Wednesday, November 28, 2012

சென்னையில் L.K.G. அட்மிஷனுக்கு ரூ. 17 லட்சம்.


தங்கள் பிள்ளைகள் நல்ல பள்ளிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவது இயற்கையே. ஆனால் அதற்கும் ஒரு எல்லை வேண்டாமா?

நேற்று ஒரு ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி இது தான். தன் குழந்தைக்கு இடம் வாங்க மைலாப்பூரில் இருக்கும் ஒரு பள்ளிக்கு அக்குழந்தையின் தந்தை அப்பள்ளிக்கு கூடை பந்தாட்ட மைதானம் ஒன்றை தன் சொந்த செலவில் கட்டி தருவதாக கூறி உள்ளாராம். சும்மா இல்லீங்க. அதற்கு ஆகும் செலவு ஜஸ்ட் 17 லட்ச ருபாய் தான்.

இன்னொரு குழந்தையின் தந்தை கீழ்பக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் தன் குழந்தையை சேர்பதற்காக அப்பள்ளிக்கு தன் சொந்த செலவில் கணிப்பொறி மையம் ஒன்றை கட்டி தருவதாக விருப்பம் தெரிவித்துள்ளார். தற்போது 'நன்கொடைகள்' தடை செய்யப்பட்டுள்ளதால் பெற்றோர்களும் பள்ளிகளும் இவ்வாறு வேறு வகைகளில் தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். டொனேஷன் என்பதற்கு பதிலாக இதை 'தெரிந்தே கொடுக்கும் நல் உதவிகள் என்றும் திரும்ப பெற்றுக்கொள்ளும் முதலீடு' எனவும் பெயர் வைத்துக் கொள்கிறார்கள்.

சில பள்ளிகளில் அவ்வாறு கொடுக்கப்படும் நன்கொடைகளுக்கு வங்கி வட்டி போட்டுக் கொடுப்பதும் நடக்கிறதாம். பெற்றோர்களும் எப்படியோ பிள்ளைகளுக்கு சீட்டும் ஆச்சு. பணத்திற்கு வட்டிக்கு வட்டியும் ஆச்சு என சந்தோசப் பட்டுக் கொள்கிறார்கள். இன்னும் சில பள்ளிகளில் வட்டி இல்லா கடனாக பெற்றோர்களிடம் ஒரு லட்சம் முதல் பெற்றுக் கொண்டு அதை அவர்கள் பிள்ளைகள் பள்ளியை விட்டு செல்லும் போது திருப்பி கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டு தருகிறார்களாம்.

ஒரு பள்ளியின் நிர்வாகி கூறும்போது, 'இப்போதெல்லாம் பெரிய மனிதர்களிடம் பெற்றோர்கள் போவது நன்கொடை இல்லாமல் சீட்டு வாங்க இல்லை. நாங்கள் அதிகமாக நன்கொடை கொடுக்கிறோம். அதனால் எங்களை சிபாரிசு செய்யுங்கள்' என்று கேட்பதற்கு தான் என்கிறார்.

சென்னையில் நல்ல பள்ளிகளில் நன்கொடைகள் அதிக பட்சமாக 4 லட்சம் வரை வாங்க படுகிறதாம். ஏன் மதுரை போன்ற பிற ஊர்களில் கூட 25,000 முதல் 75,000 வரை நன்கொடையின் வளர்ச்சி அதிகரித்து இருக்கிறதாம். ஹ்ம்ம்...இருக்கிறவன் கொடுக்கிறான் என்கிறீர்களா? அது சரி.

நான் எவ்வளவு நன்கொடை கொடுத்தேன் தெரியுமா? ரூ. 750. இளநிலை பட்டப்படிப்புக்கு தனியார் கல்லூரி ஒன்றில் சேர. வருடம்....?

Thanks: TOI

share on:facebook

Sunday, November 25, 2012

IT - கனவாகி போகும் கேம்பஸ் வேலைகள்.


கல்லூரி இறுதி ஆண்டிலோ அல்லது அதற்கும் முதல் ஆண்டிலோ கேம்பஸ் இன்டர்வியூ மூலம் நன்கு படிக்கும் மாணவர்கள் பெரிய பெரிய IT கம்பெனிகளில் வேலைக்கு சேர, படிப்பை முடிக்கும் முன்பே வேலைக்கான ஆர்டர் வாங்கி விடுவர். அதும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கம்பெனிகள் ஆபர் கொடுக்கும் போது எது அதிக சம்பளம் கொடுகிறது எது மிக நல்ல கம்பெனி என்றெல்லாம் பார்த்து அவற்றில் ஒன்றை மாணவர்கள் தேர்ந்தெடுப்பது வழக்கம். அப்புறம் மீதம் உள்ள செமஸ்டர்களை பெயில் ஆகாமல் நல்ல மார்க்குடன் தேர்வாகி விட்டால் வேலைக்கு சேர்ந்த முதல் மாதமே ATM நிறைய சம்பளம். இப்படி தான் IT கனவுகள் இது நாள் வரை இருந்து வந்தன.
  
அதற்க்கெல்லாம் சமீப காலமாக பல வகைகளில் ஆப்புகள் விழ தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டு கேம்பஸில் தேர்வானவர்கள் பலருக்கு இன்னமும் வேலைக்கு வர சொல்லி பல பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்பு போகவில்லை அதற்க்கு பதிலாக சற்று பொறுத்திருங்கள். அடுத்த மூன்று மாதத்தில் சேரலாம் அடுத்த ஆறு மாதம் கழித்து சேரலாம் என்று ஓலை மட்டும் சென்று கொண்டிருகிறது. இதற்க்கு காரணம் எதிர் பார்த்த அளவு IT வேலைகள் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து கிடைக்காததுதான்.

சரி அதற்க்கு அவர்கள் என்ன செய்வார்கள் பாவம் என்றால்? பாவம் அவர்கள் இல்லை. வேலை உறுதி என்று இத்தனை நாட்கள் காத்திருந்து அதை நம்பி மேற்படிப்புக்கு கூட முயற்சிக்காமல், வேறு கம்பெனிகளில் வந்த ஆபரையும் வேண்டாம் என கூறிய மாணவர்கள் தான். இந்த இடைப்பட்ட காலத்தில் தங்களை இன்னும் நன்றாக பட்டை தீட்டிக் கொள்ளலாம் என்று கூறுபவர்கள் உண்டு. ஆனால், நினைத்து பாருங்கள். படிப்பை முடிக்கும் முன்பே வேலை உறுதி என்ற நிலையிலிருந்து இன்று வேலை திரும்பவும் கிடைக்குமா கிடைக்காதா என விரக்தியோடு வீட்டில் உட்காருவது எவ்வளவு கஷ்டம்.

இது சமீபத்தில் வந்த செய்தி. ஒரு பிரபல IT கம்பெனி இந்த ஆண்டு கேம்பஸ் செலெக்ஷன் ஆனவர்களுக்கு வேலையில் சேரும் முன் மீண்டும் ஒரு திறனாய்வு தேர்வு வைத்ததாகவும் அதில் கலந்து கொண்ட 3000 பேரில் ஆயிரத்து சொச்சம் பேர் மட்டுமே பாசானதகவும், இத்தேர்வில் பாசானவர்கள் மட்டுமே வேலையில்  சேர முடியும் என்று கூறி இருக்கிறது. ஏற்கனவே கேம்பஸ் இண்டர்வியூயில் தேர்வானவர்களுக்கு இன்னும் ஒரு தேர்வு வைப்பது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. அதுவும் எந்த வித பயிற்சியும் அளிக்காமல்.

அது மட்டும் இல்லை. தேர்வுக்கான வினாக்களும் சற்று கஷ்டமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளார்கள். இத்தேர்வில் பெயிலானோர்கள் மறு தேர்வு எழுதி பாசாகும் வரை வேலையில் சேர முடியாது என்றும் மறு தேர்வு எப்போது என தற்போது சொல்ல முடியாது என்றும் கம்பெனி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர்கள். இந்த கம்பெனி வேலையை நம்பி மற்ற கம்பெனி ஆபர்களை வேண்டாம் என்று சொன்னவர்கள் நிலைமை தான் இன்னும் பாவம்.   

கஷ்டப்பட்டு படித்து பல மாணவர்களுக்கு மத்தியில் கேம்பஸ்யில் தேர்வாகி பின் மாதக்கணக்கில் காத்திருக்கும் மாணவர்களின் மனநிலையை சற்று இந்த கம்பெனிகள் யோசித்து பார்க்கவேண்டும். அட முழு சம்பளம் இல்லை என்றாலும் கூட ஸ்டைபண்ட் போல் எதாவது கொடுத்து உடனே வேலை கொடுக்கலாம். அதே போல் வேலைக்கு தேர்வாகிய பின் மீண்டும் ஒரு தேர்வு வைத்து தான் எடுப்போம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. இதை எல்லாம் IT கம்பெனிகள் நினைத்து பார்த்து ஒரு நல்ல முடிவை எடுத்தால் ஆயிரகணக்கான மாணவர்கள் வாழ்த்துவார்கள்.     


share on:facebook

Tuesday, November 20, 2012

கசாப் தூக்கிலிடப்பட்டார்


இன்று காலை 7.30 மணியளவில் புனே சிறையில் மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் தூக்கிலிட பட்டார்.

share on:facebook

இந்த பதிவு(ம்) பிரச்சினை ஆகுமோ?

//'Which is the largest democracy in the world' ?

அவளே பதிலையும் சத்தம் போட்டு படித்தாள்.

India.//

வடிவேலு ஒரு படத்தில், ஒரே நாளில் கோடீஸ்வரனாவது எப்படி' என எல்லோரிடமும் நூறு ருபாய் வாங்கிக்கொண்டு கடைசியாக ஒரு ஐடியா தந்து எல்லோரிடமும் வாங்கிக் கட்டிக் கொள்வார்.




அது போல இது நம்ம ஐடியா. அதுக்காக அடிக்கிறதா இருந்தாலும் அடிச்சுடுங்க. ஆனா, பதிவ 'லைக்' பண்ணி கமென்ட் மட்டும் போட்டுடாதீங்க. அப்புறம் அது உங்களுக்கு பிரச்சனையானால் அதற்கு நான் பொறுப்பு இல்லை. ஆமா சொல்லிப் புட்டேன்.

நீங்கள் கைதாகாமல் தப்பிக்க வேண்டுமானால், இப்படி தான் உங்கள் பதிவு இனி இருக்க வேண்டும். 

எல்லோரும் வாழ்க. அரசு வாழ்க, அரசியல் வாதிகள் வாழ்க. நாடு வாழ்க. பதிவுலகம் வாழ்க. பதிவர்கள் வாழ்க. கடைசியாக போலீஸ் வாழ்க.

இப்படி ஒரு பதிவு போட்டால் நீங்கள் கைதாக வாய்ப்பே இல்லை. எப்புடீ...?

இன்று காலை என் மகள் பரீட்சைக்காக படித்துக் கொண்டிருந்தது ஏதோ நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

'Which is the largest democracy in the world' ?

அவளே பதிலையும் சத்தம் போட்டு படித்தாள்.

India.

மீண்டும் சொல்லுகிறேன். இந்த பதிவை யாரும் லைக் பண்ணி கமெண்ட் போட்டு அது உங்களுக்கு பிரச்சனையானால் அதற்க்கு நான் பொறுப்பு இல்லை. ஆமா சொல்லிப் புட்டேன்.

share on:facebook

Wednesday, November 7, 2012

பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவால் விடும் புதிய 'சானிடரி' நாப்கின் - பாமர தமிழனின் கண்டுபிடிப்பு.

Amazing...



share on:facebook

Wednesday, October 31, 2012

நீலம் புயல் எதிரொலி. பிரபல IT கம்பெனியின் ஒரு பகுதி சரிந்ததா?


இன்று மாலை மூன்று மணிக்கெல்லாம் 'நீலம்' காரணமாக பெரும்பாலான IT கம்பெனிகள் முன்னரே மூடி விட்டார்கள். எங்கள் கம்பெனி பஸ்ஸில் வந்து கொண்டிருந்த போது தான் அந்த காட்சியை கவனித்தேன்.

சென்னை சிறுசேரியில் உள்ள மிக பெரிய IT கம்பெனி அது. 'Elevation' என்று சொல்வார்களே. அதற்காக இக்கம்பெனியின் மேல் பறவை பறப்பது போல் இருபுறம் ரெக்கைகள் விரிந்திருப்பது போலும் மிக பெரிய இரும்பு குழாய்கள் மூலம் வடிவமைத்து இருப்பார்கள்.

நான் எதார்த்தமாக எங்கள் பஸ்ஸில் இருந்து பார்த்தபோது தான் அதை கவனித்தேன். பக்கவாட்டில் உள்ள இந்த புறா ரெக்கை போன்ற அமைப்பு கொண்ட இரும்பு குழாய்கள் அப்படியே சரித்து போய் கிடந்தன. இவை நிச்சயம் அக்கம்பெனியில் உள்ளவர்கள் கவனித்து இருப்பார்கள். ஆனால், அதை வெளி காட்டவில்லை என நினைக்கிறன். பெயர் கெட்டுவிடுமோ என்ற எண்ணமாக இருக்கலாம். ஏன் என்றால் அந்த IT கம்பெனியும் மிக பிரபலமானது. அக்கட்டிடத்தை கட்டியதும் ஒரு பிரபல நிறுவனம் தான்.

இதுவே கட்டிடத்தின் மேல் பிராமாண்டமாக இருக்கும் மிக பெரிய குழாய் அமைப்புகளுக்கு இந்த புயலில் ஏதும் ஆகி இருந்தால். நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. இம்மாதிரி கட்டிடங்கள் கட்டும் போது, அதுவும் ஒரு காலத்தில் வயல் வெளிகளாக இருந்த நிரப்பரப்பில், இம்மாதிரி மிக பெரிய கட்டிடங்கள் கட்டும் போது 'நீலம்' போன்ற புயல் மழையை  தாக்கு பிடிக்க முடியும் அளவுக்கு ஆராய்ந்து கட்டுவது நலம்.  

எப்படியாவது அவ்வாறு இரும்பு குழாய்கள் சரிந்து இருந்ததை புகைபடம் எடுத்து விடலாம் என நினைத்தேன். முடியவில்லை. அதற்குள் எங்கள் பஸ் நகர்ந்து விட்டது. என்னடா கம்பெனி பேர் சொல்லாமல் ரொம்ப பம்முறானு பாக்குறீங்களா? ரெண்டு விஷயம். நானும் ஒரு IT கம்பெனியில் வேலை பார்கிறேன். ஆதாலால், முழுதும் தெரியாமல் இன்னொரு கம்பெனியை பற்றி சொல்லக் கூடாது. இரண்டாவது இந்த ட்விட்டர்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் கொடுமைகள். எதை எழுதினால் என்ன கேஸ் போடுவார்கள் என்றே தெரியவில்லை. ஏன் நமக்கு ஊர் பொல்லாப்பு?  

அப்பா...கரண்ட் வந்ததும் ஒரு பதிவை போட்ட திருப்தி.

படம்: எங்கள் கம்பெனியின் வாசலில் உள்ள மரங்கள் தலை விரித்து ஆடியபோது க்ளிக்கியது.

share on:facebook

Thursday, October 25, 2012

ஊரெங்கும் வெள்ளக்காடு. 'அம்மா'வுக்காக கொட்டும் மழையில் புதிய சாலைகள்.

உலகத்திலேயே நம் தமிழக அரசியல் தலைவர்கள் தனி ரகம். அது அம்மாவாக இருந்தாலும் சரி ஐயாவாக இருந்தாலும் சரி.

சில காலம் நான் வட மாநிலங்களில் இருந்திருக்கிறேன். நம்ம ஊர் லெட்டர் பேட் கட்சியின் ஆடம்பரம் கூட பெரிய கட்சிகளின் கூட்டங்கள், அவற்றில் கலந்து கொள்ள வரும் தலைவர்களின் வரவேற்புகளில் இருக்காது. ஆனா நம்ம ஊர் அரசியல் வாதிகள் இருக்கிறார்களே?

கடந்த ஒரு வாரமாக சென்னையின் பெரும் பகுதி இடங்கள் நீரில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. ரோடு எங்கே என்று தெரியாத அளவிற்கு தண்ணீர் முழங்கால் முட்டும் தேங்கி கிடக்கிறது. பல IT கம்பெனிகள் அமைந்துள்ள OMR ரோடும் இதற்க்கு விதிவிலக்கல்ல. இத்தனைக்கும், இதற்க்கு எக்ஸ்பிரஸ் வே என்று பெயர். துரைப்பாக்கத்தில் ஆரம்பித்து சோளிங்க நல்லூர் வரை இரு புறமும், தண்ணீர் குளம் போல் தேங்கி (இன்று வரை) நிற்கிறது.

இதனால், பேருந்துகள் முதல், ஆட்டோ, பைக்குகள் வரை எல்லோரும் ஸ்லோ ரேசில் போவது போல் நகர்வதே தெரியாத அளவிற்கு அவ்வளவு மெதுவாக ஊர்ந்து கொண்டு போய் வருகிறன. அதே போல் வேளச்சேரி செல்லும் அனைத்து இணைப்பு சாலைகளும். நத்தை வேகத்தில் தினமும் பயணம். இவை எல்லாம் அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியாதா என்ன?

இதை எல்லாம் விட்டு விட்டு, 'கிடக்கறது கிடக்கட்டும், கிழவியை தூக்கி மணையில வை' என்று பெருங்களத்தூர் - கேளம்பாக்கம் இணைப்பு சாலையை இந்த கொட்டும் மழையில் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் என்று நான் வேறு சொல்ல வேண்டுமா? அங்கு புதிதாக அமைய உள்ள காவலர் குடியிருப்புக்கான  அடிக்கல் நாட்டு விழாவிற்கு அம்மா அவ்வழியே வருவதால்.

அது மட்டுமா? ஐம்பது அடிக்கொரு வரவேற்ப்பு பேனர், நூறு அடிக்கு ஒரு போலிஸ் என ஏரியாவே திருவிழா களையில். அவ்வழியே ரெகுலராக போய் வருபவர்களுக்கு தெரியும். ஒரு முறையாவது நீங்கள் மூக்கை பொத்திக்கொள்ளாமல் அந்த இணைப்பு சாலையை கடக்க முடியாது. ஆடு மாடு என எந்த மிருகம் இறந்து போனாலும் அங்கு தான் வந்து போட்டு விட்டு போய் விடுவார்கள். இன்று அந்த நாற்றம் எங்கு போனது என்றே தெரியவில்லை.

இதே போல் யாராவது ஒரு புண்ணியவான் வேளச்சேரி சாலையிலும், OMR சாலையிலும் ஏதாவது ஒரு திறப்பு விழா, அடிக்கல் நாட்டு விழா என்று ஏற்பாடு செய்யுங்கப்பா. அங்குள்ள மக்கள் எல்லாம் உங்களை வாழ்த்துவார்கள்.

இப்படிக்கு,

தினம் தினம், தேங்கி கிடக்கும் மழை தண்ணீரால் வண்டி ஓட்ட முடியாமல் தவிக்கும் அப்பாவி குடிமகன்.   

share on:facebook