Wednesday, January 30, 2013

விஸ்வரூபம் பற்றி இனி பதிவுகள் கிடையாது...


அப்புறம் என்னங்க? நேத்திக்கு முந்தாநாள் நீங்களே உங்கள் பிரச்சனைகளை பேசி தீத்துக்குங்க அப்படின்னு ஒரு அறிவுரை(தீர்ப்பு!). நேற்று இரவு அரசின் தடைக்கு நீதிமன்றம் தடை என்று ஒரே கொண்டாட்டம். சரி ஒரு வழியா படம் வந்தா ஒரு பத்து நாள் பொருத்திருந்தா பாத்துடலாம் என்று பார்த்தால், இன்று மீண்டும் அரசின் தடை ஆணை தொடரும் என்று ஒரு இடைக்கால தீர்ப்பு.

அட போங்கப்பா நீங்களும் உங்கள் பிரச்சனைகளும். ஒரு சினிமாவுக்கு இவ்வளவு கூத்தா? புடிச்சா பழகுவோம் இல்லனா விட்டுடுவோம்னு நம்ம தலைவர் சொன்ன மாதிரி புடிச்சா படத்த பாருங்க இல்லனா விட்டுட வேண்டியதுதானே? நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு. சென்னையில் போடப்பட்ட மேம்பாலங்கள் சில அப்படியே கிடப்பில் கிடக்கு. சாலைகள் மாட்டு வண்டி ஓட்டுவதற்கு கூட லாயக்கில்லாமல் இருக்கிறது. இதை எல்லாம் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஒரு ஐம்பது நாள் அல்லது நூறு நாள் ஓடிவிட்டு பழசாகி போக போகிற படத்துக்கு இவ்வளவு பிரச்னை.

இதில் தலைமை நீதிபதியை நடு சாமத்தில் சந்தித்து அரசு சார்பில் மீண்டும் தடை கோரப்பட்டதாம். இப்படி ஒரு சுறுசுறுப்பு மற்ற விசயங்களிலும் காட்டப்பட்டால் நாடு எப்பவோ முன்னேறி இருக்கும்.

ஆங், சொல்ல மறந்துட்டேனே! இப்ப கடைசி நியூஸ். கமல் இசுலாமிய பிரதிநிதிகளுடன் கூட்டாக அறிக்கை விட்டுள்ளார். அவர்கள் கூறும் ஆட்சேபகரமான காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்படும். எங்களுக்கும் அவர்களுக்கும் இனி எந்த பிரச்னையும் இல்லை என்று மீண்டும் மீண்டும் டி.வியில் பேசுகிறார்.

என்னமோ போங்க....இனி விஸ்வரூபம் பற்றி நான் பதிவு எழுத போவதில்லை(யாரு கேட்டா அப்படீங்கிறீங்களா? அது சரி). 



share on:facebook

தமிழகத்தை விட்டு போகிறேன்...கமல் ஆவேச பேட்டி


தமிழகம் என்னை விரட்டுகிறது. அதலால் கஷ்மீரில் இருந்து கேரளா வரை தமிழகம் தவிர இந்தியாவில் வேறு ஏதாவது ஒரு மத சார்பற்ற மாநிலத்தை தேடி போக போகிறேன் என்று ஆவேசத்துடன் பேட்டி  அளித்துள்ளார் கமலஹாசன்.

இதுவரை தான் இரண்டு முறை திவாலாகி போய் இருப்பதாகவும் தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் திவாலாகும் சூழ்நிலை உருவாகி இருப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.


தனக்கு இசுலாமிய ரசிகர்கள் பலர் இருப்பதாகவும், தான் என்றுமே தனது நற்பணி மன்றங்களில் இசுலாமிய சகோதரர்கள் அதிகம் சேர்ந்து பணியாற்றுவதை விரும்பியதாகவும் தெரிவித்துள்ள கமல், ஒரு M.F. ஹுசைன் எப்படி வெளிநாட்டிலிருந்து தன் கலை பணியை தொடர்கிராரோ அதே போல் தானும் தாய் தமிழகத்தை விட்டு வெளியே செல்ல போவதாக தெரிவித்துள்ளார்.

'விஸ்வரூபம்' நஷ்டமடைந்தால் தன் சொத்து முழுவதையும் விற்று விநியோகிஸ்தர்கள் பணத்தை திருப்பி எடுத்துக்கொள்ளலாம் என்று மனம் வருந்தி தெரிவித்துள்ளார்.


இறுதியாக, தன்னை இவ்வாறான அரசியலில் இழுக்க வேண்டாம் எனவும், தனக்கு தன் நேர்மையின் மேல் மிகுந்த நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அங்கு கூடியிருந்த நிருபர்களின் வேறு எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் கமல் தன் பேட்டி முடிந்ததும் திரும்பி விட்டார்.




share on:facebook

Tuesday, January 29, 2013

அமெரிக்க டி.வியும், அதனால் ஏற்பட்ட அவஸ்தைகளும்...


ஒரு காலத்தில் VCR, கேமரா போன்றவைகள் வெளிநாடுகளில் இருந்து அதிகம் எடுத்து/வாங்கி வரப்பட்ட பொருட்கள். தற்போது அதெல்லாம் இங்கு சர்வ சாதரணமாக கிடைப்பதால் பெரிய பெரிய டி.விக்கள்  மற்றும் லேட்டஸ்ட் மாடல் செல் போன்கள் தான் தற்போது அதிகமாக கொண்டு வருவதாக தெரிகிறது.

என்னை பொருத்தவரையில் அமெரிக்காவிலிருந்து (விலை குறைவாக இருந்தால் கூட) சில பொருட்கள் கொண்டு வருவதை தவிர்ப்பது நல்லது. அனுபவத்தில் தான் பேசுகிறேன். அதிலும் குறிப்பாக எலெக்ட்ரிக்கல் ஐட்டம்ஸ் எடுத்து வராமல் இருப்பதே சிறந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு நல்ல டீலில் கிடைத்ததே என்று ஒரு 40 இன்ச் சாம்சங் LED டி.வி. வாங்கினேன். அமெரிக்காவில் இருந்தவரை அதை நன்றாக பார்த்து என்ஜாய் செய்தோம். இந்தியாவிற்கு திரும்பி வரும்போது கையோடு டி.வியையும் கொண்டு வந்தோம். கடந்த ஆறு மாத காலமாக பிரிக்காமலே வைத்திருந்து சென்ற வாரம் தான் பாக்கிங்கில் இருந்து வெளியே எடுத்தோம்.

குழந்தைகள் அய்யா... இனி பெரிய டி.வியில் பார்க்கலாம் என சந்தோசமாக இருந்தார்கள். நானும் அப்படிதான் நினைத்தேன். அதன் பிறகு ஒவ்வொன்றாக ஆராயும் போது தான் அமெரிக்காவில் இருந்து கொண்டு வரும் டி.விக்களை இங்கு செட் செய்ய மேலும் என்னென்ன வாங்க வேண்டி இருக்கிறது என்று தெரிந்தது. அது மட்டுமா ஒவ்வொன்றின் விலையை கேட்டு, அது கிடைக்கும் இடம் தேடி அலைந்தது எல்லாம் தலையை சுற்றி பேசாமல் இங்கு வந்து ஒரு புது டி.வியை வாங்கி இருக்கலாமோ என என்னும்படி ஆயிற்று.

முதலில் அதற்கு ஸ்டெபிலைசர் வாங்க வேண்டும். 40 இன்ச் LED டி.விக்கென்றே V-Guard இல் விற்கிறார்கள். விலை அதிகம் இல்லை வெறும் 2000 சொச்சம் தான்! அடுத்ததாக 110V to 220/240V கன்வெர்ட்டர் வாங்கியாக வேண்டும். அது ஒரு ஆயிரம் ரூபாய்க்கும் மேல். சரி இதோடு விட்டால் போதும் என்று எல்லாவற்றையும் வாங்கி வந்து டி.வியை ஆன் செய்தால் ஒரே க்ரைன்ஸ்...அப்புறம் தான் நியாபகம் வந்தது அமெரிக்க டி.விக்கள் எல்லாம் NTSC format தான் சப்போர்ட் செய்யும் என்று. நம்மூரில் PAL சிஸ்டம். அப்புறம் என்ன? அதற்கு ஒரு கன்வெர்டர். இது தான் சற்று அல்ல மிகவும் விலை அதிகம். அதாவது சாதாரணமாக AV டைப் என்றால் ஆயிரத்து சொச்சம் ருபாய், அதுவே HDMI டைப் என்றால் நாலாயிரத்து சொச்சம். எல்லாம் செய்து அதை HD குவாலிட்டியில் பார்க்கவில்லை என்றால் எப்படி என்று அதற்க்கு ஒரு நாலாயிரம் செலவு. இந்த வீடியோ கன்வெர்டர் வேறு பல இடங்களில் கிடைக்கவே இல்லை.

ஒரு வழியாக எல்லாம் வாங்கி சேர்த்து டி.வி. தற்போது நன்றாக வேலை செய்கிறது. இதில் கூத்து என்னவென்றால் இது எல்லாம் டி.வியை வாங்கும் போதே தெரிந்த விஷயம் தான். புதிதாக வாங்கி ஒரு வருடத்திற்குள்ளாக அதை அங்கே விட்டு விட்டு வர மனமில்லாத காரணத்தால் இங்கு கொண்டு வரும்படியானது. எப்படி பார்த்தாலும் விலையும் இந்தியாவை விட கம்மிதான். ஆனால் அதற்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கி செட் செய்வது தான் பெரிய வேலையாக உள்ளது. இப்போ டி.வி. HD quality என்பதால் dish connection ம் HD பாக்கேஜ் வாங்கும்படி ஆயிற்று. அதற்கு மாதம் 100 ருபாய் எக்ஸ்ட்ரா. விதி வலியது. என்ன செய்ய!










        

share on:facebook

'விஸ்வரூபம்' தடை நீக்கம் - கோர்ட் அதிரடி தீர்ப்பு.

விஸ்வரூபத்திற்கு தமிழக அரசு விதித்திருந்த தடையை நீக்கி இன்று சென்னை ஹை கோர்ட் தீர்ப்பளித்து உள்ளது.

தனிமனித சுதந்திரத்தில் அரசு தலையிட முடியாது என்றும் கூறியுள்ளது.

மாவட்ட கலெக்டர்கள் விதித்திருந்த 144 தடை உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து கோர்ட் உத்தரவு.

-செய்தி.

share on:facebook

Monday, January 28, 2013

விஸ்வரூபம்: ஹை கோர்ட்டு அறிவுரை! - என்ன செய்ய போகிறார் கமலஹாசன்?


விஸ்வரூபம் வழக்கை இன்று விசாரித்த ஹை கோர்ட் நீதிபதி, தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு கவலை, தமிழகத்தில் மத நல்லிணக்கம் மற்றும் விஸ்வரூபத்தில் கமலின் முதலீடு முதலியவற்றை கருத்தில் கொண்டு, 'நீங்கள் ஏன் பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சனையை சுமூகமாக முடித்துக்கொள்ள கூடாது' என யோசனை தெரிவித்து உள்ளார்.

கமல் இன்று தான் அமெரிக்காவிலிருந்து இநதியா திரும்பி இருப்பதால் இதை பற்றி அவரிடம்  கலந்தாலோசித்த பிறகு கருத்து தெரிவிப்பதாக அவரின் வக்கீல் தெரிவித்து உள்ளார்.

மேலும் மாவட்ட கலெக்டர்கள் பிறபித்த தடையாணையை எதிர்த்து போடப்பட்ட தனி தனி வழக்குகளையும், இந்த முக்கிய வழக்குடன் சேர்த்து விசாரிக்க நாளை விசாரணையை தள்ளி வைத்து உள்ளார்.

ஹ்ம்ம்...இவங்க எல்லாம் பேசி முடிப்பதற்குள் அடுத்த தீபாவளி வந்துடும் போல...

share on:facebook

Friday, January 25, 2013

விஸ்வரூபம் விமர்சனம்: இதற்க்கு தான் இத்தனை தடை பிரச்சனைகளா?


பதிவர் நண்பர் சத்யப்ரியன் விஸ்வரூபம் பார்த்து விட்டு எழுதி உள்ள விமர்சனம் இங்கே.

ஹ்ம்ம் சும்மா கிடந்த சங்கை ஊத்தி விட்டான் ஆண்டி என்பார்கள். அது போல  இந்த தடை எதிர்ப்பு எல்லாம் வராமல் போய் இருந்தால் விஸ்வரூபம் வந்த  வேகத்தில் தியேட்டரை விட்டு போய் இருக்கும் போல. இப்போ அட்லீஸ்ட்
எல்லோரும் அதில் என்ன தான் இருக்கு என பார்க்க ஆசை படுகிறார்கள்.  ஆனால் அதற்கும் வந்தது ஆபத்து. படம் ஓரிரு இடங்களில் மட்டும்  வெளியிடப்பட்டு  விட்ட நிலையில் அதன் எதிர் மறையான விமர்சனங்கள்  பொது மக்களை படம்  பார்க்க தூண்டுமா என தெரியவில்லை? என்னமோ போங்க. கமலுக்கு நல்ல  காலம் இல்ல போலருக்கு. 

share on:facebook

Sunday, January 20, 2013

பதிவர் பக்கம் - வியக்க வைக்கும் 'வீடு திரும்பல்' மோகன்


பார்க்காமலேயே காதல், பேசாமலேயே நட்பு போலதான் இந்த வலை உலக வட்டாரமும். யாரோ எங்கோ எதை பற்றியோ எழுதுவதை படிப்பதும், அதற்க்கு நம்முடைய கருத்தை தெரிவிப்பதும், அதற்க்கு நாலு பேர் பதில் போடுவதும்...சற்று விதயாசமான உலகம் தான். அதிலும் என்னை போல் முகம் காட்டாதவர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். முகம் காட்ட போவதில்லை என்று முடிவெடுத்த பின், அடடா இவரை சந்திக்க முடியவில்லையே, அவரிடம் பேச முடியவில்லையே என்று அவ்வப்போது மனதில் ஆதங்கப்படுவதுண்டு. ஆனாலும் இதுவரை யாரையும் சந்திக்காமல் இருந்து விட்டேன். சென்ற வாரம் வரை!


நான் முன்பே ஒரு முறை சொல்லி இருந்தது போல் தனிப்பட்ட வேலை பளு மற்றும் பதிவுலகில் சும்மா 'டம்மி' பீசாக தான் இதுவரை உலாவி வருவதால் பெரிதாக ஒரு கலந்துரையாடல் மற்றும் பதிவுலக சந்திப்புகள் எல்லாம் நமக்கு எட்டாக்கனியாக நான் நினைப்பதுண்டு. இருந்தாலும் ஓரிரு சக பதிவர்களுடன் நான் அலை பேசி மூலமாகவோ, ஈமெயில் மூலமாகவோ தொடர்பில் இருப்பேன்.


அதில் மோகன் குமாரின் பழக்கம் சற்று வித்தியாசமானது. நான் அவரை பார்க்கும் முன்பே அவரும் எனது தாயாரும் சந்தித்து உரையாடி இருகிறார்கள். நான் தான் கொஞ்சம் லேட்டு. தொடர்ந்து அலை பேசியில் தொடர்பில் இருந்தாலும் முதன் முதலாக ஒரு சக பதிவரை அதிலும் தற்போதைய டாப் பதிவரை சந்தித்த வரலாறு தான் கீழே...

சென்ற வெள்ளியன்று திடீரென்று அந்த அழைப்பு வந்தது. சரி இதை விட்டால் நமக்கு வேறு வாய்ப்பு கிடைக்காது அன்றே சந்தித்து விடுவோம் என்று கூறி அதன்படியே வெள்ளியன்று மாலை நம் வீடு திரும்பல் மோகன் குமாரை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்தது மிகுந்த மன மகிழ்வை தந்தது.

மாலை 6 மணிக்கு சந்திப்பதாக திட்டம். மோகனின் அலுவலகத்தை அடைந்ததும் அவரே எனக்காக வெளியே வந்து என்னை வரவேற்று அழைத்து சென்றார். அவரை 'பல' புகைப்படங்களில் பார்த்திருப்பதால் எனக்கு அவரை நேரில் பார்த்ததும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் என்னை அவர் பார்த்ததே இல்லை. பார்த்து விட்டு என்ன நினைத்தாரோ? சின்ன பையன் என்னாமா எழுதுறாரு(!) என்றோ ஆளு பார்க்க நல்லாத்தான் இருகாரு ஆனா எழுதறது அப்படி ஒன்னும் தெரியலையேன்னு நினைச்சாரோ? சத்தியமா எனக்கு தெரியவில்லை.

பின்னர் அவரது அறையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தமிழ் இலக்கியம் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம் அப்படின்னு நான் சொல்லுவேன்னு நினைச்சிங்கனா சாரி...அதுக்கும் எனக்கும் வெகு தூரம்...பொதுவாக அவரது பணி, என் வேலை, அமெரிக்கா மற்றும் தற்போதைய இந்திய வாழ்க்கை, தாய் தந்தையர், குழந்தைகள் பற்றியும் நிறைய பேசினோம். இடை இடையே அவருக்கு போன் மற்றும் அலுவலக வேலை குறுக்கீடுகள் இருந்தாலும் ஒவ்வொன்றையும் எனக்காக சுருக்கமாக முடித்துக்கொண்டார். நன்றி மோகன். எப்படி இவ்வளவு பிஸியா இருந்து கொண்டு தினமும் ஒரு பதிவு போடறீங்களோ? சான்ஸே இல்ல...

'அண்ணனுக்கு' எல்லாவற்றிலும் ஆர்வம், சுற்றுப்பயணம், சினிமா, செல்ல பிராணிகள் வளர்ப்பு அது இது என்று. அவரது மேஜைக்கு கீழே sneaker ஷூ ஒன்று என் கண்ணை உறுத்திக்கொண்டு இருந்தது. கடைசியில் நான் கேட்கும் முன்பு அவரே கூறிவிட்டார். தினமும் இங்கு ஜிம்முக்கு போவேன். தொடர்ந்து மூன்று வருடங்களாக போய்கிட்டு இருக்கேன் என்று அவர் கூறியபோது என் கண்கள் சற்று விரியத்தான் செய்தது. Keep doing Sir.

அடுத்த மாதம் நாங்கள் நடத்தப்போகும் பள்ளி reunion பற்றி பேச்சு வந்த போது அதற்கும் நல்ல ஆலோசனைகள் தந்தார். சென்னையில் pet வளர்ப்பது பற்றி எனக்கு இருந்த மிக பெரிய தயக்கங்களுக்கு எல்லாம் சரியான விளக்கங்களையும் தீர்வுகளையும் சொல்லி அநேகமாக சரி, நாமும் வளர்த்தால் தான் என்ன என்று சிந்திக்க ஆரம்பிக்கும் அளவுக்கு அவரது பேச்சு இருந்தது. வீட்டில் பிள்ளைகளிடம் இன்னும் சொல்லவில்லை. சொன்னால் மிகுந்த சந்தோசப்படுவார்கள். உங்களுக்கு குழந்தைகளிடம் இருந்து நிச்சயம் ஒரு கார்ட் வரும் மோகன்!

சரி, நேரம் ஆகிவிட்டது என்று கிளம்பும் தருவாயில் அன்போடு இரவு உணவுக்கும் என்னை அழைத்து அவரும் நானும் அலுவலக கேண்டீனில் சாப்பிட்டோம். இனி லேட்டானால் 'வீடு திரும்பும்' வழியில் வீடு திரும்பல் மோகன் அலுவலகத்திற்கு வண்டியை ஓரம் கட்டி விட வேண்டியது தான். போற வழி தானே. அண்ணன பார்த்த மாதிரியும் இருக்கும் சாப்பிட்ட மாதிரியும் இருக்கும். ok வா மோகன்?

இந்த மூன்று வருடங்களில் முதன் முதலில் ஒரு சக பதிவரை நேரில் சந்தித்தது இது தான். முகம் காட்டாமல் இருப்பதில் சில சவுகரியங்களும் உள்ளது. அதே போல் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து பேச முடியாது. First time I broke my rules. But still happy. ரகசியமா என்ன போட்டோ ஏதும் எடுக்கலையே மோகன்? உங்களிடம் தெரிந்து கொள்ள நிறைய உள்ளது. மீண்டும் சந்திக்கும் வரை, நன்றி வணக்கம்.



share on:facebook

Thursday, January 17, 2013

25 ஆண்டுகள் கழித்து பள்ளி நண்பர்களை சந்தித்த/சந்திக்கும் அனுபவம்.


//ஒருவருக்கொருவர் அலை பேசியில் அழைத்து 'மாப்பிள்ளை', மச்சான், வாடா போடா என பேசிக்கொள்வது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நிறைவையும் தருகிறது//

25 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக பள்ளி நண்பர்கள் சிலரை குறிப்பிட்ட இடத்தில் வைத்து சந்தித்த போது ஒரு சிலரை எங்களுக்குள் ஒருவருக்கொருவர் அடையாளம் காண முடியாமல் போனது ஆச்சரியம்   தான்.

நாங்கள் அமெரிக்காவில் இருந்த போது என்னுடன் பத்தாவது படித்த நண்பர்கள் 25 ஆண்டுகள் கழித்து ஒரு கிருஸ்துமஸின் போது எங்களுக்கு  பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களை அழைத்து ஒரு ஓட்டலில் வைத்து கவுரவித்த நிகழ்ச்சியின் படங்களை நண்பர் ஒருவரின் முக புத்தகத்தில் பார்த்த போதே என்னுள் அந்த எண்ணம் தோன்றி விட்டது. இந்தியா சென்ற பின் நாமும் நமக்கு + டூ சொல்லி கொடுத்த ஆசிரியர்களை கவுரவிக்க வேண்டும் என்று.

நான் உட்பட என்னுடன் +2 படித்த அனைவரும் பத்தாவது வரை வேறு ஒரு பள்ளியில் படித்தவர்கள். அதற்க்கு காரணம் நாங்கள் +2 படித்த பள்ளியில் 10 வது வரை தமிழ் வழிக்கல்வி மட்டுமே. நாங்கள் அனைவரும் ஆங்கில வழி கல்வி பயின்றவர்கள்(இப்போது தெரிகிறதா? என் பதிவுகளில் தமிழ் பிழைகள் இருப்பதற்கு காரணம்!). இருந்தாலும் எங்கள் பள்ளியும் எங்கள் நட்பு உலகமும் சற்று வித்தியாசமானதே. அதற்க்கு காரணம் எங்கள் பள்ளி ஒரு அரசு பள்ளியும் அல்லாமல் தனியார் பள்ளியும் அல்லாமல் மாவட்ட கலெக்டரின் நேரடி பார்வையில் நடை பெற்றது தான்.

சரி அப்படி என்ன அந்த பள்ளியில் இருந்தது என நீங்கள் கேட்கலாம். தஞ்சை மாவட்டத்திலேயே (இன்று வரையிலும்) காமர்ஸ் க்ரூப் ஆங்கில மீடியம் அங்கு மட்டும் தான் இருந்தது/இருக்கிறது. அதாவது தமிழ், ஆங்கிலம் தவிர accountancy, commerce, economics மற்றும் maths உள்ள க்ரூப். அதுவே தமிழ் வழி கல்வியில் maths பதிலாக வரலாறு வைத்திருப்பார்கள். நாங்கள் அனைவரும் காமர்ஸ் க்ரூப் விரும்பி எடுத்து படித்தோம். அது தவிர, எங்கள் பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு முன் இருந்த அனைத்து ஆசிரியர்களும் அப்போது தான் ஓரிரு வருடங்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் அவர்கள் நல்ல பேர் எடுக்க வேண்டும், பள்ளி நல்ல பேர் எடுக்க வேண்டும் என எங்களுக்கு சொல்லிக்கொடுக்க வில்லை. மாறாக எங்களுக்காக சொல்லிக்கொடுத்தார்கள். நாங்கள் நன்றாக படிக்க வேண்டும் என சொல்லி கொடுத்தார்கள்.

அதாவது எங்களுக்கு வேண்டிய சுதந்திரமும் அங்கு கிடைத்தது. தரமான கல்வியும் கிடைத்தது. நன்றாக படித்தவர்கள் நன்றாக வந்தார்கள். அதே போல் +1 சேர்ந்த போதே எங்கள் அனைவரையும் அனைத்து ஆசிரியர்களும் வாங்க போங்க என்று மரியாதையாக கூப்பிட்டார்கள். இது எங்கள் ஆசிரியர்கள் பால் மிகுந்த மரியாதையை ஏற்படுத்தி கொடுத்தது. பத்தாவது வரை எங்களை வாடா போடா, கழுதை என ஆசிரியர்கள் கூற கேட்டு திடீரென்று எல்லோரும் மரியாதையை கொடுத்தது எங்களுக்குள் மிகுந்த positive thoughts ஏற்பட வழி வகுத்தது. ஓ, நாம் நன்றாக படித்தால் இன்னும் நமக்கு மரியாதை கிடைக்கும் என ஒரு உந்துதல் கிடைத்தது.

அப்படிப்பட்ட பள்ளியில் படித்த நாங்கள் அனைவரும் வரும் மாதம் மீண்டும் அதே பள்ளியில் ஒன்று கூட இருக்கிறோம். ஆம், 25 ஆண்டுகள் கழித்து. இதில் பல நண்பர்களை நான் நடுவில் சந்தித்ததே இல்லை. தற்போது ஓரிரு மாதங்களில் ஒருவருக்கொருவர் அலை பேசியில் அழைத்து 'மாப்பிள்ளை', மச்சான், வாடா போடா என பேசிக்கொள்வது மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நிறைவையும் தருகிறது. இப்போதெல்லாம் ஒரு நாளைக்கு ஓரிரு பழைய நண்பர்கள் அழைத்து பேசும் போது காலை முதல் இருந்த வேலை டென்ஷன் எல்லாம் மறைந்து மிகுந்த ரிலாக்ஸ் ஆகிறேன். நட்புக்கு தான் என்ன வலிமை, பெருமை.

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக தொழில் முறை நண்பர்களிடம் மட்டுமே பழகி வந்துவிட்டு தற்போது எல்லா உரிமையுடன் பேசும் பழைய பள்ளி நண்பர்கள் கிடைத்தது இவ்வளவு நாள் ஏன் நமக்கு இது தோணாமல் போய் விட்டது என்று வருத்தப்பட்டேன். பரவயில்லை இப்போதாவது மீண்டும் அனைவரும் தொடர்பில் வந்தோமே என்று சற்று அறுதல் பட்டு கொள்கிறேன்.

இதோ, வரும் மாதம் இதே தேதியில் நாங்கள் அனைவரும் ஒன்று கூட இருக்கிறோம். நினைத்தாலே இனிக்கிறது...





  

share on:facebook

Thursday, January 10, 2013

இன்டீரியர் டெகரேஷன் செய்யும் போது கவனிக்க வேண்டியது என்னென்ன?


வீட்டு இன்டீரியர் வேலைகளுக்கு ஒரு சதுர அடிக்கு 1000/1100 ருபாய் செலவாகுமாம். இது தான் நான் முதன் முதலில் சென்னையில் விசாரித்த போது கிடைத்த தகவல். அப்படியென்றால் எங்கள் வீட்டிற்க்கு இரண்டு துயிலறையிலும் இரண்டு அலமாரிகள், சமையல் அறையில் தேவையான அடுக்குகள் மற்றும் வரவேற்பறையில் அலங்கார பொருட்கள்/புத்தகங்கள் வைக்க ஒரு  பெரிய செல்ப் என மொத்தம் 500/600 அடிக்கு வேலைகள் இருக்கிறது என்றால் ஐந்து/ஆறு லட்சம் செலவாகும் என்று கணக்கு போட்டு பார்த்தவுடன் சற்று அதிர்ந்து தான் போய் விட்டேன்.

அம்மாவிற்கு இம்மாதிரியான விசயங்களில் ஓரளவு அனுபவம் இருப்பதால் அவரிடம் கேட்டேன். பிறகு இரண்டு பேரும் உட்கார்ந்து தோராயமாக கணக்கு போட்டோம். பொருட்களுக்கு மட்டும் எவ்வளவு செலவாகும்? ஆசாரியர்கள் இம்மாதிரியான வேலைகளுக்கு எவ்வளவு சார்ஜ் செய்கிறார்கள் என சிறிதாக ஹோம் வொர்க் செய்து பார்த்தோம். எப்படி பார்த்தாலும் இவர்கள் சொல்லும் 1000 த்தை தொடவே இல்லை. சரி நாமே பொருட்களை வாங்கி கொடுத்து ஆசாரி வைத்து வேலைகளை செய்வோம் என களத்தில் இறங்கி இன்றோடு ஒரு மாதம் ஆகிறது.

90% சதவிகித வேலைகள் முடித்தாயிற்று. பெரும்பாலும் இம்மாதிரியான விசயங்களில் எனக்கு அறிவு கொஞ்சம் கம்மி. அண்ணனுக்கு எல்லா விசயமும் தெரியும். அதே நேரத்தில் எவ்வளவு நாட்களுக்கு அவரையே தொந்தரவு செய்வது என்று நான் எடுத்த சின்ன ரிஸ்க் ஓரளவு நன்றாக போனது. அது மட்டும் இல்லாமல் இம்மாதிரியான வேலைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? எதை உபயோகிக்க வேண்டும்/கூடாது என பலவற்றை தெரிந்து கொள்ள முடிந்தது.

வேலை முழுதும் பிளைவுட் மற்றும் மைக்கா மூலம் செய்திருக்கிறோம். மைக்காவிற்கு பதிலாக பிளைவுட் மற்றும் விநியரும் உபயோக படுத்தலாம். அப்படி செய்தால் ஒரிஜினல் மரத்தாலான மாதிரி பார்வைக்கு நன்றாக இருக்கும். ஆனால் அதில் வார்னிஷ் அடிப்பது போன்ற மற்ற வேலைகள் உண்டு. ஆதலால் அதை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு மைக்காவுக்கு தாவி விட்டோம்.

முதலில் பிளைவுட். இது சதுர அடி 20 ரூ 30 ருபாய் என்று தொடங்கி 100 ரூபாய்க்கும் மேல் கிடைகிறது. பிராண்டட் எல்லாம் 100 ரூபாய் அளவிற்கு விற்கிறது. நல்லா ஸ்ட்ராங்கா இருக்கும். ஆனால் இதில் தான் ஒரு சூட்சமம் இருக்கிறது. எல்லா வேலைகளுக்கும் இம்மாதிரியான முதல் தர பிளைவுட் போட கூடாது. உதாரணமாக லாப்ட் என்று சொல்லக்கூடிய இடங்களில் கதவுகள் போடும் போது அதிக வெய்ட்டான பிளைவுட் உபயோகபடுத்தினால் கொஞ்ச நாள் கழித்து கதவுகள் இறங்கி விட வாய்ப்புண்டு. நல்ல தரமான பிளைவுட் போட வேண்டும் என்று நினைத்தால் ஒரு சதுர அடி 60 ரூ, 70 ரூபாய்க்கு உள்ளதை வாங்கினால் போதும். அதே போல் லாப்ட் பொதுவாக ரூம் உள்ளே இருப்பதால் அதற்க்கு வாட்டர் ப்ரூப் மெட்டீரியல் தேவை இல்லை. சமையலறை போன்ற இடங்களுக்கு வாட்டர் ப்ரூப் மெட்டீரியல் அவசியம் தேவை.

நாங்கள் சமையலறை மற்றும் ஷோ கேஸ்சிற்கு மட்டும் வாட்டர் ப்ரூப் முதல் தர மைக்கா போட்டோம். மற்றவை எல்லாம் நடு தரம். அதாவது சதுர அடி 70 ரூபாய்க்கு.

பெரும்பாலான பிளைவுட் விற்கும் கடைகள் பிராண்டட் பொருட்களை விற்க ஆர்வம் காட்டுவதில்லை அதற்க்கு பதிலாக அவர்களாக ஒரு பிராண்ட் வைத்துக்கொண்டு இதை போடுங்கள் சார், அதை போடுங்கள் சார். இது பிராண்டட் மாதிரியே ஸ்ட்ராங்காக இருக்கும். விலையும் கம்மி என்று கூறி அவர்கள் பொருட்களை விற்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். தரமான பிளைவுட் என்றால் நன்கு கனமாக, ஒரு நுனியில் இருந்து பார்த்தால் நேராக (வளைவு இல்லாமல்) இருக்க வேண்டும்.

அடுத்ததாக மைக்கா. இதுவும் லோக்கல் முதல் பிராண்டட் வரை பல கம்பெனிகள் உள்ளது. விலை வித்தியாசமும் அப்படியே. கம்பெனி மைக்கா ஒரு சீட் (8*4 அடி) 600 முதல் ஆயிரம் தாண்டியும் கிடைக்கிறது. நாங்கள் வெளி புறத்திற்கு கம்பெனி மைக்காவும் உள்ளே போடும் தட்டுகளுக்கு half white என்று சொல்லக்கூடிய வெள்ளை நிற சாதாரண மைக்காவும் உபயோகபடுத்தினோம்.

இம்மாதிரி பிளைவுட் மைக்கா வேலைகள் எதுவாக இருந்தாலும் அதன் durability  மைக்கா எதை வைத்து ஓட்டப்படுகிறது/எவ்வாறு ஒட்டப்படுகிறது?  ப்ளைவுட்/மைக்காவின் தரம் மற்றும் சீதோசன நிலை/உபயோகப்படுத்தும் முறை பொறுத்தே அமைகிறது(இன்னும் ஏதாவது இருக்கா)?.

அவையெல்லாம் எது எப்படி என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்...

படத்தில் உள்ளது எங்கள் வீட்டின் சமையல் அறை அல்ல.

share on:facebook

Wednesday, January 2, 2013

தமிழ்மணம் 2012 ரேன்க் பட்டியல் - முதல் இடம் யாருக்கு?

தமிழ்மணம் 2012 ரேன்க் பட்டியல் - முதல் இடம் யாருக்கு?

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்மண ரேன்க் பட்டியல் ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிடப்படும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை ரேன்க் பட்டியலை இன்னும் ஏன் வெளியிடவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது.

ஆமா, இத பத்தியெல்லாம் நீங்கள் ஏன் கவலை படுகிறீர்கள் என யாரோ சொல்வது எனக்கு கேட்கிறது! இருந்தாலும் ஓட்ட பந்தயத்துல கடைசியில வந்தாலும் முதலில் வந்தவர் யார் என தெரிந்து கொள்ள எல்லோருக்கும் ஆசை இருக்க தானே செய்யும்?


2010 ஆம் ஆண்டு முதல் ஐந்து இடங்களை பிடித்தவர்கள் இதோ...

வினவு:


கேபிள் சங்கர்:

உண்மைத்தமிழன்:

கே.ஆர்.பி. செந்தில்:

பாமரன் பக்கங்கள்:

2011 ஆம் ஆண்டு முதல் ஐந்து இடங்களை பிடித்தவர்கள் இதோ...

சிபி பக்கங்கள்:


வேடந்தாங்கல்
:

நான்
பேச நினைப்பதெல்லாம்:

கவிதை
வீதி:

அன்பு
உலகம்:

ஆக
மொத்தம் 2010 ஆம் ஆண்டு முதல் ஐந்தும் 2011  ஆம் ஆண்டு முதல் ஐந்தும் வேறு வேறு வலைத்தளங்கள். ஆகையால் இந்த வருடமும் முதல் ஐந்து இடத்தை வேறு தளங்கள் தான் பிடிக்கும் என என் உள் மனது சொல்கிறது. நீங்கள் என்ன நினைகிறீர்கள்?

உங்களால் இந்த ஆண்டு முதல் ஐந்து இடத்தை பிடிக்க போகிறவர்கள் யாரென்று கணிக்க முடிகிறதா? அட்லீஸ்ட் முதல் இடம் யாருக்கு என்றாவது?

முடிந்தால் பின்னூட்டத்தில் போடுங்கள். நன்றி.

share on:facebook