சீன்' போல் திடீரென்று ஒரு சிறிய ஷார்க் தண்ணீரில் இழுந்து வெளியே வந்து நம்மை பயமுறுத்தும். இப்படி ஒவ்வொன்றாக நம்மை வியப்பிற்கும், பிரம்மிப்பிற்க்கும் அழைத்துச் செல்லும். இவை அனைத்தையும் நம்முடன் வரும் அறிவிப்பாளர் நமக்கு விரிவாக வர்ணனை கொடுத்துக் கொண்டே வருவார். ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளுக்கு என தனி தனியாக டிராம் வண்டிகள் உண்டு. நாம் பார்த்து ஏறி உட்கார வேண்டும்.

இதை தொடர்ந்து காணப் போகும் காட்சி தான் தற்போது மிக பிரபலம். கடந்த பல வருடங்களாக வைத்திருந்த ஒரு 'தீம்மை' தற்போது உள்ள தொழில் நுட்ப வசதியுடன் மாற்றி அமைத்து மிகவும் சிறப்பாக அமைத்திருக்கிறார்கள். அது...அடுத்த பதிவில்.

யூனிவர்சல் ஸ்டுடியோ பக்கம் வந்தால் நம்ம வீட்டுக்கும் வாங்க. பக்கத்தில் தான் நான் வசிக்கிறேன்.

share on:facebook

Sunday, April 15, 2012

அமெரிக்க Step Fathers and Step Mothers


நம்மூரில் சில, மீண்டும் சொல்லிக் கொள்கிறேன் சில பெண்கள் தங்கள் துப்பட்டாவை அதன் உண்மையான பயன் பாட்டுக்கு மேல் பயன் படுத்துவார்கள். அதாவது மாரப்பை மறைக்க பயன் படுத்துவதை தாண்டி தங்கள் முகத்தையும் அதனால் மறைத்துக் கொள்வதை பார்த்திருக்கிறோம். ஒன்று டூ வீலரில் போகும் போது. மற்றொன்று தங்களுக்கு பிடித்த இனியவருடன் அதே டூ வீலரில் பின்னால் உட்கார்ந்து கொண்டு/கட்டி பிடித்துக் கொண்டு செல்லும் போது தங்களை யாரும் பார்த்து விட கூடாது என்பதற்காக.

இதற்க்கெல்லாம் காரணம் நம்மூர் கலாச்சாரம் பண்பாட்டின் படி திருமணம் ஆகும் முன் இன்னொரு ஆணுடன் சேர்ந்து செல்வதை இன்னமும் நம் சமூகம் ஏற்றுக் கொள்ளாது என்பதால். அதே நேரம், மேலை நாடுகளில் அவ்வாறான கலாச்சாரம் இல்லை என்பது நம்முடைய பொதுவான கருத்து. அது பெருமளவில் தவறு. கண்ணியமானவர்களும் நல்ல கலாச்சாரமும் உலகெங்கும் பரவி இருக்கிறது. என்ன ஒன்று? நமக்கு தவறாக தெரியும் ஒன்று வேறொரு கலாச்சாரத்தின் படி அவர்களுக்கு சரியாக படும். இது பல காலமாக நாம் கடை பிடித்து வரும் முறைகளினாலும் பழக்க வழக்கத்தினாலும் ஏற்படுவது.  

சரி நான் சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன். சமீபத்தில் அமெரிக்காவில் பிரபலமான கால் பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் ஒருவர் (இவர் ஏற்கனவே திருமணமானவர்) இன்னொரு பெண்ணுடன் தனியாக தனது காரில் சென்றார் என்ற குற்றச்சாட்டின் காரணமாக தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப் பட்டுள்ளார். அதாவது இதுவும் ஒரு காரணமாக கூறப் படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் திருமணமான ஒருவர் வேறொரு பெண்ணுடன் தனியாக செல்வது ஒன்றும் ஒரு பெரிய குற்றமான காரியமாக நமக்கு தெரிவில்லை என்றாலும், அவ்வாறு அவர் செய்திருக்க கூடாது என்பதற்கு அவர்கள் கூறும் காரணங்கள்...

திருமணமான இவர், தன் மனைவிக்கு தெரியாமல் வேறொரு பெண்ணுடன் தனியாக காரில் செல்வது என்பது தன் மனைவிக்கு செய்யும் துரோகம். அதே போல் அவர் தனது அணிக்கும் ஏன் துரோகம் செய்ய மாட்டார் என்பது தான் அணியின் தலைமை குழு தற்போது எழுப்பும் கேள்வி. அமெரிக்காவில் குடும்ப உறவுகள் அவ்வளவு வலுவானது இல்லை என்பது தெரிந்த ஒன்று தான். இருப்பினும் தற்போது அங்கும் குடும்ப உறவுகளை காத்து நெடுநாள் அதே கணவன்-மனைவியுடன் உறவுகளை தொடரவே விரும்புகிறார்கள்.

ஆனால், அதே நேரத்தில் பிடிக்காதவருடன் நம்மை போல் காலம் முழுதும் குழந்தைகள், குடும்ப கவுரவம் போன்ற காரணங்களுக்காக அவர்கள் தொடர்ந்து வாழ விரும்புவதில்லை. அதே போல் இங்குள்ள குழந்தைகளும், தங்கள் தந்தையோ, தாயோ வேறொருவரை திருமணம் செய்து கொள்ளும் சூழ்நிலையில் புதிதாக வரும் அம்மாவையோ, அப்பாவையோ ஸ்டேப் பாதர், ஸ்டேப் மதர் என மிகவும் ஈஸியாக புது உறவுகளை ஏற்றுக் கொண்டு அவர்களோடு ஒன்றி விடுகிறார்கள்.

அதே போல் கணவன்/மனைவி பிரிந்து போன பின் அந்த நிகழ்வையும் அவர்கள் முதலில் சற்று வருத்தமாக இருந்தாலும் பெரும்பாலனோர் மறு மணம் செய்த பின் மை எக்ஸ் ஹஸ்பண்ட/எக்ஸ் வைப் என்று சர்வ சாதாரணமாக அடுத்தவர்களிடம் பேசிக் கொள்வார்கள். அதே சமயம் நீண்ட நாள் கணவன் மனைவியாக இருக்கும் தம்பதிகள், நாங்கள் இருபது வருடங்கள் கணவன் மனைவியாக வாழ்கிறோம் எங்களுக்கு திரு'மணம் ஆகி முப்பது வருடங்கள் ஆகின்றன என்பதை பெருமையாக கூறிக் கொள்வார்கள்.

ஒரு முறை என் குழந்தையின் தோழி எங்கள் வீட்டிற்கு வார விடுமுறையில் வந்திருந்தாள். மாலை வீட்டுக்கு கிளம்பும் போது, நான் கொண்டு வந்து விடவா என கேட்டேன். அதற்க்கு அவள், இல்லை நான் எங்கள் அம்மா வீட்டிற்க்கு போகிறேன். என் அப்பா என்னை என் அம்மா வீட்டில் விட்டு விடுவார் என கூறியதை கேட்டு முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதன் பிறகு தான் என் மகள், 'her parents got separated Dad' என்று புரிய வைத்தாள். இதை விட கொடுமை என்ன வென்றால் இருவரும் அடுத்த அடுத்த தெருவில் தான் பிரிந்து வசிக்கிறார்கள். இப்படி பட்டவர்களை தான் அமெரிக்காவில் சிங்கிள் மாம், சிங்கிள் டாட் என்பார்கள். ஹ்ம்ம்...அமெரிக்கா சில சமயம் 'ஆ'மெரிக்கா தான்.
     

share on:facebook

Thursday, April 5, 2012

அமெரிக்கர்கள் அறிவாளிகளா சோம்பேறிகளா ?


பொதுவாக அமெரிக்கர்கள் மற்றும் மேலை நாட்டவர்களை நாம் அறிவாளிகளாகவே பார்த்து வருகிறோம். வெள்ளை தோல் உள்ளவர்களை எல்லாம் வெள்ளை காரர்கள் (ஆங்கிலேயர்கள்) என்று நாம் நினைத்துக் கொள்வது போல் தான் இதுவும்.

ஆனால், அமெரிக்கா சென்ற சிறு காலத்திலேயே அவர்கள் எல்லாம் அவ்வளவு அறிவாளிகள் இல்லை என்பதை நான் அறிந்து கொண்டேன். ஆனாலும் அவர்களால் மட்டும் எப்படி அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடாக ஆக முடிந்தது என்பது தான் என் மிக பெரிய கேள்வி. அதற்க்கான பதில்..

பெரும்பாலான அமெரிக்கர்கள் தங்கள் விருப்பம் போலவே கற்கிறார்கள். எதை ஆசை படுகிறார்களோ அதில் மட்டும் தங்கள் கவனத்தை செலுத்தி அத்துறையில் சாதித்து காட்டுகிறார்கள். ஒரு ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால் அமெரிக்காவில் கல்லூரி படிப்பை தொடர்வது ஐம்பது சதவிகிதத்துக்கு குறைவானவர்களே. அதற்க்கு காரணம், ஒன்று வேலை இல்லா திண்டாட்டம் அங்கு மிக குறைவு. மேலும் தங்கள் படிப்பிற்கும் தகுதிக்கும் என்ன வேலை கிடைக்கிறதோ அதையே விரும்பி செய்வார்கள். எதிர்காலம், குழந்தைகள் எதிர்காலம் என்றெல்லாம் அவர்கள் அதிகம் கவலை படுவதில்லை.

இரண்டாவது, யாரும் தங்கள் குழந்தைகளை வறுத்து எடுத்து இதை படி அதை படி என்று கட்டாயப் படுத்துவதில்லை. அப்படி கட்டாயப் படுத்தவும் முடியாது. கல்லூரி விரிவுரையாளராக இருப்பவர் சாதாரண மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என விருப்பப் பட்டு பள்ளியில் வேலை செய்பவரும், நான் ஐந்து ஆண்டுகளாக மூன்றாம் வகுப்புக்கு படம் எடுக்கிறேன் என பெருமையாக சொல்பவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். இவை எல்லாவற்றுக்கும் காரணம் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் ஆசைகள்.

இவை எல்லாவற்றையும் சொல்வதற்கு காரணம், பெரும்பாலான அமெரிக்கர்கள் மிக பெரிய ஆளாக வேண்டும் பெரிய வேலைக்கு செல்ல வேண்டும், மிக பெரிய படிப்பு படிக்க வேண்டும் என்று கூட எண்ணுவதில்லை. இருந்தும் எல்லாவற்றிலும் அந்நாடு முன்னேறியதற்கு காரணம் அப்படி விருப்பப்படும் ஒரு சிலர் தங்கள் நிலையை அடைவதற்கு அங்கு எந்த தடையும் இல்லை. நேர் மாறாக அவர்களுக்கு தேவையான எல்லாம் கிடைக்கிறது. படிப்பு மட்டுமே வாழ்க்கையில் முன்னேற ஒரே படியாக அவர்கள் எண்ணுவதில்லை. அதே நேரம் மற்ற வகைகளில் அவர்கள் முன்னேறவும் அங்கு தடை இல்லை.

அதனால் தான் இன்று ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் பில் கேட்ஸ் வரை அனைத்து ஜாம்பாவன்களும் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்கள் ஆனாலும் அவர்களால் நினைத்த இடத்திற்கு செல்ல முடிந்தது. ஒன்றுக்கும் உதவாதவர் என பள்ளியில் இருந்து அனுப்பப் பட்ட எடிசன் நூற்றுக்கணக்கான கண்டு பிடிப்புகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.

இது எல்லாவற்றுக்கும் மேலாக எந்த வேலையாக இருந்தாலும் அதை விரும்பி செய்வதாலேயே அவர்களால் அதில் ஏதாவது ஒன்றை பிற்காலத்தில் சாதிக்க முடிகிறது என்பதே என் எண்ணம்.

அதே போல் அமெரிக்கர்களின் கண்டு பிடிப்புகளுக்கு அவர்களின் சோம்பேறித்தனமும் ஒரு காரணமோ என்ற எண்ணமும் எனக்கு உண்டு. அதையே வேறு வகையில் சொல்வதென்றால் உடல் உழைப்புக்கு அதிகம் வேலை வைக்காமல் அதையே சிறிய சிறிய கண்டு பிடிப்புகளால் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கிக் கொள்கிறார்கள். 

அமெரிக்காவில் நான் வியந்த/ரசித்த சில விஷயங்கள்...

# வங்கியில் வேலை செய்யும் ஊழியர்கள் கூட நூறு நோட்டுக்களை சேர்ந்த மாதிரி எண்ணத் தெரியாது. அதை பத்து பத்து நோட்டுக்களாக தனி தனியாக எண்ணி வைப்பார்கள்.

அதனால் தானோ என்னவோ எங்கு பார்த்தாலும் அவர்கள் ஆட்டோமேடிக் வெண்டிங் மெஷின் வைத்திருக்கிறார்களோ...

# லோட் வண்டிகள் அனைத்திலும் பாரங்களை எளிதாக ஏற்ற இறக்க ஆட்டோமேடிக்காக இயங்கும் படிக்கட்டுக்கள் உண்டு. வீடு மாறும் போதெல்லாம் இம்மாதிரி வண்டிகளை வாடகைக்கு எடுத்தால் நாமே மொத்த பொருட்களையும் ஏற்றி இறக்கி விடலாம்.தனியாக பாரங்களை இறக்க லோட் மேன்கள் தேவை இல்லை.

# கடைகள் போன்ற நிறுவனங்களுக்கு பொருட்களை டெலிவெரி செய்ய நம்மூரை போல் ஒரு வேன் ஓட்டுனர், லோட் மேன், கலக்க்ஷன் ஏஜென்ட் என்று ஒரு படையே செல்லாது. ஒரே ஒருவர், அவரே வண்டி ஓட்டுவார், அழகாக 'டானா' ஷேப்பில் ஒரு சிறு வண்டி இருக்கும். அதில் எல்லா பொருட்களையும் அவரே எடுத்து வைத்து டெலிவெரி செய்வார். அவரே கலக்க்ஷன் செய்து கொள்வர்.

# பெரிய பெரிய மால்களில் நடந்து செல்வதை கூட சோம்பேறித்தனம் பட்டுக் கொண்டு, நகரும் எலிவேட்டர் அமைத்து அதில் தான் நகர்ந்து செல்கிறார்கள்.

இன்னும் எவ்வளாவோ உதாரணங்கள் உள்ளன...நேரம் கிடைத்தால் பின்னாடி ஒரு ரவுண்ட் பார்க்கலாம்.

  

share on:facebook

Tuesday, April 3, 2012

அமெரிக்காவின் அரிவாள் கலாச்சாரம்.


தமிழ் சினிமாவில் திருநெல்வேலி என்று வந்தாலே அதனுடன் மறக்காமல் அரிவாளையும் சேர்த்து விடுவார்கள். அந்த அளவிற்கு வீட்டுக்கு வீடு திருநெல்வேலியில் அரிவாள் வைத்திருப்பார்களா என்று எனக்கு தெரியாது. ஆனால், அமெரிக்காவில் பெரும்பாலானோர் வீட்டில் துப்பாக்கி வைத்திருப்பார்கள்.

பெரும்பாலானோர் தற்காப்புக்காக மட்டுமே வைத்திருந்தாலும், சில சமயங்களில் அதுவே தவறாக கையாளப் படும்போது அப்பாவி உயிர்கள் பலியாகின்றன. அமெரிக்காவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வருடத்திற்கு ஒரு முறையேனும் யாராவது ஒருவர் பள்ளி/அலுவலகம்/பொது இடம் என்று கூட பார்க்காமல் எதாவது ஒரு பிரச்சனைக்காக தங்கள் துப்பாக்கியால் ஏதும் அறியா பொதுமக்களை சுட்டு தள்ளி விடுகிறார்கள்.

1999 கொலம்பியன் ஹை ஸ்கூலில் மாணவர் ஒருவர் இவ்வாறு கண்மூடி தனமாக சுட்டதில் சக மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். உடனே அமெரிக்க அரசு துப்பாக்கி லைசன்ஸ் மற்றும் சட்ட திட்டங்களை கடுமை ஆக்குவதாக அறிவித்தது. அவ்வளவுதான். அதனால் ஒன்றும் பெரிய மற்றம் இல்லை.

கடந்த சில மாதங்களில் மட்டும் கலிபோர்னியாவின் லாஸ் ஏன்ஜெலஸ் நகரில் இரண்டு துப்பாக்கி சூடு சம்பவங்கள். ஒருவர் துப்பாக்கியுடன் ஒரு சலூனில் நுழைந்து அங்கிருந்த ஐந்துக்கும் மேற் பட்டவர்களை கண் மூடி சுட்டதில் அனைவரும் பலி. தனது மனைவிக்கும் தனக்குமான கருத்து வேறுபாடில் தன் பிள்ளைகளை கோர்ட் மனைவியின் பாதுகாப்பில் விட்டு விட்டதில் ஆத்திரமடைந்து அவரின் மனைவியை பலி வாங்க சுட்டதில் மற்ற ஐந்து பேரும் பலியானார்கள்.


அதே போல் நான் பணியாற்றும் நிறுவனத்தின் ஒரு கட்டடத்தில் தற்போதைய ஊழியர் ஒருவரே தன் மேலதிகாரியின் மேல் இருந்த கோபத்தின் காரணமாக அவரையும் அவருடன் மீட்டிங்கில் இருந்த இன்னொரு மேலாளரையும் மிக அருகில் இருந்து சுட்டுக் கொன்று விட்டார். இரண்டு நாட்களுக்கு முன் ஒக்லாந்து மாகாணத்தில் ஒரு மாணவர் தன் ஆசிரியர் சக மாணவர்களின் மேலிருந்த கோபத்தில் துப்பாக்கியை எடுத்து அவர்களையும் சேர்த்து ஏழு பேரை சுட்டுக் கொன்று விட்டார்.

இவை எல்லாவற்றுக்கும் காரணம் அமெரிக்காவில் துப்பாக்கி வைத்துக் கொள்ள எளிதான சட்ட நடை முறைகளும், எல்லோரும் வைத்திருப்பதால் தாமும் வைத்திருக்க வேண்டிய கட்டாயமுமே ஆகும். வீட்டில் பெரியோர்கள் தங்கள் துப்பாக்கியை பத்திரமாக வைத்திருந்தாலும் சில நேரங்களில் அது அவர்களின் குழந்தைகள் கைக்கு எளிதாக கிடைத்து விடுவது தான் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணம்.

சமீபத்தில் ஒரு பள்ளி மாணவரின் கைப்பையில் இருந்து துப்பாக்கி வெடிக்க, அதை பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, தன்னை பிடிக்காத சக மாணவர்களினால் தனக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தினால் தான் எப்போதுமே தன் தந்தையின் துப்பாக்கியை அவருக்கு தெரியாமல் தினமும் பள்ளிக்கு எடுத்து வந்ததாக அம் மாணவர் தெரிவித்துள்ளார்.  

இந்த கட்டடத்திற்குள் துப்பாக்கிகள் அனுமதி கிடையாது என்ற அறிவிப்பு பலகையை பல நிறுவனங்களில் காணலாம். அமெரிக்காவில் ஒருவர் மீது கோவம் வந்தால் அவரிடம் அனாவசியமாக சண்டை போடுவது என்பது வேண்டாத வேலை. ஆம், யாரிடம் துப்பாக்கி இருக்கும் என்றே தெரியாது. அட அப்போது இல்லாவிட்டாலும் எந்த நேரமும் நம் மீது கோவம் வந்து தன் துப்பாக்கியை எடுத்து வந்து மீண்டும் நம்மை சுடும் அபாயம் எப்போதும் உண்டு.  கத்தி இருந்தால் கத்தியால் குத்துவார்கள். ஒன்றும் இல்லாவிட்டால் வெறும் கையால் குத்துவார்கள். துப்பாக்கி இருந்தால் ....யம்மாடி நமக்கு இந்த விளையாட்டே வேண்டாம். 

share on:facebook

Thursday, March 29, 2012

அமெரிக்க மாப்பிளைகள்: மவுசு குறைய காரணம் என்ன ?


ஒரு காலத்தில் மாப்பிள்ளை டாக்டர். லண்டனில் இருக்கிறார், அமெரிக்காவில் வசிக்கிறார் என பெருமையாக கூறுவார்கள். கடந்த பத்தாண்டுகளில் இது மாறிப் போய், பையன் அமெரிக்காவில் சாப்ட் வேர் என்ஜினியராக உள்ளார் என பெருமையாய் சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் அது இன்னும் எவ்வளவு நாள் நீடிக்க போகிறது என தெரியவில்லை.

சமீப காலமாக அமெரிக்காவில் வேலை பார்க்கும் பலருக்கும் பெண் கொடுக்க பெற்றோர்களுக்கும், திருமணம் செய்து கொள்ள பெண்களுக்கும் அவ்வளவாக விருப்பம் இல்லாதது போல் ஒரு சூழ்நிலை நிலவுகிறது. இதற்க்கு பல காரணங்கள் உண்டு என்றாலும் பொதுவாக சொல்லப் படுகிற காரணம், பையன் அமெரிக்காவில் இருக்கிறான், அவன் அங்கு என்ன செய்கிறான் என முழுவதுமாக தெரிந்து கொள்ள முடியாது, யாரிடமும் விசாரிக்க முடியாது. கெட்டவனாக இருந்துவிட்டால் என்ன செய்வது? அவனுக்கு வேறு ஏதாவது கெட்ட பழக்கங்கள் இருந்தால் என்ன செய்வது? இது தான் பெரிய கவலை அவர்களுக்கு.

இவர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். அமெரிக்காவிற்கு யாரையும் யாரும் வெத்தலை பாக்கு வைத்து அழைப்பதில்லை. IT இல் வேலை பார்த்தால் கூட அவர்களும் பல சவால்களை சந்தித்து தான் இங்கு வருகிறார்கள். அப்படி பார்த்தால், அப்படி கஷ்டப் பட்டு தன்னுடைய உழைப்பையும் திறமையையும் மட்டுமே நம்பி இங்கு வருபவர்கள் எப்படி இங்கு வந்து கெட்டு போவர்கள் என்று நம்புகிறார்கள் என்று தான் தெரியவில்லை. மேலும் கெட்டு போவதற்கு நம் ஊரில் தான் அதிக வாய்ப்புகள்.

நம்ம ஊர் மீடியாவும்/சினிமாவும் இதற்க்கு ஒரு காரணம். உதாரணத்திற்கு T. ராஜேந்தரின் பழைய படங்களில் காலேஜ் மாணவர்கள் எல்லோருமே காதலிப்பவர்களாகவும், சிகரெட் பிடிப்பவர்களாகவும், பிட் அடித்து மட்டுமே தேர்வு எழுதுபவர்களாகவும் மட்டுமே காண்பித்து, காண்பித்து கல்லூரி மாணவர்கள் என்றாலே அவர்கள் ஊதாரிகளாகவும், பொறுக்கிகளாகவும் மக்கள் நினைக்க ஆரம்பித்தார்கள். அது போல் தற்போது IT மக்களின் நிலைமையும் ஆகிவிடுமோ என ஐயம் ஏற்படுகிறது. IT யில் வேலை செய்யும் எல்லோரும் பப்புக்கு போவதில்லை என சொன்னால் இவர்கள் நம்பத் தயாரில்லை. நம்புங்கள்...இத்தனை வருடங்களில் எனக்கு 'பப்' எப்படி இருக்கும் என்றே தெரியாது. ஒரு முறை கூட நான் சென்றதில்லை.


இந்த விசயத்தில் வட இந்தியர்களும் மற்ற பிற தென் மாநில மக்களும் ஓகே. தமிழர்கள் தான் அமெரிக்க மாப்பிளைகளுக்கு பெண் கொடுக்கவும், பெண்கள் திருமணம் செய்து கொள்ளவும் தயங்குகிறார்கள். இத்தனைக்கும் தமிழக பெண்கள் பெரும்பாலும் நன்கு படித்து பட்டம் பெற்றவர்கள். என்னுடைய நண்பர் ஒருவர் பெண் பார்த்த போது (பெண் இத்தனைக்கும் பி.ஈ கம்ப்யூடர் சயின்ஸ் படித்தவர்) அப்பெண், இந்தியாவிற்கு திரும்பி வருவதென்றால் மட்டும் திருமணம் செய்து கொள்கிறேன் என பிடிவாதமாக கூறி விட்டார். நண்பரும் இப்படி பிடிவாதமான பெண் எனக்கு வேண்டாம் என கூறி விட்டார்.

அதே போல் கடந்த சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார சறுக்கலும் அமெரிக்க மாப்பிளைகளின் மவுசு குறைய ஒரு காரணம். அங்கு வாங்கும் சம்பளத்தில் பாதி இங்கு வாங்கினாலும் பரவாயில்லை. இந்தியாவில் வேலை செய்யும் மாப்பிளை தான் வேண்டும் என சிலர் இன்னும் பிடிவாதம் பிடிக்கிறார்கள். இவர்களுக்கு இன்னும் அறுபது வயது வரையான அரசாங்க உத்தியோக சுகம் போகவில்லை. இவர்கள் ஐம்பது வயதில் சம்பாதித்ததை IT இல் வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடத்தில் சம்பாதித்தாலும், 'நிலையான உத்தியோகம்' என்ற பொலம்பல் இன்னும் நிற்கவில்லை.     

இவை எல்லாவற்றுக்கும் மேலாக படித்து வேலைக்கு போகும் பெண்களாக இருப்பின் அவர்கள் தற்போது இந்தியாவில் பார்க்கும் வேலையை விட விருப்பம் இல்லாமையும், தங்கள் தாய் தந்தையரை அடிக்கடி பார்க்க முடியாது என்ற காரனங்களுக்காகவும் அமெரிக்க மாப்பிள்ளைகள் வேண்டாம் என்று கூறுவதும் உண்டு.

நல்ல வேலை, இதல்லாம் நடப்பதற்கு முன் நமக்கு திருமணம் முடிந்து விட்டது...

IT மக்களின் சங்கடங்கள் பற்றிய பிரபல பதிவுகள்...

அமெரிக்காவில் ஹவுஸ் வைப்ஸ் - சுகமும் சங்கடங்களும்

முதிர் கண்ணன்கள்: திருமணம் ஆகாமல் தவிக்கும் IT ஆண்கள். 

share on:facebook

Tuesday, March 27, 2012

அமெரிக்க டி.வி. சீரியல்களும் நம்மூர் அழுக்காச்சி டி.வி. தொடர்களும்


இந்தியாவில் இருந்தவரை ஆங்கில படமென்றால் அது ஆக்சன் படமாகத்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். இன்றும் பலரும் அது போல் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், அது உண்மையல்ல. ஆங்கிலத்திலும் அருமையான படங்கள் வெளி வருகின்றன.

நம்மூர் பாலசந்தர், பாரதி ராஜாவெல்லாம் தோத்துப் போகும் அளவுக்கு இவர்களும் திரைப் படம் எடுக்கிறார்கள். என்ன ஒன்று. இதெல்லாம் அதிகமாக நம்மூரில் திரை இடப் படுவதில்லை. இப்போது கொஞ்சம் தேவலாம். இன்டர்நெட், டி.வி.டி. இவை எல்லாம் வந்த பின் நிறைய நல்ல ஆங்கில படங்கள் நம்மூருக்கும் வருகிறது.

திரைப் படங்களை விட்டு தள்ளுங்கள். டி.வி. தொடர்களில் நம்மூரை மிஞ்சும் அளவிற்கு இங்கும் மெகா தொடர்கள் உள்ளன. ஆனால், அவைகளை தினமும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இவைகள் பெரும்பாலும் நகைச்சுவை கலந்த குடும்ப அல்லது நண்பர்கள் பற்றியதாக இருக்கும். சொல்வதற்கு பல தொடர்கள் இருந்தாலும் 'Friends' மற்றும் 'Everybody loves Raymond' ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தவை (பெரும்பாலானோருக்கு).

1996 முதல் 2005  வரை மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பான 'Everybody loves Raymond' அதன் இயக்குனர் ரே (ரேமன்ட்) என்பவற்றின் வாழ்வில்/குடும்பத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாக கொண்டு எடுக்கப் பட்ட தொடராகும். இத் தொடர்களில் வரும் பெரும்பான்மையான பாத்திரங்களும் அவரின் நண்பர்கள் மற்றும் உறவுகளின் வாழ்வில் நடை பெற்ற உன்னை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப் பட்டவையே ஆகும்.

முழுக்க முழுக்க மாமியார் மருமகள், கணவன் மனைவி, கொழுந்தனார், குழந்தைகள் என இவர்களை சுற்றியே ஒவ்வொரு எப்பிசொடுகளும் எடுக்கப் பட்டிருந்தாலும் ஒவ்வொரு நாளும் நகைசுவை 100 % கியாரண்டி. 2005 லேயே இத்தொடர் முடிவுற்றாலும் இன்னமும் தினமும் குறிப்பிட்ட சானல்களில் பழைய தொடர்களை மீண்டும் ஒளி பரப்பி வருகிறார்கள். அமெரிக்காவில் தினமும் உள்ள வேலை பளுவினால் ஏற்படும் ஸ்ட்ரெஸ் நீங்க ஒரு அரை மணி நேரம் இத்தொடரை பார்த்தால் போதும். மைன்ட் தானாக ரிலாக்ஸ் ஆகி விடும்.  

ரே, டெப்ரா இவர்கள் கணவன், மனைவி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் (இரட்டை பிறவிகள்) ஒரு மகள். ரேவின் பெற்றோர் மேரி, பரோன். அதாவது டெப்ராவின் மாமியார் மாமனார். ரேவின் மூத்த சகோதரர் ராபர்ட். இவரின் காதலி (பிறகு இவரையே மணக்கிறார்) இவர்களை சுற்றியே பெரும்பாலும் எல்லா எப்பிசொடுகளும் இருக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் அனைத்து கருத்து மோதல்களும், சமரசங்களும், மாமனார் மாமியார் பிரச்சனைகள் என இந்தியாவில் நாம் அன்றாடம் பார்க்கும்/சந்திக்கும் பிரச்சனைகளை அழகாக நகைச்சுவையுடன் சொல்லி இருப்பார்கள். இவையெல்லாம் பார்த்த பின்தான் எனக்கே அமெரிக்காவிலும் மாமியார் மாமனார் கொழுந்தனார் பிரச்சனைகள் உண்டு என்பதை அறிந்து கொண்டேன்.

எப்போதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்கும் ரேவின் தந்தை  பரோன், குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும் போது யார் பக்கம் நியாயம் இருக்கிறதோ அவர்களுக்கு தான் சப்போர்ட் செய்வார். இவர் குண நலன்கள் எல்லாம் என் தந்தையை நினைவு படுத்துவதால் எனக்கு இவரின் பாத்திரம் மிகவும் பிடிக்கும்.

மேரி. எப்போதும் தன் மருமகளிடம் குற்றம் கண்டு பிடிக்கும் இவர், தன் இளைய மகன் மீது மட்டும் கொஞ்சம் அதிகம் கரிசனை காட்டுவார். இதனால் பாதிக்கப் படும் டெப்ராவும், மூத்த மகன் ராபர்ட்டும் சமயம் வரும்போது  தங்கள் எதிர்ப்பை வெளிப் படுத்துவது அழகு. அதே நேரத்தில் மனைவிக்கும், அம்மாவுக்கும் இடையேயான பாசப் போராட்டத்தில் ரே தவிக்கும் ஒவ்வொரு சீனும் அற்புதமாக இருக்கும்.

ஹ்ம்ம்..இன்னொன்றை மறந்து விட்டேன். ராபர்ட்டின் காதலியாக வந்து மனைவியாகும் ஏமி மற்றும் அவரின் பெற்றோர், அண்ணன் பத்திரங்களும் ரொம்ப வித்தியாசமானவை. அதே போல், ரேவின் குழந்தைகளாக வரும் கதாபாத்திரங்களும் தொடர்ந்து நடித்து வந்ததால் முதல் நூறு எப்பிசொடுகளில் கை குழந்தைகளாக வந்து கடைசி நூறு தொடர்களை பார்க்கும் போது அவர்கள் வளர்ந்திருப்பார்கள். இது இத் தொடர் முழுவதற்கும் ஒரு உயிரோட்டத்தை கொடுப்பதாகவே என் எண்ணம்.

இங்கு அமெரிக்காவில், Everybody Loves Raymond தொடர்கள் அனைத்தும் வீடியோ/CD களாக கிடைக்கின்றன. இணைய தளத்திலும் பல எப்பிசோடுகள் உள்ளன. முடிந்தால் பார்த்து விட்டு உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

குறிப்பு: சில எப்பிசொடுகளில் வரும் குறிப்பிட்ட காட்சிகள் சிறியவர்களுக்கு ஏற்றதல்ல.

share on:facebook

Sunday, March 25, 2012

இலங்கை தமிழர் பிரச்னை : நீலிக் கண்ணீர் வடிக்கும் ஆங்கில நாளேடுகள்.


சென்ற பதிவில் இலங்கை தமிழர் பிரச்சனையில் நம்மூர் ஆங்கில நாளேடுகளின் இரட்டை வேடம் பற்றி எழுதி இருந்தேன். இந்து பத்திரிக்கை தான் அப்படி என்றால் தற்போது தென்னகத்தில் வேகமாக வளர்ந்து வரும் டைம்ஸ் ஆப் இந்தியாவும் அப்படிதான். இது இன்னும் மோசமாக தனது கருத்தை வெளியிட்டு உள்ளது.

நான் முன்பே கூறியிருந்தது போல் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு ஆரம்பம் முதல் நாம் (இந்தியா) தான் காரணம். நம் சுய நலன்களுக்காக அவர்களை பாடாய் படுத்தி இன்று நடு தெருவில் நிறுத்தி இருக்கிறோம். அது மட்டுமன்றி தமிழ் இனத்தின் ஜனத்தொகையில் பாதிக்கும் மேல் பலிகொடுத்து விட்டோம்.

டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள கருத்தின் படி இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததால் ஆசிய கண்டத்தில் நாம் மட்டும் தனித்து விடப் பட்டோமாம். அதற்க்கு தமிழகம் தான் காரணமாம். நம் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷுடன் ஒன்று சேராமல் நாம் போனதற்கு தமிழர்கள் தான் காரணமாம். தெரியாமல் தான் கேட்கிறேன், இவர்கள் எல்லாம் நமக்கு என்ன நட்பு தேசங்களா என்ன? அருணாசலம் எங்கள் நாட்டை சேர்ந்தது என்று சீனாவும், ஜம்மு காஸ்மீர் எங்களது என்று பாகிஸ்தானும், இந்தியவிற்க்குள் ஊருடுவும் தீவிரவாதிகள் அனைவரும் பங்களாதேஷ் மூலமும் தான் வருகிறார்கள்.

இவர்களுடன் சேர்ந்து நாம் இலங்கைக்கு அதரவாக ஓட்டளிக்க வேண்டுமாம். இது என்ன நியாயம் என தெரியவில்லை. அது மட்டும்மல்ல, இலங்கைக்கு உலக நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தால் அதனால் இலங்கை தமிழர்கள் தான் பாதிக்கப் பட போகிறார்களாம். என்ன இலங்கையில் வாழும் தமிழர்கள் கார் வாங்கவும், இறக்குமதியாகும் பொருட்களையும் வாங்கவும்  முடியாமல் அழ போகிறார்களா? அந்த நிலைமையிலா அவர்கள் இருக்கிறார்கள்?

இலங்கை அதிபர் ராஜபக்சேவை விட இவர்கள் தான் இலங்கையை பற்றி அதிகம் கவலை படுகிறார்கள். உண்மையை சொல்லப் போனால் விடுதலை புலிகள் நல்லவர்களோ கெட்டவர்களோ அவர்கள் இருந்தவரை நம் இந்திய பூலோக நலன்கள் காக்கப் பட்டது. சீனாக்காரனோ வேறு யாரோ இலங்கையில் காலடி வைக்க தயங்கினார்கள். ஆனால், இன்று அவர்களுக்கு எல்லாம் சிகப்பு கம்பள விரிப்பு. இதை எல்லாம் மறைக்கத்தான் எப்போது பார்த்தாலும் புலிகள் அகண்ட தமிழ் ஈழம் அடைய தமிழகத்தை தங்களுடன் இணைக்கும் திட்டம் போட்டுள்ளார்கள் என்று இவர்களாக ஒரு கதையை அவ்வப்போது பரப்பி அவர்களை இந்தியாவின் எதிரியாக எப்போதுமே பார்க்கப் பட வைத்ததாக விபரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.


எது எப்படியோ, அமெரிக்க தீர்மானத்தால் இலங்கை தமிழர்களுக்கு ஒரு நல்லது நடந்தால் போதும். அப்படியே நம்புவோமாக.

தொடர்புடைய பதிவுகள்...

இலங்கை தமிழர் பிரச்னை: ஆங்கில நாளிதழ்களின் குள்ள நரித்தனம்.

போர் குற்றம்: தூக்கு தண்டனையை முன்னிறுத்தும் அமெரிக்கா.

share on:facebook

Thursday, March 22, 2012

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி ! இந்தியா உள்பட 24 நாடுகள் ஆதரவாக ஓட்டளிப்பு



ஜெனீவா: ஐநா.,மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஏற்று கொள்ளப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்பட 24 நாடுகள் ஒட்டளித்துள்ளன. முடிவில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கையில் நடந்த புலிகள் ஒழிப்பு நடவடிக்கையில் இறுதிக்கட்ட போரில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகவும், இங்கு நடந்த போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா தரப்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் தொடர்பான விவாதங்கள் கடுமையாக நடந்தன. இந்த விவாதம் முடிந்த நிலையில் சற்று முன்பு நடந்த ஓட்டடெடுப்பில் இந்தியா, உள்ளிட்ட 24 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன. சீனா, ரஷ்யா உள்ளிட்ட 15 நாடுகள் எதிர்த்தன. 8 நாடுகள் வாக்களிக்கவில்லை.

இலங்கையில் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த ஆணையம் நியமிக்கப்பட்டிருந்தது. கற்ற பாடங்கள், நல்லிணக்க குழு என்ற குழுவை இலங்கை அரசு நியமித்தது. ஆணையத்தின் பரிந்துரையை செயல்படுத்த வலியுறுத்தியே அமெரிக்கா இந்த தீர்மானத்தை கொண்டு வந்தது. தற்போது இந்த தீர்மானம் வெற்றியடைந்திருப்பதால் இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை சர்வதேச நாடுகள் விதிக்கும். இதனால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தடைபடும்.

வாக்குறுதியை நிறைவேற்றினார் பிரதமர்: கடந்த வாரம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என பார்லி.,யில் தமிழக எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர், இந்நேரத்தில் பதில் அளித்த பிரதமர் இலங்கை எதிரான தீர்மானத்தில் அமெரிக்காவை ஆதரிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்திருந்தார் . இதன்படி இந்தியா தமிழர்கள் ஆசையை நிறைவேற்றியிருக்கிறது.

தீர்மானத்திற்கு ஆதரவளித்த நாடுகள் பட்டியல்: ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பெனின், கேமரூன், சிலி, கோஸ்டாரிகா, செக் குடியரசு, கவுதமாலா, ஹங்கேரி, இந்தியா, இத்தாலி, லிபியா, மொரிஷியஸ், மெக்சிகோ, நைஜிரியா, நார்வே, பெரு, போலந்து, மால்டோவா, ருமேனியா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் உருகுவே.

இலங்கைக்கு ஆதரவாக ஓட்டளித்த நாடுகள் பட்டியல்: வங்கதேசம், சீனா, காங்கோ, கியூபா, ஈக்வடார், இந்தோனேஷியா, குவைத், மாலத்தீவுகள், மவுரிடானியா, பிலிப்பைன்ஸ், கத்தார், ரஷ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து மற்றும் உகாண்டா.

ஓட்டெடுப்பை புறக்கணித்த நாடுகள் பட்டியல்: அங்கோலா, போஸ்ட்வானா, பர்கினோ பாசோ, ஜிபூடி, ஜோர்டான், கிர்கிஸ்தான், மலேசியா மற்றும் செனகல்.

நன்றி: தினமலர்.காம் செய்தி.

share on:facebook

Wednesday, March 21, 2012

போர் குற்றம்: தூக்கு தண்டனையை முன்னிறுத்தும் அமெரிக்கா.


போர் குற்றம் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐ. நாவில் அமெரிக்க அரசு தீர்மானம் கொண்டு வந்திருக்கும் இவ்வேளையில், ஆப்கானிஸ்தானில்  ராணுவ பணியில்  இருந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் கடந்த ஆண்டு ஒன்றும் அறியாத அப்பாவி பொது மக்கள் பதினாறு பேரை சுட்டுக் கொன்ற வழக்கில் அவரின் மீது அமெரிக்க ராணுவ நீதி மன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

இவ்வழக்கில் அவருக்கு அதிக பட்ச தண்டனையாக தூக்கு தண்டனையை வழங்க ஏதுவாக பிராசுகூஷன் தரப்பில் தற்போது வழக்கை தயார் செய்து  வருவதாக சமீபத்து செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இதுவரை எந்த ஒரு அமெரிக்க ராணுவ நீதிமன்றமும் யாருக்கும் தூக்கு தண்டனை வழங்கியதில்லை என்றாலும் இந்த முறை வழக்கின் தன்மையை கருதி ராணுவ தரப்பில் குற்றம் சாட்டப் பட்ட ராணுவ வீரருக்கு தூக்கு தண்டனை வாங்கி தர முயற்சிப்பதாக சொல்லப் படுகிறது.

அதற்க்கு சொல்லப் படும் முக்கிய காரணம், போரில் நேரடியாக சம்பந்தப் படாதவர்கள் அதிலும் சுட்டுக் கொள்ளப் பட்ட பதினாறு பேரில் பாதிக்கும் மேற்பட்டோர் பதினைந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் ஆவர். இது மன்னிக்கப் பட முடியாத குற்றம் என்று காரணம் கூறப் படுகிறது.

இந்த செய்தி தான் தற்போது இலங்கையில் ராஜபக்க்ஷே சகோதரர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. இல்லையா பின்னே? அப்பாவி மக்கள் பதினாறு பேரை சுட்டுக் கொன்ற ஒருவரே தூக்கு தண்டனையை எதிர்  நோக்கி இருக்கும் சமயத்தில் லட்சக் கணக்கான அப்பாவி பொது மக்கள்  குழந்தைகள், பெரியோர்களை ஈவு இரக்க மின்றி கொலை செய்ய காரணமான   ராஜபக்க்ஷே சகோதரர்களின் நிலைமை என்னாகும்?

காமெடி # 1 
மன்மோகன் சிங்: இலங்கைக்கு எதிரான அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிப்பது சம்பந்தமாக சப்பை கட்டு கட்டி வரும் நம் இந்திய பிரதமர், தீர்மானத்தின் நகல் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. அது கிடைத்ததும் அது பற்றி ஆராய்ந்து நல்லதொரு முடிவு எடுக்கப் படும் என கூறி உள்ளார். அட ராமா? தீர்மானம் என்ன தபால் கார்டிலா அமெரிக்காவிலிருந்து வந்து கொண்டிருக்கிறது. உலகமே  அதை பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொது நம் பிரதமருக்கு மட்டும் அது பற்றி ஒன்னும் தெரியவில்லை. வேறு எது தான் தெரியும் இவருக்கு?

காமெடி # 2:
அ.தி.மு.க., தி.மு.க : இலங்கை தமிழர்கள் மீது திடீர் கரிசனம் காட்டும் அ.தி.மு.க, இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கும்  வகையில் பாராளுமன்றத்தில் ஒரு திருத்த தீர்மானம் கொண்டு வந்தது.  இந்த தீர்மானம் வோட்டெடுப்புக்கு விடும் நேரம் தி.மு.க. உறுப்பினர்கள்  அனைவரும் நைசாக வெளி நடப்பு செய்து விட்டார்கள். போர் என்றால் அதில் பொது மக்களும் சாகத் தான் செய்வார்கள் என திருவாய் மலர்ந்த  புரட்சித் தலைவியும், அரை நாளில் உண்ணாவிரதம் இருந்த தமிழின  தலைவர், போர் முடிந்து விட்டது. தூவானம் விட சற்று நாளாகும் என கூறிய  பிறகு தான் அனைத்து தமிழர்களும் கொத்து கொத்தாக செத்து மடிந்தார்கள். 
 
இவர்களை நம்புவதை விட எங்கோ இருக்கும் அமெரிக்கா காரனை  தாராளமாக நம்பலாம்.

போர் குற்றம் பற்றிய காணொளியை இங்கே காணலாம்...


share on:facebook

Sunday, March 18, 2012

அமெரிக்க டிரைவிங் லைசன்ஸ் அவ(வி)திகள்: பாகம் - 1


உங்களிடம் ஒருவர் வந்து நம்மூர் வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் எதற்கும் லஞ்சம் வாங்குவதில்லை என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் நம்பத்தான் வேண்டும் நீங்கள். ஆம், ஆனால் ஒரே ஒரே வித்யாசம். நம்மூர் என்று நான் சொன்னது அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு நகரத்தின் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை (DMV).

அமெரிக்காவில் DMV என்று சொல்லப் படுகின்ற நம்மூர் வட்டார போக்குவரத்து அலுவலக செயல்பாடுகள் பற்றி ஒரு பதிவு போட வேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆசை. அதை பற்றி எழுதுவதால் உடனே இந்தியாவை பற்றி குறை கூறுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். ஒரு ஆதங்கத்தில் தான் இதை எழுதுகிறேன். 

அமெரிக்காவில் டிரைவிங் லைசன்ஸ் என்பது நம்மூர் ரேஷன் அட்டையை போன்ற மிக முக்கியமான ஒரு ஆவணம். வண்டி ஓட்டும் உரிமையை தருவதை விட ஓட்டுனர் அடையாள அட்டை இங்கு ஒரு முக்கியமான அடையாள அட்டையாக (identity card) கையாளப் படுகிறது. பாங்கில் அக்கவுன்ட் ஓபன் பண்ணுவது முதல், ஹோட்டலில் ரூம் போடுவது வரை இங்கு ஓட்டுனர் உரிமையையை தான் அடையாள அட்டையாக உபயோகிக்கிறார்கள். அதுவும் இல்லாமல் கார் ஓட்ட முடியாது என்பது இங்கு ஒரு கால் இல்லாதவன் போல் ஆகும். ஆகவே ஓட்டுனர் உரிமை பெறுவது என்பது இங்கு நம்மூர் எஸ். எஸ். எல். சி. தேர்வு எழுதி பாஸாவது போல.

அப்படி பட்ட முக்கியவத்துவம் வாய்ந்த ஓட்டுனர் உரிமையை பெறுவதற்கு இங்கு ஒரு பைசா லஞ்சமாக கொடுக்க வேண்டியதில்லை. பெரும்பாலானோர் முதலில் எழுத்து தேர்வு எழுத வேண்டும். ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு விதிமுறை இருந்தாலும் பொதுவாக நாற்பது கேள்விகள் இருக்கும். அதில் குறைந்த பட்சம் முப்பத்தி நாலு கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால் தான் 'பயிற்சி' ஓட்டுனர் உரிமை தருவார்கள்.

எழுத்து தேர்விற்கு ஏதோ பப்ளிக் எக்ஸ்சாமுக்கு தயாராவது போல் போக்கு வரத்து விதிகள் அனைத்தையும் ஒன்று விடாமல் படித்து மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். பத்து வருடம் அமெரிக்காவில் கார் ஒட்டி இருந்தாலும் இன்னொரு மாகாணத்திற்கு செல்லும் போது அங்கு எழுத்து தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதை பாசாகாமல் நமக்கு ரெகுலர் லைசன்ஸ் கிடைக்காது. ஆன்லைன், பழைய வினாத்தாள்கள் என எல்லாவற்றையும் படித்து பார்க்க வேண்டும்.

எழுத்து தேர்வில் தேர்வாகி விட்டால் அவர்களுக்கு பயிற்சி ஓட்டுனர் உரிமை தருவார்கள். பயிற்சி ஓட்டுனர் உரிமை வைத்திருப்பவர்கள் 'L' போர்ட் எல்லாம் போட்டுக் கொண்டு காரை ஓட்ட வேண்டியதில்லை. அதே நேரம் உரிய லைசன்ஸ் வைத்திருக்கும் ஒருவர் வண்டி ஓட்டுபவரின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டும்.

அமெரிக்காவில் பொதுவாக மக்கள் அதிகம் காணப்படும் இடங்களில் 'DMV' அலுவலகமும் ஒன்று. ஆனால், நம்மூர் மாதிரி உள்ளே நுழைவதற்கு அரை கிலோ மீட்டார் முன்பே புரோக்கர்களையும், தரகர்களையும் பார்க்க முடியாது. உரிய பயிற்சி ஓட்டுனர் லைசன்ஸ், வாகனத்திற்கான காப்பீடு, பதிவு அட்டை ஆகியவற்றுடன் லைசன்ஸ் வைத்திருக்கும் ஒருவருடன் சென்றால் தான் 'ரோடு டெஸ்ட்' எடுத்துக் கொள்ள முடியும். டெஸ்ட் எடுக்கும் முன், காரின் முக்கியமான கருவிகள், செயல்பாடுகளை காண்பிக்க, செயல்படுத்த சொல்லி கேட்பார்கள். அதற்கும் மதிப்பெண் உண்டு. அதன் பிறகே கண்காணிப்பாளர் உங்களுடன் அமர்ந்து வண்டியை ஓட்டச் சொல்லி கேட்பார்.

அதன் பிறகு ரோடு டெஸ்ட் எப்படி இருக்கும். அது அடுத்த பதிவில்...

அமெரிக்க போலீஸ் பற்றி கொள்ளை கொள்ளும் அமெரிக்க போலீஸ்.

அமெரிக்க அரசு பள்ளிகள் பற்றி அமெரிக்க அரசு பள்ளிகள் சிறந்தவையா?

share on:facebook

Tuesday, February 28, 2012

அமெரிக்க அவஸ்தைகள் : அபார்ட்மென்ட் கட்டுபாடுகளும் லீஸ் தொல்லைகளும்...


ஒரு காலத்தில் சென்னையில் வாடகை வீட்டில் மாறி மாறி குடியிருந்த போது ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரும் ஒவ்வொரு வகையான கண்டிசன்கள் போடுவார்கள். ஆனால், எனக்கு தெரிந்து அதிக பட்சமாக பத்து பன்னிரண்டு கண்டிசன்கள் இருக்கும். அதுவும் எல்லாம் ஒரே மாதிரியானவை. ஒன்று முதல் ஐந்தாம் தேதிக்குள் வாடகை செலுத்த வேண்டும், அதை உடைக்க கூடாது இதை உடைக்க கூடாது என்று. சென்னை வீட்டு உரிமையாளர்களின் சர்வதிகார போக்கை பற்றி ஒரு பதிவே போடலாம்.

அதுக்கே விழி பிதுங்கிய நான், இங்கு கலிபோர்னியாவில் ஒவ்வொரு லீஸ் அக்ரீமென்ட் கை எழுத்து போட்டு முடிக்கும் முன் என் பேனாவில் உள்ள இங்க்கே தீர்ந்து போய் விடும். அந்த அளவிற்கு கண்டிசன்கள். எல்லாம் சட்டத்தை மேற்கோள் காட்டி வேறு. அக்ரிமெண்டில் உள்ள சில முக்கிய கண்டிசன்கள் கீழே...


# ஒன்றாம் தேதி முதல் நான்காம் தேதிக்குள் வாடகை செலுத்தி விட வேண்டும். இல்லை என்றால் முப்பத்தி ஐந்து டாலர் பைன்.


# செக்கூரிட்டி டெபாசிட் $ 500. இது ஆற்றில் போட்ட கல். திரும்பி நமக்கு கிடைக்கவே கிடைக்காது.

# $ 1,00,000 க்கு ஆன ரெண்டர்ஸ் இன்சூரன்ஸ் கட்டாயம். நம் பணத்தில் நாம் குடி இருக்கும் வீட்டிற்கு இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவை தவிர கீழே வரும் அனைத்து கண்டிசன்களுக்கும் பக்கத்துக்கு பக்கம் என் கையெழுத்து மட்டும் இன்றி வீட்டு எஜமானி அம்மா கையெழுத்தும் அவசியம்.

# Additional Occupants Addendum : அதாவது அக்ரிமெண்டில் குறிப்பிட்டுள்ள நபர்களை தவிர வேறு யாரும் வீட்டில் தங்கி இருக்க கூடாது. ஊரிலிருந்து அம்மா அப்பாவை அழைத்து வந்தால் கூட ரெண்டல் ஆபிஸிற்கு தெரிவிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலனோர் இதை கடை பிடிப்பதில்லை.

# Asbestos Addendum : இந்த அபார்ட்மெண்டில் ஆஸ்பெஸ்டாஸ் உபயோகம் உள்ளது. அதனால் ஏற்படும் உடல் நல குறைவிற்கு நாங்கள் பொறுப்பல்ல. இந்த அறிவிப்பை அனேகமாக கலிபோர்னியாவில் எங்கும் காணலாம்.    

# Bedbug Addendum : வீட்டில் மூட்டை பூச்சி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி வந்து விட்டால், வீட்டில் உள்ள, மெத்தை, தலையணை, துணி மணிகள் என்று எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விட வேண்டும். வீட்டை கம்ப்லீடாக அவர்கள் மீண்டும் பூச்சி மருந்து அடித்து சுத்தம் செய்யும் வரை உள்ளே அனுமதி இல்லை.

# Business Center Agreement : அபார்ட்மென்டில் உள்ள பிசினஸ் சென்டரை உபயோகிக்க 18 வயது நிரம்பி இருக்க வேண்டும், அல்லது துணை இருக்க வேண்டும். இன்டர்நெட், ஈமெயில், பிரிண்டர் என அனைத்து வசதிகளும் இங்கு இலவசம்.

# Carpet Care Instructions : வீட்டில் பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்து இருக்கும் கார்பெட்டை பத்திரமாக, அதே நேரத்தில் சுத்தமாக பேணி காக்க வேண்டும். இல்லையேல் வரும் போது அவர்கள் சுத்தம் செய்ய நம் கை காசை அழ வேண்டும்.

# Fitness Center : பிட்நெஸ் சென்டரின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேசன்ஸ். அதுவும் எங்கள் அபார்ட்மென்டில் பிட்நெஸ் சென்டர் காலை 8 மணி முதல் மாலை ஆறு மணி வரை தான் திறந்து இருக்கும். ஆபீசுக்கு லீவு போட்டு விட்டா ஜிம்முக்கு போக முடியும்?

# Grilling Addendum : இங்கு பார்பிகு மிகவும் பாப்புலர். அட அது ஒன்றும் இல்லைங்க. நம்மூர் பாட்டி வடை சுட்டு கொடுப்பாரே. அது போல் தான். சிக்கன் பீஸ், மீன் துண்டுகளை எலெக்ட்ரிக்/அடுப்புக் கரி க்ரில்களில் வைத்து வறுத்து சாப்பிடுவது தான். அந்த க்ரில்களை போர்டிகோவில் எங்கு வைக்கலாம். எங்கு வைக்க கூடாது, எப்படி பாதுகாப்பாக உபயோகிக்க வேண்டும் என்பதற்கு ஒரு அக்ரிமென்ட்.

 # House Rules #2 : அபார்ட்மென்ட் காம்ப்ளக்ஸ் உள்ளே எப்படி நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் விளையாடும் பார்க் ரூல்ஸ். சத்தமாக பாட்டு வைக்க கூடாது. ஸ்விமிங் பூல் விதி முறைகள் என அனைத்து கண்டிசன்களும்  இங்கு. குழந்தைகள் பார்க்கில் விளையாடும் போது பெரியவர்கள் கூடவே இருத்தல் வேண்டுமாம். பேசாம அதுக்கு நம்ம வீட்டிலேயே குழந்தைகளை வைத்துக் கொள்ளலாம்.

இன்னும் வரும்...  

"அடச் சே" அமெரிக்கா பற்றிய மற்ற சில பதிவுகள் கீழே...

அமெரிக்கா போறீங்களா? இத படிங்க முதல்ல...

அட சே அமெரிக்கா...பாகம் - 1 : டாக்டர்கள் பிரச்னை.

share on:facebook